Pages

Sunday, November 21, 2010

பாடகர் இளையராஜா - பாகம் 2 (மேற்கத்தேய இசை ஸ்பெஷல்)


பாடகர் இளையராஜா என்ற தொகுப்பு ஆரம்பித்து இசைஞானி இளையராஜாவின் தேர்ந்த முத்துக்களைத் தொடராகக் கொடுக்கவிருந்தேன். பாகம் ஒன்றோடு அது இடை நடுவில் நின்று விட்டது. இதோ மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடர்கின்றேன்.

பாகம் 2 இல் இளையராஜா பாடிய மேற்கத்தேய இசைக்கலவையோடு இணைந்த பாடற் தொகுப்புக்கள் அணி செய்கின்றன. இசைஞானி இளையராஜாவின் பாடல்களில் அவருக்கே உரித்தான கிராமிய மணம் கமிழும் பாடல்கள், தாயின் மகிமை குறித்த பாடல்கள் போலவே "ராஜா ராஜாதி ராஜனெங்கள் ராஜா" பாணியிலான மேற்கத்தேய இசை கலந்த பாடல்களும் தனித்துவமானவை. இவற்றில் பெரும்பாலானவை கோஷ்டி கானங்களாகத் தான் இருக்கும். அக்னி நட்சத்திரம் படப்பாடலான "ராஜா ராஜாதினெங்கள் ராஜா" பாடல் மூலமே இந்தவகையான பாடல்களை அதிமுக்கியத்துவம் கொடுத்து ராஜா அள்ளி வழங்கியிருந்தார். அவற்றில் ஐந்து முத்துக்களை இங்கே கோர்த்துத் தருகின்றேன்.



அந்தவகையில் முதலில் வருவது "பொண்டாட்டி தேவை" படத்தில் வரும் "யாரடி நான் தேடும் காதலி". ராஜா இல்லாமல் சந்திரபோஸ் துணையோடு தன் முதற்படமான புதிய பாதை" படத்தை எடுத்துப் பெருவெற்றி கண்ட பார்த்திபன் இயக்கி நடித்த இரண்டாவது படம் "பொண்டாட்டி தேவை". வித்தியாசமான ஒரு கதைப்புலத்தைக் கொண்டிருந்தாலும் படம் தோல்விப்படமா அமைந்தது. ஆனால் இசைஞானி இளையராஜாவின் இசையில் எல்லாப்பாடல்களுமே இப்படத்தில் கலக்கலாக இருக்கும். இந்தப் படத்தின் நாயகன் ஒரு பஸ் கண்டெக்டர். அப்படியான ஒரு பாத்திரத்தின் அறிமுகமாக முகப்புப் பாடலாக வருகின்றது "யாரடி நான் தேடும் காதலி".
"ராஜா ராஜாதி ராஜனெங்கள் ராஜா" பாடலின் வாடை அதிகமாகவே இப்பாடலில் தென்பட்டாலும் பாடலின் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை ஒரு பஸ்ஸுக்குள் இருந்து இளசு ஒன்றின் மனக்கிடக்கை அழகான பீட் உடன் கொண்டு வருகின்றது. பலருக்கு இந்தப் பாடலை இப்போதுதான் முதற்தடவை கேட்கும் அனுபவமும் இருக்கும் என்று நினைக்கிறேன்.



அடுத்த தெரிவாக வருவது பரதன் படத்தில் வரும் "அழகே அமுதே பூந்தென்றல் தாலாட்டும் பூஞ்சோலையே " . இந்தப் படத்தை இயக்கிய எஸ்.டி.சபாவுக்கு இதுதான் முதற்படம். இவர் தான் பின்னாளில் சபாபதி என்றும் சபாபதி தக்க்ஷணாமூர்த்தி என்று இன்னாளிலும் தன் பெயரை மாற்றிக் கொண்டு தன் சினிமா வாழ்க்கையில் ராசியைத் தேடிக்கொண்டிருக்கின்றார். ஆனால் இவர் இயக்கிய படங்களைப் பார்த்தால் ஒன்றைச் சிலாகிக்கலாம். அது, பாடல்களைப் படமாக்கும் விதம். பரதன் படத்திலும் இளையராஜா, ஜானகி பாடும் "புன்னகையில் மின்சாரம்" பாடலை எடுத்த விதமே ஒரு சாம்பிள். இங்கே நான் தரும் பாடல் "அழகே அமுதே" வை தனித்துப் பாடியிருக்கிறார் இசைஞானி. பாடலின் ஆரம்பத்திலேயே திடுதிப்பாக வேகமானதொரு பீட் ஓடு ஆரம்பிக்கும் இசை அதையே தொடர்ந்தும் முடிவு வரை இழுத்துச் செல்கின்றது. அண்ணன் தம்பி பாசப் பின்னணியைக் காட்டும் இந்தப் பாடலில் வழக்கமான இப்படியான சூழ்நிலைக்கு வரும் மெலடி இசையைத் தவிர்த்துப் புதுமை காட்டியிருக்கிறார். பாடலில் அண்ணனாக நடிப்பது எஸ்.பி.பாலசுப்ரமணியம், தம்பியாக விஜயாகாந்த். இந்தப் பாடலில் இசைஞானி புகுத்தியிருக்கும் மேற்கத்தேய இசைக்கோவை தனித்துவமானது, அழகானது, அடிக்கடி இதைக் கேட்டு ரசிப்பேன்.



90களில் வந்த கண்ணுக்கொரு வண்ணக்கிளி படத்தில் இருந்து அடுத்து வரும்
"கானம் தென்காற்றோடு போய்ச்செல்லும் தூது" பாடல் ஒலிக்கின்றது. இந்தப் படத்தில் ஆஷா போன்ஸ்லே உட்பட எல்லாப் பாடல் பிரபலங்களும் பாடியிருந்தாலும் யாரோ ஒரு ஞான சூனியம் இயக்குனராக வாய்த்ததால் வெறும் பாடல் சீடியோடு சிலாகிக்கப்பட்டு விட்டது. இசைஞானி இளையராஜா விழலுக்கு இறைத்ததில் இந்தப் படத்தின் பாடல்களும் ஒன்று. இங்கே நான் தரும் "கானம் தென்காற்றோடு போய்ச்சொல்லும் தூது" , ஒவ்வொரு வாத்தியங்களையும் வெகு லாவகமான அணிவகுக்க வைத்து ராஜா தரும் பரிமாறலைக் கேட்கும் போது சுகம். மனுஷர் ரொமாண்டிக் மூடில் "மது மது" என்று உருகிப் பாடும் போதும், கிட்டார், புல்லாங்குழல், வயலின்களின் காதல் ஆர்ப்பரிப்பும் இன்னொரு முறை காதலிக்கத் தோன்றும்.




திரைப்படக்கல்லூரியில் இருந்து செல்வமணி என்ற இயக்குனர் வருகிறார். அவர் இயக்கும் முதற்படம் "புலன்விசாரணை". முதற்படத்திலேயே இளையராஜா என்ற பெரும் இசையமைப்பாளர் துணை நிற்கின்றார் அவரை வைத்து ஐந்து பாடல்களை எடுத்து அதன் மூலமே படத்தை ஓட்டிவிடலாம் என்ற சிந்தனை ஏதும் இல்லாமல் ராஜாவிடம் பின்னணி இசையில் கவனித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் மூன்று பாடல்களை மட்டும் வாங்கிக் கொண்டு அவற்றில் இரண்டை மட்டுமே பயன்படுத்தியதாக நினைவு. அதில் வரும் ஒரு பாடல் தான் "இதுதான் இதுக்குத் தான்" என்ற மேற்கத்தேய இசைக்கலப்பில் ராஜா பாடும் பாடல், துணையாக கங்கை அமரனின் பாடல் வரிகள். "நிலா அது வானத்துமேலே" பாட்டு எப்படி ஒரு பரிமாணமோ அதே வகையானதொரு சுகத்தை இந்தப் பாடலும் கொடுக்கவல்லது.



நிறைவாக வருவது தன் மகன் கார்த்திக் ராஜா இசையில் இசைஞானி இளையராஜா பாடும் "ஏய் வஞ்சிக் கொடி" என்ற பொன்னுமணி படத்தில் வரும் பாடல். படத்திற்கு இசை இளையராஜா என்றாலும் இந்தப் பாடல் மட்டும் கார்த்திக் ராஜா இசையமைத்தது. பொன்னுமணி என்ற கிராமியப்பின்னணிக் கலப்பில் வந்த படத்தில் இப்பாடல் வித்தியாசப்பட்டு நிற்கின்றது. பாடலின் தனித்துவம் என்னவென்றால் பாடலின் இடையில் ஹோரஸாக "விட்டா ஒன்னோட ராசி எட்டுத்திக்கும் வரும் யோசி" என்று வரும் கணங்கள் புதுமையான கலவையாகப் பாடலை மெருகேற்றி ரசிக்க வைக்கின்றது. பாடல்வரிகள் ஆர்.வி.உதயகுமார். ராஜாவுக்குப் பொருந்தக் கூடிய பாடல்களில் இதுவும் சிறப்பானது.



Tuesday, November 16, 2010

பி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்

ஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப்படித் தான் ஆரம்பித்தது இன்றைய நாளும். பியானோ இசைக்கிறது, மெல்ல மெல்ல அந்தப் பியானோ இசை தன் ஓட்டத்தை நிறுத்த முயலும் போது ஊடறுத்து வருகின்றது "உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்னைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்" இசைக்குயிலின் குரலைக் கேட்டுப் புழகாங்கிதம் அடைந்த தோரணையில் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் ஆர்ப்பரிப்போடு பியானோ இசை சேர, இந்த முறை சாக்ஸபோனும், கூடவே மெல்லிசை மன்னரின் தனித்துவமான வாத்திய அணிகளான கொங்கோ தாள வாத்தியம் அமைக்க, மற்ற இசைக்கருவிகளும் அணி சேர்க்கின்றன.
உன்னை ஒன்று கேட்பேன் என்று சுசீலா வரிகளுக்கு இலக்கணம் அமைக்கையில் உற்றுக் கேட்டுப் பாருங்கள் கூடவே ஒரு வயலின் அதை ஆமோதிப்பதைப் போல மேலிழுத்துச் செல்லும்.
"தனிமையில் வானம்" "சபையிலே மெளனம்" என்று ஒவ்வொரு ஹைக்கூ வரிகளுக்கும் இடையில் கொங்கோ வாத்தியம் இட்டு நிரவியிருக்கும் அந்த இடைவெளியை.
இந்தப் பாடல் ஒன்றே போதும் மெல்லிசை மன்னர் சக்கரவர்த்தி என்பதை நிரூபித்துக் காட்ட



இருள் சூழந்ததும் கொல்லையில் சிறுநீர் கழிக்கச் செல்லும் போது கூடவே அண்ணனோ, அம்மாவோ துணைக்கு வரவேண்டிய சிறு பருவம் அது. அந்த நேரத்தில் நிகழ்ந்து நினைவில் ஒட்டாத நினைவுகள் ஏராளம். ஆனால் தசாப்தங்கள் பல கழிந்தும் இன்னும் மனதில் தார் போல ஒட்டிக் கொண்டிருக்கும் நினைவுகளில் அடிக்கடி மீண்டும் மழைக்குப் பூக்கும் காளான் போலத் துளிர்த்துப் போவது " அத்தா.....ன் என்னத்தான் அவர் என்னைத் தான் எப்படி சொல்வேனடி" இலங்கை வானொலியின் இரவின் மடியில் நிகழ்ச்சியில் சுசீலா கிசுகிசுக்கிறார்.

அப்படியே வெட்கம் குழைத்த குரல் அதில் தொக்கி நிற்கும் சேதிகள் ஆயிரம் சொல்லாமல் சொல்லும். இங்கேயும் இசைக்குயில் சுசீலாவுக்கு மாற்றீடைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. "கிறுக்கா", "லூசுப்பையா" என்றெல்லாம் ஏகபோக உரிமை எடுத்துப் பாடும் இந்த நாள் அதிரடிப்பாடலுக்கு முழு நேர்மறை இலக்கணங்களோடு நாணம் கலந்து குழைத்த மெட்டு. குறிப்பா முதல் அடிகளைச் சுசீலா பாடிய ஒரு நிமிடம் கழித்து வரும் இடையிசையைக் கேளுங்கள் அப்படியே குறும்பு கொப்பளிக்குமாற்போலச் சீண்டிப்பார்க்கும் இசை. "அத்தான் என்னத்தான்" மாலை நேரத்து வீட்டு முற்றத்தில் ஈரும் பேனும் எடுக்கையில் நம்மூர்ப்பெண்கள் முணுமுணுத்துப் பாடியதை அரைக்காற்சட்டை காலத்தில் கேட்ட நினைவுகள் மங்கலாக.



பாடல்கள் மீது நான் கொண்ட நேசத்தை மட்டும் புரிந்து கொண்டவர்கள் தமது உறவினர்களின் வீட்டுத் திருமணங்களுக்கு அணி சேர்க்க என்னிடம் திருமணப்பாடல்களைச் சேகரித்துத் தருமாறு கேட்பார்கள். அப்போது நான் ஏதோ ஒரு இயக்குனர் இசையமைப்பாளர் ஒருவரிடம் சிச்சுவேஷன் சாங் போடுங்க என்று கேட்ட தோரணையில் அதீத ஆர்வம் மேலிடப் பாடல்கள் ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்துக் கொடுப்பேன். ஆனால் "இதெல்லாம் சரிவராது, நல்ல குத்துப்பாட்டு ரெக்கார்ட் பண்ணித் தாருங்கள்" என்று என் தொகுப்பை நிராகரிக்கும் போது அங்கீகரிக்கப்படாத புது இசையமைப்பாளரின் உணர்வோடு மனதைத் தொங்கப் போடுவேன். ஆனால் சிலபாடல்கள் நான் ரசிக்க மட்டுமே என்று கேட்டுக் கேட்டு அனுபவிப்பதுண்டு. அந்த ரகமான பாடல் தான் இது.
"வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி" என்று நிதானித்து ஆரம்பிக்கும் இந்தப் பாடலைக் கேட்க ஆரம்பியுங்கள். அப்படியே பிரமாண்டமானதொரு மனம் ஒருமித்த கல்யாண வீட்டை உங்கள் மனம் மெல்ல மெல்லக் கட்டத் தொடங்கும். ஒவ்வொரு வரிகளும் அந்தக் காட்சிப்புலத்தை உணர்ந்து பாடும் வரிகளாக அழுத்தமாகப் பதித்திருப்பார் இசையரசி பி.சுசீலா.
இங்கும் வழக்கமான எம்.எஸ்.வியின் ஆவர்த்தனங்கள் தான், ஆனால் மணமேடையின் காட்சிப்புலத்துக்கு இயைவாக ஒலிக்கும் நாதஸ்வர மேள தாளங்கள் பொருந்திப் போகும் இசைக் கூட்டணி.



"காத்திருந்த மல்லி மல்லி பூத்திருக்கு சொல்லிச் சொல்லி " மல்லுவேட்டி மைனர் படத்துக்காக இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல் என்றாலும் நீங்கள் அதிகம் கேட்டிராத பாடல் வகையறா இது என்பது எனக்குத் தெரியும், அதைப் போல நான் அடிக்கடி கேட்கும் அரிய பாடல்களில் இதுவும் ஒன்று என்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். இந்தப் பாடலை அதிகம் கேட்டு நான் வளரக்காரணம் சென்னை வானொலியில் பதினேழு ஆண்டுகளுக்கு முன்னால் ஞாயிறு தோறும் நான்கு மணி வாக்கில் வந்து போன "நேயர் விருப்பம்" நிகழ்ச்சி. ஷெனாய் வாத்தியத்தை சோகத்துக்குத் தான் சங்கதி சேர்த்து திரையில் கொடுப்பார்கள். விதிவிலக்காக பாவை விளக்கு படத்தில் வரும் "காவியமா நெஞ்சின் ஓவியமா" என்ற சந்தோஷப் பாட்டுக்குப் பயன்படுத்தினார்கள். அதே வரிசையில் காதல் பூத்த யுவதியின் சந்தோஷக் கணங்களாய் வரும் "காத்திருந்த மல்லி மல்லி" என்ற பாடலில் அடியெடுத்துக் கொடுப்பதும் இந்தக் ஷெனாய் இசைதான்.
ஒரு பதினாறு வயதுப் பெண்ணுக்குப் பொருந்தக் கூடிய தோரணையில் தன் குரலினிமையை இந்தப் பாடலில் காட்டிச் செல்லும் சுசீலா இந்தப் பாடலைப் பாடும் போது அவருக்கு 55 வயது என்று சொன்னால் தான் நம்புவீர்களா? (அவர் பிறந்த ஆண்டு 1935, இந்தப் பாடல் வெளிவந்த ஆண்டு 1990)
இந்தப் பாட்டின் இசையில் இப்படி ஒரு வரிகள் வரும்
"ராசா நீங்க வரம் கொடுத்தா படிப்பேன் ஆராரோ" (1.35 நிமிடத்தில்) அந்தக் கணம் பின்னால் முறுக்கிக் கொண்டு தபேலா இசையைக் கேட்டுப்பாருங்கள், இசைஞானி இந்த வாத்தியத்தை ஓடிக்கொண்டிருக்கும் இசையில் பெண் குரல் ஒலிக்கும் போது மட்டும் வித்தியாசப்படுத்திப் பயன்படுத்திய இலாவகம் புரிந்து நீங்களும் ரசிப்பீர்கள் மீண்டும் மீண்டும்.



இந்த நான்கு முத்தான பாடல்களுமே போதும் என்று நினைக்கிறேன் பி.சுசீலாவின் குரல் ஏன் எனக்குப் பிடிக்கும் என்று.

Sunday, November 7, 2010

கலைஞானி கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் சிறப்புப்பதிவு "அபூர்வ சகோதரர்கள்"

இன்று கலைஞானி கமல்ஹாசனின் 56 வது பிறந்த நாள். தமிழ்த்திரையுலகின் தவிர்க்கமுடியாத ஆளுமைகள் ஒன்றாக இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் கமல்ஹாசனின் படங்களில் பெரும்பாலானவை அவரின் தனித்துவமான நடிப்பிலும், சிந்தனையிலும் புதிய பரிமாணத்தைத் திரை ரசிகனுக்கு அளித்தவை. தமிழில் இருந்து நேரடிப்படங்களாக மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஓரிரு கன்னடப் படங்கள் என்று சென்ற இடமெல்லாம் அந்தந்தப் பிராந்திய ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்த கலைஞன் இவரைத் தவிர இன்னொருவரைப் பொருத்திப் பார்க்க முடியவில்லை.

இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் கலைஞானிக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் அவரின் "அபூர்வ சகோதரர்கள்" படத்தின் பின்னணி இசையை இங்கே மீள் பதிவாகத் தருகின்றேன்.

அபூர்வ சகோதரர்கள் வெளிவந்த ஆண்டு 1989.
கதை பஞ்சு அருணாசலம். இயக்கம் சிங்கிதம் சீனிவாசராவ்.
படத்தின் வசனகர்த்தா கிரேசி மோகன். அபூர்வ சகோதரர்கள், இந்திரன் சந்திரன், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும் (கெளரவ தோற்றம்) , சதி லீலாவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா, தெனாலி, பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், தசாவதாரம் ஆகிய கமல் படங்களுக்கு கிரேசி மோகன் வசனம் எழுதியிருக்கிறார்.
ஒளிப்பதிவு பி.சி. ஸ்ரீராம் (கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள் அவரின் ஒளிப்பதிவின் ஒரு சாம்பிள்)



முன்னர் இதே பெயரில் ஜெமினி நிறுவனம் தயாரித்த தமிழ்ப்படத்தில் எம்.கே.ராதா மற்றும் இதே கதை ஹிந்தியில் படமான போது ரஞ்சன் ஆகியோர் நடித்திருப்பார்கள்.



சரி இனி கலைஞானி கமல்ஹாசனின் "அபூர்வ சகோதரர்கள்" படத்திலிருந்து இசைஞானி இளையராஜாவின் கைவண்ணத்தில் உருவான பின்னணி இசையைத் தொகுத்து இங்கே தருகின்றேன்.



எழுத்தோட்டத்தின் பின்னணியில் கமல், ஸ்ரீவித்யா வில்லன்களிடமிருந்து தப்பிக்கும் காட்சிக்கு வரும் வேக இசை (ட்ரம்ஸ் மற்றும் பல வாத்தியக் கலவை)




எழுத்தோட்டத்தில் வரும் பின்னணியில் கமல் கொல்லப்பட, ஸ்ரீவித்யா மட்டும் தப்பிக்கும் காட்சிக்கு வரும் வேக இசை (புல்லாங்குழல், பல வயலின்கள், தனி வயலின் என்று மாறும்)




குழந்தைகள் ஆளுக்கொரு பக்கம் பிரிதல் (வயலின்)



அப்பு சர்க்கஸில் தோன்றும் முதற்காட்சி (வயலின்)



ரூபணியின் அறிமுகக் காட்சிக்கு சர்க்கஸ் குழு வாசிக்கும் பாண்ட் வாத்தியம்




அப்பு கமலின் கல்யாண சந்தோஷம் (பாண்ட் இசை)



அப்பு கமலின் காதல் தோல்வி (முகப்பு இசையின் வயலின் மீண்டும் ஒன்றிலிருந்து பல வயலின்களாக)




அப்பு தற்கொலை முயற்சி ( பல வயலின்களின் கூட்டு ஆவர்த்தனம்)



அப்புவின் பழிவாங்கும் காட்சி ஒன்று (பல வாத்தியக் கூட்டு)




அப்புவின் பழிவாங்கும் காட்சி இரண்டு




இறுதிக்காட்சியில் மீண்டும் வயலின் மற்றும் புல்லாங்குழல் இசை கலக்கின்றது

Thursday, November 4, 2010

தீபாவளி இன்னிசை விருந்து

தீபாவளி நன்னாள் றேடியோஸ்பதி வழியாக நண்பர்கள் அனைவருக்கும் உங்களைச் சூழ்ந்த தீமைகள் அகன்று சுபீட்சமான வாழ்வு மலர வாழ்த்துகின்றேன். கூடவே உலகெங்கும் ஒலிபரப்பாகும் தமிழ் வானொலிகள் தீபாவளி நாளில் போட்டுத் தீர்க்கப் போகும் பாடல் பட்டியலை இங்கே தீபாவளிப் பரிசாகப் பரிமாறுகிறேன். பாடல்களைக் கேட்டு அனுபவியுங்கள்

உன்னைக் கண்டு நான் ஆட என்னைக் கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி (கல்யாணப்பரிசு)



நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதசி (நாயகன்)



பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா (பூவே பூச்சூடவா)



தினம் தினம் தினம் தீபாவளி (காட்பாதர்)




தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் (தேவதை)



விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம் (ஆத்மா)