Pages

Saturday, February 20, 2016

மலேசியா வாசுதேவன் 💐 பூங்காற்று திரும்பாத ஐந்து வருடங்கள்


பாட்டிசைக் கலைஞர் மலேசியா வாசுதேவன் இறந்து இன்றோடு ஐந்து வருடத்தைத் தொட்டு விட்டது.

எத்தனையோ பாடகர்கள் பரவசப்படுத்தியிருந்தாலும் மலேசியா வாசுதேவன் ஒலிக்கும்போதெல்லாம் "எங்கள் அண்ணர் குரல்" என்று உரிமையெடுத்துக் கொள்ளும் மனது
என்று ஒரு ட்விட்டைச் சில நாட்களுக்கு முன் பகிர்ந்திருந்தேன்.

இன்று காலை நான் படைத்த "விடியல்" வானொலி நிகழ்ச்சியிலே அவர் தம் பாடல்களோடு மானசீக நினைவுப் பகிர்வை வழங்கியிருந்தேன்.
பல்வேறு நாடுகளில் இருந்து நேயர்கள் இணைந்து தம் பகிர்வை வழங்கிக் கொண்டிருந்தார்கள். நிறைவாக "ஆயிரம் மலர்களே மலருங்கள்" பாடலை ஒலிபரப்புகிறேன். நிகழ்ச்சி முடிவடையச் சில நிமிடத் துளிகளே இருக்கிறது ஆனாலும் மலேசியா வாசுதேவன் பாடிய பகுதி இன்னும் வரவில்லை. அப்போது தியாகேசன் என்ற நேயர் 
"பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே" என்று ஆரம்பித்து மலேசியா வாசுதேவன் பாடிய வரிகள் முழுதையும் தன் இனிய குரலால் பாடிச் சிறப்புச் சேர்த்தார். நெகிழ்ந்து விட்டேன் நான். இப்படியான எதிர்பாராத அனுபவங்கள் வாழ்நாள் பேறு.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்துக் கொண்டிருந்த பின்னணிப்பாடகர், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் மலேசியா வாசுதேவன் தனது 67 வயதில் தனது இதயத்துக்கு நிரந்தர ஓய்வு கொடுத்திருக்கின்றார். 
இவரது உடல் நலம் பாதிக்கப்பட்ட சேதி பல மாதங்களுக்கு முன்னர் வந்திருந்தாலும் மீண்டும் மிடுக்கோடு சங்கீத மகா யுத்தம் போன்ற இசை நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது மலேசியா வாசுதேவன் என்னும் கலைஞனை நாம் அவ்வளவு சீக்கிரம் இழக்க மாட்டோம் என்று நினைத்துக் கொண்டேன். அந்த நினைப்பை இன்று பொய்யாக்கிவிட்டார். 

மலேசியா வாசுதேவனைப் பொறுத்தவரை அவர் தமிழ்த்திரையுலகுக்கே தன்னைத் தாரை வார்த்துக் கொண்ட பாடகர். எண்பதுகளிலே சிவாஜி கணேசனுக்கும், ரஜினிகாந்த்திற்கும் பொருந்திப் போனது அவர் குரல். என்னம்மா கண்ணு போன்ற நையாண்டிப் பாடல்கள் ஆகட்டும் , அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா, அடி ஆடு பூங்கொடியே போன்ற மென்மையான உணர்வு சொட்டும் பாடல்களாகட்டும் மலேசியா வாசுதேவன் தனித்துவமானவர். 

குறிப்பாக முதல் மரியாதை என்ற காவியத்திற்கு மலேசியா வாசுதேவனின் குரலின் பரிமாணம் அப்படத்தின் பாடல்களில் வெளிப்பட்டு படத்தின் உணர்வோட்டத்திற்கு உயிரூட்டியதொன்று. அந்தப் படத்திலேயே அவருக்குத் தேசியவிருது கிட்டியிருக்க வேண்டியது வேறெந்தப்படத்துக்கும் கூடக் கிடைக்காதது பெரும் துரதிஷ்டம்.
இந்தக் கலைஞனுக்கு அஞ்சலி பகிரும் விதமாக முன்னர் நான் பகிர்ந்து கொண்ட இடுகைகளில் இருந்து சில பகிர்வுகள், இந்தப் பாடல்களைப் பதிவுக்காக மீளக் கேட்கும் போது இன்னும் இன்னும் இவர் இழப்பின் சோகம் பற்றிக்கொள்கிறது :(

நண்டு படத்தில் மலேசியா வாசுதேவனின் "அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா" என்னும் அற்புதக் குரல்

 http://www.youtube.com/watch?v=vvGoH5zLvg4&sns=tw 

80களில் ரஜனி - கமல் என்ற எதிரெதிர் துருவ நட்சத்திரங்கள் நடிப்புலகில் இருந்தது போல எஸ்.பி.பாலசுப்ரமணியம் - மலேசியா தேவன் குரல்களும் தனித்துவமாக முன்னணியில் இருந்த குரல்கள். கே.ஜே.ஜேசுதாஸ் தன் பாணியில் தனி ஆவர்த்தனம் கொடுத்துக் கொண்டிருக்க எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன் ஆகிய இருவரும் வித்தியாசமான பாடல்களைக் கலந்து கட்டித் தந்து கொண்டிருந்தார்கள். 

ஒரு காலகட்டத்தில் T.M.செளந்தரராஜன் குரலுக்கு மாற்றீடாக யாரையும் பொருத்திப் பார்க்க முடியாத சிவாஜி கணேசனுக்கு மலேசியா வாசுதேவனின் குரல் அச்சொட்டாக ஒட்டிக் கொண்டது.

அத்தோடு சூப்பர் ஸ்டாராக அப்போது மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த ரஜினிகாந்திற்கு மலேசியா வாசுதேவன் குரல் தான் தொடர்ந்து பல்லாண்டு காலம் பாடல் கை கொடுத்தது. 

நடிகராக வரவேண்டும் என்று சினிமாத்துறைக்கு வந்தவர் பாடகராகப் புகழ் பெற்றதோடு நில்லாமல் தன் நடிப்புத்திறமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தமிழ் சினிமாவின் தனித்துவமான வில்லன், சக குணச்சித்திர நடிகராகக் கவர்ந்து கொண்டார். அதில் முத்தாய்ப்பாக இருப்பது முதல் வசந்தம் படத்தில் கவுண்டராக சத்தியராஜோடு மோதிய படம். அந்தப் படத்தில் சத்தியராஜாவுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரல் கொடுக்க, காட்சியில் நடித்ததோடு குரல் கொடுத்திருக்கும் மலேசியா வாசுதேவன் பாடும் அந்தப் பாடற்காட்சி "சும்மா தொடவும் மாட்டேன்"
 http://www.youtube.com/watch?v=TTcntiPkaKE&sns=tw 

சாமந்திப் பூ உட்பட நான்கு படங்களுக்கு இசையமைத்தது மலேசியா வாசுதேவனின் இன்னொரு பரிமாணம்.

1990 ஆம் ஆண்டு மலேசியா வாசுதேவனை இயக்குநரும் தமிழ் சினிமா அறிமுகப்படுத்திக் கொண்டது. ஹரிஷ் என்ற இளம் நாயகன் நடிக்க "நீ சிரித்தால் தீபாவளி" படத்தை இயக்கியிருந்தார் மலேசியா வாசுதேவன். 90 களின் ஆரம்பத்தில் வைகாசி பொறந்தாச்சு மூலம் பிரசாந்த் ஆரம்பித்து வைத்த புதுமுகப் புரட்சி மூலம் 90, 91 களில் ஒரு சில முன்னணி நடிகர்கள் தவிர மற்றைய அனைத்துமே புதுமுகங்களோடு வந்த படங்களாக இருந்தன. இந்த வரிசையில் நீ சிரித்தால் தீபாவளி படம் அமைந்திருந்தாலும் அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இவர் சிட்னிக்கு இசை நிகழ்ச்சிக்காக வந்தபோது "நீ சிரித்தால் தீபாவளி" படத்தை ஞாபகப்படுத்திப் பேசினேன். "அந்தப் படத்தோட டிவிடி கிடைச்சா கொடுங்களேன்" என்றரே பார்க்கலாம். படம் இயக்கியவர் கையிலேயே அந்தப் படம் இல்லை என்பது எவ்வளவு கொடுமை.

நீ சிரித்தால் தீபாவளி படத்தில் இடம்பெற்ற முன்னர் கேட்ட அதே பாடலை ஜோடிப்பாடலாக சந்தோஷ மெட்டில் தருகின்றார்கள் மலேசியா வாசுதேவன், சித்ரா கூட்டணி. இந்த சந்தோஷ மெட்டு அதிகம் கேட்டிராத பாடலாக இருந்தாலும் பாடலுக்கு இசைஞானி இளையராஜா கொடுத்திருக்கும் மென்மையான மெட்டு இதமான தென்றலாக இருக்கின்றது.
 http://www.youtube.com/watch?v=N0mHQ4EDHDY&sns=tw 

சாமந்திப் பூ படம் மலேசியா வாசுதேவன் இசையமைத்த படங்களில் ஒன்று. சிவகுமார், ஷோபா நடித்த இந்தப் படம் வருவதற்கு முன்னரே நடிகை ஷோபா தற்கொலை செய்து கொண்ட துரதிஷ்டம் இப்படத்தோடு ஒட்டிக் கொண்டது. படத்தின் இறுதிக்காட்சியில் ஷோபாவின் நிஜ மரண ஊர்வலத்தையும் காட்டியிருப்பார்கள். இந்தப் படத்தில் இருந்து இரண்டு இனிய பாடல்கள்

முதலில் "ஆகாயம் பூமி" என்ற பாடலை இசையமைத்துப் பாடுகின்றார் மலேசியா வாசுதேவன்.
 http://www.youtube.com/watch?v=1wVjoIrspiM&sns=tw 

சாமந்திப் பூ படத்தில் இருந்து இன்னொரு தெரிவாக வரும் இனிமையான ஜோடிக்கானம் ஒரு காலத்தில் இலங்கை வானொலியில் கலக்கிய பாடல். "மாலை வேளை ரதிமாறன் வேலை" என்ற இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா இணைந்து பாடுகின்றார்கள்.
 http://www.youtube.com/watch?v=gR7mRvdnXDE&sns=tw 

மலேசியா வாசுதேவன் தன் ஆரம்ப காலகட்டத்தில் மணிப்பூர் மாமியார் படத்தில் "ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே" பாடலை திருச்சி லோகநாதன் குரல் பாணியில் பாடியிருப்பார். 
 http://www.youtube.com/watch?v=7L9eXOrbLrE&sns=tw 

அதே போல திறமை என்ற படத்தில் உமாரமணனோடு பாடிய "இந்த அழகு தீபம்" பாடலிலும் அந்தப் பழமை என்றும் இனிமையான குரலைக் காட்டியிருப்பார். இதோ அந்தப் பாடல்
 http://www.youtube.com/watch?v=dA_20yp0jmQ&sns=tw 

நிறைவாக வருவது, என் விருப்பப் பாடல் பட்டியலில் இருந்து இன்றுவரை விடுபடாத பாடலான என் ஜீவன் பாடுது படத்தில் வரும் "கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச" பாடலை மலேசியா வாசுதேவனுடன் இணைந்து பாடுகின்றார் எஸ்.ஜானகி. இந்தப் பாடலும் பெரிய அளவில் பிரபலமாகாத ஆனால் மலேசியா வாசுதேவனுக்கே தனித்துவமான முத்திரைப்பாடலாக அமைந்து விட்டது
 http://www.youtube.com/watch?v=W7N5Cv2P7F8&sns=tw 

ராதிகா - விஜயன் இருவரும் ஒரே நிலையில் இருப்பதாக காட்டும் காட்சி சைலஜா "ஆயிரம் மலர்களே" பாடலைப் பாடுவதோடு மலேசியா வாசுதேவனும் கலக்கிறார்.
 http://www.youtube.com/watch?v=IqGGZCqxESs&sns=tw 

சுவரில்லாத சித்திரங்கள்" திரையில் வரும் பாடல். கங்கை அமரன் இசையமைத்து அவருக்கு வாழ் நாள் முழுவதும் பெருமை தேடித்தரும் பாடல்களில் "காதல் வைபோகமே" பாடல் தனித்துவமானது. மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி பாடும் பாடலிது. ஒரு தலைக்காதல் கொண்ட பாக்யராஜின் காதல் கனவும், மனமொத்த சுதாகர், சுமதி ஜோடியின் கனவுலகப்பாடலாகவும் அமையும் இந்தப் பாடலை இசைத்தட்டில் கேட்டால் திடீரென்று காதல் வைபோகமே என்று ஆரம்பித்து திடுதிப்பில் முடிவதாக இருக்கும். ஆனால் படத்தில் காட்சியமைப்புக்கு ஏற்றவாறு இதனை எடுத்தபோது மலேசியாவாசுதேவன் "காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய் என்று முதல் அடிகளை மெதுவாகப் பாடி முடித்து நிதானிக்க பஸ் கிளம்பும் ஓசையுடன் பாடல் ஆரம்பிக்கும். கூடவே இரண்டாவது சரணத்தில் இடைச்செருகலாக மேலதிக இசையும் போடப்பட்டிருக்கும். கேட்டுப் பாருங்கள் புரியும்.
 http://www.youtube.com/watch?v=mQdqhRac_PU&sns=tw 

என்றோ கேட்ட இதமான ராகங்கள் தொகுப்பில்

"அடுத்தாத்து ஆல்பட்" பலருக்கு இப்படி ஒரு படம் வந்ததே தெரியாது. ஆனால் "இதயமே.... நாளும் நாளும் காதல் பேச வா...." இந்தப் பாடலை மறக்க மாட்டார்கள். எண்பதுகளில் மலேசியா வாசுதேவனின் தனித்துவமான குரல் மிளிர்ந்த காலகட்டத்தில் அவரோடு இணைந்து எஸ்.ஜானகி பாடிய பாடல். இப்பாடலின் ஆரம்ப சங்கதியே மலை மேட்டொன்றின் மீது மெல்ல உச்சி நோக்கி ஓடுவது போல இருக்கும். அந்த ஆரம்ப வரிகளும் அப்படியே மூச்சுவிடாமல் பதியப்பட்டிருக்கும். 

வானம்பாடி போல நாங்கள் கானம் பாடி ஓடினோம்
வாசம் வீசும் பூவைப்போல வாசம் வீசி பாடினோம்

இப்படி காதலன் பாட பின்னணியில் கொங்கோ வாத்தியம் இதமாகத் தாளம் தட்டும் அதற்கு

ஜாதி பேயை ஓட்டுவோம் நீதி நாட்டுவோம்
சாமி வந்து தோன்றினும் காதல் பேசுவோம்

இப்படி காதலி பாடுவாள் அந்த சரணம் முடியும் போது இன்னொரு புது மெட்டில் 

அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேசவா

எனப் பயணிக்கும் வகையில் புதுமையாக அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல் முழுவதும் மெட்டுக்கள் மாயாஜாலம் காட்டும். பின்னணி இசை கூட காதலின் இலக்குத் தேடி ஓடும் பயணமாக வெகு வேகமாக வாத்திய ஆலாபனை இசைஞானி இளையராஜாவின் முத்திரை பதிவு செய்யப்பட்டிருக்கும்.
 http://www.youtube.com/watch?v=gi63VBk345s&sns=tw
.

Saturday, February 6, 2016

இளையராஜா மெட்டமைக்க பிறைசூடன் வரி சூடியவை


பாடலாசிரியர் பிறைசூடன் அவர்களின் பிறந்த நாள் இன்று.
கடந்த ஆண்டு இவரின் பிறந்த நாளுக்குச் சிறப்பு இடுகையாக, இசைஞானி இளையராஜாவோடு பாடலாசிரியர் பிறைசூடன் பங்கேற்ற பாடல்களின் தொகுப்பைக் கொடுக்க எண் பட்டியலை ஆரம்பித்திருந்தேன். ஆனால் பின்னர் அப்படியே அதுவும் மறக்கடிக்கப்பட்டு விட்டது. இப்பொழுது என் மின்னஞ்சலைத் தோண்டி எடுத்து 
பகிர்கின்றேன்.

இசைஞானி இளையராஜாவோடு பணியாற்றிய பாடலாசிரியர்களில் எண்பதுகளின் நடுப்பகுதியிலிருந்து அடுத்த தசாப்தம் வரை கவிஞர் வாலி தொட்டு புலவர் புலமைப்பித்தன், கங்கை அமரன், நா.காமராசன், பொன்னடியான், மேத்தா வரிசையில் கவிஞர் பிறை சூடன் ஆகியோரின் பங்களிப்பு வெகு அதிகமாக அமைந்திருந்தது. 
துரதிஷ்டவசமாக, முறையான ஆவணப்படுத்தல் இல்லாத காரணத்தால் கவிஞர் வாலி அல்லது வைரமுத்து என்று எழுந்தமானமாக இணையத்தளங்கள் மட்டுமன்றி வானொலிகள் கூட அறிவித்து இந்தப் பாடலாசிரியர்களின் செழுமையான பங்களிப்பைத் தாழ்த்தி விட்டன.

பாடலாசிரியரை இனம் கண்டு பாடலை ரசித்து மகிழும் போதுதான் குறித்த ஆளுமையின் கைவண்ணத்தைச் சீர் தூக்கிப் பார்க்கலாம். அவர் எவ்வாறு மற்றைய பாடலாசிரியரிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கின்றார் என்றும் உணரலாம்.

பாடலாசிரியர் பிறைசூடன் அவர்களின் திரையிசைப் பங்களிப்பின் ஆரம்பம் மெல்லிசை மன்னர் இசையமைத்த "சிறை" படம் தொட்டு பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் தன்னுடைய பங்களிப்பை வழங்கி வந்தாலும் இங்கே நான் பகிரும் இசைஞானி இளையராஜாவின் இசையில் பிறைசூடன் எழுதிய பாடல்கள் முத்திரைப் பாடல்களாக 
என் சம கால கட்டத்து ரசிகர் மனதைக் கொள்ளை கொண்டவை.
இவற்றை உறுதிப்படுத்தப் பெரிதும் துணை நின்றவை, ஒரு காலத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் பாடலாசிரியர் பிறைசூடன் பங்களித்த "வானம்பாடி" இன்னிசைப் போட்டி நிகழ்ச்சி மற்றும் எண்பதுகள், தொண்ணூறுகளில் வெளிவந்த திரையிசைப் பெருந்தகடுகள்.
இந்தப் பட்டியலின் நீளம் பெரிது, ஆனால் காலம் போதாது.  அடுத்த பகுதி இன்னொரு பகிர்வாக வரும்.




1. துளி துளி மழையாய் – கண்ணுக்கொரு வண்ணக்கிளி
2. இங்கே பொன் வீணை – கண்ணுக்கொரு வண்ணக்கிளி
3. நாரினில் பூ தொடுத்து – இரண்டில் ஒன்று
4. உயிரே உயிரின் ஒளியே – என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
5. புல்லைக் கூடப் பாட வைத்த – என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்
6. சிறுவாணி தண்ணி குடிச்சு – எங்க ஊரு காவக்காரன்
7. சொந்தம் ஒன்றைத் தேடும் (சந்தோஷம்) என்னைப் பெத்த ராசா
8. சொந்தம் ஒன்றைத் தேடும் (சோகம்) என்னைப் பெத்த ராசா
9. மீனம்மா மீனம்மா – ராஜாதி ராஜா
10. ஒரு கூட்டின் கிளிகள் தான் – அன்புக் கட்டளை
11. குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் – அரங்கேற்ற வேளை
12. நல் அன்பே தான் தாயானது – கை வீசம்மா கை வீசு
13. ஊருக்குள்ளே வந்த – எங்க ஊரு மாப்பிள்ளை
14. வேறு வேலை உனக்கு இல்லையே – மாப்பிள்ளை
15. ஊரெல்லாம் தூங்குது – நினைவுச்சின்னம்
16. பூங்காற்றே இது போதும் – படிச்ச புள்ள
17. பூங்காற்றே இனிப் போதும் – படிச்ச புள்ள
18. சைலன்ஸ் காதல் செய்யும் நேரம் இது – பணக்காரன்
19. இந்த ராசாவை நம்பி வந்த – பொங்கி வரும் காவேரி
20. மன்னன் பாடும் தமிழ் – பொங்கி வரும் காவேரி
21. சிக்குன்னு இழுக்குது – வாத்தியார் வீட்டுப் பிள்ளை
22. மதுர ஒயிலாட்டம் தான் – அம்மன் கோவில் திருவிழா
23. தா தந்தந்தனம் – அதிசயப் பிறவி
24. கலகலக்கும் மணி ஓசை – ஈரமான ரோஜாவே
25. கேளடி என் பாவையே – கோபுர வாசலிலே
26. நாதம் எழுந்ததடி – கோபுர வாசலிலே
27. காதல் கவிதைகள் படித்திடும் – கோபுர வாசலிலே
28. தென்றல் தான் – கேளடி கண்மணி
29. அடி மத்தாளம் தான் – மல்லு வேட்டி மைனர்
30. ஆதாமும் ஏவாளும் போல – மருதுபாண்டி
31. எம்ஜிஆர் நகர் போலீஸ் ஸ்டேசன் (Stuartpuram Police Station
தெலுங்குப் படத்தின் பாடல்களில் சில. எந்தப் பாடல்கள் என்ற குறிப்பில்லை)
32. ஓ அழகு நிலவு – மை டியர் மார்த்தாண்டன்
33. சாயங்கால சந்திய ராகமே – நீ சிரித்தால் தீபாவளி
34. சும்மா நீ சுத்தாதே – பெரிய வீட்டுப் பண்ணைக்காரன்
35. அம்மா நான் – பொண்டாட்டி தேவை
36. காதலுக்கு ராஜா – ராஜா கைய வச்சா
37. எத்தனை பேர் உன்னை – சிறையில் பூத்த சின்ன மலர்
38. நல்லா இசைத்தது – வெள்ளையத் தேவன்
39. ஆட்டமா தேரோட்டமா – கேப்டன் பிரபாகரன்
40. நடந்தால் இரண்டடி – செம்பருத்தி
41. அட வஞ்சிரம் வவ்வாலு – செம்பருத்திராஜா க
42. கடலிலே தனிமையிலே – செம்பருத்தி
43. சோலைப் பசுங்கிளியே – என் ராசாவின் மனசுலே
44. இதயமே இதயமே – இதயம்
45. எத்தனை பேரை – காவல் கீதம்
46. தோம் தோம் தோம் – ஊரெல்லாம் உன் பாட்டு
47. என்னைப் பார்த்து – பாண்டித்துரை
48. மாலையிட்ட பொண்ணு – பாண்டித்துரை
49. மணிக்குயில் இசைக்குதடி – தங்க மனசுக்காரன்
50. மானே மயங்குவதேனோ – தங்க மனசுக்காரன்
51. மணிக்குயில் இசைக்குதடி (2 வது) – தங்க மனசுக்காரன்
52. ஒரு ராகம் தராத வீணை – உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
53. நட்டு வச்ச – அரண்மனைக் கிளி
54. வெண்ணிலவு கொதிப்பதென்ன – சின்ன மாப்ளே
55. மஞ்சள் வெயில் – என்றும் அன்புடன்
56. பாத்தியாபடி பாத்தியா – மாப்பிள்ளை வந்தாச்சு
57. வாங்க வாங்க மாப்பிள்ளையே – நாடோடிப் பாட்டுக்காரன்
58. காதலென்ன உங்க வீட்டு – ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்
59. மானுக்கும் மீனுக்கும் – பார்வதி என்னைப் பாரடி
60. சிங்கார மானே – தாய்மொழி
61. ஜிஞ்ஞில்லாரோ – தாய்மொழி
62. என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட – உன்ன நெனைச்சேன் பாட்டுப் படிச்சேன்
63. கண்ணா உன் கண்ணில் – உன்னை நெனைச்சேன் பாட்டுப் படிச்சேன்
64. அட எதிர்த்த வீட்டு – சின்ன தேவன்
65. சின்னச் சின்னப் பூங்கொடி – சின்னக் கண்ணம்மா
66. புன்னைவனப் பூங்குயிலே – செவ்வந்தி
67. ஆத்துல மேட்டுல – தம்பித்துரை
68. காலேஜ் கலாட்டா அனைத்துப் பாடல்களும் (கே.விஸ்வநாத் இயக்கிய Chinnabbayi தெலுங்கின் தமிழ் மொழி மாற்று)
69. ஶ்ரீராமராஜ்ஜியம் தெலுங்குப் படத்தின் தமிழ் மொழி மாற்று 14 பாடல்கள், ஸ்லோகம் நீங்கலாக

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கவிஞர் பிறைசூடன் அவர்களுக்கு.