Pages

Wednesday, March 31, 2010

றேடியோஸ்புதிர் 53 - நாயகி பேரெடுத்து அதை மெட்டாக்கி வந்ததொரு பாட்டு



















ஒரு படத்தின் கதைக்கருவை உள்வாங்கி பின்னர் இசையமைக்கும் போது உயிர்கொடுக்கும் மந்திரவித்தைக்காரன் எங்கள் இசைஞானி என்று சொல்லவா வேண்டும்.
அவரோ இயக்குனர்களில் எவரெஸ்ட், நாயகனோ புதுமையைத் தேடித் தீர்ப்போம் வா என்னும் ஜாதி. இந்தக் கூட்டணியில் வந்ததொரு படம். தெலுங்கில் அதே இயக்குனர் எடுத்துப் புகழ் மட்டும் கொடுத்தது கல்லாவை நிரப்பவில்லை. ஆனாலும் வீம்பாக தமிழில் இந்த நாயகனை வைத்து தன்னம்பிக்கையோடு எடுத்தார்.

படத்தின் நாயகியோ லலிதா ராகத்தில் அமைந்த பெயர். ஆனால் நாயகனைச் சீண்ட எ.கே.மலம் என்று தன்னை அடையாளப்படுத்துவாள். பொய் அவிழ்ந்து உண்மை தெரியும் அந்த நேரம் நாயகி லலிதாவுக்கும் நாயகன் சத்தியமூர்த்திக்கும் காதல் வரும் காட்சி. காதல் உணர்வுகளுக்கு மெட்டமைக்க யாருமே சீண்டாத லலிதா ராகத்தை எடுத்தார் இசைஞானி போட்டார் ஒரு மெட்டு. எல்லோர் இதழும் உச்சரித்தது அந்த லலிதா ராக மெட்டை. இதோ அந்த இசைக்கலவையை வித்துவான் கணேஷ் இசைக்கும் வீடியோ துண்டத்தை ஒலிப்பதிவாக்கித் தந்திருக்கின்றேன். கண்டுபிடியுங்களேன் அந்த லலிதா ராகத்தில் வந்த பாட்டை.

சரியான பதில்:

இதழில் கதை எழுதும் நேரமிது
படம் : உன்னால் முடியும் தம்பி
இயக்கம்: கே.பாலசந்தர்
நடிப்பு: கமல்ஹாசன், சீதா, ஜெமினி கணேசன்

Friday, March 26, 2010

றேடியோஸ்புதிர் 52 - அறுபது நாளின் பின் ஒட்டி ஓடிய பாட்டு?

"ஊமை விழிகள்", திரைப்படக் கல்லூரி மாணவர்கள் புது சகாப்தம் படைத்த படமிது, இந்தப் படத்துக்கு முன்னும் பின்னும் இவ்வளவு பிரமாண்டமான வெற்றியை அந்தக் கல்லூரி சந்தித்திருக்காது. ஆபாவாணனின் தயாரிப்பில் சக திரைப்படக்கல்லூரி மாணவர் அரவிந்தராஜ் இயக்கிய படமது.

விஜய்காந்த், கார்த்திக், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று பெரும் நட்சத்திரப்பட்டாளம் நடித்து பெருவெற்றி கண்ட அந்தப்படத்தின் இசை மனோஜ் கியான் இரட்டையர்கள். முன்னணிப்பாடகர்களை ஒதுக்கி விட்டு சுரேந்தர், கிருஷ்ணசந்தர், ஆபாவாணன், சசிரேகா இவர்களோடு நீண்ட இடைவெளிக்குப் பின் பி.பி.சிறீனிவாசையும் பாட வைத்தார்கள்.

இந்தப் படத்தில் மூன்று பாடல்களை சுரேந்தர் பாடியிருக்கிறார், ஆனால் அந்த மூன்று பாடல்களில் ஒன்றை படத்தை திரையிடும் போது இணைக்காமல், அறுபது நாள் கழித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படத்தோடு இணைத்து திரையிட்டார்களாம். கூடவே "அறுபது நாள் கழித்து உங்கள் மனம் கவர்ந்த பாடல் இணைக்கப்பட்டிருக்கிறது" என்ற விளம்பரத்தையும் செய்தார்களாம். ஊமை விழிகள் பட வீடியோ காசெட்டுகளில் இந்தப் பாட்டு இல்லாத படப்பிரதி கூட இப்போதும் உண்டு.

கேள்வி இது தான், அந்த அறுபது நாள் கழித்து ஒட்டி ஓடிய பாட்டு எது? அந்தப் படத்தில் சுரேந்தர் பாடிய மூன்று பாடல்களையும் தருகின்றேன். எதுவென்று கண்டுபிடியுங்களேன்.
போட்டி விதிமுறை ஒருவர் ஒரு பாடலை மட்டுமே தெரிவு செய்யலாம்.

1. குடுகுடுத்த கிழவனுக்கு கல்யாணப் பேச்சு

2. மாமரத்துப் பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா

3. கண்மணி நில்லு காரணம் சொல்லு



சரியான பதில்:

கண்மணி நில்லு காரணம் சொல்லு, போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

Sunday, March 21, 2010

எம்.கே.தியாகராஜ பாகவதர் நூற்றாண்டு நினைவில் - ஒலிச்சித்திரம்






தமிழ்த்திரையுலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த, ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்களின் நூற்றாண்டு இந்த ஆண்டு மார்ச் 1 ஆம் நாளில் இருந்து தொடங்குகின்றது.

மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம்.கே.டி என்று அழைக்கப்பட்ட இவர் மார்ச் 1, 1910 ஆம் ஆண்டில் பிறந்து நம்பர் 1, 1959 ஆம் ஆண்டுவரை வாழ்ந்தவர்.
சரஸ்வதியின் அருட்கடாட்சத்தினால் தான் கொண்ட பாடற் திறனால் நாடக நடிகனாக உருவாகி, திரையுலகில் பிரவேசித்த இவர் தமிழ் சினிமாவின் வரலாற்றில் தனி அத்தியாயத்தை ஏற்படுத்திச் சென்றவர்.























தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் தன் பாடற் திறனாலும், தேர்ந்தெடுத்து நடித்த கதாபாத்திரங்களினாலும் அக்கால ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டவர். அந்தப் புகழை அடுத்த தலைமுறை ரசிகர்களுக்கும் எடுத்துச் சென்று கொண்டு வந்திருக்கின்றது அவரின் இறவா வரம் கொண்ட பாடல்கள்.

அந்த வகையில் தினமணி இதழில் இரா.செழியன் எழுதிய "ஏழிசை மன்னர் எம்.கே.டி. பாகவதர்! " என்ற கட்டுரையை ஒலிச்சித்திரமாக்கி அவுஸ்திரேலியாவின் பண்பலை வானொலியான "தமிழ் முழக்கம்" வானொலியில் வழங்கியிருந்தேன். அந்த ஒலிப்பகிர்வை இங்கே தருகின்றேன்.

























அடுத்து எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய முத்தான சில பாடல்கள் செவிக்கினிமை தர


ஹரிதாஸ் திரைப்படத்தில் இருந்து "மன்மத லீலையை வென்றார் உண்டோ"



சிவகவி திரைப்படத்தில் இருந்து "கவலையைத் தீர்ப்பது நாட்டியக்கலையே"



ஹரிதாஸ் திரைப்படத்தில் இருந்து "கிருஷ்ணா முகுந்தா முராரே'



சிவகவி திரைப்படத்தில் இருந்து "சொப்பன வாழ்வில்"



திருநீலகண்டர் திரைப்படத்தில் இருந்து "தீன கருணாகரனே"



சிவகவி திரைப்படத்தில் இருந்து "வதனமே சந்த்ரவிம்பமோ"



Friday, March 12, 2010

இளையராஜாவும் பாக்யராஜும்






















எண்பதுகளில் கலக்குக் கலக்கிய நட்சத்திர இயக்குனர்களில் பாக்யராஜின் பாணி தனித்துவமானது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. அழகான திரைக்கதை அமைப்பும் அந்தத் திரைக்கதைக்கேற்ற பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்துத் திறமையாகப் பயன்படுத்துவதிலும் துறை போனவர் இவர். பாக்யராஜின் குருநாதர் பாரதிராஜாவின் சிவப்பு ரோஜாக்கள், நிறம் மாறாத பூக்கள் போன்ற திரைப்படங்களுக்குக் கதாசிரியராக இருந்து பாரதிராஜாவின் ஆரம்ப வெற்றிகளில் பங்கு போட்டவர். அதை அன்றைய பத்திரிகைகள் தம் சீண்டல்களுக்கும் உபயோகப்படுத்தி இருவருக்கும் இடைவெளியை ஏற்படுத்தப் பார்த்தன.

பாரதிராஜாவுடன் ஒப்பிடும் பாக்யராஜின் தனித்துவம் என்னவென்றால் என்னதான் திறமையான இயக்குனர் என்றாலும் அன்றைய காலகட்டத்தில் இளையராஜாவின் இசை என்ற பெரும் பலத்தை உபயோகித்துத் தான் ஒரு படி மேலான வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்ற காலகட்டத்தில் இவர் எதிர்பாராதவிதமாகக் கதாநாயகனாக அறிமுகமான "புதிய வார்ப்புக்கள்" தவிர்ந்து, பாக்யராஜ் இயக்குனராகத் தன்னை வெளிப்படுத்திய சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தில் இருந்து பெரும்பாலான படங்களை இளையராஜாவின் உதவியின்றி மற்றைய இசையமைப்பாளர்களோடு கைகோர்த்தே இயக்கியிருக்கின்றார். அந்த வகையில் கங்கை அமரன், சங்கர் கணேஷ், எம் எஸ் விஸ்வநாதன், தீபக், தரண் இவர்களுடன் தானே இசையமைத்தும் படங்களை இயக்கியிருக்கின்றார்.

இன்னொரு ஆச்சரியமான உண்மை என்னவென்றால் இளையராஜாவோடு இணைந்து பணியாற்றிய படங்களில் "முந்தானை முடிச்சு" போன்ற பெருவெற்றி பெற்ற ஒரு சில படங்களோடு ஒப்பிடும் போது இவர் மற்றைய இசையமைப்பாளர்களோடு பணியாற்றிய போது கிடைத்த வெற்றிப்படங்களின் பட்டியல் சற்றே நீளம். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பாக்யராஜின் படங்களில் பாடல்கள் அவை யார் இசையமைத்தாலும் சோடை போனதேயில்லை. திருஷ்டிக்கழிப்பாக "வேட்டியை மடிச்சுக்கட்டு" வந்து பாக்யராஜின் முத்திரை இயக்கத்துக்கு ஒரு இடைவெளியைப் போட்டது.




























இந்தத் தொகுப்பிலே பாக்யராஜ் என்ற இயக்குனரோடு இளையாராஜா இணைந்த போது உருவான படங்களின் பாடல் தொகுப்பைப் பார்ப்போம்.


இன்று போய் நாளை வா


மூன்று பையன்களும், காதலிக்க ஒரு பெண்ணும் என்று அமைந்த சுவாரஸ்யமான நகைச்சுவைச் சித்திரம். பாக்யராஜோடு , பாரதிராஜாவின் இன்னொரு அறிமுகம் ராதிகா இணைந்த இந்தப் படத்தில் ராஜாவின் கைவண்ணம் சற்றே கம்மி தான் என்றாலும் மலேசியா வாசுதேவன், பி.சுசீலா பாடும் "பல நாள் ஆசை திருநாள் ஆச்சு மண நாள் காண்போம் வா வா" ஒரு காலகட்டத்து இளசுகளின் சுப்ரபாதமாக இருந்ததாம்.




விடியும் வரை காத்திரு

இந்த அப்பாவியும் கொலைகாரன் பாத்திரமாக தேறுவானா என்று நினைத்த ரசிகர்களின் நினைப்பை மாற்றி ஒரு த்ரில்லர் கதையை தன் பாணியில் சுவாரஸ்யமாகக் கொடுத்த பாக்யராஜுக்கு ராஜா போட்ட அன்பு மெட்டு "நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு", மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி குரல்களில்.



முந்தானை முடிச்சு

அடிக்கடி ஏவிஎம் உடன் முண்டு பிடிக்கும் ராஜாவைச் சமாளித்து பாக்யாஜ் முடிச்சுப் போட்ட இந்தப் படம் ஏவிஎம் சரித்திரத்தில் மட்டுமல்ல பாக்யராஜின் வாழ்நாளில் மறக்க முடியாத வெற்றிக்கனியைக் கொடுத்து ஓயாமல் ஓடிக்கொண்டே இருந்தது. படம் பார்க்க வருபவர்களுக்கு முருங்கைக்காய் கட்டு கொடுக்கும் அளவுக்கு விளம்பர உத்தியும் தனித்துவமாக இருந்தது. பாக்யராஜின் இந்த சுவாரஸ்யமான படத்தின் தானும் தனித்து நிற்கவேண்டும் என்று இளையராஜா போட்ட மெட்டுக்கள் எல்லாமே ரோஜா மொட்டுக்கள்.
குறிப்பாக அந்திவரும் நேரம் பாடல் எடுத்த விதத்திலும் மனதை அள்ளியது. மலேசியா வாசுதேவன் குரலை விலக்கி எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாக்யராஜுக்குக் குரல் கொடுக்க, புதுமுகமாக அறிமுகமான ஊர்வசிக்கு எஸ்.ஜானகி




தாவணிக்கனவுகள்


எதிர்பாராத வெற்றி அடுத்து என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுக்க முடியாமல் தடுமாற்றத்தைக் கொண்டு வந்து சிலசமயம் படுகுழியில் தள்ளி விடும். நடிப்புச் சிங்கம் சிவாஜி கணேசன் தலையில் ஒரு தாவணிக்கடையே சுமத்திவிட்டு கதையில் கோட்டை விட்ட திரைக்கதைச் சிங்கத்துக்கு ஒருவகையில் சுருக்குக் கயிறு ஆகிருக்கும், கடவுள் புண்ணியத்தால் சுமாராக ஓடி ஒளிந்த இந்தப் படத்திலும் இளையராஜாவின் மெட்டுக்கள் 80களில் அவர் கொடுத்த பெரும்பாலான படங்களின் பாணியில். அந்த வகையில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும், எஸ்.ஜானகியும் பாடும் "செங்கமலம் சிரிக்குது"





தூறல் நின்னு போச்சு


வில்லனாகப் பழகிப் போன நம்பியாரை நல்லதொரு குணச்சித்திரப்பாத்திரத்தில் நடிக்க வைத்ததோடு சுலக்க்ஷணாவையும் அறிமுகப்படுத்திய இந்தப் படத்தின் தலைப்பு கூட பாக்யராஜ் தன் படங்களுக்குத் தனித்துவமாக சிரத்தையோடு அமைக்கும் தலைப்புக்களின் வரிசையில் அமைந்தது. இந்த இசைத்தொகுப்புக்கு இந்தப் படத்தில் இருந்து எந்தப் பாடலை எடுப்பது எதை விடுவது என்று திணறவைக்கும் அளவுக்கு எல்லாப் பாடல்களுமே வெகு சிறப்பாக அமைந்தது. இளையராஜா - பாக்யராஜ் இணைந்த சிறந்த வெற்றிக் கூட்டணியில் பாடல்களுக்கும் பங்குண்டு என்று காட்டியது. "தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி" மலேசியா வாசுதேவன், ஜானகி குரல்களில் கேட்கக் கேட்க இனிமை



சின்னவீடு

"முந்தானை முடிச்சு திரைப்படத்தில் தங்கை ஊர்வசியை காதலியாக அறிமுகப்படுத்திய பாக்ய ராஜ் சில ஆண்டுகளின் பின் அவர் சகோதரி கல்பனாவை மனைவியாக அறிமுகப்படுத்திய "சின்ன வீடு" சில்மிஷங்கள் நிறைந்த பாக்யராஜ் தனமான வீடு இது.
ஒரு ரேஞ்சியில் அமையும் கிளுகிளுப்பாடல்கள் பாக்யராஜ் படங்களில் தானாக அமைவதுண்டு. அது சின்ன வீட்டில் கூட இல்லையென்றால் எப்படி? ஆனால் இங்கே நான் தருவது இதே படத்தில் அமைந்த வெள்ள மனம் உள்ள மச்சான்" மலேசியா வாசுதேவன்,சுனந்தா குரல்களில்




ராசுக்குட்டி


பாக்யராஜ் வேண்டாமென்று வைத்துக் கொண்டாலும் பஞ்சு அருணாசலம் தயாரித்தால் இளையராஜா தானே இசை. அப்படி அமைந்தது தான் இந்தக் கூட்டணி. பாக்யராஜின் கலகலப்பான நகைச்சுவையும், திரைக்கதை அமைப்பும் சாதாக் கதையைக் கூட மசாலா தோசை அளவுக்கு ஆக்கிவிடும். ராசுக்குட்டி படம் மறந்து போயிருக்கலாம், ஆனால் இப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் "ஹோலி ஹோலி ஹோலி" மறக்க முடியாத பாடல்



ஓரு ஊர்ல ஒரு ராஜ குமாரி

சில சமயங்களில் என்னதான் இளையராஜா மாங்கு மாங்கென்று உழைத்தாலும், பொருத்தமான படம் அமையாவிட்டால் விழலுக்கு இறைத்த நீர் தான். அது என்னதான் மீனாவை ராஜகுமாரியாக்கினாலும் பொய்க்காது என்று நிரூபித்த படம். எல்லாப் பாடல்களுமே வித்தியாசமான இனிமையான மெட்டுக்கள். குறிப்பாக மனோ பாடும் "வந்தாள் வந்தாள் ராஜகுமாரி" க்கு இழைத்து இழைத்துப் பண்ணிய மெட்டும், இசையும் முத்துச்சரமாக ஒரு சிம்பொனிப் பரவசம் தான்.



வீட்ல விசேஷங்க

மலையாள பாக்யராஜ் பாலசந்திரமேனன் இயக்கி பாக்யராஜ் நடிக்க இருந்த படம், இரண்டு இயக்குனர்களுக்கும் ஈகோவால் தமிழ் பாக்யராஜே இயக்கி நடித்த படம். முதற்கோணல் முற்றும் கோணலாய் விசேஷமாக எதுவுமில்லை என்று சொல்லிவைத்தது. படத்தின் ஒளிப்பதிவை ஏற்றது யாரோ கத்துக்குட்டி போல, படம் தொடங்கி முடியும் வரை நடுவில் ஒரு ஒளிக்கோடு இருக்கும் வரை பார்த்துக் கொண்டார். திரையிசைப்பாடல்களைப் பொறுத்த வரை ஈழத்து ரசிகர்களுக்குப் பிடிக்கும் சில பாடல்கள் இந்திய ரசிகர்ளுக்குப் பிடிக்காது என்பதற்கு உதாரணமாக இந்தப் படத்தின் பாடல்கள் இலங்கையில் வெகுபிரபலமாக இருந்தன. குறிப்பாக அருண்மொழி, ஜானகி பாடும் "மலரே தென்றல் பாடும் கானம் இது" பதினாறு வருஷங்களுக்கு முந்திய காதல் கதைகளை நினைவு படுத்தும்

Wednesday, March 3, 2010

றேடியோஸ்புதிர் 51 : பதிவிரதன் படி தாண்டினால்


வணக்கம் மக்கள்ஸ், மீண்டும் ஒரு றேடியோஸ்புதிரை ஒரு பாடலின் இடையிசையோடு கொண்டு வந்திருக்கிறேன். இந்தப் படம் என்னவென்று கண்டு பிடியுங்களேன்.

இந்தப் படத்தை இயக்கியவர் ஏற்கனவே தங்கையை வச்சு முடிச்சுப் போட்டவர், பின்னர் அக்காவையும் தமிழுக்கு நல்லதொரு அறிமுகமாக "கட்டிய" படம் இது. தங்கையை இரண்டாம் தாரமாக முந்திய படத்தில் இயக்கியிருந்தார். ஆனால் அக்காவை தாரமாக்கி அலைய விட்டார் இரண்டாவது படத்தில். ராஜாவோடு சேர்ந்த ராசி இந்தப்படமும் வெற்றி. கூடவே இந்தப் படம் வந்த பின்னர் குறித்த சொல்லுக்கே தனி மவுசு தான் ;)

சரி,இவ்வளவு க்ளூவும் போதும், நீங்கள் கூகூளாண்டவரை கும்புடுறீங்களோ, யாகூ அம்மனை வேண்டுறீங்களோ தெரியாது பதிலோடு வந்து வூடு கட்டி அடியுங்கள் ;).



சரியான பதில்:
படம்: சின்ன வீடு
நடிகர்கள்: பாக்யராஜ், கல்பனா (ஊர்வசியின் சகோதரி)

போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி ;)