Pages

Tuesday, January 10, 2023

❤️ கான கந்தர்வன் ஜேசுதாஸ் அளித்த மனோஜ் கியான் 🎸


எண்பதுகளில் இசைஞானி இளையராஜா கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் இயங்கிய அடுத்த சுற்று இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவர்கள் மனோஜ்  - கியான் இரட்டையர்கள்.

பொதுவாக வட நாட்டு இசையமைப்பாளர்களின் செவ்வியல் தாக்கம் தமிழ்ப் படங்களில் ஒட்டாது இருக்கும் சூழலில் மனோஜ் கியான் வரவு தமிழுக்கு அந்நியப்படாமல் ஒட்டிக் கொண்டதால் தான் தமிழ்த் திரையிசையில் அவர்களில் பல காலம் நின்று நினைக்க முடிந்தது. 

அதற்கு மிக முக்கியமான காரணம் அவர்களோடு இணை இசையாக ஆரம்பத்தில் தொடர்ந்த படைப்பாளி ஆபாவாணன் அவர்கள்.

ஆனால் மனோஜ் கியானை ஆபாவாணனுக்கு அறிமுகப்படுத்தியதே கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் தான்.


ஆபாவாணனோடு நான் நடத்திய பேட்டியில் இவ்விதம் மனோஜ் கியானோடு கூட்டுச் சேர்ந்த பின்னணியைக் கேட்ட போது ஆபாவாணன் இப்படிச் சொல்லியிருந்தார்.


“திரைப்படங்களுக்கு எப்போதுமே டியூன் போடறது முக்கியமான இசை சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகளை எடுக்கிறதுன்னா நான் தான் எடுப்பேன். எனக்கு ஒரு நல்ல associate தேவைப்பட்டார்.


இரவுப் பாடகன் என்ற படத்தை நான் வந்து இயக்கி தயாரித்த போது எல்.வைத்யநாதனை ஒப்பந்தம்  செய்து விட்டு பம்பாய் போனோம். பம்பாய்ல தான் ரெக்காடிங் எல்லாம் வைச்சிட்டிருந்தோம். இந்த பம்பாய் ரெக்காடிங்ல கியான் வர்மாவை அறிமுகப்படுத்தினது ஜேசுதாஸ்.


நாங்க வேறொரு லிஸ்ட் எடுத்திட்டு போயிருந்தோம். வேறொரு வெளியாளை வைத்துத் தான் செய்றதுன்னு. அப்ப ஜேசுதாஸ் சொன்னாரு. இல்லையில்ல ஒரு நல்ல ஒரு மியூசிக் டைரக்டரை அறிமுகப்படுத்தறேன், சிறப்பாய் செய்வாருன்னு சொல்லிட்டு எங்களை கியான் வர்மா வீட்டுக்கு கூட்டிட்டு போனார். நல்ல உதவியாளரோடு. இவர வைச்சு பண்ணுங்க சிறப்பாக பண்ணிக் கொடுப்பாருன்னு சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தார். அப்படித் தான் கியான்வர்மாவை நான் சந்திச்சேன். அவரு அந்த இரவுப் பாடகனுக்கு உதவி இசையமைப்பாளராக பணிபுரிந்தார். அப்போ நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டிச்சு. அதுக்கப்புறம் அந்தப் படத்தை இப்போ பண்ண வேண்டாம். ஏன்னா இப்ப இருக்கிற காலகட்டத்தில ஒரு தயாரிப்பாளராக போராடி படத்தை வெளிக் கொண்டு வாறது முக்கியம். அதனால நாம வந்து ஒரு தயாரிப்பாளராக நடந்துக்குவோம். அப்போ எனது வகுப்புத் தோழர் அரவிந்தரராஜ் வந்து என்னோட உதவியாளராக இருந்தார். அப்ப நான் சொன்னேன், நீ இயக்குநராக வேலை பாருன்னு. நான் கதை, திரைக்கதை, இணை இசை, தயாரிப்பாளர். இது என்னுடைய இலக்கு. அதனால அந்த படத்தை வந்து promote பண்ண முழு ஈடுபாடு வேணும். அதனால வந்து இயக்குநராக வந்து என்னால நூறு சதவீதம் கவனம் செலுத்த முடியாது. அதால நீங்க இந்த படத்துக்கு டைரக்டர், அப்பிடின்னு ஆரம்பிச்சு முதல்ல வந்து ஊமைவிழிகள் திரைப்படத்தை ஆரம்பிச்சோம். 


அப்போ நான் கியான்வர்மாவ கூப்பிட்டேன். இந்த மாதிரி தமிழ் இரவுப் பாடகனை ஆரம்பிக்க போறோம். நீங்க வாங்க நீங்க வந்து மியூசிக் பண்ணுங்க என்று கூப்பிட்டேன். முந்தின படங்கள்ல வேலை பார்த்தப்போ என்னை பற்றி முழுமையாகத் தெரிஞ்சுக்கிட்டார். 


டியூன்ஸ் எல்லாம் நான் போடறேன். இசையை வந்து நான் அடிப்படையாக கத்துக்கலையே ஒழிய கேள்விஞானத்தை வைச்சு நான் டியூன் போடறேன்றத கூட இருந்து கவனிச்சதால அவரு வந்து என்ன சொன்னாருன்னா நீங்க வந்து இசையமைப்பாளராக செய்யுங்க. நான்  உங்க உதவியாளாராகப் பண்ணித்தாறேன்னு. 

நான் சொன்னேன், எந்த ஒரு துறையையும் வந்து முழுமையாக தெரிஞ்சுக்காம தலையிடக் கூடாது. அதால இசையைப் பொறுத்தவரைக்கும் எனக்கு கேள்விஞானம் தான். டியூன் போடறேன் எல்லாமே செய்வேன். 

அதைப் பற்றி அடிப்படை அறிவு எனக்கு கிடையாது. அது இல்லாம எனக்கு வந்து அந்தப் போஸ்ட்ல பண்றதுக்கு விருப்பம் இல்ல. அதால நீங்க இசையமைப்பாளராக வாங்க. நான் வந்து இணை இசை ஆக சேர்ந்துக்குவோம் என்றேன். அப்ப கேட்டாரு தன் நண்பன் மனோஜ்னு இருக்கார். அவர நான் கூப்பிட்டுக்கல என்றார். எனக்கு ஒன்றுமில்லை. படத்தில நீங்க மனோஜ் கியான்னு போட்டாலும் சரி கியான்வர்மான்னு போட்டாலும் சரி. நீங்க அவர வந்து கூப்பிடுங்க என்றேன். கூட்டணியாக வந்து ஊமைவிழிகள் படத்திற்கான பாடல்களுக்கு இசையமைத்தோம். அதுக்கு முன்னாடி நாலைஞ்சு டியூனை ரெடி பண்ணி வைச்சிருந்தோம். அந்த ரெடி பண்ணி வைச்சிருந்த டியூனை போட்டுக் காண்பிச்சேன். அது ரொம்ப நல்லாயிருக்கு. அதெல்லாத்தையும் எடுத்துக்கிட்டோம். ப்ரெஷ்ஷா கம்போஸிங்ல உட்கார்ந்து சில பாடல்களை தயார் பண்ணினம். 7 பாடல்கள் பதிவு செய்யப்பட்டுச்சு”


என்று அந்தப் பேட்டியில் பகிர்ந்தார்.


இவ்விதம் மனோஜ் - கியான் கூட்டுச் சேர்வதற்கு ஆரம்பத்தில் விதையாக இருந்த ஜேசுதாஸ் அவர்களும் தமிழில் அவர்கள் இசையமைத்த ஊமை விழிகள் தொட்டுத் தொடர்ந்தார்.


“நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி

அதில் வாழ்வதில்லை நீதி” 


https://youtu.be/ANJ3N1D06UA


என்ற ஊமை விழிகளில் இடம் பெற்ற தத்துவப் பாடல் அந்தக் காலத்து இளைஞர்களின் தேசிய கீதங்களில் ஒன்று.


ஆரம்பத்தில் ஒரு தத்துவ முத்தைக் கொடுத்தவர்கள் அடுத்ததாக ஒரு அழகிய ரம்யமான காதல் பாடலை ஜேசுதாஸுக்கு அளித்தார்கள். அப்படி வந்தது தான் சுந்தர் கே.விஜயனின் இயக்கத்தில் வெளியான “வெளிச்சம்”.


வெளிச்சம் படத்தில் வரும் "துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே" பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடியிருப்பார். அந்தக்காலத்துச் சென்னை வானொலி நிலைய நேயர் விருப்பம் வாயிலாக எனக்கு அறிமுகமான பாடலிது. கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய பாடல்களில் இளையராஜாவுக்குக் கொடுத்தது மட்டுமன்றி ரவீந்திரன் (உதாரணம் ஏழிசை கீதமே, பாடி அழைத்தேன்), சந்திரபோஸ் (சந்தோஷம் காணாத வாழ்வுண்டா) வரிசையில் மனோஜ் கியானுக்காகப் பாடிய பாடல்களைத் தேடிக் கேட்பதே சுகம். மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் இன் குரலுக்குக் கிடைத்த இன்னொரு பரிமாணம் துலங்கும்.

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே பாடலில் இழைத்திருக்கும் மெல்லிசையும், வைரமுத்துவின் அழகிய வரிகளும், ஜேசுதாஸ் இன் குரலும் சேர்ந்து கிட்டிய இந்த அழகிய பாடலை இரவு நேரத்தில் கேட்கும் போது அது தரும் சுகமே தனி.


https://youtu.be/gqjDWuiBi10


அழகான புள்ளிமானே

உனக்காக அழுதேனே

பொண்ணுக்கு தாலி எதுக்கு...

மூணு முடிச்சு வெகுமானம் 

ஓ...

ஆறுமுடிச்சு அவமானம்


https://youtu.be/trBiM2M4afQ


மனோஜ் கியான் இரட்டையர் கொடுத்த காதல் சோக கீதம் இசைத்தார் ஜேசுதாஸ் இம்முறை இராம நாராயணன் இயக்கிய மேகம் கருத்திருக்கு படத்துக்காக.

எண்பதுகளின் அண்ணன்மாரின் பாடல் கேசட் படிக்கும் இந்தப் பாடலின் ஆட்டோகிராபை. 


ஆயிரம் தலைமுறை கேட்கும்

காதலின் சங்கீதம் 

காற்றிலும் கேட்கும்

கடலிலிலும் கேட்கும்

எங்களின் ராகம்

வேதம் வேதம்


https://youtu.be/yWwfFnHR5p4


ஞாபகமிருக்கிறதா? கார்த்திக் & ரஞ்சனி நடித்த கல்யாண ராசி படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை சித்ராவோடு ஜேசுதாஸ் பாடியிருந்தார். 

இந்தப் படத்தை மனோஜ் கியான் இசைத்தனர்.


இவ்விதம் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் திரையிசையில் கோலோச்சிய பல்வேறு இசையாளுமைகளோடு பயணப்பட்டு அங்கும் தன் அடையாளத்தை நிறுவினார்.


இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 

கான கந்தர்வன் கே.ஜே.ஜேசுதாஸ் ❤️


கானா பிரபா

10.01.2022

Friday, January 6, 2023

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ❤️ மொழி தாவிய மெட்டுகள் 🎸


என் இதயம் கண்களில் வந்து

இமையை துடித்தது ஏனோ

நான் எப்போது....

நான் எப்போது பெண்ணானேன்

நான் எப்போது பெண்ணானேன்

நான் எப்போது பெண்ணானேன்

நான் எப்போது பெண்ணானேன்

https://www.youtube.com/watch?v=DWQekmnj1ZI

இந்தப் பாடலை அப்படியே மெய் மறந்து கேட்டு முடித்து விட்டு அப்படியே இந்த ஹிந்திப் பாடலை https://www.youtube.com/watch?v=ASxvyRyOvEk கேட்டு விடுங்கள். 

இந்த இரண்டு பாடல்களையும் கேட்ட பின்னர் இந்த முழு நீளக் கட்டுரையின் அடி நாதம் உங்களுக்குப் புரிந்து விடும். 

முப்பது வருடங்களுக்கு முன்னர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களால் “ரோஜா” வழியாக நிகழ்த்தப்பட்ட இசைப் புரட்சியின் மிக முக்கிய அம்சம், அது மாநில எல்லைகளைக் கடந்து எல்லா மொழிக்காரரையும் ஒரு குடையின் கீழ் ரசிக்க வைத்தது.

ரஹ்மானுக்கு முன்னும் ( ஏன் பின்னரும் கூட வரலாம்) ஏகப்பட்ட இசை ஜாம்பவான்கள் எல்லா மொழிகளிலும் கோலோச்சிக் கொண்டிருந்த வேளை, ஏ.ஆர்.ரஹ்மானின் புத்திசை இயக்கமானது 

மொழிவாரியான பேதத்தைக் களைந்ததில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

இன்றைக்கு ஒரு OTT தளம் வழியாக எப்படி எந்த மொழிப் படமானாலும் ரசித்துப் போற்றுகிறோமோ, அல்லது அதற்கும் மேல் Pan India படம் என்று முத்திரை குத்துகிறோமோ அந்த இலக்கணத்தை இசையில் பதித்தவர், அந்த முத்திரையோடே 30 ஆண்டு கால நீண்ட நெடிய பயணத்தைத் தொடர்கிறார் ரஹ்மான் என்பதுதான் அவரின் இசை வரவின் முக்கிய அம்சமாக அமைகின்றது.

இந்த ஓட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படங்களில் பெருவாரியாக அமைந்த தமிழ் மற்றும் ஹிந்திப் படங்களில் முக்கால்வாசிக்கும் மேல் மொழி மாற்றுக்கும் உட்பட்டிருப்பது குறித்த படங்களின் நாயகன் ரஹ்மான் என்பதையே பறைசாற்றும்.

அதுமட்டுமல்ல, தொண்ணூறுகளுக்குப் பின்னர் ஒரு காட்சிச் சூழலுக்குப் பொருந்திய பாடல் வரிகள், அந்த வரிகளைத் தாங்கும் பின்னணி இசை என்பது பொத்தம்பொதுவாக மாறி விட்ட பின்னர்

ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் ஒன்று முன்பு வேற்று மொழியில், வேறொரு சூழலுக்குப் பயன்பட்டாலும் பின்னர் அதை மறு சுழற்சியாக இன்னொரு மொழிக்கு (பெரும்பாலும் தமிழுக்கு) கொண்டு வரும் நிலை எழுந்தது. அதற்கு இன்னொரு புறச்சூழலும் காரணியாக அமைந்தது. அது, ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய மொழி கடந்து ஹாலிவூட் உலகிலும், ஆங்கிலேய மேடை நாடக உலகிலும் கால்பதித்த போது அவரால் நேரடியாகப் படங்களுக்கு இசையமைக்காத சூழலில் இவ்விதம் பாடல்களை வாங்கிப் பாவிக்கும் முறைமை தானாக அமைந்து விட்டது.

இதன் தொடக்கம் தன் இசைப் பயணத்தைத் தொடங்கிய முதல் ஆண்டிலேயே மலையாளத்தில் Yoddha (தமிழில் அசோகன் என்று மொழி மாற்றப்பட்டது) படத்துக்காக 

“மாம்பூவே” https://www.youtube.com/watch?v=0W30AXI5CZA கே.ஜே.ஜேசுதாஸ் & சுஜாதா பாடியதன் மீள் வார்ப்பாகப் பிந்திய ஆண்டில் வெளிவந்த பவித்ரா படத்தின் “செவ்வானம் சின்னப் பெண் சூடும்” https://www.youtube.com/watch?v=6iaFid2gqt4

மனோ & எஸ்.பி.பல்லவி குரல்களில் ஒலித்தது.

ரஹ்மானின் தமிழ், மலையாள உலகம் போலத் தெலுங்கில் ஆரம்பித்த படங்களில் வெங்கடேஷின் சூப்பர் போலீஸைத் தொடர்ந்து டாக்டர் ராஜசேகரின் Gang Master அமைந்தது. பின்னர் இந்தப் படம் “மனிதா மனிதா” என்று தமிழாக்கம் கண்டது.  இதில் வரும் பாடல் “நீ எட்டி எட்டி”

https://www.youtube.com/watch?v=sFKlv1VdzJc

பாடலின் முன்னோடி, தமிழில் வந்த “உழவன்” படத்தில் வந்த “ராக்கோழி ரெண்டு முழிச்சிருக்கு” பாடல் என்பது நீங்கள் கேட்டவுடனேயே புரிந்திருக்கும்.

இந்தச் சூழலில் இன்னொரு கூத்தும் அரங்கேறியது. இளையராஜாவின் பாடல்களின் மெட்டுகளை லவட்டி “சத்தியா” போன்ற ஹிட்டுகளைக் கொடுத்து மறைத்த ஹிந்தி இசையமைப்பாளர் வரிசையில் அனுமாலிக் கூட தேவர் மகனின் ஹிந்திப் பதிப்பான விராசத் படத்தில் “இஞ்சி இடுப்பழகி” பாடலின் மெட்டை உருவி சித்ராவைப் பாடவைத்து தேசிய விருதைப் பாடகிக்குப் பெற்றுக் கொடுக்கக் காரணியாக அமைந்தார்.

அது போலவே ஜென்டில்மேன் ஹிந்திப் பதிப்பில்

ஒட்டகத்தை கட்டிக்கோ (Roop Suhana Lagta Hai) https://www.youtube.com/watch?v=GHpK1NsLrbs

உசிலம்பட்டி பெண்குட்டி (Aashiqui Mein Had Se)

https://www.youtube.com/watch?v=a1KH_BC-oU4

சிக்குப்புக்கு ரயிலே (Chik Pika Rika Boom Bole )

https://www.youtube.com/watch?v=Pdd7Ga44aPc

பாடல்களைத் அனுமாலிக் தன் பேரிலேயே ஒட்ட வைத்த கொடுமையும் நிகழ்ந்தது.

அது போலவே திருடா திருடா படத்தில் வந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பாடலின் மெட்டை உருவி “Deewana Sanam” படத்துக்காக,மிலிந்த் சாகர் இசையில் எஸ்பிபி & எஸ்.ஜானகி

ஆகியோரைப் பாட வைத்தார்.

நம்ம தேனிசைத் தென்றல் தேவா மட்டும் சளைத்தவரா என்ன?

ஏ.ஆ.ரஹ்மான் இசையமைக்க, பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்த Kabhi Na Kabhi படத்தில் அமைந்த Tu Hi Too https://www.youtube.com/watch?v=dpTzy3y_NFI பாடலை அப்படியே லவட்டி “நெஞ்சினிலே” படத்துக்காக “மனசே மனசே” https://www.youtube.com/watch?v=XMO8eknfe60

என்று ரீமிக்ஸினார். என்ன கொடுமையென்றால் Tu Hi Too பாடல் கூட இந்தப் படத்தை “மோனலிஸா” என்ற பெயரில் தமிழில் மொழி மாற்றிய போது 

“வீசும் தென்றல் காற்றினைப் போல்” https://www.youtube.com/watch?v=wgVUvYe9Pkc  என்று உன்னிகிருஷ்ணன் & ஸ்வர்ணலதா ஆகியோர் பாடிய அற்புதமான பாடலாகவும் இருந்தது. ஆனால் இதைப் பண்பலை வானொலிகள் மட்டுமே கண்டுகொண்டன.

Kabhi Na Kabhi படத்தில் பிரியதர்ஷன் “அஞ்சலி" (டூயட்) பாடலையும்

Mil Gayee Mil Gayee Woh Manzilen

https://www.youtube.com/watch?v=MEI78dIL5v0

ஆக மீளப் பயன்படுத்தினார்.

“அனியத்தி பிறாவு” மலையாளத்தில் இருந்து “காதலுக்கு மரியாதை” ஆக இளையராஜா தமிழில் இசைக்க, அப்படியே ஹிந்தியில் “Doli Saja Ke Rakhna” பாடல்கள்

https://www.youtube.com/watch?v=OCAW7iV1c0w

ஏ.ஆர்.ரஹ்மானால் ஆக்கி அளிக்கப்பட்டன. இந்தப் படத்தையும் “ஊஞ்சல்” மொழி மாற்றி விட்ட போது பாடகர் தேர்விலும், பாடல்களிலும் அசட்டையீனமாக இருந்தார்கள் என்பதை நீங்கள் கேட்கும் போதே உணர்வீர்கள். உதாரணத்துக்கு 

வானம் சொல்லும்

https://www.youtube.com/watch?v=WVgmPzr58zg

அண்ணா உன் தோளில்

https://www.youtube.com/watch?v=XjBkfURHUHk

சொல்லு அன்பே

https://www.youtube.com/watch?v=QYGfxjR2bPo

ஆனால் “Doli Saja Ke Rakhna” பாடல்களை அப்படியே அள்ளிக் கொண்டு போய், ரஹ்மான் கால்ஷீட் கிடைக்காத சூழலில் இயக்குநர் பிரவீண்காந்த் “ஜோடி” படத்தில் பயன்படுத்திக் கொண்டதும், வைரமுத்து வரிகளில், பாடல்கள் ஒவ்வொரும் பாடகர் தேர்விலும் சூப்பர் ஹிட்டடித்ததை 90ஸ் கிட்ஸ் காலம் சொல்லும்.

தீபா மேத்தாவின் Fire திரைப்படத்தில் பம்பாய் படத்தின் பின்னணி இசை மற்றும், அந்த அரபிக் கடலோரம் பாடலைப் பின்னணியில் ஒலிக்க விட்டிருப்பார். கட்டுரை ஆக்கம் கானா பிரபா

ரஹ்மானின் இந்தி மெட்டுகள் இருந்தால் போதும் தன்னுடைய படத்துக்குப் பாடல்களை ஒப்பேற்றி விடலாம் என்று “ஜோடி” மூலம் சுவை கண்ட பிரவீண்காந்த், தன்னுடைய அடுத்த படைப்பான “ஸ்டார்” படத்தில், தீபா மேத்தாவின் 1947: Earth படத்தில் வந்த Ruth Aa Gayee Re https://www.youtube.com/watch?v=vzdF77iAAfE பாடலை “மச்ச மச்சினியே” ஆக்கியதோடு, Thakshak படத்தின் https://www.youtube.com/watch?v=23zPJ88H5HE

பாடல்களில் இருந்து பொறுக்கி ரசிகா ரசிகா, மனசுக்குள், தோம் கருவில் இருந்தோம் ஆக்கினார்.

அது போல Thakshak இல் “ஜும்பலக்கா” பாடல் ( என் சுவாசக் காற்றே) படத்தில் இருந்து எடுக்கப்பட்டது. என்ன தலை சுத்துதா 😀

“என் சுவாசக் காற்றே” படத்தைக் கையப் பிடித்து இழுத்ததால் அதில் இருந்து இன்னொரு பாடலையும் சொல்லி வைக்க வேண்டும். “காதல் நயாகரா” பாடலை Pukar படத்தில் "Kay Sera Sera"

https://www.youtube.com/watch?v=26FiBh0lVUE ஆகக் கொண்டு போய்த் துள்ள வைத்தார்கள்.

“திறக்காத காட்டுக்குள்ளே” பாடல் கூட Million Dollar Arm என்ற ஹாலிவூட் படத்தில் Unborn Children https://www.youtube.com/watch?v=L4iAw2IaDbo

ஆக எடுத்தாளப்பட்டது.

பாரதிராஜாவின் வாரிசு மனோஜ் ஐ தாஜ்மகால் படத்தில் நாயகனாகக் களமிறங்கி எடுபடாத சூழலில் அப்போது பேசப்பட்டும் இயக்குநராக இருந்த சரண் ஐ வைத்து “அல்லி அர்ஜீனா” எடுத்த போது மேற்சொன்ன Pukar படத்தில் இருந்த

Sunta Hai Mera Khuda

https://www.youtube.com/watch?v=cbKQHl8uMlU

பாடலை “சொல்லாயோ சோலைக்கிளி” https://www.youtube.com/watch?v=HyZsw2BR_jQ  ஆகவும்,

Banno Rani 

 https://www.youtube.com/watch?v=ySz3kH2qf0A 

பாடலை “ஊனை ஊனை உருக்கிறானே” https://www.youtube.com/watch?v=GEujndpeTZ8

ஆகவும் தமிழுக்குக் கொண்டு வந்ததோடு, ஷாருக்கான் நாயகனாக நடித்த One 2 Ka 4 படத்தில் வந்த

Sona Nahi Na Sahi 

https://www.youtube.com/watch?v=-vTu5trDsFc

பாடலை “எந்தன் நெஞ்சில் பாகிமா”

https://www.youtube.com/watch?v=lAj7LHfAYy8

ஆகவும் ஒசக்கா https://www.youtube.com/watch?v=rm3MT7rqDXM பாடலுமாக, 

அல்லி அர்ஜூனாவில் கோர்த்தார்கள்.

ரஹ்மானின் Bombay Dream அரங்கியலில்

சையா சையா

https://www.youtube.com/watch?v=58SM7a9XVBg

ஷக்கலக்க பேபி

https://www.youtube.com/watch?v=rPdBCxXRPw4

ஆகியவை இடம்பிடித்துக் கொண்டன.

திரைப்படங்கள் தவிர்ந்து, மேடை நிகழ்வுகளில் கூட குறிப்பாக MTV மேடைகளிலும் தன்னுடைய திரையிசைப் பாடல்களை மீளுருவாக்கம் செய்ததற்கு உதாரணம் பறையும் ஊர்வசி ஊர்வசி Take it easy ஊர்வசி https://www.youtube.com/watch?v=Aw1CQUMp-Gk

பஞ்ச பூதங்களை மையப்படுத்தி “ரிதம்” படத்தில் ஒவ்வொரு பாடல்களும் இனியமையாக இசைக்கப்பட்டிருந்தவை பின்னாளில்

ஹிந்தியில்Lakeer படத்தில் மூன்று பாடல்களின் மீளுருக்கள் பயன்பட்டன. அவை

Nachley (தனியே தன்னந்தனியே)

https://www.youtube.com/watch?v=rkqcI1tnP6M

Paighaam (காற்றே என் வாசல் வந்தாய்) 

https://www.youtube.com/watch?v=AWL0J03aGIg

Offho Jalta Hai (ஐயோ பத்திக்கிச்சு)  

https://www.youtube.com/watch?v=JRm2sq-OhiY

என்றமைந்தன.

“கேட்டேனா உன்னைக் கேட்டேனா”

https://www.youtube.com/watch?v=w76_kRyfRPM

பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? கேட்காவிட்டால் கேட்டுப்பாருங்களேன் அவ்வளவு இனிமை சொட்டும் பாடல் “தேசம்” என்ற மொழிமாற்றுப் படத்துக்காக வந்தது. இது ஹிந்தியில் வந்த Swades இன் தமிழாக்கம் ஆகும்.

அட இதை எங்கே கேட்டேனே என்று ஆவென்று வாய் பிளந்தால் நதி மூலம் சொல்லும் “பாபா கிச்சு கிச்சு தா” https://www.youtube.com/watch?v=H7FIWXprGPE

என்று.

திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் மகன் சாந்தனு நாயகனாக, பெரும் தயாரிப்பாளர் தாணு மகன் கலாபிரபு அறிமுகமாக “சக்கரகட்டி” படம் உருவான போது பிரபல ஓவிய எம்.எஃப்.ஹிசைன் இயக்கிய Meenaxi: A Tale of Three Cities படத்தில் இடம்பெற்ற

சில்லம்மா சிலுக்கம்மா பாடல்  

https://www.youtube.com/watch?v=uVcRWDoj30I 

சின்னம்மா சிலுக்கம்மா ஆகவும்,

Yeh Rishta பாடல் “நான் எப்போது”

https://www.youtube.com/watch?v=ASxvyRyOvEk

நான் எப்போது பெண்ணானேன் ஆகத் தமிழிலும் கொண்டாடப்பட்டது.

நான் எப்போது பெண்ணானேன்

நான் எப்போது பெண்ணானேன்

உன் பார்வை

பாய்ந்தது அப்போதா

உன் பேர் மட்டும்

தெரிந்ததே அப்போதா

என் விழிகள்

மெதுவாய் திறக்கச்

சொல்லி இமை

விண்ணப்பம் போட்டதே

அப்போதா

https://www.youtube.com/watch?v=PMX-_XGxbhg

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ❤️🎸

கானா பிரபா

06.01.2023