Pages

Saturday, July 23, 2022

சோதனைகளைக் கடந்து தேசிய விருது கவர்ந்த S.S.தமன் 🎸❤️

“தம்தன நம்தன தாளம் வரும்” பாட்டைத் தெரியாதவர்கள் யாருமுண்டோ? அந்தப் பாடலில் ஜென்ஸியோடு கூடப் பாடியவர் B.வசந்தா. இவர் தமனின் தாயாரின் சகோதரி தான். “ஆசை வந்த பின்னே” (கொஞ்சும் குமரி) பாடல் வழியாகத் தமிழில் அறிமுகமாகி

“திருவளர்ச் செல்வியே” (ராமன் தேடிய சீதை), “பொட்டு வைத்த முகமோ” (சுமதி என் சுந்தரி) உள்ளிட்ட புகழ் பூத்த பாடல்களைப் பாடியவர் வசந்தா. 

தமனின் தாய் சாவித்திரி கூட ஒரு பாடகியே.

தமனின் சகோதரி யாமினி கூட ஒரு பின்னணிப் பாடகியாக இயங்கி வருகிறார். எனிமி படத்தில் Tum Tum பாட்டு பாடியது யாராம்?

இன்னொரு முக்கிய விஷயம் தமனின் மனைவி ஶ்ரீவர்த்தினி தமிழில் புகழ் பூத்த பல பாடல்களைப் பாடி வருவதும் இசைஞானி இளையராஜாவின் மேடை நிகழ்வுகளிலும் பங்கேற்று வருவது நீங்கள் அறிந்ததே.




சக்கரவர்த்தி போன்ற இசையமைப்பாளர்களிடம் ட்ரம்மராகப் பணியாற்றிய தமனின் அப்பா சிவகுமார் 1995 இல் திடீரென்று இதயவலி கண்டு இறந்து விட (அதாவது தமனின் 13 வது வயதில்)

தன் இள வயதிலேயே குடும்பப் பாரம் ஏற்க இசைக் கலைஞராக மேடையேறுகிறார். கிட்டத்தட்ட ஏ.ஆ.ரஹ்மான் கதை போல் இருக்கிறதல்லவா?

சத்யசாயி பாபாவின் அருட்கடாட்சமும் இந்தக் குடும்பத்தில் மேல் இருக்க, புட்டபர்த்தியிலேயே தமனின் தங்கையும் படித்து ஆளாகின்றார். (தகவல் நன்றி https://sathyasaiyugam.blogspot.com/ )

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு ஆயிரத்துக்குமேற்பட்ட இசைக் கச்சேரிகளில் இயங்கிய தமன், ட்ரம்ஸ் சிவமணி, மணிஷர்மா, கங்கை அமரன் போன்றோரின் இசை மேடைகளிலும், வெங்கட் பிரபு & சரண் போன்ற இளவல்களோடும் இயங்கி வந்திருக்கின்றார். 

ராஜ் – கோட்டி, கீரவாணி போன்றோருக்கு வாத்தியக்காராக இருந்தவர் மணிஷர்மாவிடம் 94 படங்களில் கூடவே இயங்கி அவரையே குருவாக வரித்துக் கொண்டவர். மணிஷர்மா கூட உமா ரமணன் & ரமணன் இசைமேடைகளில் தன் ஆரம்ப காலத்தை வளர்த்துக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாய்ஸ் திரைப்படத்தில் தன்னுடைய ட்ரம்ஸ் உடனேயே நடித்தும் விட்டார் தமன்.

தெலுங்கில் “கிக்” படம் தான் தமனைப் பெரு உயரத்துக்கு இட்டுச் சென்ற படம். 2009 இல் தொடங்கிய அந்த எவரெஸ்ட் பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

2020 இந்தியத் தேசிய விருதுப் பட்டியலில் நமக்கு நெருக்கமான தமிழ்ப் படைப்பாளிகளை அதிகம் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற இவ்வேளை இன்னொரு பெருமிதமான அங்கீகாரத்தையும் கொண்டாட வேண்டும். அந்த வெற்றியாளர், இசையமைப்பாளர் தமன் சிறந்த பாடல்களுக்காக “Ala Vaikunthapurramuloo” என்ற தெலுங்குப் படத்துக்காகத் தேசிய விருதைப் பெற்றிருக்கின்றார்.

வலிகள் இல்லாமல் விருதுகள் இல்லை

வாருங்கள் நாமும் தமனைக் கொண்டாடி வாழ்த்துவோம்.

கானா பிரபா

23.07.2022


Tuesday, July 12, 2022

அட நேத்து வரைக்கும் முழிச்சு முழிச்சு காத்து மழையத் தாங்கி வந்திருக்கேன் வந்திருக்கேன்.....❤️

பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பிறந்த தினமான (47) இன்று என் நினைவில் மிதந்த அவர்களின் பாடல்களில் ஒன்று இது.

இசைஞானி இளையராஜாவின் இசையில் “கஸ்தூரி மான்” திரைக்காக நா.முத்துக்குமாரால் எழுதப்பட்டது இந்தப் பாட்டு.

17 ஆண்டுகளை எட்டிய தன் திரையிசைப் பாட்டுப் பயணத்தில் கடைசி ஒரு தசாப்தம் அவரை இன்னும் ஆழமாக நேசித்தது அடுத்த தலைமுறை. நா.முத்துக்குமார் இன்மையிலும் தம் இருப்பாகவே அந்த ரசிக உள்ளங்கள் தம்முள் அவரை வைத்திருக்கிறார்கள்.


தொண்ணூறுகளுக்குப் பின்னான திரையிசை இயக்கத்தில் ஏறக்குறைய அனைத்து இசையமைப்பாளர்களுக்குமே எழுதிய பெருமை பெற்றவர் இன்னொன்றையும் தனதாக்கி வைத்திருக்கின்றார்.


“நித்தம் நித்தம் வானொலியில்

நேயர் விருப்பம் கேட்பேன்

உன் பேரை எழுதிப் போட்டு

சொல்லும் வரைக்கும் கேட்பேன்”


என்ற வரிகளைக் கடக்கும் போது, இளையராஜாவின் மூத்த இசை வாரிசு கார்த்திக் ராஜாவின் இசையில் “ஆல்பம்” படத்துக்காக நா.முத்துக்குமார் வரிகள் சமைத்த


காதல் வானொலி

சேதி சொல்லுதே

மோக மூட்டங்கள்

மனதை தொடுமா

மனதை

தொடுமா தொடுமா

மனதை தொடுமா......


https://www.youtube.com/watch?v=ogXmH7GWDIs


இசைஞானி இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என்று இசைக்குடும்பத்தில் இருப்பவர்கள் மூவரோடும் இயங்கிய இன்னொருவர் என்ற பெருமையோடும் பயணித்திருக்கிறார்.

மேகத்துக்கு மேல..பறந்திடப் போறேன்

மழைத் துளி போல குதிச்சிடப் போறேன்

பால் நிலவ தேன் நிலவா கொண்டு வந்து

நெஞ்சில் வெச்சிருக்கேன்


அட நேத்து வரைக்கும் முழிச்சு முழிச்சு

காத்து மழைய தாங்கி

வந்திருக்கேன் வந்திருக்கேன்


https://www.youtube.com/watch?v=3gf4Q2jsjTk


பாடல்களால் நிறைந்திருக்கும் பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Friday, July 8, 2022

சின்னராசாவே சித்தெறும்பு என்னைக் கடிக்குது....💃🕺

1993 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக இசைஞானி இளையராஜாவின் ஐந்து படங்கள் (கோயில் காளை, மறுபடியும், வால்டர் வெற்றிவேல், மாமியார் வீடு, சின்ன மாப்ளே) வெளியாகின்றன. 

இவற்றில் வால்டர் வெற்றிவேல் மற்றும் மாமியார் வீடு ஆகிய படங்களில் ஒரு குறும்பு விளையாட்டைக் காட்டுகிறார் ராஜா. 

லதாங்கி ராகத்தை அடிப்படையாக வைத்து இரண்டு பாடல்கள்.

ஒன்று மெல்லிசையாய் வரும் 

“என்னைத் தொடர்ந்தது 

கையில் கிடைத்தது நந்தவனமா?”

https://www.youtube.com/watch?v=MoF5p8fP5C0

என்ற “மாமியார் வீடு” படப் பாடல். (வானொலியில் திருமண நாள் வாழ்த்து நிகழ்ச்சிக்கு என் கை கொடுப்பான் தோழன் இந்தப் பாட்டு)

இன்னொன்று அதற்கு முற்றிலும் மாறுபட்ட அதிரடியான துள்ளிசைப் பாட்டு (குத்துப் பாட்டு என்று சொல்லப் பிடிக்காது எனக்கு)

“சின்ன ராசாவே 

சித்தெறும்பு என்னைக் கடிக்குது"

https://www.youtube.com/watch?v=aDVtHmOXm28

இந்தச் சின்ன ராசாவே பாடல் வெளியான நாளில் ஒரு யுகப்புரட்சியே செய்தது எனலாம் 🙂

கலியாணவீடு, கோயில் திருவிழா எல்லாம் பாட்டுப் பெட்டிகளில் மட்டுமல்ல நாகசுர, மேள தாளக் கலைஞர்கள் கூட விட்டு வைக்காமல் துள்ளிசைத்தார்கள்.

என் நினைவுக் கிளப்பிகளில் ஒன்று இந்தப் பாட்டு.

அப்போது உயர் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த காலமது, கடும் யுத்த ஒரு பக்கம், ஆனாலும் இளைஞர்களுக்கு ஏதோ ஒருவகையில் கிட்டிய ஒரே ஆறுதல் சினிமாப்பாட்டு. புதுசா ரஹ்மான் என்ற இசையமைப்பாளர் வந்து கொம்ப்யூட்டர்ல மியூசிக் போடுறார். இளையராஜாவின் அணியில் இருந்த சந்தர்ப்பவாதிகள் எதிரணி அமைத்துக் கொண்டு விட்டார்கள். நமக்கோ ஏகப்பட்ட கடுப்பு. 

ஆனாலும் ராஜா அந்த நேரத்தில் மானாவாரியாக இசையமைத்த படங்கள் உப்புமா கம்பெனியில் இருந்து பி.வாசு படங்கள் வரை எமக்குப் பக்கபலமாக இருந்து எதிர்க்கட்சிக்காரரைச் சமாளிக்கக் கைகொடுத்தன.  

யாழ்ப்பாணம் பஸ் ஸ்ராண்ட் பக்கமா இருக்கிற ஒரு மரப்பெட்டி மேல் மாடியில் சண் றெக்கோடிங் பார், ஷண் தான் எனக்கு ஆஸ்தான பாடல் ஒலிப்பதிவாளர். 

"என்னண்ணை படப்பாட்டு வந்திருக்கு" 

என்று கேட்டால் என்றால் நோட்டுப் புத்தகத்தில் புதுசா வந்த படத்தின் தலைப்பைப் போடு இரண்டு கீறு அதுக்குக் கீழே இழுத்து விட்டு, பாடல்களையும் பாடியவர்களின் விபரங்களைப் போட்ட நோட்டுப் புத்தகத்தைக் காட்டுவார். இதெல்லாம் சம்பிரதாயபூர்வமான விஷயம் என்றாலும் அவருக்குத் தெரியும் நான் என்ன முடிவு எடுப்பேன் என்று.

"இந்தப் படம் இளையராஜா இசையமைச்சதெல்லோ, 

முழுக்க றெக்கோர்ட் பண்ணுங்கோ" என்று விட்டு ஒரு நைந்து போன ஒலிநாடாவைக் கொடுத்து விட்டு வருவேன். அந்தக் காலத்தில் கசெட் இற்கும் தடை என்பதால் பாடல் பதிவு செய்யப்பட்டு அலுத்துப் போன கசெட்டில் மீளவும் வேறு பாடல்களைப் பதிப்பித்துக் கேட்கும் காலம். ஷண் ரெக்கோர்டிங் பார் குறித்து எழுத வேண்டியது நிறைய, அதைப் பிறகு பார்ப்போம்.

ஒருநாள் டியூசன் முடிந்து திருநெல்வேலிச் சந்தியால் நாலைந்து பெடியளுடன் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருக்கிறோம், ஒரு முடக்கில் இருந்த ரெக்கோர்ட்ங் பார் இல் இருந்து வருகிறது பாட்டு, 

"சின்னராசாவே சித்தெறும்பு 

என்னைக் கடிக்குது".  

அப்போதுதான் அந்தப் பாட்டைக் கேட்கிறோம், ஆளையாள் பார்த்துச் சிரிக்கிறோம், 

"என்னடா இது சித்தெறும்பு கடிக்குதாம் 

எப்பிடியெல்லாம் எழுதுறாங்கள்" 

ஆனால் அந்தப் பாட்டைக் கேட்ட மாத்திரத்திலேயே ராஜாவின் பாடல் என்பதால் எதிரணிக்கு இடம் கொடுக்காமல் "அருமையான ரியூன் மச்சான், ஜானகி பின்னுறா" என்று விட்டுக்கொடுக்காமல் பேசுகிறோம். ஆனாலும் உள்ளுக்குள் வெட்கம். ஏனென்றால் மின்சாரம் இல்லாத அந்தக் காலகட்டத்தில் பாடல் கேட்பதென்றால் வீட்டு முற்றத்தில் சைக்கிளைக் கிடத்தி,  பெடலை உருட்டும் போதுஅதில் உள்ள டைனமோவில் இருந்து மின்சாரத்தை டேப் ரெக்கார்டரில் பாய்ச்சித் தான் பாடலைக் கேட்கவேண்டும். சுற்றும் முற்றும் உள்ள வீட்டுக்காரருக்கும் பாடல் அலறும் அளவுக்குச் சத்தமாக இருக்கும்.

அடுத்த நாளே  ஷண் ரெக்கோர்டிங் பார்  சென்று இல் வால்டர் வெற்றிவேல் பாட்டு முழுக்க அடிச்சாச்சு, எல்லாப்பாட்டிலும் இந்தப் பாட்டுத் தான் கேட்க வேண்டும் போல இருக்கு. ஏன்றென்றால் ஷண் ரெக்கோர்டிங் பார் காரனும் இந்தப் பாட்டை விடுவதாக இல்லை. திரும்பத் திரும்பப் போட்டு மனசில் இந்தப் பாடலை ஆக்கிரமிக்கச் செய்துவிட்டார்.  நண்பன் சுதா வீட்டுக்குக் பாடல் கசெட் ஐ எடுத்து செல்கிறேன். புதுசா "வால்டர் வெற்றிவேல்" எண்டு ஒரு படப்பாட்டு வந்திருக்கு. ஒரு பாட்டு இருக்கு கேளும் முசுப்பாத்தியா இருக்கும் என்று நைசாகக் கதையளக்கிறேன்.  சில சமயம் எதிராளி எங்களை அவமானப்படுத்த முன்னர் நாங்களே சரண்டர் ஆகி விட்டால் பிரச்சனை பாதி முடிந்த மாதிரித்தான். அப்படித்தான் இங்கேயும். 'கட்டெறும்பு என்னைக் கடிக்குது எண்டெல்லாம் பாட்டு எழுதினம் கேட்டுப் பாருங்கோ" என்று நைச்சியமாகப் பேச, சுதாவும் சிரித்துக் கொண்டே சைக்கிளைக் கிடத்திவிட்டு பெடலை சுழற்றுகிறார்.  எடுத்த எடுப்பில் முதல் பாட்டே "சின்ன ராசாவே சித்தெறும்பு என்னை கடிக்குது" ஒரு கையால் பெடலைச் சுத்திக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கிறார் கூட்டாளி சுதா.

அந்தப் பக்கமாகப் போன சுப்பையாண்ணை, வயசு எழுபதுக்கு மேல் இருக்கும் 

"உதென்னடா பாட்டுப் போடுறியள் 

கட்டெறும்பு கடிக்குது எண்டு, அந்த நாளேலை நாங்கள் கேட்ட பாட்டும், இப்ப வாற பாட்டுக்களைக் கேட்டால் சீவன் போகுது" 

என்று புறுபுறுத்துக் கொண்டு நகர்கிறார். கொஞ்ச நாளில் ஊரெல்லாம் பரவுகிறது "சித்தெறும்பு" பாட்டு. எங்களுக்கும் வலு சந்தோசம், எதிர்க்கட்சிப் பாட்டுக்காரரும் விரும்பிக் கேட்கினம். 

படம் வந்த நேரம் பிரபு தேவா போட்ட தொள தொள ஜீன்ஸ் உம் பிரபலம். அதை பகி ஜீன்ஸ் என்று சொல்லி, "அண்ணை பொக்கற் பக்கம் நாலு கீறு டிசைன் போட்டு, கால் பக்கம் தொள தெளவெண்டு இருக்கோணும் என்ன" என்று ஊரிலுள்ள தையல்கடைக்காரருக்கும் நவ நாகரிகம் கற்றுக் கொடுத்தாச்சு. கோயில் திருவிழாவில் நாகசுரக்காரரும் வடக்கு வீதிக்கு சுவாமி உலா வரும் போது ராகமிழுக்கிறார் அட அவர் வாசிக்கிறதும் 

"சின்ன ராசாவே சித்தெறும்பு என்னை கடிக்குது"

கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டே பாடலை ரசிக்கிறோம்.

கானா பிரபா