Pages

Thursday, February 9, 2023

இயக்குநர் ஷண்முகப்ரியன்


இந்த ஆண்டின் கலையுலக இழப்புகளில் இவரும் ஒன்றானார், ஆனால் 2K kids யுகத்தில் அதிகம் கவனிக்கப்படாமல் கடந்து போய் விட்டது இவரின் இழப்புச் செய்தி.

ஷண்முகப்ரியனின் "விளிம்பு" நாடகம் தான் "அன்னக்கிளி" இரட்டையர் தேவராஜ் - மோகன் இயக்கிய "உறவாடும் நெஞ்சம்" படத்தின் மூலக்கதை.

பின்னாளில் தேவராஜன் தனித்து இயக்கிய "ஆயிரம் முத்தங்கள்", புரட்சிக் கலைஞர் விஜய்காந்த் நடித்த வித்தியாசமான கதையமைப்பு கொண்ட "ஈட்டி" மற்றும் மணிவண்ணன் இயக்கிய "உள்ளத்தில் நல்ல உள்ளம்", சிவகுமாரின் "ஆணிவேர்", சத்யராஜ் & பிரபுவின் "சின்னதம்பி பெரியதம்பி" உள்ளிட்ட படங்களின் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாக "பிரம்மா", மற்றும் "வெற்றி விழா" படத்தில் இணை கதை & வசனகர்த்தா என்று 50க்கும் மேற்பட்ட படங்களுக்கும்,

இயக்குநராக எண்பதுகளில் ஒரு வித்தியாசமான படைப்பாக வந்த சிவகுமார், பிரபு, ரகுமானின் "ஒருவர் வாழும் ஆலயம்", சத்யராஜின் "மதுரை வீரன் எங்க சாமி", ராமராஜனின் "பாட்டுக்கு நான் அடிமை" போன்ற படைப்புகளையும் இயக்கியிருந்தார்.

வலைப்பதிவு உலகத்தில் சமகாலத்தில் தீவிரமாக எழுதிய வலைப்பதிவர்களில் ஷண்முகப்ரியனும் ஒருவர். அவரின் வலைப்பதிவு இதுதான் http://shanmughapriyan.blogspot.com/

10 வருடங்களுக்கு முன்னர் அவரோடு வலைப்பதிவுகளில் நட்போடு இருந்தேன். அந்த அறிமுகத்தில் ஒரு வானொலிப் பேட்டி செய்ய வேண்டும் அதில் உங்கள் அனுபவங்களைப் பதிவாக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன்.

இப்போது வேண்டாம் நான் ஒரு படம் இயக்கத் தீர்மானித்திருக்கிறேன். அந்தப் படைப்பு வெளியாகும் சமயத்தில் செய்தால் பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி விட்டார். ஆனால் அதன் பின்னர் அவரைப் வலைப்பதிவுகளிலும் காணவில்லை.

சில மாதங்களுக்கு முன்னர் ஒரு எண்ணம் தோன்றி ஃபேஸ்புக்கில் தேடினேன் அவரின் ஐடி கிடைத்தது. நட்பு விண்ணப்பம் போட்டுவிட்டுக் காத்திருந்தேன். பெப்ரவரி 2 ஆம் திகதி அவரின் பிரிவுச் செய்தி கிடைக்கும் வரை அந்த நட்பு அழைப்பு Pending இல் இருந்தது.

அவரின் கலையுலகப் பயணத்தை முழுமையாகப் பதிவாக்கும் வாய்ப்பும் கலைந்து போயிற்று.


கானா பிரபா

Sunday, February 5, 2023

சொல்லாமல் நெஞ்சள்ளிப் போன வாணி ஜெயராம் 💔



சிலர் எவ்வளவு கோபப்பட்டு வார்த்தையைக் கக்கினாலும் அவர்களின் குரலில் ஒரு ஓசை நயமும், தண்மையான ஒலியாகவே வெளிப்படும். அப்படியொரு குரல் ஜெயச்சந்திரனுக்கு. இதே பாங்கில் வாணி ஜெயராமின் குரலையும் கவனிக்கலாம். இந்தக் குரல்களுக்குள் சங்கீதம் தடவியிருக்கும். பேசும் போதும் ஏதோ சுரம் பிரித்துப் பாடும் ஒரு ஜீவன் இருக்கும்.


கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட திருமதி வாணி ஜெயராம் அவர்கள் நவம்பர் 30 ஆம் திகதி, 1945 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் பிறந்தவர். 


சாஸ்திரிய சங்கீத மற்றும் இந்துஸ்தானி இசை மரபுடனோடு  திரையிசைப் பாடகியாகக் களமிறங்கிய அவரின் குரலில் மிளிர்ந்த பாடல்களைக் கேட்கும் போது ஜேசுதாஸ் குரலில் கொடுக்கும் தெய்வீக உணர்வு மிளிரும்.  

கவியரசு கண்ணதாசனும், வைரமுத்துவும் விதந்து பாராட்டிக் கட்டுரை எழுதுமளவுக்கு அவர்களைப் போன்ற உயரிய பாடலாசிரியர் வரிகளுக்கு மகத்துவம் செய்தவர்.


வாணி ஜெயராம் அவர்களைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் வானொலி நேர்காணல் வழியாகச் சந்திக்க நேர்ந்தது.


அந்தப் பேட்டியின் வழியாக,

தனது இரண்டு வயதில் பாடத் தொடங்கியவர் ஐந்து வயதில் முறையாக சாஸ்திரிய சங்கீதத்தைக் கற்ற அனுபவம், தொடர்ந்து உஸ்தாத் அப்துல் ரஹ்மான் கான் அவர்களிடம் ஹிந்துஸ்தானி சங்கீதத்தைக் கற்றதன் விளைவாக, வசந்த் தேசாய் இசையில், ரிஷிகேஷ் முகர்ஷி இயக்கிய Guddi திரைப்படத்துக்காக 3 பாடல்கள் கிடைத்ததும், 

அதன் வழியாகப் பெற்ற தான்சேன் விருது குறித்தும்


தமிழில் தன்னுடைய முதல் வாய்ப்பு எஸ்.எம் சுப்பையா நாயுடு இசையில் "தாயும் சேயும்" என்ற வெளிவராத படத்துக்காக "பொன் மயமான காலம் வரும்" அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த மருமகள் படத்துக்காக சங்கர் கணேஷ் இசையில் “ஓரிடம் உன்னிடம்” பாடலை டி.எம்.செளந்தரராஜனுடன் பாடிய அனுபவம்,

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் முதன் முதலாய்ப் பாடிய "மல்லிகை என் மன்னன் மயங்கும்" மற்றும் 

அவருக்குக் கிட்டிய மூன்று தேசிய விருது அபூர்வ ராகங்கள், சங்கராபரணம், ஸ்வாதி கிரணம் ஆகிய படங்கள் குறித்தும்


தான் ஹிந்திப் பாடல்களைப் பாடவேண்டும் என்ற இலட்சியத்துக்குக் காரணமாக அமைந்த 

தன் இளம் பிராயத்தில் றேடியோ சிலோன் இல் புதன் கிழமைகள் தோறும் ஒலிபரப்பான ஹிந்திப் பாடல்கள் பினா காத் கீத் மாலா நிகழ்ச்சி, அந்த நிகழ்ச்சியில் பின்னர் தன் ஹிந்திப் பாடலான போலாரே பாடல்  16 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து ஒலிபரப்பானதும் கனவு பலித்ததும், தமிழ்ப் பாடல்களை றேடியோ சிலோன் கவி நயத்தோடு தொகுத்து அளித்ததை நெகிழ்வோடு பேசினார். 

தற்போது வானொலி நிலையங்கள் பெருகியிருந்தாலும் பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் குறித்துப் பேசாதிருப்பதை ஆதங்கத்தோடு குறிப்பிட்டார்.


வாணி ஜெயராம் ஒரு கவிஞர். தானே எழுதிய முருகன் பாடல்களைத் தனது குடும்ப நிறுவனமான பானி மியூசிக் கம்பெனி வழியாகத் தானே இசையமைத்து முருகன் பாடல்கள் என்று வெளியிட்டிருக்கின்றார்.


ஒரிய மொழிப் பாடல்களைத் தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் பாடிய அனுபவம், பாடகருக்கு மொழிச் சுத்தம் எவ்வளவு அவசியம் என்பதைப் பாடிக் காட்டிச் சிறப்பித்தார் பேட்டியில்.


வாணி ஜெயராமுக்கு "மேகமே மேகமே", "யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது" ஆகிய அற்புதமான பாடல்களை அளித்த சங்கர் கணேஷ் குறித்தும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா குறித்தும் பேட்டியில் பேசினோம்.


இதுவரை 18 மொழிகளில், 52  வருடங்களாகத் திரைத்துறையில் பாடகியாக வலம் வந்தவர் வாணி ஜெயராம் அவர்கள்.


வாணி ஜெயராம் அவர்களோடு நான் நிகழ்த்திய பேட்டியைக் கேட்க


https://youtu.be/rrjMKweW5Wc


முந்திய தினங்களில் விடை பெற்றுப்

போன கே. விஸ்வநாத் அவர்களின் சங்கராபரணம் மற்றும் ஸ்வாதி க்ரணம் ஆகிய படங்கள் வாணி ஜெயராமுக்குத் தேசிய விருதுகளைக் கொடுத்தது போலவே, சங்கராபரணமும், சாகர சங்கமமும் (சலங்கை  ஒலி) எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு இரண்டு தேசிய விருதுகளைக் கொடுத்திருக்கிறது.

கானா பிரபா


பொங்கும் கடலோசை

தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே

கொஞ்சும் தமிழோசை.....


குறிகாட்டுவான் இறங்குதுறையில் இருந்து நயினாதீவுக்கு படகு ஏறும் போது மனதில் ஏறிக் குந்திக் கொள்ளும் இந்தப் பாட்டு.  


என்னுடைய அதிகபட்சக் கடல் பயணங்கள் என்று எண்ணிப் பார்த்தால் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயம் நோக்கிப் பயணிக்கும் அந்தப் படகுச் சவாரி என்பதாலும் இந்தப் பாட்டு சினேகபூர்வமாக அந்தக் கடலைக் கடக்கும் போது பழக்கப்பட்ட விருந்தாளி போலச் சந்திக்கும் போல.


பொங்கும் கடலோசை பாட்டை ஒரு வள்ளத்தில் இருந்து இசைக்கும் தோற்றப்பாட்டுடனேயே அனுபவிக்கிறேன். 

ஆரம்பத்தில் வாணியம்மா கொடுக்கும் ஆலாபனையின் பின்னால் கீற்றாக எழும் ஒலி அந்த வள்ளத்தில் இறங்கி அமர்ந்த பின் கடல் கொண்டு வந்து வள்ளத்தின் சாளரத்தினால் ஊடுருவி ஒற்றியெடுக்கும்

சிறு நீர்த்திவலைகள் போலத் தோன்றும்.


அப்படியே அந்த ஆலாபனை முடிந்ததும் பளீரென்று கொட்டுமே ஒரு இசை 

படகிலிருந்து வளைத்துத் தள்ளும் கடல் நீர்க் கோவை போல ஒலிக்கும்.

பாட்டு முழுக்க வரும் அந்த ரிதம் ஆகா ஆகா கடலின் மடியில் அமர்ந்து பயணிக்கும் வள்ளத்தை மேலும், கீழுமாக ஆட்டி ஓராட்டும் ஒரு தாய்மை உணர்வின் துள்ளல் அல்லவா?


பொங்கும் கடலோஓஓஓஓஓஓசை........

வாணியம்மா பாடும் அந்த நீட்சியில் திறந்த கடல் வெளியில் எதிரொலித்துத் திரும்புமாற்போல ஒரு உணர்வு.

வாணி ஜெயராம் ஒரு தமிழ் இசைக் கடல் என்று நிரூபிக்கும் பாட்டு.


“சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்

மயங்குவதேனோ......?”


“நீரலை மேடையில்

மீனவன் நாடகம் நடிப்பதும் ஏனோ ?”


சரணத்தில் அவர் கொடுக்கும் அந்த நிரவல்களின் நளினம், ஒரு சொற் துண்டை எடுத்து நெகிழ்ந்து பிளந்து கொடுக்கும் அந்த நீட்சி அப்பப்பா அந்த அகண்ட சமுத்திரத்தின் சுதந்திரக் குளியல் அல்லவா?


1983 படத்துக்காக ஜெயச்சந்திரனையும், வாணி ஜெயராமையும் இணைத்து 

“ஓலஞ்ஞாலி குருவி”


https://youtu.be/9MSxbBWZJn4


பாடலைப் பாட வைத்த கோபி சுந்தர் சொல்கிறார் இப்படி

“ஒரு வல்லிய அனுக்ரஹம்”……


“பற பற பற கவலயில்ல

மனுஷ வாழ்க்கை”

என்று யுகபாரதி வரிகளில் மலை படத்துக்காகத் தன் கலைப் பயணத்தின் நிறைவில் பாடி விட்டுப் போயிருக்கிறார். 


தமிழ், மலையாளம், தெலுங்கு என்று ஒரு தெய்வீகம் தேடும் குரலாக இன்றும் என்றும நிலைத்து நிற்பவர் இந்தக் “கலைவாணி”.


நினைவலைகள் 

தொடர்ந்து வந்தால் 

நேரமெல்லாம் 

கனவலைகள் 💚


கானா பிரபா

Saturday, February 4, 2023

இயக்குநர் கே.விஸ்வநாத் ❤️

 

நடனக் கலையை மானசீகமாக நேசிக்கும் ஒருவன் தன் வாழ்நாளில் ஒரு தடவையேனும் மேடை வாய்ப்புக் கிட்டாமலேயே செத்துப் போவான், 

இப்படியாக கதை அமையப் பெற்றிருக்க வேண்டும் என்று இயக்குநர் கே.விஸ்வநாத் முடிவு செய்தாராம். 


அந்தக் கதையின் முடிவிடமாக அமையும் காட்சிக் களத்தில் தான் கற்ற வித்தையின் பிரதிபிம்பமாக அவள் இருக்க வேண்டிய தேவையின் வெளிப்பாடாக அமைந்த ஏக்கம், துடிப்பு இவை எல்லாம் கலந்த ஒரு போராட்டம்  பரத அரங்கேற்றத்தின் வழியாக வெளிப்பட்டிருக்கும் போது அதன் அச்சாணியாக அமையும் பாடல் (வேதம் அணுவிலும்)  எப்படியிருக்க வேண்டும் என்று பாட்டுக் கட்டும் நேரம் கே.விஸ்வநாத் அவர்களின் ஆவியே கூடு விட்டுக் கூடு பாய்ந்து இசைஞானியிடம் சென்று சேர்ந்ததோ என்று நினைக்குமளவுக்கு பாடல் கோப்பு, கதை இயக்குநரும், இசை இயக்குநரும் எதிர்பார்க்கும் அந்த உணர்வைப் பார்வையாளனுக்கும் கடத்தினார்கள்.


சங்கராபரணம் படத்தில் ஒரு சாஸ்திரிய இசை மேதையின் குரலாக, எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பாட்டுத் திறன் அமைய வேண்டி அவரது உறவினராக இயக்கு நர் கே.விஸ்வ நாத் வேண்டவும் எஸ்பிபிக்கு வந்தது தயக்கம். ஆனால் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனின் உதவி இசையமைப்பாளர் புகழேந்தி அவர்களிடம் பயிற்சி எடுத்துக் கொண்டதை எஸ்.பி.பி. பல மேடைகளில் சொல்லியிருக்கிறார். புகழேந்தி அவர்களின் இறப்புக்குப் பின் பல்லாண்டுகளுக்கு முன்னர் புகழேந்தி அவர்களின் மனைவியை வானொலிப் பேட்டி எடுத்திருந்தேன். அப்போது இந்த அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டதோடு இன்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் அந்த நன்றி உணர்வோடு இருந்ததைச் சொல்லி நெகிழ்ந்தார். அந்தப் பேட்டி நீண்டது. பேட்டி முடிவில் அந்த அம்மையார் அழுது முடித்ததும் நினைவுக்கு வருகிறது.

இவ்விதம் ஒரு படத் தயாரிப்பில் தான் வேண்டுவதை மிகவும் கறாராராகப் பெற்றுக் காட்டிய விதத்தில்  இயக்குநர் கே.விஸ்வநாத் அவர்களின் பெருமை விளங்கும். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கான முதல் தேசிய விருது வரை அந்த அங்கீகாரம் நிலை நாட்டப்பட்டது.


கே.விஸ்வநாத் கொடுத்த சங்கராபரணம் படம் மொழி கடந்து, ஏன் நாடு கடந்து இலங்கை ஈறாகத் திரையிடப்பட்டது. இதற்கு முன் இந்தப் பெருமையான  “செம்மீன்” நிலை நாட்டியது. ஒரு படம் மொழி கடந்து கொண்டாடப்பட்ட பெருமையை விளைவித்தார்.

சங்கீதத் திலகம் கே.வி.மகாதேவனில் இருந்து இசைஞானி இளையராஜா, வித்யாசாகர், கீரவாணி என்று எல்லா இசை விற்பன்னர்களுக்கும் அவர் படைப்புகள் தீனி போட்டன. 


சலங்கை ஒலியின் மூலம் சாகர சங்கமம் வழி எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குத் தன் படத்தின் வழி இன்னொன்றும், இசைஞானி இளையராஜாவுக்குச் சிறந்த இசையமைப்பாளர் என்றும் தேசிய விருது கிட்டியது.


அது போலவே இன்னும் கொண்டாடியிருக்கலாமே என்று இன்னும் ஏங்கும் கலைஞன் வித்யாசாகருக்கும் கே.விஸ்வநாத் இன் “ஸ்வாராபிஷேகம்” தேசிய விருதைக் கொடுத்தது.


சுப சங்கல்பம் படத்தை (தமிழில் பாசவலை) கீரவாணி இசைத்த போது இசைஞானியின் “தகிட ததிமி” பாடலோடு பிணைத்துப் பாடலாக்கினார்.


https://www.youtube.com/watch?v=TeU_AteGRh4


அந்தப் படம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெலுங்கில் தயாரித்து, தமிழில் கமல் மொழி மாற்றியது.


“யாரடி நீ மோகினி”, “உத்தம வில்லன்” போன்ற தமிழ்ப் படங்களிலும் தன் குணச்சித்திரத்தால் மிளிர்ந்தவர் கே.விஸ்வநாத்.


நன்றாக ஆடக் கூட்டிய நடனக் கலைஞன் கமல்ஹாசனையே விஸ்வநாத் அவர்கள் ஆட்டுவித்த நிகழ்வை ராதிகா ஒரு மேடையில் சொல்லியிருக்கிறார்.

“ஸ்வாதி முத்யம் (சிப்பிக்குள் முத்து) படத்தில் 

“துள்ளித் துள்ளி நீ பாடம்மா”

https://www.youtube.com/watch?v=9tLYhiSVLv0


பாடல் காட்சிக்கு கமலோ தன் நடன வித்தையைக் காட்ட, திட்டி விட்டு இந்தப் பாத்திரம் இப்படியா ஆடும் என்று பெண்டு எடுத்து இயல்பாக ஆடப் பழக்கினாராம்.

இப்போது அந்தக் காட்சியைப் பாருங்கள் எவ்வளவு நுட்பமாகப் பதிந்திருக்கும்.


இதையெல்லாம் தாண்டி நான் அசை போடும் ஒரு அழகியல், கே.விஸ்வநாத் இன் மனைவி கமல்ஹாசனின் மகள் ஸ்ருதியை “ஸ்வாதி முத்யம்” என்று தான் அழைப்பாராம்.


கே.விஸ்வநாத் அவர்களின் ஆரம்பங்களில் அமைந்த படைப்புகள் மிகவும் புரட்சிகர சிந்தனையைக் கொண்டவையாகவும் இருந்தன. நமக்கெல்லாம் சங்கராபரணம் தொட்டுத் தான் அவரைக் கொண்டாட முடிந்தது.


“தாதா சாகேப் பால்கே” என்ற உயர் விருது மட்டுமல்ல தான் வாழும் காலம் வரையும் கொண்டாடப்பட்ட மிகச் சில உன்னங்களில் விஸ்வநாத் அவர்களும் ஒருவர். தெலுங்கு தேசம் அவரைத் தன் தலை மேல் ஏற்றிக் கொண்டாடியது இன்னும் இறக்கி வைக்கவே இல்லை.


மூத்த படைப்பாளி கே.விஸ்வநாத் அவர்களுக்கு அஞ்சலிகள்..


கானா பிரபா