Pages

Sunday, September 29, 2013

கண்டேன் இசைஞானியை மெல்பர்ன் இசைமேடையில்

இசைஞானி இளையராஜாவின் சமீபகால உலக இசைச்சுற்றுலாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே 2009 ஆம் ஆண்டில் இதே எடுப்பிலான ஒரு நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவிலும் நிகழ ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டிருந்தது. அப்போது சிட்னி சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா வழியாகவே இசை வழங்கிச் சிறப்பிப்பதாகப் புதுமையானதொரு ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத தடங்கல்களால் அது நிறைவேறாது போகவே, இந்த ஆண்டு மே மாதம் சிட்னி, மெல்பர்ன் ஆகிய நகரங்களில் இசைஞானி இளையராஜாவுடன் அவர் குழுவில் இருக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களுடன் நிகழ்ச்சியை அமைக்க இருந்த திட்டமும் கடைசியில் ரத்துச் செய்யப்பட்டு இந்தத் தடவை மூன்றாவது முயற்சியில் பலித்திருக்கிறது. ஆனால் சிட்னியில் இந்த நிகழ்ச்சி நடைபெறாத சூழலில், மெல்பர்னில் மட்டும் நிகழ்ந்தேறியிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை சிட்னி, மெல்பர்ன் ஆகிய இரு இடங்களிலுமே நிகழ்ச்சியைக் காண வேண்டும் என்று முடிவு பண்ணியிருந்தேன். ஈற்றில் மெல்பர்ன் நிகழ்ச்சியாவது சாத்தியமாயிற்றே என்று பயண ஏற்பாடுகளைச் செய்தேன். வார இறுதி கூடவே AFL எனப்படும் உதைபந்தாட்டப்போட்டியும் இதே நாளில் மெல்பர்னில் நடப்பதால் சிட்னியில் இருந்து பெருங்கூட்டம் மெல்பர்ன் நோக்கிப் படையெடுத்தது.


மெல்பர்னுக்கு வந்து சேர்ந்ததோடு ஹோட்டலுக்குப் போய் உடைகளை மாற்றி மாலை நான்கு மணிக்கெல்லாம் Melbourne convention Centre போய்விட்டேன். அப்போதே அரங்கத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ரசிகர்கள் கூடத்தொடங்கினர். நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளர் உதவியுடன் மெல்ல அரங்கத்துக்குள் சென்றேன். ஒரு பெரிய பலாப்பழத்தை அறுத்துப் பிரித்து வைத்ததுபோல நீண்ட அரைவட்ட அரங்கம் அது. ஐயாயிரத்து ஐநூறு பேர் கொள்ளக்கூடிய விசாலமான நவீன வசதிகளுடன் அமைந்து அட்டகாசமான தோற்றத்துடன் இருந்தது. அங்கே நான் உள்ளே நுழைந்ததும் என் கண்கள் நேரே அரங்கத்தை நோக்கித் தான் ஊடுருவின. மேடையிலே ஆர்மோனியப்பெட்டியை ஒருபக்கம் அணைத்துக்கொண்டே வெள்ளைச் சட்டை, வெள்ளை வேஷ்டியுடன் இசைஞானி நிற்கிறார். ஒரு கணம் இது கனவுலகமா என நினைத்துக்கொண்டேன். புகைப்படங்களிலும், ஒளிப்படங்களிலும் பார்த்துப் பழகிய ராஜா அதைவிட நிதமும் ஏதாவது ஒரு அவர் இசையமைத்த பாடலைக் கேட்டுக்கொண்டே வாழ்வதால் அந்தச் சந்திப்பு அந்நியப்படவில்லை. மேடைக்கு நெருக்கமான என் இருக்கையில் பசை ஆனேன். ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கண்காணித்துச் சீர் செய்துகொண்டிருந்தார் ராஜா. அந்தச் சூழல் எனக்கு பிரசாத் ஒலிப்பதிவுக்கூடத்தில் இருக்குமாற் போல ஒரு பிரமையை ஏற்படுத்தியது. ஐந்து மணிக்கெல்லாம் இசை ஒத்திகை ஓய்ந்தது, மீண்டும் ஐந்தரை மணிக்குக் கூடுவோம் என்று தமக்குள் ஒரு அறிவிப்பை ஏற்படுத்திவிட்டுக் கலைந்தனர்.


ஐந்தரை மணிக்குப் பின்னர் அரங்கம் மெல்ல மெல்ல நிரம்பத்தொடங்கியது. சிட்னியிலிருந்து ஏகப்பட்ட தெரிந்த முகங்களைக் கண்டேன். ஒவ்வொருவரும் ஆளையாள் குசலம் விசாரித்துக்கொண்டிருக்க, அரங்கம் மெல்ல இருளைப்ன்போர்த்தது மேடை பளிச்சென்று மின்னியது கலைஞர்களால்.

இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் திரு.நவநீதராஜா அவர்கள் "எத்தனையோ இன்னல்களுக்கும் மத்தியில் இந்த நிகழ்வை ரசிகர்களாகிய உங்களுக்காகத் தான் நாம் வழங்குகிறோம், உங்கள் ஆதரவுக்கு நன்றி" என்று கூறிச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

நிகழ்ச்சித் தொகுப்பாளராக நடிகை சுஹாசினி முதலில் மேடையில் ஏறித் தன்னை அறிமுகப்படுத்திவிட்டு "எங்கள் இளையராஜா, 975 படங்கள் வரை இசைமைத்தவர், பெரும் நடிகர்களுக்கு இணையாகப் படத்தின் டைட்டில் கார்டில் ராஜா பெயர் வரும் போதே ரசிகர்களின் கைதட்டலை வாங்குபவர் அத்தோடு எத்தனையோ படங்களில் ராஜாவின் பாடலைப் பாடச் செய்து ஆரம்பப் பாடலாக்கித் தான் வெளியாகணும் என்றெல்லாம் அமைஞ்சிருக்கு" என்று சொல்லி இசைஞானியை வரவேற்றார்.

இளையராஜாவின் ஆஸ்தான இசை ஒருங்கமைப்பாளர் பிரபாகர் கையசைவில் வாத்தியங்களின் ஆலாபனை மெல்ல மெல்ல ஒன்று இரண்டாக ஒன்று கூடி ஆர்ப்பரித்தது இருட்டைக் கிழித்து கடக்கும் கார்களின் சீரான ஒளிவெள்ளம் போலப் பாய்ந்து தணிய, குரு ப்ரம்மா என்ற ஆலாபனையை சேர்ந்திசைப்பாடகிகள் ப்ரியா ஹிம்மேஷ், அனிதா, சுர்முகி, ஶ்ரீவர்த்தினி கூட்டமும் மறுபுறம் சத்யன், வாசு, செந்தில், பெள்ளிராஜ் என்று ஆண்குரல்களுமாக சேர்ந்து பாடி ஓயும் நேரம் கனத்த கரகோசங்கள் காதைக்கிழிக்க, இசைஞானி வந்தார் ஜனனி ஜனனி பாடலுடன்.


இளையராஜாவின் குரலில் ஜனனி ஜனனி பாடலோடு, நான் தேடும் செவ்வந்திப்பூ இது, இதயம் ஒரு கோவில், சொர்க்கமே என்றாலும், மற்றும் நிறைவுப்பாடலாக தென்பாண்டிச் சீமையிலே ஆகிய பாடல்களைச் சேர்ந்தும் தனித்தும் பாடினார். சொர்க்கமே என்றாலும் பாடலின் சரணத்தில் வெளிநாட்டில் வாழ்க்கையைப் பற்றிப் புதிதாக இட்டுக்கட்டிய வரிகளை சித்ராவுடன் சேர்ந்து பாடும் போது இருவருக்கும் சந்தம் கட்டுக்குள் வராமல் திமிறியது, மூல வரிகளோடே பாடியிருக்கலாமே என்று நினைக்க வைத்தது. ஆனால் தென்பாண்டிச் சீமையிலே பாடலில் வெளிநாட்டு வாழ் இசை ரசிகர்களையும் தொடர்புபடுத்திப் புதிதாக இணைத்த வரிகளோடு பாடிய பாங்கு நிறைவுக்கு நிறைவாக அமைந்திருந்தது.



"இவர்தான் பிரபாகர், நாம இப்படி இசை நிகழ்ச்சி நடத்தும் போது என்னோட பழைய படங்களுக்குப் போட்ட பாடல்களோட நோட்ஸ் எல்லாம் தொலைஞ்சிடுச்சு ஆனா ஒவ்வொரு பாட்டையும் சீடி தேயத் தேயக் கேட்டு நோட்ஸ் எழுதினார் இவர்" என்று ராஜா பிரபாகரை அறிமுகப்படுத்தியதோடு சதா, நெப்போலியன், குன்னக்குடி வைத்தியநாதன் மகன் உள்ளிட்ட அத்தனை கலைஞர்களையும் பொருத்தமான பாடல்களில் அந்தப் பாடல்களில் அவர்களின் மூல வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்டபோது ராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். ஒரு முதற்தர இராணுவ அணிவகுப்புப் போல இருந்தது இவர்கள் நிகழ்ச்சி பூராவும் கொடுத்த வாத்திய ஆலாபனை. இந்த நேரடி இசையனுபவத்தை ஒரு சேர அனுபவிப்பது கைலாயத்தைக் கண்ட திருப்தியை இசை ரசிகனுக்குக் கொடுக்கும்.



இந்த நிகழ்ச்சிக்கு ஆனைப்பலம், குதிரைப்பலம் மற்ற எல்லாப்பலங்களையும் சேர்த்தது எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் வருகை. இசைஞானி இளையராஜாவும் எஸ்.பி.பியின் கலாய்ப்புக்களிலும், வேடிக்கைப் பேச்சுக்களிலும் தன் கண்டிப்பை நழுவ விட்டார்.

"மடை திறந்து தாவும் நதியலை நான்" பாடலை எஸ்.பி.பி பாடிவிட்டு அந்தப் பாடலில் இரண்டாவது சரணத்திற்கு முதலில் வரும் கோரஸ் ஐத் தொடர்ந்து வரும் ஆர்மோனிய இசை அது அப்படியே மெல்ல மெல்ல கிட்டார், வயலின் என்று வாத்திய ஆர்ப்பரிப்புக்குப் போகும் விதத்தை அணு அணுவாக ரசித்து ராஜாவின் இசையமைப்புத் திறமையைச் சிலாகித்தார், கூடவே அந்தப் பகுதியை மீள இசையமைக்கச் செய்து மீண்டும் அந்த அற்புத தருணத்தை உணரவைத்தார். மடை திறந்து பதிவை நான் போட்டு இரண்டாவது நாளே டெலிபதி வேலை செஞ்சிருக்கு ;-)


"வனிதாமணி வனமோகினி" பாடலில் ஒரு கட்டத்தில் ரயில் போகும் இசை வரும் ஆனா படத்தில் ரயிலே இல்லாம கமலும் அம்பிகாவும் ஒரே இடத்தில் இருந்து பாடியிருப்பாங்க ஏன் ராஜா" என்று எஸ்பிபி மீண்டும் சீண்ட "அவங்க ஷுட்டிங் ஷெட்யூல்ல ஏதும் சிக்கலா இருக்கும்" என்று ராஜா சிரித்துக் கொண்டே சமாளித்தார். அதையும் விடவில்லை மீண்டும் அந்தப் பகுதியை வாசித்துக் காட்டச் சொல்லி வேண்டித்தான் விட்டார் எஸ்.பி.பி.  இங்கே தான் எனக்கு இன்னொரு வியப்பு, அத்துணை இசைக் கலைஞர்களும் கேட்ட பகுதியை அட்சரம் பிசகாமல் அப்படியே நேரடி வாசிப்பாகக் கொடுத்தது அட்டகாசம். 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே", "அடி ராக்கமா கையத் தட்டு", 'ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா", "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" என்றெல்லாம் பாடிய அத்தனையும் மேடையிலும் பட்டை தீட்டி ஒளிர்ந்தன.

பாடகர் ஜெயச்சந்திரன் தமிழ்த்திரையிசை மீதும் குறிப்பாக ராஜா மீதும் பேரபிமானம் மிக்கவர். முதல்தடவையாக லண்டனைத் தொடர்ந்து மெல்பர்ன் மேடைக்கு வந்திருக்கிறார். "மாஞ்சோலைக் கிளி தானோ மான் தானோ" பாடலோடு அவரின் அறிமுகம் அமைந்தது. "தேன் தானோ" போன்ற ஓகாரத்தில் ஒரு எல்லையில் பாதி மலையில் இருந்து இறங்குமாற்போல அவர் வெட்டிக் கொண்டே போக ஒரு நிலையில் ராஜாவே தன் கையை நிமிர்த்தி உயர்த்துமாறு வலியுறுத்த வேடிக்கையாக நகர்ந்தாலும், ஜெயச்சந்திரனை மேடையில் அந்தப் பாடலோடு பார்க்கையில் மனம் பரவசமானது. உடுமலைப்பேட்டையில் இருந்த ஒரு தியேட்டரில் "வைதேகி காத்திருந்தாள்" படத்தில் "ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" பாடல் ஒலிக்கும் போது, யானைக்கூட்டம் வந்து அந்தப் பாடலைக் கேட்ட புதுமையான செய்தியை ராஜா சொன்னார். ஜெயன் ஜெயன் என்று அன்போடு மிகவும் அந்நியோன்யமாக அவரை விளித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், "ஜெயச்சந்திரன் பாடிய எல்லாப் பாடல்களுமே ஹிட்டு, அதுதான் இவருக்குக் கிடைத்த பெரிய வரம்" என்று வாயாரப் புகழ்ந்தார். கூடவே "ரசிகர்களைப் பார்த்து நீங்க பாடணும், எதுக்கு ராஜாவையே பார்த்துண்டு பாடுறீங்க" என்று காலை வாரினார், அரங்கமே கலகலப்பானது. "வைதேகி காத்திருந்தாள்" படத்தில் வரும் "ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" "இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே", "காத்திருந்து காத்திருந்து" இந்த மூன்று ஹிட் பாடல்களுமே ஒரே நாளில் ஒலிப்பதிவு செய்தவை என்ற புதுமையான தகவலைச் சொல்லிய ஜெயச்சந்திரன் எந்தவித வாத்தியப் பின்னணியும் இல்லாமல், ஏன் கையில் பாடல் குறிப்புக்கள் கூட இல்லாமல் "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி" என்ற பாடல் எனக்கு ரொம்பப் பிடிச்சமானது என்று முழுதாகவே பாடிவிட்டார். உண்மையில் அந்த நேரம் கிட்டிய அனுபவத்தை எழுத்தில் சொல்லி மாளாது, நெஞ்சை நிறைத்தது. "கொடியிலே மல்லியப்பூ" பாடலையும் பாடியவர் "மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்" பாடலையும் பாடியிருக்கலாமோ என்று மனசு நினைத்தது, அளவுகடந்த ஆசையப்பா.


நின்னுக்கோரி வர்ணம் பாடலோடு வந்த சித்ரா, பல பேட்டிகளில் சொன்னது போல ராஜா சார் என்றாலே பயபக்தியுடன் இருப்பது தெரிந்தது. இளையராஜாவே மனம் விட்டு ஜாலியாக "வந்திருக்கிற மலையாளரசிகர்களுக்கு கொஞ்சம் மலையாளத்துல பேசுங்க சித்ரா சேச்சி" என்ற போது, வெட்கப்பட்டுக் கொண்டே மலையாள ரசிகர்களுக்குத் தன் வாழ்த்தை ஒற்றைவரியில் பகிர்ந்தார். மதுபாலகிருஷ்ணன், இளையராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் சேர்ந்து பாடிய பாடல்களோடு தனித்துப் பாடிய ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் பாடலில் ஒரு இடத்தில் கொஞ்சம் புதுச்சங்கதி போடவும், " நீ பாலு கூடச் சேர்ந்து பாடி, அவன் மாதிரி கெட்டுப் போயிட்டே"என்று கிண்டலடிக்க தனது அக்மார்க் கன்னக்குழிச் சிரிப்பை உதிர்த்தார். "தும்பி வா தும்பக் குளத்தே"  பாடலைச் சித்ரா அனுபவித்துப் பாடினார், கண்ணை மூடிக் கொண்டே கேட்டேன் ஜானகியின் நினைப்பே வராத அளவுக்கு மது உண்டு களித்த தும்பி ஆனது மனது.


தனது அண்ணன் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் ஶ்ரீராம ராஜ்யம் படத்தின் "ஜகதானந்த காரக" பாடலோடு ஆரம்பித்த எஸ்.பி.சைலஜா அவரின் தனிக்காட்டில் கொடிகட்டிய "ராசாவே உன்னை நான் எண்ணித்தான்" பாடலையும் தனித்துப் பாடினார். ஒலிவாங்கி இவரைக் குறிவைத்துத்தான் வஞ்சம் தீர்த்தது. எஸ்.பி.சைலஜாவின் மென்மையான குரலை மேலும் அமுக்கிவைத்தது.

 பாடகர் கார்த்திக் ராஜாவின் சமீபத்திய தேர்வுகளில் முதல் மாணவனாகக் கலக்குகிறார். அதிலும் "கோடை காலக்காற்றே" (பன்னீர்ப்புஷ்பங்கள்) பாடலைப் பாடிவிட்டு, "இந்தப் பாட்டின் சரணத்தைக் கேட்கும் போதெல்லாம் அழுது விடுவேன் ராஜா சார் முன்னாடி இந்தப் பாடலைப் பாடுவது எனக்கு மிகப்பெரிய வரம்" என்று உருகினார், அவர் அந்தப் பாடலை நேசித்துப் பாடிய விதமே அதை நிரூபித்தது. ஓம் சிவோஹம் பாடலை விஜய் பிரகாஷ் குரலில் கேட்டுப் பழகிய காது கார்த்திக்கையும் அன்போடு வரவேற்றது.

"ஒளியிலே தெரிவது தேவதையா" பாடலின் மூலப்பாடகரே இவர் என்பதால் அதிலும் நின்று ஆடினார். பவதாரணி, மற்றும் சின்மயி ஆகியோர் நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்து கடைசி நேர மாறுதலில் வரவில்லை.


 கே.ஜே.ஜேசுதாஸ் இல்லாத மேடையில் ஓரளவு நியாயம் கற்பிக்க மது பாலகிருஷ்ணன் வந்திருந்தார். கல்யாணத் தேனிலா பாடலை விட  பழஸிராஜா படத்தில் வந்த ஆதியுத்ய ஸந்த்ய என்ற பாடலைப் பாடும் போது உச்சமாக ரசிக்க முடிந்தது.

யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அரங்கம் கொடுத்த வரவேற்பைப் பார்த்தபோது மனுஷர் தனி ஆவர்த்தனம் பண்ணலாம் போல என்னுமளவுக்கு இருந்தது. "சாய்ந்து சாய்ந்து" (நீதானே என் பொன் வசந்தம்), "நினைவோ ஒரு பறவை" பாடல்களைப் பாடியதே போதும் என்று இருந்துவிட்டார் போலும், எல்லாம் நன்மைக்கே. "நினைவோ ஒரு பறவை" பாடலை உண்மையில் கமல்ஹாசனை வைத்துப் பாட வைக்கும் திட்டம் இருக்கவில்லையாம். வேறொரு பாடகரை வைத்துப் பாடல் ஒலிப்பதிவு செய்ய ஆயத்தமாகும் நேரம் ஒலிப்பதிவுக்கூடத்துக்கு வந்த கமல் ஏதோவொரு பாடலை முணுமுணுக்கவே, திடீரென்று இவரையே பாடவைத்து விடலாம் என்று ராஜா முடிவெடுத்தாராம். அந்தப் பாடலின் ஆரம்பத்தில் ஜானகி கொடுக்கும் ஹம்மிங் கூட, கமல் இந்தப் பாடலைப் பாடுவதற்காக ஒத்திகை செய்யும் நேரத்தில் ஒலிப்பதிவு செய்துவிடலாம் என்ற திடீர் ஐடியாவாகச் சேர்க்கப்பட்டதாக ராஜா சொன்னார்.

கார்த்திக் ராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் சேர்ந்து ஒரு வேடிக்கைப் பாட்டுப் போட்டி நிகழ்த்தினார்கள். இருவரும் மாறி மாறி  "என்னைப் பாடச் சொல்லாதே" "என்ன பாடுவது", "ஏ உன்னைத் தானே" போன்ற பாடல்களைப் பாடிப் போட்டி போட்டுகொண்டிருந்தார்கள். ஆனால் பாடல்களின் வரிகளில் கவனம் வைக்காமல் ரொம்பவே இம்ஹும் இம்ஹும் என்றெல்லாம் முணுமுணுத்தது "ரொம்பவே வெளையாட்டுப் பசங்களா இருக்காங்களேப்பா" என வாய்விட்டுச் சொல்ல வைக்குமளவுக்கு இருக்கவே, இருவரையும் சமாதானப்படுத்தும் வகையில் கார்த்திக் வந்து காப்பாற்றினார். "பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்" பாடி கார்த்திக் காதில் தேன் வார்த்தார்.



கார்த்திக் ராஜா இளையராஜாவுடன் நிகழ்த்திய கேள்வி பதில் நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. கவிஞர் வாலி பற்றி கார்த்திக்ராஜா கேட்க, "வாலி அண்ணன் எனக்கு முதலில் எழுதிய பாட்டு "கண்ணன் ஒரு கைக்குழந்தை". ஆனால் நான் இசையமைப்பாளரா வர்ரதுக்கு முன்னாடியே எனக்காக என் அண்ணன் பாஸ்கர் ஒவ்வொரு படக்கம்பெனியா ஏறி இறங்கினார். அப்போ ஒரு தயாரிப்பு நிறுவனம் தாங்கள் தயாரிச்சிட்டிருக்கிற ஒரு படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்காக வாலி எழுதிய பாடலைக் கொடுத்து அந்தப் பாடலை இசையமைக்கச் சொன்னார்கள், நானும் "வட்ட நிலா வானத்திலே" என்ற அந்தப் பாட்டை இசையமைத்துக் காட்டினேன்" என்று அந்தப் பாடலைப் பாடிக்காட்டினார். இந்தச் செய்தியை இந்த மேடையில் தான் நான் முதன் முதலில் சொல்றேன்" என்றார்.

அந்தப் பாடலின் மெட்டை எங்கோ கேட்ட மாதிரி இருக்கே என்று என் வலது புற மூளை இயங்கத் தொடங்கியது. சட்டென்று கண்டுபிடித்து விட்டேன். அந்த மெட்டில் "என்றும் அன்புடன்" படத்தில் வரும் "சின்னஞ்சிறு அன்னக்கிளி கண்ணில் ஆடுது" https://www.youtube.com/watch?v=8M9YZmRX9mg என்ற பாடல், அதுவும் வாலி தான் எழுதியது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து தட்சணாமூர்த்தி சுவாமிகளைப் பற்றிய கேள்வி, "ஐய்யயோ தட்சணாமூர்த்தி சுவாமிகளா, அவர் எவ்வளவு பெரிய மேதை, என் சங்கீத குருவாக ஏற்றுக்கொண்டு ஆறுமாதம் வரை படிச்சேன் அதுக்கு மேல் என்னால தாக்குப்பிடிக்க முடியல, அவர் ஒன்றைச் சொல்லிக் கொடுத்தா என்னால அதுமாதிரிப் பாடவே வரல. அவருடை படங்களுக்கெல்லாம் நான் வாத்தியம் வாசிச்சிருக்கேன். பாட்டு ஒலிப்பதிவாகும் நேரமே அவருக்கு சாமி வந்து பயங்கரமா உருக்கொண்டுடுவார்.  புதுசா எழுதிவைத்த ஒரு பாடலை முதலில் படிக்கும் போதே அந்தப் பாட்டை மெட்டோடு பாடும் அளவுக்கு பெருங்கலைஞர் அவர். எங்க வீட்டில் நடக்கும் சரஸ்வதி பூஜை நிகழ்ச்சிகளில் முதல் நாள் பவதாரணி பாடுவா, அடுத்த நாள் தட்சணாமூர்த்தி சுவாமிகள் தான் பாடுவார், மீதி நாட்களில் எல்லாம் வெவ்வேறு பாடகர்கள் பாடுவாங்க ஆனா எனக்கு தட்சணாமூர்த்தி சுவாமிகள் பாடிய பாட்டைத் தாண்டி மனசு போகாது" என்றார் ராஜா.

நிறைவாக "உங்க இசையில் வந்த பாட்டுக்களில் எங்க அம்மாவுக்குப் பிடிச்ச பாட்டு எது?" இதுக்கு நீங்க பதில் சொல்ல முடியாது ஏன்னா உங்களுக்கு எங்க வீட்ல என்ன நடக்குதுன்னே தெரியாது" என்று கார்த்திக்ராஜா சிரித்துக் கொண்டே கலாய்க்க, ராஜாவும் "உங்க அம்மாவுக்குப் பிடிச்ச பாட்டு "புது நாள் இன்று தான்" என்று பாட்டைப் பாட ஆரம்பிக்கிறார். "தப்பு தப்பு" அந்தப் பாட்டு படத்தில் வரவே இல்லை எங்க அம்மாவுக்குப் பிடிச்ச பாட்டு இதயம் ஒரு கோயில்" என்று கார்த்திக் முரண்டு பிடிக்க, "நீங்கல்லாம் பிறக்கிறதுக்கு முந்தியே உங்கம்மாவுக்கு என்ன பாட்டு பிடிக்கும்னு எனக்குத் தெரியும் "புதுநாள் இன்றுதான்" என்ற பாட்டை அவளுக்காகவே இசையமைச்சேன்" என்று ராஜா சொல்ல "ஆமா எனக்கும் அந்தப் பாட்டு நல்ல ஞாபகம் அப்பல்லாம் ட்ராமாவில எல்லாம் பாடுவோம்" என்று திடீரென்று ஆஜரான எஸ்.பி.பியும் ராஜாவுக்கு வக்காலத்து வாங்கிக் கலகலப்பாக்கி விட்டு "சாரி ராஜா அந்தப் பாட்டுல ஒரு சங்கதியை என்னோட ஒரு தெலுங்குப்படத்தை இசையமைச்சப்போ பயன்படுத்திட்டேன்" என்று சரண்டரானார் எஸ்பிபி.

"லதாஜி பாடிய எங்கிருந்தோ அழைக்கும் உன் ஜீவன் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் உங்கம்மா அழுவா" என்று பழைய நினைவுகளில் மூழ்கினார் ராஜா.


சேர்ந்திசைப்பாடகர்களில் சத்யன், செந்தில், வாசு மூவரும் பெரும் பலம். இந்த வாசு என்பவர்தான் இளையராஜாவின் பாடல்களில் கோரஸ் குரல்களின் ஒருங்கமைப்பாளராக இருக்கிறார் என்று ராஜா அந்த மேடையில் அறிமுகப்படுத்தினார். நான் தங்கியிருந்த ஹோட்டலிலேயே இளையராஜாவின் இசைக்குழுவினர் தங்கியிருந்ததால் அவர்களில் ஒரு சிலரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது அவர்களில் வாசுவும் ஒருவர். தான் ராஜாவிடம் 18 வருடங்களாகப் பணிபுரிவதாகச் சொன்னார். அன்னக்கிளி காலத்தில் இருந்து ராஜாவோடு பயணிக்கும் இன்னொரு இசைக்கலைஞர் அவர் நாட்டுப்புற வாத்தியங்கள், சதங்கை சத்த ஸ்பெஷலிஸ்ட் ஆவார். மற்றும் ராஜாவின் இசை ஒருங்கமைப்பாளர் பிரபாகர், ஆஸ்தான ஒலிப்பதிவாளர் சுந்தர், ராஜாவின் மேடைகளில் சதா சிரித்த முகத்துடன் தபேலா வாசிக்கும் சுந்தர் போன்றோரையும் சந்தித்துப் பேச வாய்ப்புக்கிட்டியது.

 

 எனக்கு இடதுபுறம் தாள வாத்தியக்கலைஞர் சுந்தர்

 கோரஸ் குரல்களின் ஒருங்கமைப்பாளர் வாசு, மற்றும் இசை ஒருங்கமைப்பாளர் பிரபாகர்


 இசை ஒருங்கமைப்பாளர் பிரபாகர் மற்றும் ஒலிப்பதிவாளர் சுதாகர்

கண்கள் இரண்டால் புகழ் பெள்ளிராஜ் அதிகம் கவனிக்கப்படவில்லை ஆனால் சத்யன் காட்டில் மழை. இது ஒரு நிலாக்காலம் பாடலில் " நாதர்தின்னனா" என்ற ஆலாபனையைக் கொடுத்த விதத்திலேயே "இவர்தான் சத்யன், என் குருநாதர் டி.வி.கோபாலகிருஷ்ணனை படத்தில் பாட வச்சேன்" என்றார் ராஜா.

ஸ்ருதியே முகமாகக் கொண்டவள் என்று ராஜா கலாய்த்த சுர்முகி, கண்ணாலே மெய்யா மெய்யா புகழ் ஶ்ரீவர்த்தினிக்கும் ஜோடிப்பாடல்கள் கிட்டின. இந்த மேடையில் உச்சமாக அமைந்த பாடல் என்றால் "ஏரியிலே எலந்தமரம்" (கரையெல்லாம் செண்பகப்பூ) என்பேன். ராஜா "டேய் பசங்களா" என்று கோரஸ் பாடகிகளைக் கூப்பிட, அதற்கு முதல் பாடலைப் பாடிய எஸ்.பி.பி உள்ளே போய்க்கொண்டிருந்தவர் "கூப்பிட்டியாடா" எனவும் " உன்னை யாரும் பையன் என்பாங்களா" என்று சிரித்துக் கொண்டே பாடகி அனிதாவுக்கு சங்கீதப் பாடம் எடுத்துக் காட்ட, அனிதாவும் மெல்ல மெல்ல சுருதி பேதம் கலைந்து பாடலுக்குள் முழுமையாக மூழ்கி முத்துக்குளித்துவிட்டார். மிக அரிதாக மேடையில் பாடிய பாட்டு என்றதால் கேட்கவும் புதுமையாகவும் இனிமையாகவும் இருந்தது.

N.S.K ரம்யா தன்னுடைய புகழ்பூத்த சற்று முன்பு" ( நீதானே என் பொன் வசந்தம்) பாடலைப் பல மேடைகளில் பாடிக் களைத்திருப்பார் போலும், இங்கே பாடாதது குறையே தான். யுவனுடன் சாய்ந்து சாய்ந்து (பாடலை) பாடினார். அது ஒரு நிலாக்காலம் பாடலைப் பாடிய போது எஸ்.ஜானகி இல்லாத மேடைகளை உய்விக்க வந்திருக்கிறார் என்று அந்தக் கவர்ச்சிகரமான குரல் சாட்சியம் பகிர்ந்தது.

தேவி ஶ்ரீ பிரசாத்தின் ஆஸ்தான பாடலி ப்ரியா ஹிம்மேஷ் பல வருடங்களுக்கு முன்னர் சினிமாவில் பாடல்களைப் பாடமுன்பே கார்த்திக், மதுமிதாவுடன் சிட்னி மேடையில் பாடியவர். அவர் இப்போது முன்னணிப்பாடகியானாலும் ராஜ சபையிலே இருப்பதே பெருமை என்று எனக்குக் கொடுத்த வானொலிப்பேட்டியில் சொல்லியிருந்தார். ஆயிரம் மலர்களே மலருங்கள் பாடலில் ப்ரியா ஹிம்மேஷ் சிக்ஸர் அடித்தார்.

செந்தில் என்ற பாடகர் அட்டகாசமான கலைஞர், ஓரம்போ பாட்டில் வரும் கிழவிக் குரலில் இருந்து ஆயிரம் மலர்களே பாடலும், ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே பாடலும் அவரின் குரலில் கேட்கும் போது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில் தனித்துச் சிறப்பித்தன.  நல்ல வாய்ப்புகள் கிட்டவேண்டும் இவருக்கு.
சேர்ந்திசைப்பாடகர்கள் இணைந்து பாடிய "நான் பொறந்து வளந்தது" (மாயாபஜார் 1995) இன்னொரு இரத்தினம், வாத்திய வாசிப்புகளின்றி வாய்ஜாலங்களாக வந்து விழுந்த இசையைத் தான் கொடுக்கக் காரணம் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் என்பதால் இந்த மாதிரி சுதந்தரம் கிடைத்தது என்றார் ராஜா.
 நிகழ்ச்சி என்னமோ "ராஜா ராஜாதான்" என்ற தமிழ்ப்பெயர்ச்சூட்டலுடன் தான் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது ஆனால் அரங்கத்தில் பாதிக்கு மேல் தென் பாரத விலாஸ் எனலாம். தெலுங்கு, கன்னட, மலையாள ரசிகர்கள் அந்தந்த மொழிகளில் மேடையில் பேசும் போது ஆனந்தக் கூத்தைக் கைகளில் ஆடினார்கள்.  "ஜெகதேக வீருடு அதிலோக சுந்தரி" என்ற படத்தில் வரும் "அப்பனி தீயனி டெப்பா" https://www.youtube.com/watch?v=gRj6zUwmrOQ பாடலை எஸ்.பி.பி மற்றும் சித்ராவே மேடையில் பாடினார்கள். பாடிவிட்டு "பொதுவா சிரஞ்சீவி படங்களுக்கு வித்தியாசமான டப்பாங்குத்துப் பாட்டுக்கள் இருக்கும்" என்று சொல்லிவிட்டுப் பாடிக்காட்டிவிட்டு "ஆனா இந்தப் பாட்டு சிவரஞ்சனி ராகத்துல அமைஞ்சது அந்த ராகம் பொதுவா ஏக்கம் போன்ற வெளிப்பாடுகளுக்குத் தான் பயன்படுத்தப்படும் அதையும் ராஜா ஜிம்தக்கு ஜிம்தக்கு என்று ரதம் வருமாறு சிரஞ்சீவிக்குப் போட்டுக்கொடுத்திருக்கிறார், அந்தப் படத்தில் வரும் எல்லாப்பாட்டுமே சூப்பர் ஹிட், இந்தப் பாட்டை ஹிந்திக்கெல்லாம் கொண்டு போயிருக்காங்க ராஜா பேருக்காச்சும் நன்றி ராஜான்னு போட்டிருக்கலாம்ல" என்று எஸ்.பி.பி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த ராஜா இரண்டு கைகளையும் திருப்பித் திருப்பிக் காட்டிச் சிரித்தார். "இந்தப் படத்தோட எல்லாப் பாட்டையும் ஹிட் ஆக்கலைன்னா நான் ஆர்மோனியப்பெட்டியையே தொடமாட்டேன் என்று சிரஞ்சீவிக்குச் சொல்லிட்டுத்தான் இசைமைச்சேன் இந்தப் படத்தோட பாட்டுக்கள் மாதிரி சிரஞ்சிவிக்கு இந்தப் படம் வர்ரதுக்கு முதல் 15 வருஷமும் அமையல அடுத்த 15 வருஷமும் அமையல" என்றார் ராஜா.

கன்னட ரசிகர்களுக்குத் தனிப்பாடல் என்று எதுவும்  இசையோடு கிட்டவில்லை. கன்னடத்திரையுலகின் 75 ஆவது ஆண்டு விழாவில் கொண்டாடிய ஒரே பாட்டு "ஜெதயலி" https://www.youtube.com/watch?v=CCmpAZC9bk4 என்று சுஹாசினி ஆரம்பிக்கவும் அந்தப் பாடலை எஸ்.பி.பி ஒரு சில வரிகள் பாடிவிட்டு அதே கீதா படத்தில் வந்த "கேலதி நிமகீக" https://www.youtube.com/watch?v=zFo6cmU8W2c பாடல் குறித்துச் சிலாகிக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் ராஜாவும் எஸ்.பி.பியும் கன்னடத்திலேயே மாட்லாடியதால் அந்தப் பாடல் பிறந்த கதை குறித்து அறியமுடியவில்லை. பாடலாசிரியர் உதயசங்கர் பெயர் மட்டும் தான் புரிந்தது, கண்டிப்பாக அந்தப் பாட்டுக்குப் பின்னால் ஏதோ சுவாரஸ்யம் ஒளிந்திருக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கு ஒரு பெரும் சவாலாக அமைந்தது ஒலியமைப்பு. மைனஸ் 1 உலகத்திலெஎ எழுபதுக்கும் மேற்பட்ட கலைஞர்களை மேடையில் ஏற்றி அட்சர சுத்தமாக இசையைக் கொடுக்கவேண்டும் என்ற முனைப்போடு இருக்கும் போது அந்த எண்ண ஓட்டத்துக்குப் பெரும் தடையாக இருப்பது, ஒரு சில ஒத்திகைகளோடு மேடையில் ஒலியமைப்பைக் கொடுப்பது மகா சவால். அந்தச் சோதனை நிகழ்ச்சி முடியும் வரை தொடர்ந்தது மிகவும் உறுத்தலாக இருந்தது.  இளையராஜாவே ஒரு சில பாடல்களைப் பாதியில் நிறுத்தி அந்த வாத்தியக் கோர்வையை மீண்டும் துல்லியமாக ஒலிவாங்கிகளில் விழ வைக்கச் சொன்னபோதுதான் அவற்றின் வீரியத்தை உரக்கச் சொன்னது.  மிகவும் திறமையான ஒலியமைப்பாளர்கள் இருந்தாலும் இம்மாதிரியான சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் என்பதைச் சொல்லியே ஆகவேண்டும்.

இது ஒருபுறமிருக்க, நிகழ்ச்சியை வீடியோ படம்பிடித்த வெள்ளைக்காரன் செய்த வேடிக்கை இன்னொரு பக்கம். தபேலா வாத்தியம் வாசிக்கப்படும் போது புல்லாங்குழல் பக்கமும், வயலின் இசை வரும் போது தபேலா பக்கமுமாக அவரது கமரா அலைபாய்ந்தது.  ஒரு கட்டத்தில் எஸ்.பி.பியே வாய்விட்டுச் சொல்லும் அளவுக்கு நிலமை இருந்தது. உண்மையில் இம்மாதிரிப் பெரும் எடுப்பிலான தமிழ்த்திரை இசை நிகழ்ச்சியில் வீடியோ படம் எடுப்பவர், ஒரு பாடலின் இசை அடுத்து எந்த வாத்தியத்துக்குத் தாவப்போகிறது என்ற ஏழாம் அறிவைக் கொண்டிருக்கவேண்டும். அப்போதுதான் சீராகவும் சிறப்பாகவும் தனது காமெராக் கண்ணை மெல்ல மெல்ல நிதானமாக நகர்த்தித் தகுந்த வாத்திய இசைப்பக்கம் மையப்படுத்துவார். அதை வெள்ளைக்காரனிடம் எதிர்பார்க்கவே முடியாதே. அதனால் தான் பிரபல ட்விட்டர் திருவள்ளுவர் சொன்னார் "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்"

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே நிகழ்ச்சித் தொகுப்பாளர் சுஹாசினியின் அலைவரிசையும், ராஜாவின் அலைவரிசையும் சேர்ந்து இயங்கவில்லை. பழைய வானொலிப்பெட்டியில் ஒரு ஸ்டேஷனைக் கேட்கும் போது இடைமறிக்கும் இன்னொரு ஸ்டேஷன் மாதிரி. இம்மாதிரி ஒரு சந்தர்ப்பம் அமையும் என்று ஏழுகடல் தாண்டிய நானே குறிப்பால் உணர்ந்தேன் என்னும் போது இருதரப்பும் தமக்குள் ஒரு சமரசப் பேச்சுவார்த்தை மூலம் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்கவேண்டும்.  ராஜாவுக்கு fact இல்லாத புகழ்ச்சியை மேடையில் கேட்க ஒத்துவரவில்லை என்பதைத் தான் காட்டியது. ஏனென்றால் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ராஜாவோடு பழைய நிகழ்வுகளையெல்லாம் ஆதாரபூர்வமாகச் சொல்லிக் கொள்ளும்போதெல்லாம் ராஜா சமரசமாகவே இயங்கினார்.

இதுவரை இசைஞானி நிகழ்த்திய உள்ளூர், வெளியூர் இசை நிகழ்ச்சிகளில் சென்னையில் "என்றென்றும் ராஜா" என்ற நிகழ்ச்சியே உச்சம் என்பேன்.  பிரகாஷ்ராஜின் இயல்பான தொகுத்து வழங்கலும், அளவான பேச்சும் கொண்டதோடு எல்லாமே அந்தந்த அளவில் இயங்கின. இதுபோல இன்னொரு நிகழ்ச்சி வரும் போது அதையும் கண்டு களிக்காமல் ஓயப்போவதில்லை மனது.

உண்மையிலேயே ஆஸ்திரேலிய வரலாற்றில் இம்மாதிரி பிரமாண்டமான இசை மேடையை இது நாளில் கண்டதில்லை, எஞ்சிய வாழ்நாளிலும் காண்போமா என்ற சந்தேகம் வலுக்குமளவுக்கு மனித உழைப்புப் போய் எல்லாம் ஒரு இசைவட்டுக்குள் சுருங்கிவிட்டது. எனவே "வாழ்நாளில் மறக்கமுடியாதது" என்று என்று ஒரு பட்டியல் போட்டால் இந்த நிகழ்ச்சியைப் பாரபட்சமின்றிச் சேர்க்கும் அளவுக்கு அமைந்து விட்டது பெரும் எடுப்பிலான இன்னிசை நிகழ்வு. எழுபது வயதுக்கார இசைஞானி, நிகழ்ச்சி ஒத்திகையின் போதும், நான்கரை மணி நேரம் கடந்த இசை நிகழ்ச்சியிலும் வாயில் ஒரு சொட்டுத் தண்ணீர் தானும் அருந்தாமல் ஆர்மோனியப் பெட்டியை ஒரு கையால் அணைத்தபடி நின்று கொண்டே இயங்கியது இன்னும் இன்னும் என்னை ஆச்சரியத்தை விதைக்கிறது, இந்த அசுர உழைப்புக்காரர் மேல்.

அந்த வகையில் இசைஞானி இளையராஜாவுடன் தகுந்த கூட்டணியும் சேர்த்து நம்மிடம் சேர்ப்பித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கடைக்கோடி ரசிகனின் சார்பில் வாழ்த்துகள்.

Friday, September 27, 2013

இளையராஜா எனக்கு இன்னொரு தாய்


1995 சித்திரை மாதத்தில் ஒரு நாள், போர்ச்சூழல் மெல்லத்தணிந்து சந்திரிகா சமாதானப்புறாவோடு நாட்டின் தலைவராக வந்த நேரம் அது. படித்துக்கொண்டே எந்தப் பெரிய இலட்சியங்களோடும் உலாத்திக்கொண்டிருந்தேன் வீட்டின் கடைக்குட்டி,செல்லப்பிள்ளை வேறு. அந்த இளந்தாரி வயதிலும் அம்மா "இஞ்ச வா தீத்தி விடுறன்" என்று சோற்றுக்கவளத்தோடு வரவும் "எனக்கு புட்டும் முட்டைப்பொரியலும் தான் வேணும்" என்று அடம்பிடித்து அம்மாவை கஷ்டப்படுத்தி சாப்பிட்டு வளரும் அளவுக்கு கொடுமைக்காரன் நான். அந்த நேரம் அண்ணன் "நாட்டு நிலமை இப்பிடியே எப்பவும் இருக்காது, உனக்கு ஏதாவது செய்யவேணும்" என்று சொல்லிக்கொண்டிருந்தார். அந்த நேரம் டெய்லி நியூஸ் பத்திரிகையில் அவுஸ்திரேலியாவுக்கான உயர்கல்விப் படிப்பு விளம்பரமொன்று வந்திருந்தது. அண்ணனுக்கு ஏதோ பொறி தட்டியது போல அந்தக் கற்கை நெறியை ஒழுங்கு செய்வதற்கான நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு என்னை மெல்பர்னுக்கு அனுப்பி வைத்தார். எனக்கு சுட்டுப் போட்டாலும் சிங்களம் வராது ஆனால் விதி, நான்கு சிங்கள மாணவர்களுடன் என்னை அனுப்பி வைத்தது. பயணத்தில் எனக்காகவே வேண்டி கொஞ்சமே சேர்த்ததில் நிறைவாக இருந்தது ஃபைனாஸ் மியூசிக் செண்டரில் ஒலிப்பதிவு செய்த இளையராஜாவின் பாடல்கள். 

மெல்பர்னில் நான் வந்திறங்கிய இடம் St Kilda என்ற நகர்ப்பகுதி.

மெல்பர்னில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்வுக்காக நான் பயணப்படவேண்டி, நிகழ்ச்சி நடக்குமிடத்துக்கு அருகாமையிலுள்ள ஹோட்டல்களைத் தேடியபோது எனக்குத் தங்க இடம் கொடுத்த ஹோட்டல் அமைந்த இடம் St Kilda.

நான் அவுஸ்திரேலியா வந்தபோது இங்கே எனக்கென்று சொல்லிக்கொள்ளும்படி யாருமே இருக்கவில்லை. அண்ணன் தந்த கொஞ்ச டொலரையும் கணக்குப்பார்த்து ஒரு கோப்பி இலங்கை மதிப்பில் இவ்வளவா என்று மலைத்து பச்சைத்தண்ணியே போதும் என்று நிரப்பிக்கொள்வேன். வேலையும் இல்லை. நான் மெல்பர்ன் வந்த சில நாட்களிலேயே நாட்டில் யுத்த சூழல் மீண்டும் இன்னும் கடுமையாக. எங்கள் ஊரையே பெயர்த்தெடுத்துபோல காலியான நிலத்தை மட்டும் விட்டுவிட்டு கால் நடைகள் ஈறாக இராணுவக் கட்டுப்பாடில்லாத பிரதேசங்களைத் தேடி மக்கள் பெயர்ந்து கொண்டிருந்தார்கள். 1987 ஆம் ஆண்டுக்குப் பின் ஊரிலிருந்து வெளியுலகுக்கான தொலைத்தொடர்பு என்றால் வெறும் கடிதம் மட்டும் தான்.
கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு மேலாக என் பெற்றோர் எங்கே இருக்கிறார்கள், உயிருடன் இருக்கிறார்களா என்றே தெரியாத நிலை. நிதமும் காலையும் மாலையும் விமானக் குண்டு வீச்சிலும் ஷெல் தாக்குதல்களிலும் பத்து, நூறாக கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டவர்கள் குறித்த செய்திகள் மட்டும் பஞ்சமில்லாமல் வந்துகொண்டிருந்தன.
"அம்மா, உங்களை எவ்வளவெல்லாம் கஷ்டப்படுத்தியிருப்பேன், நீங்களும் அப்பாவும் எங்கே இருக்கிறீர்கள் என்றே தெரியாமல் கஷ்டப்படுகிறேன் அம்மா எப்படியாவது எங்கிருந்தாலும் பதில் போடுங்கள்" என்றெல்லாம் கடிதம் எழுதி கொழும்பிலிருக்கும் மாமாவின் முகவரிக்கு அனுப்பி வைத்தேன்.

சுற்றும் முற்றும் யாருமே இல்லாத அந்நியச் சூழல், கால்வயிறு நிறைந்தாலே போதும் என்று சொற்பமே இருக்கும் டொலரைக் கணக்குப்பார்த்து சிப்ஸையோ ஒரு வெறும் ப்ரெட் துண்டத்துடன் ஜாம் என வயிற்றுக்குமாக அந்தக் காலம் அப்போதுதான் என் துணையாக, இன்னும் நெருக்கமாக வந்தமர்ந்து கொண்டது இலங்கையிலிருந்து கொண்டுவந்த இளையராஜாவின் பாடல்கள். வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி பாட்டு ஒலிக்கும் போதெல்லாம் ஏழுகடலுக்கு அப்பாலிருந்து பறந்து வந்து என் அம்மாவே என் முதுகைத் தடவிவிடுவதுபோல உணர்வேன் சில்லிட்டு நிற்கும் மனசு. மேசையில் டேப் ரெக்கார்டரை வைத்து ராஜாவின் பாடல்கள் ஒலிக்க ஆரம்பிக்கும் போது முகத்தை மேசையில் புதைத்து இறுகக் கண்களை மூடிக்கொண்டே அந்த உலகத்தில் மூழ்கிவிடுவேன். "மடை திறந்து தாவி வரும் நதியலை நான்" பாடலில் மூன்று நிமிடங்களைக் கடந்த நொடியில் ஆர்ப்பரிக்கும் வயலின் இசை போல ஓடிக்கொண்டிருந்தேன் ஓடிக்கொண்டிருந்தேன் ஓடிக் கொண்டே இருந்தேன். சில மாதங்களில் முட்டுப்பட்டு வேலை கிடைத்தாலும் நான்கு நாட்கள் இரவு எட்டு மணி முதல் காலை எட்டுமணி வரை அப்படியே ஓடிப்போய் குளித்துவிட்டு பல்கலைக்கழகம் ஓடவேண்டும். அந்நிய விருந்தாளியாக நாட்டில் எழுத்தில் வடிக்கமுடியா அவமானங்கள், வாய்விட்டுச் சொன்னாலும் புரிந்துணரமுடியா தோல்விகள் இவையெல்லாவற்றையும் புரிந்து ஒத்தடம் கொடுத்தது ஜீவனுள்ள ராஜாவின் இசை. அவை வெற்றி இலக்கைத் தொட்டபோது சந்தோஷங்களாக வெடித்தபோது "நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்" என்ற வரிகளுக்கு முன்னான கோரஸ் குரல்களாக துள்ளிக் குதித்தபோதும் எனக்கு அதை ஹெட்போன் மாட்டிக்கொண்டாட ராஜா இசையே தேவைப்பட்டது. என் துன்பங்களில் மட்டுமல்ல, இன்பங்களிலும் நான் கொண்டாடுவது ராஜாவின் பாடல்களோடுதான். ஏனென்றால் எனக்கு அதுதானே ஆதியும் அந்தமுமான பந்தம்.

புலம்பெயர்ந்து பதினெட்டு வருடங்கள் கடந்தோடி விட்டது. கடந்த பதினான்கு வருடம் என் ஆத்மதிருப்திக்காகக் கையிலெடுத்துக் கொண்ட வானொலிச்சேவையில் "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போலாகுமா" என்று ராஜாதான் அடியெடுத்துக் கொடுக்கிறார். அப்போதெல்லாம் இந்த வானொலி உலகத்திற்கெல்லாம் வருவேன் என்று கற்பனை கூடப்பண்ணியதில்லை. அதையெல்லாம் கடந்து மெல்பர்னுக்கு வந்த ராஜாவை விமான நிலையத்தில் வைத்து நம் வானொலி சார்பில் வரவேற்கும் அளவுக்கு ஆண்டவன் என்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறான். மடை திறந்துப் பாடலில் உயரே எம்பிக்குதிக்கும் அளவுக்கு இந்த இசை நிகழ்ச்சியைக் காணும் ஆவலோடு மனம் பறக்கிறது.

பல வருஷங்கள் கழித்து நான் வந்திறங்கிய அதே St Kilda நகருக்குப் போகிறேன் இசைஞானியின் இன்னிசை நிகழ்வு காண. இன்று என்னைச் சூழவும் தெரியாத சனம் என்று மிகச்சிலரே உள்ள சூழலிலும் நான் நெருக்கமாக வைத்துக்கொள்வது இசைஞானி போட்டுக் கொடுத்த எண்ணற்ற திரவியங்களையே ஏனென்றால் எத்தனை மாறுதல் கண்டபோதும் மாறாத தாயுள்ளம் போல அது என்றுமே குறை வைத்ததில்லை. சூழ்நிலைகள் மாறும்போது பாராமுகமாய் இருக்கும் சொந்தங்கள் போலவோ, கூட இருந்தே சூது கொள்ளும் நட்புப் போல அது என்றும் வஞ்சித்ததில்லை அதனால் தான் நானும் ராஜாவின் இசைக்கு விசுவாசமாக இருக்கிறேன்.

எத்தனை பிள்ளைகளை ஈன்றெடுத்தாலும் தாய் என்றுமே அளவு பார்த்து அன்பை ஈட்டியதில்லை. ராஜாவின் கோடிக்கணக்கான இசை ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதை விட இளையராஜா எனக்கு இன்னொரு தாய் என்று சொல்வதை அறிந்தால் தாயகத்தில் இருக்கும் என் தாயும் பூரிப்பாள்.

நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம் இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம் 



 

Tuesday, September 24, 2013

பாடல் தந்த சுகம் : ஏ அய்யாசாமி அட நீ ஆளக்காமி

வருஷம் 16 வந்த நேரம் பதின்மவயதின் உச்சத்தில் அந்தப் பருவத்துக்கே உரித்தான காதல்  கிறுக்கேறி உச்சத்தில் இருந்தது. வருஷம் 16 நடிகை குஷ்புவின் இரண்டாவது படமாக, அவருக்கு ஒரு திருப்புமுனையாக வந்தபடமென்பதால் ராதிகா என்ற அந்த அத்தைப்பொண்ணையே டியூசன் செண்டரில் பெண்கள் பக்கம் இருந்த "அவளின்" ஜாடையாக மனம் கன்னாபின்னாவென்று கற்பனையெல்லாம் செய்தது. அவளின் ஜடை வேறு இரட்டைப்பின்னல். கூடப்படித்த நண்பர்களை சார்லி வகையறாவுக்குள் போட்டதை அறிந்தால் அடிக்க வருவாங்கள்.

இந்தப் படம் யாழ்ப்பாணம் வெலிங்டன் தியேட்டரில் கடைசியாக ஓடிய படம். பரீட்சை எல்லாம் முடிந்து கணக்காக இந்தப் படத்தின் கடைசி நாள் காட்சி ஓடவும் நண்பர்களுடன் லுமாலா சைக்கிள் புரவியில் யாழ் நகருக்குப் போய்ப் பார்த்தோம். அடுத்த படம் சம்சாரம் அது மின்சாரம் என்று முன்னோட்டம் காட்டினார்கள், அடுத்த நாளே போர் சூடுபிடித்து மின்சாரமும் இல்லாமல் போய் கொஞ்சக் காலத்தில் வெலிங்டன் தியேட்டரே வருஷம் 16 படத்தின் இறுதிக்காட்சியில் வரும் இடிபாட்டு பங்களாவின் நிலையில் குண்டடி பட்டு இப்போது அந்தச் சுவடே இல்லாமல் இருக்கிறது வெலிங்டன் தியேட்டர் இருந்த நிலம்.

வருஷம் 16 படத்தை இப்போதும் ஏதாவது தொலைக்காட்சி ஒளிபரப்பினால் அந்த டியூசன் காலத்துக்குத் தாவிவிடும் மனது. இயக்குனர் பாசில் - இசைஞானி இளையராஜா சேர்ந்த கூட்டணி என்றால் சொல்லவா வேண்டும் ஒவ்வொரு பாடல்களும் முத்துக்கள். அப்போது வந்த பாசில் படங்களில் ஜேசுதாஸ் ராசியாக ஒரு பாடலையாவது அவருக்காக எழுதி வைத்துவிடுவார்கள். இந்தப் படத்தின் பாடல்களைப் பொறுத்தவரை "ஏ அய்யாசாமி நீ ஆளைக்காமி" பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா கோஷ்டியினர் பாடக் கேட்கும் போது அந்தப் பாடலில் கொடுத்த புதுமையே முன்னின்று என்னைக் ரசிக்க வைக்கும்.

தமிழ்த்திரையிசையில் கோஷ்டி கானங்களுக்கா பஞ்சம்? வாராய் என் தோழி வாராயோ பாடலில் இருந்து எண்ணற்ற பாடல்களை அள்ளிக்குவிக்கலாம். இலங்கை வானொலியில் அப்போது "கோஷ்டி கானம்" எனறொரு தனி நிகழ்ச்சியே இருந்தது. அந்த வரிசையில் வரும் இந்தப் பாடலில் அப்படி என்ன புதுமை?

நாயகனைக் கலாய்க்கும் நண்பர்களின் சேர்ந்திசைக் குரலில் ஒலிக்க ஆரம்பிக்கும் இந்தப் பாட்டு அப்படியே அந்தச் சந்தத்தைப் பட்டென முறிக்காமல் காதலன் காதலியின் ஜோடிப்பாடலாக மெல்ல மாறுகிறது அங்கேயிருந்து மெல்ல தோழியர் கூட்டம் "அடி சின்னப்பொண்ணு நட்டுவச்ச செங்கழனி நாத்துதான் அதை சேர்த்தணைக்க காத்திருக்கு தெக்குதிசை காத்துதான்" எனறொரு சின்னதொரு ஆலாபனைக்குள் போய்விட்டு மீண்டும் காதல் ஜோடியின் தளத்துக்குத் தாவுகின்றது. இடையே இன்னொரு சங்கதி இரண்டாவது சரணத்த்தின் ஆரம்பத்திலே இப்படியாக "அத்தமக ராசாத்திக்கு நெத்திலி மீனு வேணாமா" என்று ஆண்குரல்களின் ஆலாபனையிலிருந்து மெல்ல மீண்டும் காதல் ஜோடியின் பாட்டுக்கு எனத் தாவுகின்றது. இந்தப் பாடலைப் பிரித்துப் பார்த்தால் இசையைத் தவிர, ஆண்குரல்களின் கூட்டு, பெண்குரல்களின் கூட்டு, காதல் ஜோடியின் பாட்டு இந்த மூன்றுமே வெவ்வேறு மெட்டில் இருக்கும் ஆனால் அவற்றை இணைத்து ஒரு பாடலாக இணைத்துக் கேட்கும்போது அந்த வித்தியாசமே தொனிக்காது இனிக்கும். ஒரு கோஷ்டி கானத்திலும் இவ்வளவு மினக்கெடலா ஆகா அற்புதம் என மனம் சொல்லும்.

என்பதுகளிலே ராஜாவோடு பயணப்பட்ட இன்ன பிற இசையமைப்பாளர்களின் பாடல்களின் மெட்டில் இருக்கும் இனிமை வாத்தியகோர்வையில் இருக்காது. பல்லவியில் இருந்து சரணத்துக்குப் போகும்போது அதல பாதாளத்தில் ட்ரம்ஸை உருட்டியது போல இசை, சம்பந்தாசம்பந்தமில்லாமல் வரும் சேர்ந்திசைக் குரல்கள் என்று குழப்பக் கோர்வையாக இருக்கும். இங்கே தான் ராஜா ஜெயித்ததற்கான இன்னொரு சூத்திரமும் விளங்கும். நேர்த்தியாக அணி செய்யும் வாத்தியக் கோர்வையும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குத் தாவும் போது ரிலே ஓட்டக்காரரின் கையில் இருக்கும் கட்டையை இலாவகமாக வாங்கிக் கொண்டே இலக்கை நோக்கிச் செல்லும் வெற்றியாளன் போலப் பயணப்படும் அந்த இசை.



Monday, September 16, 2013

பாடல் தந்த சுகம் : ஞான் ஞான் பாடணும்

எழுபதுகளின் இறுதிக்காற்பகுதியில் இருந்து எண்பதுகளின் முற்பகுதிவரை தமிழ் சினிமாவில் தமக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்தவர்களில் நடிகை சுஜாதாவும் பாடகி ஜென்ஸியும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த இருவருமே மலையாளத்திரையுலகில் அறிமுகமாகியிருந்தாலும் இருவரையும் சுவீகரித்துத் தக்க அங்கீகாரத்தைத் கொடுத்ததென்னவோ தமிழ்த்திரையுலகம் தான். அவள் ஒரு தொடர்கதை மூலம் சுஜாதாவும் திரிபுர சுந்தரி மூலம் ஜென்ஸியுமாக தமிழ்த்திரையுலகில் காலடியெடுத்து வைத்தார்கள். இருவரையும் இணைத்த புள்ளியாக "பூந்தளிர்" என்ற படத்தில் வரும் "ஞான் ஞான் பாடணும்" பாடலைச் சொல்லலாம். இதற்கு முன்போ பின்போ சுஜாதாவுக்காக ஜென்ஸி பாடியதாக நினைவிலில்லை. இந்த விசேஷம் மட்டுமல்ல பாடல் முழுதுமே மலையாள வரிகளைத் தாங்கி வந்த சிறப்பையும் கொண்டிருக்கிறது இந்தப் பாட்டு.

தமிழ் சினிமாவில் வேற்று மொழிப்பாடல்கள் என்ற ஒரு தொகுப்பை பல ஆண்டுகளுக்கு முன்னர் வானொலி நிகழ்ச்சிக்காகப் படைத்திருந்தேன். ஜெமினி தயாரித்து நடித்த கே.பாலசந்தர் இயக்கிய நான் அவனில்லை படத்தில் வரும் "மந்தார மலரே " தவிர மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வரும் "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்" பாடல்களைத் தவிர " நெஞ்சினிலே நெஞ்சினிலே" (உயிரே) , "லாலா நந்தலாலா" ( நரசிம்மா), திருவோணம் திரு நாளும் (கும்பகோணம் கோபாலு) பாடல்களிலும் ஒரு சில மலையாள வரிகளை உள்ளடக்கி வந்திருக்கின்றன.

இசைஞானி இளையராஜாவின் இசையில் "பூந்தளிர்" படத்தில் வரும் ஒவ்வொரு பாடல்களையும் தனித்தனியே சிலாகிக்கும் அளவுக்குச் சிறப்பு வாய்ந்தவை. "ஞான் ஞான் பாடணும்" பாடலை எம்.ஜி.வல்லபன் எழுதியிருக்கிறார்.

இளையராஜாவின் ஆரம்பகாலப்படங்களில் கணிசமான பங்களிப்பை எம்.ஜி.வல்லபன் வழங்கியிருக்கிறார். எம்.ஜி.வல்லபனே இயக்கிய தைப்பொங்கல் போன்ற படங்களில் பாடலாசிரியராகவும் இவர் கொடுத்த பாடல்கள் கவிச்சிறப்பு மிக்கவை. குறிப்பாக இங்கே நான் தரும் பாடலை ராஜா நினைத்தால் ஒரு மலையாளக் கவிஞரை எழுத வைத்திருக்கலாம். எம்.ஜி.வல்லபனுக்கான விசேட அழைப்புக்குக் கண்டிப்பாகக் காரணமிருக்கும். அந்த வாய்ப்பையும் நிறைவாகவே வழங்கியிருக்கிறார் இவர்.

"மரத்தைச் சுற்றிப் பாடும்" மரபோடு சரி சமமாகப் பயணப்பட்டது காதலியோடு "ஒளித்துப் பிடித்து தேடி விளையாடும்" பாடல்கள். குறிப்பாக இந்தப் பாடலை ஒத்த பாடல்களாக சம காலத்தில் வந்த "கண்டேன் எங்கும்" (காற்றினிலே வரும் கீதம்), மற்றும் "தெய்வீக ராகம் திகட்டாத பாடல்" (உல்லாசப் பறவைகள்) வகையறாவில் அடக்கக்கூடியது இந்தப் பாட்டு.

ஜென்ஸிக்குக் கிடைத்த இந்த இரண்டு பாடல்களில் "தெய்வீக ராகம் திகட்டாத பாடல்" இன்னொரு திசையில் உச்ச ஸ்தாயியில் பயணப்படும் போது இந்தப் பாடல் அடக்கமாக வந்து மனதைக் கவர்கின்றது. இந்த இரண்டு பாடல்களையும் இன்னொருவருக்குப் பொருத்திப் பார்க்க முடியுமென்றால் அவர் ஸ்வர்ணலதா ஒருவர் தான். அதனால் தான் முன்னொரு முறை ஜென்ஸியின் மறுபிறவி ஸ்வர்ணலதா என்றேன். ஓணம் பண்டிகை நாளில் இதம் தரும் இந்தப் பாடலைக் கேட்பதே சுகம் தரும் அனுபவம்.



Wednesday, September 11, 2013

பாடல் தந்த சுகம்: "எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ"


சமீபத்தில் பாடகர் மது பாலகிருஷ்ணன் சிட்னிக்கு வந்திருந்தபோது இடைவேளை நேரத்தில் அவரைச் சந்திக்க வாய்ப்புக் கிட்டியது. அப்போது என் விருப்பமாக "எதிலும் இங்கு இருப்பான்" பாடலைப் பாடுகிறீர்களா என நான் வேண்டுகோளை வைக்க அவர் "பாட்டு முழுசா ஞாபகம் இல்லை, கைவசம் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் பாட்டு இருக்கு அதைக் கொடுக்கட்டுமா" என்றார். ஏமாற்றத்துடன் தலையாட்டினேன். இப்படியான அரிய பாடல்களை பாடியவர்களும் சரி, மேடையில் மீளப் பாடுபவர்களும் சரி ஏனோ கணக்கெடுப்பதில்லை. பாரதி படத்தின் பாடல்களிலே எனக்கு "கேளடா மானிடா" , " நிற்பதுவே நடப்பதுவே" பாடல்களையும் தாண்டி பெருவிருப்பில் முதலிடத்தில் இருப்பது இந்தப் பாடல்.

ஞான ராஜசேகரன் படம் இயக்க வந்து ஜானகிராமனின் மோகமுள்ளை ஒரு வழி பண்ணியிருந்தார். அதிலும் இசை ராஜா அதனைத் தொடர்ந்து பாரதி படத்தை இயக்க ஆரம்பித்தபோதே சினிமா சமூகம் அவ்வளவு விருப்போடு இதை எதிர் நோக்கவில்லை. ஆனால் இளையராஜாவைப் பொறுத்தவரையில் மோகமுள் படத்தைப் போலவே இந்தப் படத்திலும் நேர்மையாக உழைத்தார். படத்தில் வரும் "மயில் போல பொண்ணு" பாடலை மு.மேத்தா எழுதி பவதாரணி பாடி சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பெற்றுக் கொண்டார். அதே போல் இன்னொரு பாடலான "எதிலும் இங்கு இருப்பான்" பாடலை பாடலாசிரியர் புலமைப் பித்தன் எழுதியிருக்கிறார்.

பாரதியின் கதை சொல்லும் படத்தில் இப்படி இருவேறு பாடலாசியர்களைப் பாட்டெழுத வைத்ததும் புதுமை

அதிலும் இன்னொரு புதுமை, ஒரு தீவிர நாத்திகரை கடவுள் வாழ்த்துப் பாட அழைத்தது. இது குறித்து பாடலாசிரியர் புலமைப்பித்தனும் ஒருமுறை விகடன் பேட்டியில் சொல்லியிருக்கிறார். தன்னுடைய கொள்கையை விலத்தி இந்தல் பாடலை எழுத்த வைத்தது தன் குருநாதர் பாரதி மீது கொண்ட குருபக்தியின் வெளிப்பாடென.

தன் வாழ்ந்த சமூகத்தில் கடவுளின் பெயரால் நிகழ்த்தும் செயல்களைக் கண்டு அதை வெறுத்தார். ஆனாலும் கடவுளின் மீதான அன்பு எள்ளளவும் குறையவில்லை. அந்தச் சூழலுக்கு வருமாற்போல ஒரு பாட்டு. சிவனின் பெருமையை அவரின் அங்க இலட்சணத்தோடு இணைந்து வர்ணிக்கிறது. பாரதி ஒரு சமூகப்போராளிக்கான குரலை மது பாலகிருஷ்ணன் என்ற மென்மையான குரல் வளம் மிக்க பாடகரைப் பாட வைத்து, இசையையும் இன்னும் அடக்கமாகவே இருத்தி, வார்த்தைகளுக்குச் சிம்மாசனம் இட்டிருக்கிறது ராஜாவின் இசை.

இங்கே தான் ஒரு தேர்ந்த இசையமைப்பாளரின் தொழில் நுணுக்கம் துலங்குகின்றது. ஒரு பழுத்த பக்திப்பழத்தால் கூட இவ்வளவு கட்டுக்கோப்பாக கடவுள் வாழ்த்துப் பாட முடியுமா என எண்ணத் தோன்றும் கவிச்சுவை.

பாடல் ஆரம்பிக்கும் போது கண்களை மூடிக்கொண்டால் தியான நிலைக்கு அமைதியாக இட்டுச்செல்லும் அப்படியே 2.48 நிமிடத்தில் உயரே வயலின் எழும்ப கூடவே ஆலாபனை செய்யும் வாத்தியங்கள் திரை விலக்கி சாமி தரிசனம் தெரிய பஞ்சாராத்தி காட்ட எழுந்து கரங்கூப்பி உளமுருகிப் பிரார்த்திக்கும் பக்தர் குழாம் போல. 
அடியும் முடியும் அறிய முடியான் எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ வரிப்புலியதள் தரித்தவன் எழில் கண்டேன் பிறப்பெனும் பிணி அறுப்பவன் துணை கொண்டேன் தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம் தரத்திருவுளம் வேண்டும் சகத்தினுக்கெனை தரத்தகும் நெறி வகுத்திட துணை வேண்டும் ஆலம் கருநீலம் எனத் தெரியும் ஒரு கண்டன் அண்டும் திருத்தொண்டன் என்னும் அடியார்க்கொரு தொண்டன் பற்றுத் தளைக்கு நெருப்பவன் ஒற்றைக் கணத்தில் அழிப்பவன் நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ

சென்ற நூற்றாண்டில் தமிழ்ச்சமூகம் பேர் சொல்ல எழுந்த பாட்டுப் போராளி பாரதியின் நினைவு நாளில் அவரைக் குருவாக வரித்துக் கொண்ட புலவர் புலமைப்பித்தன் கொடுத்த கட்டை விரலை ஆராதிப்பதும் பாரதிக்கு நாம் செய்யும் பெருமை தானே. 

 
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
தவழும் நதியைத் தரித்த  முடியான்
அடியும் முடியும் அறிய முடியான் 
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
 எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
 வரிப்புலியதள் தரித்தவன்  எழில் கண்டேன்
பிறப்பெனும் பிணி அறுப்பவன் துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம் தரத்திருவுளம் வேண்டும்
சகத்தினுக்கெனை  தரத்தகும் நெறி வகுத்திட துணை வேண்டும்
ஆலம் கருநீலம் எனத் தெரியும் ஒரு கண்டன்
அண்டும் திருத்தொண்டன் என்னும் அடியார்க்கொரு தொண்டன்
பற்றுத் தளைக்கு நெருப்பவன் ஒற்றைக் கணத்தில் அழிப்பவன்
நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை
நடப்பதும் அதைத் தடுப்பதும் அவன் லீலை 
உடுக்களில் சரம் தொடுத்தவன் தலை முடிக்கணியவும் கூடும்
பெருக்கலும் அதை வகுத்தலும் அதைக் கழித்தலும் அவன் பாடம்
மாறும் யுகம் தோறும் அவன் கணக்கின் படியாகும் 
மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கைப்பிடியாகும்
சட்டம் அனைத்தும் வகுத்தவன்
திட்டம் அனைத்தும் தொகுத்தவன்
முற்றப் படித்து முடித்த ஒருத்தன் 
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
 

Tuesday, September 3, 2013

பாடல் தந்த சுகம் : "வீரபாண்டிக் கோட்டையிலே"

சமீபத்தில் "திருடா திருடா" பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. இப்போது வரும் எந்த வெற்றிப்படங்களுக்கும் குறைவில்லாத சுவாரஸ்யமான பொழுதுபோக்குச் சித்திரமாக அது இருந்தது. நாயகி ஹீராவுக்கு சுஹாசினி கொடுத்த பின்னணிக் குரல் உறுத்தல் தவிர. மணிரத்னமும் ஏ.ஆர்.ரஹ்மானும் கைகோர்த்த முதல் தோல்விப்படம் ஆனாலும் ரஹ்மானைப் பொறுத்தவரை நின்று விளையாடியிருக்கிறார். அந்தப் படத்தின் பாடல்களை இப்போது கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

சாகுல் ஹமீது பாட, கோரஸ் குரல்கள் மட்டுமே பின்னணியில் வரும் "ராசாத்தி என் உசிரு" பாட்டும், அந்தக் காலத்தில் கொழும்பின் பண்பலைவரிசை முளைவிட்ட காலத்தில் FM 99 ஒலிபரப்பிய "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" அனுபமா பாடிய "கொஞ்சம் நிலவு", "புத்தம் புது பூமி வேண்டும்" இதையெல்லாம் கடந்து "தீ தீ தித்திக்கும் தீ" பாட்டுத்தான் என்னை முதலில் ஈர்த்தது. ஒரு மேடையில் சீனப்பெண் ஒருத்தி இந்தப் பாடலைப் பாட ரஹ்மானும் மெய்மறந்து ரசித்த காட்சி அழகு.

திருடா திருடா படப் பாடல்கள் வந்த நேரம் எமக்கோ ராஜா பாடல்கள் மீதான பாசப்போராட்டம். டியூசனுக்கு வரும் நண்பர் கூட்டத்தில் எம்மைச் சீண்டுவதற்காகவே ரஹ்மான் பாடல்களை வந்த கையோடு கேட்டு ரஹ்மானைப் பாரடா என்ன மாதிரி வெஸ்டேர்னில் கலக்கியிருக்கிறார் என்று வெறுப்பேற்றுவார்கள். ஆனால் ராஜா என்றால் எதிராளியின் சட்டையைப் பிடித்து உலுப்பி நியாயம் கேட்கும் சதீஷ் இருக்கும் வரை கவலை இல்லை நமக்கு. இதுக்கெல்லாம் பதிலடி கொடுக்க ஏதாவது பதிலைத் தயாரித்து வைத்திருப்பான். "வீரபாண்டிக் கோட்டையிலே" எண்ட பாட்டைக் கேட்டனியே? ரகுமான் கலக்கியிருக்கிறார் மச்சான்" சைக்கிளில் உடன் வந்த ரமேஷ் அப்பாவித்தனமாகப் பேசவும், காத்திருந்த கொக்காக "அடி ராக்கம்மா கையத்தட்டு" என்று பாடிக்கொண்டே "மச்சி உங்கட ஆள் எங்கை எடுத்திருக்கிறார் தெரியும் தானே" என்று பதிலுக்கு சதீஷ். அவனளவில் ரஹ்மானின் பாட்டை நல்லது என்று சொன்னவனுக்குச் சூடு போட்ட திருப்தி.

உண்மையில் "வீரபாண்டிக் கோட்டையிலே" பாடல் என்னை அவ்வளவுக்கு ஈர்க்கவில்லை அப்போது. ஆனால் இப்போதெல்லாம் இந்தப் பாடலைக் கேட்கும் போது, இன்னும் ஒருக்கா என்று மனசு கேட்கும். உன்னிமேனன் போன்ற மென்மையான குரல்வளம் மிக்க பாடகரை, மனோவோடு மல்லுக்கட்ட வைத்து இடையில் "ரெட்டைச் சூரியன் வருகுதம்மா ஒற்றைத் தாமரை கருகுதம்மா" என்று சித்ராவையும் இணைத்த இந்தப் பாடல் ரஹ்மானின் முத்திரைகளில் ஒன்று என்பதை இன்று உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்குன் சதீஷ் உடன் வாதிட என்னைத் தயார்படுத்தும் அளவுக்கு நான் தயார்.

பாடகர்களைக் கோர்த்துவிட்டு, வாத்தியங்களைப் பொருத்தமான இடங்களில் ஏற்றியும் இறக்கியும் நீட்டியும் குறுக்கியும் செய்யும் ஜாலங்களை உன்னிப்பாகக் கேட்டுப் பாருங்கள். ரஹ்மான் தமிழ்ச்சூழலில் இருந்து அந்நியப்படாத காலத்தில் வைரமுத்துவின் தெள்ளு தமிழோடு துள்ளி விளையாடிய பாட்டு, காலம் கடந்து உருசிக்கும் திராட்சைப் பழரசத்துக்கு ஒப்பானது.