Pages

Thursday, December 10, 2020

திரையிசை தந்த பாரதி பாட்டு

“காற்று வெளியிடைக் கண்ணம்மா;-நின்றன்

காதலை எண்ணிக் களிக்கின்றேன்” (கப்பலோட்டிய தமிழன்)


“சிந்து நதியின் மிசை நிலவினிலே

சேரநன்னாட்டிளம் பெண்களுடனே

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து

தோணிகளோட்டி விளையாடி வருவோம் (கை கொடுத்த தெய்வம்)

என்றெல்லாம் அசரீரியாகக் கேட்கும் பாட்டுகள் மகாகவி சுப்ரமணிய பாரதியாரை நினைத்து விட்டால்.

தமிழன்னை ஈன்றெடுத்த எங்கள் ஒப்பற்ற கவி மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்த நாள் நினைவில் இன்று அவரின் பாடல்களைத் தாங்கி வந்த படங்கள் குறித்த ஒரு சிறு அலசலைக் கொடுக்கலாம் என்று முனந்ததன் வெளிப்பாடு இது.

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடல்கள் திரைப்படங்களில் இடம்பெற முன்பே மேடை நாடகங்களில் பாடிப் புகழ் பூத்தவை. குறிப்பாக எஸ்.ஜி.கிட்டப்பா போன்றோர் தம் நாடகங்களில் பாரதி பாடல்களைப் பாடிப் போற்றினர்.

1931ஆம் ஆண்டு பாரதியாரின் பாடல்களை ஒலிப்பதிவு செய்யும் உரிமையை திரு ஏ.வி.மெய்யப்ப செட்டியார் நானூறு ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டார்.

1944ஆம் ஆண்டு தமிழ் எழுத்தாளர் மாநாடு கோவையில் நடந்தது. அதில் அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் தனி நபரிடமிருந்து பாரதி பாடல்களை “மீட்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன் வைத்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகியது.

அவ்வை டி.கே சண்முகம், எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் இதற்குத் தங்கள் ஆதரவை நல்கினர்.

பாரதி விடுதலைக் கழகத்தார் முதல்வர் ஓமந்தூர் ரெட்டியாரைச் சந்தித்து பாரதி பாடல்களை நாட்டுடமையாக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை அளித்தார்கள். அப்படிச் செய்வதற்கு முன் பாரதியின் வாரிசுகளிடமிருந்து இதற்கான ஒப்புதல் கடிதத்தைப் பெறவேண்டும் என்று சொன்னார் ஓமந்தூரார். இந்தச் செய்தி டி. எஸ். சொக்கலிங்கம் அவர்கள் மூலமாக நாரண. துரைக்கண்ணனை அடைந்தது. பாரதி குடும்பத்தாரை நன்கறிந்த பேராசிரியர் அ. சீனிவாச ராகவனுக்கு உடனே தந்தி கொடுத்து வரவழைத்தார்கள். கலைஞர் டி. கே. சண்முகம், வல்லிக்கண்ணன், திருச்சி வானொலி நிலையத்தைச் சேர்ந்த மு. கணபதி, அசீரா, நாரண. துரைக்கண்ணன் ஆகிய ஐவர் அடங்கிய குழு செல்லம்மாவைப் பார்ப்பதற்காகச் சென்றது. செல்லம்மாவிடம் விளக்கிச் சொன்னார்கள். மகிழ்ச்சியோடு சம்மதித்தார்கள். ஒப்புதல் கடிதத்தையும் எழுதிக் கொடுத்தார் . 

பாரதியாரின் பாடல்களைத் திரையில் பயன்படுத்தும் உரிமம் பெற்ற ஏவிஎம் நிறுவனர் மெய்யப்பச் செட்டியார் பின்னர் அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க அவற்றை நாட்டுடமை ஆக்கினார். இதனால் பல்வேறு தயாரிப்பாளர்களும் பாரதி பாடல்களைப் பயன்படுத்த முடிந்தது. மேற்கண்ட வரலாற்றுக் குறிப்பை எழுத்தாளர் ஹரிகிருஷ்ணன் அவர்கள் தம் வலைத் தளத்தில் பதிந்திருக்கின்றார்.

சுதந்திர இந்தியா மலர்ந்தபோது 1947,ஆகஸ்ட் 15 - அன்று மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்று அகில இந்திய வானொலியில் ஆனந்த சுதந்திரம் அடைந்ததைத் தனது கம்பீரக் குரலால் இசைத்து அனைவரையும் சிலிர்க்க வைத்தவர் பாடகி டி.கே.பட்டம்மாள் அவர்கள்.

சுப்ரமணிய பாரதியாரின் பாடல்கள் திரையிசையில் பயன்பட்ட விதத்தில் 1947 ஆம் ஆண்டு ஏவிஎம் இன் “நாம் இருவர்: படத்தில் தொடங்கி 2015 ஆம் ஆண்டு வெளி வந்த குற்றம் கடிதல் படம் உள்ளடலங்கலாக இடம் பிடித்திருக்கின்றன.

தேசிய விருது கண்ட குற்றம் கடிதல் படத்தில் “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே”

https://www.youtube.com/watch?v=oJEhFCnsVQw

மழலைகளின் கூட்டுக் குரலாகவும், ராகேஷ் ரகுநந்தன் குழுவின் கூட்டுக் குரலிலும் https://www.youtube.com/watch?v=3inzCBqAVmU இசைக்கப்பட்டிருக்கின்றது. கல்விச் சமூகத்தில் எழும் முறைகேடுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் முண்டாசுக்கவி பாரதியை இன்றைய இளம் படைப்பாளிகள் உலகமும் பயன்படுத்திய பாங்கில் அவரின் சிந்தனைகள் காலம் தாண்டியவை, நூற்றாண்டு கடந்தவை என்பதை மெய்ப்பின்றன.

இவை திரைப்படக் கணக்கு மட்டுமே தவிர தனிப்பாடல்களாக பாம்பே ஜெயஶ்ரீ உட்பட சாஸ்திரிய சங்கீத விற்பன்னர்களும், இளம் பாடகர்களுமாகப் பாடிச் சிறப்பித்தது தனிக் கணக்கு.

அவ்விதம் வந்த 

ஆசை முகம் மறந்து போச்சே -இதை

யாரிடம் சொல்வேனடி தோழி

நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்

நினைவு முகம் மறக்கலாமோ

https://www.youtube.com/watch?v=utBPfITWcog

பாடலை பாடகி சுசித்ரா பாடி, இன்றைய இளையோர் கணக்கில் அதிகம் வரவு வைத்த பாடல்களில் ஒன்றாகக் கொள்ளலாம்.

இத்தோடு இன்னொரு சிறப்பு, மோகன்லால் நடித்த புகழ்பூத்த மலையாள மொழித் திரைப்படமான “தன்மத்ரா”வில் “ மோகன் சித்தாரா இசையில் மகாகவி சுப்ரமணியபாரதியாரின்

“காற்று வெளியிடைக் கண்ணம்மா” 

https://www.youtube.com/watch?v=eVXapgZAV3s

இடம் பிடித்தது தனியே சொல்லி வைக்க வேண்டியது.

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் வாழ்வியலைப் படமாக்கும் பல்வேறு முயற்சிகளில் ஒன்றாக அமைந்தது “கொட்டு முரசே” திரைப்படம். இதில் அன்புக்குரிய சக்ரவர்த்தி அவர்கள் பாரதியாராகத் தோன்றி நடித்திருக்கிறார். மிடுக்கான தோற்றமும், கம்பீரக் குரலும், ஆற்றொழுக்கான தமிழில் பேச வல்ல அவரின் “கொட்டு முரசே” பட அனுபவத்தை முன்னர் ஒரு வானொலிப் பேட்டி வழி செய்திருக்கிறேன். அந்தப் படம் வெளிவருவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. இன்று அதை நினைவு கூரவாவது காணொளிகள் இல்லாத துர்பாக்கியம்.

“கொட்டு முரசே” படத்துக்கு வீரமணி – சோமு ஆகியோர் இசையமைக்க, மகாகவி சுப்ரமணிய பாரதியார் எழுதிய “வெடிபடு மண்டபத்திடி (மலேசியா வாசுதேவன்), “தகத் தகத் (கே.வீரமணி, உமா ரமணன் குழுவினர்), திருவே நினைக்காதல் (மலேசியா வாசுதேவன், பி.சுசீலா), “என் நேரமும் ( என்.சுரேந்தர், எஸ்.பி.சைலஜா) என்று மொத்தம் நான்கு பாடல்கள். இவை முன்பும் பின்பும் எந்தவொரு படங்களிலும் பயன்படுத்தாத பாரதியார் பாடல்கள் என்ற தனிச்சிறப்பும் கொண்டிருக்கின்றன.

பாரதியின் "மங்கியதோர் நிலவினிலே" பாடலின் நான்கு வடிவங்கள், நான்கு வித மெட்டுகளில், நான்கு இசையமைப்பாளர்களால் இசையமைக்கப்பட்டிருப்பதை இங்கே பகிர்கின்றேன்.

எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் எழுதிய "ஒரு மனிதனின் கதை" மதுப்பழக்கத்தினால் எழும் சீரழிவை மையப்படுத்திய நாவல். இது நடிகர் ரகுவரன் முக்கிய பாத்திரமேற்று நடிக்க "ஒரு மனிதனின் கதை" என்ற பெயரிலேயே தொலைக்காட்சித் தொடராக ஏவிஎம் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. பின்னர் இதை "தியாகு" என்ற பெயரிலேயே ஏவிஎம் நிறுவனம் திரைப்படமாகவும் மாற்றியது. இதிகாசம் தவிர்ந்த சமூக நாவல் தொலைக்காட்சித் தொடராகவும் பின்னர் சினிமாவாகவும் மாற்றம் கண்டது தமிழில் இதுவே முதன்முறையாகும்.

"ஒரு மனிதனின் கதை" தொலைக்காட்சித் தொடரில் மகாகவி சுப்ரமணியபாரதியாரின் பாடல்கள் பயன்பட்டிருக்கின்றன. இசை வழங்கியவர்கள் சங்கர் - கணேஷ் இரட்டையர்கள். இதில் மிகவும் அழகாகப் பயன்பட்டிருக்கிறது பாரதியார் எழுதிய "மங்கியதோர் நிலவினிலே" பாடல். 

இந்தப் பாடலைப் பத்து வருடங்களுக்கு முன்னர் என்னுடைய இசைக் களஞ்சியத்தில் திரட்டி வைத்திருந்தது என் பிரத்தியோக ஒலித்தொகுப்பில் இருந்து பகிர்கின்றேன்.

https://soundcloud.com/kanapraba/mangiyathor_nilavinile

யூடியூபில் இதைக் கேட்க

https://www.youtube.com/watch?v=6P9t5oPEH7I

"மங்கியதோர் நிலவினிலே" பாடலின் மேலும் மூன்று வடிவங்கள் இதோ. இங்கே சிறப்பு என்னவென்றால் சிவசங்கரி (ஒரு மனிதனின் கதை), அகிலன் (பாவை விளக்கு) ஆகிய இரு பெரும் எழுத்தாளரது படைப்புகளில் ஒரே பாடல் பயன்பட்டிருக்கும் தன்மை தான்.

திருமணம் படத்தில் ஜி.ராமநாதன் இசையில் T.M.செளந்தரராஜன்

https://www.youtube.com/watch?v=oW_h4lXUeS4

பாவை விளக்கு படத்தில்  சி.எஸ்.ஜெயராமன் பாடியது. இசை : கே.வி.மகாதேவன்

https://www.youtube.com/watch?v=VDnuevGsJiI

தேவநாராயணன் குரலில்

https://www.youtube.com/watch?v=DDC_0NTuyt4

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடல்கள் தமிழ்த் திரையிசையில் பயன்பட்ட பாங்கை விக்கிப்பீடியா தளம் இங்கே

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

பெரும்பாலும் பதிவு செய்தாலும் முழுமையாக்கப்படவில்லை. இன்னும் சொல்ல வேண்டியவை விடுபட்டிருக்கின்றன.

ஏழாவது மனிதன் படத்தில் எல்.வைத்தியநாதன் இசையில் பாரதியாரின் பாடல்கள் பயன்படுத்தப்பட்ட பாங்கு அதன் இன்னொரு பரிமாணத்தை விளக்கும், பாரதி கண்ட சமூக விடுதலையின் பால் அமைந்த ஒரு தொழிற் சங்கப் போராட்டக் களப் பின்னணியில் அமைந்த ஏழாவது மனிதன் படத்தில் மலையாளத்தின் முன்னணி இயக்குநர் ஹரிஹரன் பாரதி பாடல்களைப் பயன்படுத்திய பாங்கைப் போற்றிக் கொண்டே ஒவ்வொரு பாட்டாக மெச்சலாம். “உச்சி மீது வானிடிந்து” பாடலை ஒரு கலகக்காரன் குரலாக மட்டுமன்றி ஒரு கலகலக் குரலில் எஸ்பி பாடிய புதுமையை நோக்கிக் கொண்டே, ஒவ்வொரு பாரதி தினத்துக்கும் மறவாமல் வந்து நினைப்பூட்டும் “காக்கைச் சிறகினிலே நந்தலாலா” பாடலையும் காலம் தாண்டி பாரதியின் கவிவரிகள் நம் மனதில் சம்மணம் இட்டு உட்காரும் அளவுக்குப் பரிச்சயமாகி விட்டது. மொத்தம் 11 பாடல்கள், அனைத்தும் பாரதி பாடல்கள் என்ற புதுமை படைத்தது ஏழாவது மனிதன்.

“நெஞ்சில் உரமுமின்று நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை செய்வாரடி கிளியே” என்றும் “நல்லதோர் வீணை செய்தே” என்றும் ஏழாவது மனிதனில் பாடிய பாரதியாரின் கொள்ளுப் பேரன் ராஜ்குமார் பாரதி, பின் தன் முப்பாட்டன் பாரதியின் வாழ்க்கைச் சரிதம் கூறும் “பாரதி” படத்திலும் “கேளடா மானிடா” என்று பாடிச் சிறப்பித்தார்.

பாரதி படத்தில் இளையராஜா இசையிலும் பாரதி பாடல்கள் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. சினிமா உலகில் பாரதியின் காதலனாக கே.பாலசந்தரைச் சொல்லுமளவுக்கு அவரின் பெரும்பாலான படங்களில் பாரதியின் அடையாளம் எங்கேனும் நேரடியான பாத்திரம், பாடல், கதைக்கரு என்று ஒட்டிக் கொண்டிருக்கும். இரு கோடுகள் படத்தில் பாரதியின் வேடத்தில் நாகேஷ் பாடி நடித்த “பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே” 

https://www.youtube.com/watch?v=BZVDUGDycJ4

பாடலின் வழியாக பாரதி கண்ட சுதந்திரம் எப்படித் தவறாக மொழி பெயர்க்கப்படுகின்றது என்ற விமர்சன ரீதியான பார்வையாக அமைந்திருந்தது.

வேலையில்லாத் திண்டாட்டத்தின் கொடுமையைப் பின்னணியாகக் கொண்டு எடுத்த “வறுமையின் நிறம் சிகப்பு” படத்தில்

“நல்லதோர் வீணை செய்தே அதை நலங் கெடப் புழுதியில் எறிவதுண்டோ”

https://www.youtube.com/watch?v=IWxLj1KQVW8

“தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே”

https://www.youtube.com/watch?v=8w7H89NUpI0

என்று காட்சிகளினூடு அந்தக் களத்தில் அமையும் பாடல்களாகவும்,

தமிழிசைப் பாடல் வேண்டும் என்ற போது பாரதியைத் துணைக்கழைத்து 

“மனதில் உறுதி வேண்டும் 

வாக்கினிலே இனிமை வேண்டும்”

https://www.youtube.com/watch?v=khTZjADJ4l0

என்று பாடுவதிலாகட்டும், 

“மோகம் என்னும் தீயில் என் மனம் வந்து வந்து உருகும்”

https://www.youtube.com/watch?v=_Sq3RmcWqss

என்று “சிந்து பைரவி” நாயகன் ஜே.கே,பிக்காக பாரதியாரே எழுதி வைத்தது போலச் சாமர்த்தியமாகக் கையாண்டார் கே.பாலசந்தர்.

அவரின் சீடர் கமல்ஹாசன் மட்டும் விடுவாரா என்ன?

மகாநதி என்றதொரு உன்னதத்தை எடுத்தத் தன் குரு நாதரை நெகிழ வைத்தவர். மகா நதியின்முக்கிய திருப்பத்தில் வெகுண்டெழும் சாதுவின் குரலாய் பாரதி பிறக்கிறான் இப்படி.

https://www.youtube.com/watch?v=-Cpppcy5N8A


பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து - நரை

கூடி கிழப்பருவமெய்தி - கொடும்

கூற்றுக் கிரையென பின்மாயும் - பல

வேடிக்கை மனிதரை போலே - நான்

வீழ்வே னென்று நினைத் தாயோ?


கானா பிரபா



Tuesday, November 17, 2020

ஜெமினி கணேசன் 100

"நம்பர் 1 பெருசா நம்பர் 2 பெருசா?” என்று மன்னன் படத்தில் ரஜினிகாந்த் விஜயசாந்தியிடம் கேட்பது போல அடிக்கடி பல சந்தர்ப்பங்களில் வாய்ப்புகள் வரும் போது மனம் கேள்வி எழுப்பும்.

உண்மையில் எந்த விஷயத்திலும் முதலாவது ஆளாக நான் வர வேண்டுமென்று விரும்பியதில்லை, அது பள்ளிப் படிப்பு காலத்தில் இருந்து இன்றைய தொழில் வாழ்க்கை வரை நீட்சி பெறும்.

இதே மாதிரியானதொரு மனப்பாங்கை வளர்ப்பதற்கு ஒரு காரணம், போட்டி மனப்பான்மை இல்லாமல் கிடைத்ததோடு திருப்தியோடு எனக்கு நானே நம்பர் 1 ஆக இருந்து விடலாமே என்ற நோக்கம் தான்,

இதையே அண்மையில் சாய் வித் சித்ராவில் நடிகர் ராஜேஷ் பேட்டியில் பேசும் போது இரண்டாம் கட்ட நடிகர்கள் சிலரை உதாரணப்படுத்தி அவர்கள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை அதிக கஷ்டமோ, அதிக நஷ்டமோ இன்றிக் கொண்டு நடத்தினார்கள் என்று சொன்ன போது என்னை அங்கே பொருத்திப் பார்த்தேன். இந்த மாதிரியான வாழ்க்கை தான் நடிகர் ஜெமினி கணேசனுக்கும் கிடைத்திருக்கிறது. எம்.ஜி.ஆர் & சிவாஜி என்ற உச்ச நட்சத்திரங்கள் மிளிர்ந்து கொண்டிருந்த காலத்தில் இரண்டாம் கட்ட நடிகர்களாக ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், பின்னாளில் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவகுமார் என்றெல்லாம் வந்த போது இவர்கள் தனித்து நாயகர்களாகவும், உச்ச நட்சத்திரங்களின் படங்களில் குறிப்பாக சிவாஜியிடம் சேரும் போதெல்லாம் இணை நாயகர்களாகவும் பயணித்திருக்கிறார்கள்.  இவர்களில் ஜெமினி கணேசனை நினைத்தால் ஏனோ ஒரு புன்முறுவல் எட்டிப் பார்க்கும்.

காரணம் அவர் திரை வாழ்க்கை எப்படி இருந்ததோ அது போலவே தன் நிஜ வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டவர். அந்த நிஜ வாழ்க்கைப் பக்கம் நமக்குத் தேவை இல்லை, ஒரு கலைஞனாக அவரின் திரை வாழ்க்கையைப் பார்க்கும் போது அவரளவில் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையையே நடத்தி முடித்திருக்கிறார்.

காரைக்குடி நாராயணனைத் தொழில் பழக விடாமல் லூட்டி அடித்துக் கொண்டிருந்த ஜெமினியை பானுமதி கடிந்து கொண்ட கதையைக் காரைக்குடியார் சொன்ன போது ஜெமினியின் இயல்பான சுபாவத்தை நினைத்து மனசுக்குள் சிரித்துக் கொண்டேன்.

மிஸ்ஸியம்மா, கல்யாணப் பரிசு, தேன் நிலவு, காத்திருந்த கண்கள்,, மனிதன் மாறவில்லை, சுமை தாங்கி போன்ற படங்களெல்லாம் ஜெமினி கணேசனை விலத்தி இன்னொருவரைப் பொருத்திப் பார்க்க முடியாத அளவுக்குப் பாத்திரங்களின் குணாதிசியங்களோடு பொருந்திப் போனவர். இதில் வேடிக்கை என்னவென்றால் ஜெமினி கணேசனுக்கு இரட்டை ஜோடிகள் என்றே தெரியாமல் படம் பார்த்துக் கொண்டு பாதியில் அவரின் காதல் திருவிளையாடல் அரங்கேறும் திருப்பமாகப் பார்த்த போது அட ஆரம்பிச்சுட்டாரய்யா என்று மனசு எக்காளமிடும். அப்படி ஒரு அனுபவம் ஆடிப் பெருக்கு படம் பார்த்த போது. 

ஜெமினி கணேசன் படங்கள் என்றால் கூடவே A.M.ராஜாவும், P.B.ஶ்ரீனிவாசும் வந்து விடுவார்கள், ஒரே நாயகனுக்கு இவ்விதம் இரண்டு குரல்களும் பொருதிப் போனது கூட அதிசயம் தான். அதிலும் ஒரு வெற்றிகரமான இசையமைப்பாளராக ராஜா A.M.ராஜா அடையாளப்படும் போது அங்கே ஜெமினியும் கூடவே இருப்பார்.

இணை நடிகராக பார்த்தால் பசி தீரும், பாசமலர், பாவமன்னிப்பு போன்ற படங்களில் நடித்த போதும் தனக்கான இடத்தை அங்கே நிறுவியவர். 50 களின் பிற்பகுதியில் இருந்து 60 களில் ஶ்ரீதரும், 70 களில் கே.பாலசந்தரும் இவருக்கான தீனியைக் கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர்கள். எப்படி ஶ்ரீதரின் காதல் படங்களில் ஜெமினியின் ஆரம்ப கால இளமைத் துள்ளாட்டத்துக்கான ஒரு களம் இருந்ததோ அதன் எதிர்த் திசையில் எழுபதுகளில் குடும்பத் தலைவனாகவும், குணச்சித்திரமாகவும் இன்னோர் பரிமாணம் ஜெமினிக்கு,இரு கோடுகள், காவியத் தலைவி, பூவா தலையா, வெள்ளி விழா, என்று கே.பாலசந்தரின் படங்கள் சான்று பகரும். இன்னொன்று “நான் அவன் இல்லை” படத்தில் தன் காதல் மன்னன் பட்டத்தை எழுபதுகளிலும் நிறுவியது. சின்ன வயசில் ஒரு ஜனாதிபதித் தேர்தல் மூட்டம் ரூபவாஹினியில் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்க, முழு இரவு கடந்து துண்டு துண்டாக ஜெமினியின் “சுடரும் சூறாவளியும்” பார்த்த ஞாபகம் இன்னமும் பசுமையாக.

“பிலஹரி மார்த்தாண்டம்பிள்ளை””யாக ஒரு நீண்ட இடைவேளைக்குப் பின் வருகிறார் உன்னால் முடியும் தம்பி படத்தில். ஒரு ஆசார சீலராக, கடும் கோபக்காரராக ஜெமினி கணேசனுக்கு முற்றிலும் மாறுபட்டதொரு படைப்பு.

இதற்கு முன்னர் கே.பாலசந்தர் இவரைத் தெலுங்கிலும் இதற்கு முன்னர் பிலஹரி கணபதி சாஸ்திரியாக அரங்கேற்றி விட்டுத் தான் தமிழிலும் மார்த்தாண்டம் பிள்ளையாக இறக்கியிருப்பார். அந்தப் பாத்திரப் படைப்பில் ஜெமினி எவ்வளவு தூரம் நியாயம் செய்திருக்கிறார் என்பதைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமா?

பொன்மனச் செல்வன் படம் ஜெமினி கணேசன் & சரோஜாதேவி ஜோடியை மீண்டும் சேர்த்து அழகு பார்த்தது.

வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டு பொழுது போகாமல் தவித்த ஜெமினிக்கு “கிருஷ்ண தாசி” தொலைக்காட்சித் தொடரில் நடிக்க வைத்த போது அவர் பட்ட ஆனந்தத்தையும் குட்டி பத்மினி சொல்லியிருந்தார். எவ்வளவு சொத்துப் பத்து இருந்தாலும் கலைஞனுக்கு ஓய்வேது. மேட்டுக்குடி படத்திலும் ஜெமினிக்கு நல்ல தீனி கிட்டியது.

சிவாஜி கணேசனுக்குப் போக வேண்டிய பாத்திரம் ஜெமினிக்குப் போனதாம், ஆனால் இந்தப் பாத்திரத்தில் ஜெமினி அளவுக்கு அந்த சிருங்கார நயத்தோடு காதல் செய்யும் கிழவராக யாரை நினைத்துப் பார்க்க முடியும் என்று சாதித்தது அவ்வை ஷண்முகியில் வந்த விஸ்வநாத ஐயர் பாத்திரம்.

ஜெமினி கணேசன் என்ற காதல் மன்னனுக்கு இன்று நூறு வயசு 17.11.2020


கானா பிரபா


Tuesday, September 29, 2020

எஸ்பிபி ❤️️ பாடகன் சங்கதி - பாகம் 1


54 ஆண்டுகள் தவிர்க்க முடியாத ஒரு குரல் ஆளுமை
பதினைந்து வருடங்களுக்கு முன்னர் சென்னைப் பயணத்தில் வழக்கம் போல என் கால்கள் இசைக் கடைதேடி இழுக்க, ஸ்பென்ஸர் பிளாஸாவில் இருக்கும் Music World போகிறேன்.
அங்கு குவிந்து கிடந்த எண்ணற்ற இசைப் புதையல்களில் இருந்து கைகள் ஒவ்வொன்றாய் ஆய்ந்து அப்படியே அடுக்கிக் கொண்டு போகச் சட்டென்று என் கவனம் திரைப்படமல்லாத தனிப்பாடல்தொகுப்பில் விழுகிறது. அங்கே “அறிந்தேன்” என்றொரு இசைப்பேழை கிடக்க அதில் என்ன ஒரேஎஸ்பிபி மட்டும் என்ற ஆர்வக் கோளாறால் அதையும் வாங்குவதற்காக எடுத்துக் கொள்கிறேன். சிட்னிவந்து தான் கேட்கும் வாய்ப்புக் கிட்டுகிறது.
"அறிந்தேன்
நினைத்தேன்
திருப்பிக் கொடு
பிரிந்தேன்
அழைதேன்
நினைதேன்
காதலில்
மறந்தேன்"
அந்த இசைப் பேழை முழுக்க எஸ்பிபி மட்டும் தான் பாடுகிறார். இரண்டு பக்கமும் அவர்தான்.
அலுக்கவே இல்லை, அந்தப் பாடல்கள் கோவையாகக் காதலின் பரிமாணத்தை எஸ்பிபியின் குரல் தழுவிக்கொண்டாடுகிறது.
திரையிசைப் பாடல்களை விடுங்கள் இதுமாதிரி எத்தனை எத்தனை திரைசாரத் தனிப் பாடல்கள், பக்திஇலக்கியங்களின் இசை வடிவங்களைத் தன் குரலால் நிறமூட்டி விட்டுப் போயிருக்கிறார் அவர்.
இளையராஜாவின் பாடல்கள் என்றால் அவர் இசையமைத்த நாலாயிரம் கடக்கும் பாடல்களில் சிலநூறைத்தான் பரவலாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அது போலவே எஸ்பிபி பாடியதில் பிரபல இசையமைப்பாளர் தவிர்ந்த பாடல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைத் தேடிக் கேட்கும் போது கிடைக்கும் அனுபவ வெளிப்பாட்டையே இந்தத் தொடர் கட்டுரையின் மூல இழையாக எடுத்துக்கொண்டிருக்கிறேன்.
அது என்னவெனில் புத்தம் புது இசையமைப்பாளர்களின் அடையாளத்தை நிறுவ எஸ்பிபி எவ்வளவு துணை நின்றிருக்கிறார் என்பதைக் காட்டி நிற்கும்.
இந்த இடத்தில் எஸ்பிபி பழமைக்கும் புதுமைக்கும் ஒரு பாலமாகவே விளங்குகிறார் என்றே நோக்கவேண்டும். இசைத்துறையில் ஐம்பது ஆண்டுகளைத் தொட்டவர் மூன்று தலைமுறைகளைக் கண்டவர். இம்மூன்றிலும் தன் ரசிகர் குழாத்தை வளைத்தும் போடும் குரல் வித்தகர்.
அதனால் தான் ரஹ்மான் வழியாக ஒரு புத்திசை இயக்கம் எழுந்த போது “காதல் ரோஜாவே” இல் ஆரம்பித்து இன்று வரை தவிர்க்க முடியாத குரலாக இருந்திருக்கிறார். அது சூப்பர் ஸ்டார் ரஜினி கடந்து, வினீத், அப்பாஸ் என்றெல்லாம் ரஹ்மானோடு பயணப்பட்டு நீண்டிருக்கிறது, அதையும் கடந்து போயிருக்கிறது.
அது கொண்டு போய் எஸ்பிபியின் தமிழுக்கான இறுதித் தேசிய விருதான “தங்கத் தாமரை மலரேயில்” கொண்டு நிறுத்தியிருக்கின்றது.
அடுத்த தலைமுறையின் இளம் காதலர் படங்களிலும் “காதலெனும் தேர்வெழுதிக் காத்திருந்த மாணவன் நான்” (காதலர் தினம்) என்றும், “சொல்லாயோ சோலைக்கிளி (அல்லி அர்ஜீனா), எந்தன் வாழ்வின் காதல் நிலவே (காதல் வைரஸ்) எஸ்பிபி தொடர்ந்திருக்கிறார். இவை சில சொட்டு உதாரணங்கள் தாம்.
புதுப் புதுக் குரல்களாகத் தேடித் தேடிப் பதிப்பிக்கும் ரஹ்மானாலேயே கடக்க முடியாதவர்.
போன வருடம் கூட
“எஸ்பிபி சாரிடம் நேரம் கேட்டிருக்கிறேன்
அவர் தான் இன்னமும் கொடுக்கிறார் இல்லை”
என்று எஸ்பிபி முன்னாலேயே கலகலத்திருக்கிறார் ரஹ்மான்.
“வாய்பாட்டு பாடும் பெண்ணே
மெளனங்கள் கூடாது
வாய் பூட்டு சட்டமெல்லாம்
பெண்ணுக்கு ஆகாது”
“என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்” வந்த போது இளையராஜாவின் தீவிர ரசிகனாக என்னைப் போன்றவர்களை அசைத்து போட்டு ரஹ்மான் பக்கமும் இன்னமும் நெருக்கமாக காதுகொடுக்கக் கேட்க வைத்தது அந்த சிரிப்பான் எஸ்பிபியின் நளினக் குரல். அந்த வகையில் அவர் ஒரு இணைப்புப் பாலமும் கூடத்தான்.
ரஹ்மானுக்கு முந்திய சகாப்தம் இசைஞானி இளையராஜா காலத்திலும் கூட இசையாலும், எண்ணற்ற பாடகர்களை உள்ளிளுத்த வகையாலும் எழுந்த மாற்றம் எஸ்பிபி கணக்கில் கை வைக்கவில்லை. இளையராஜாவின் இசையில் அதிகம் பாடி வைத்தவர் எஸ்பிபி தான்.
மாற்றம் என்பது சடுதியாக விளைவது அல்லது, அது மெல்ல மெல்ல விளைவிப்பது. ராஜாவின் ஆரம்ப காலத்தின் இசையோட்டங்கள், பாடகர் ஒழுங்கு என்பது மெல்ல மெல்ல மாறிய பாங்கு ஓருதாரணம். ஆனால் எல்லா மாற்றங்களிலும் எஸ்பிபி தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார். புதியதொரு இசையமைப்பாளர் இசைக்க வரும் போதும் கூட எஸ்பிபி முத்திரையோடு தன் பாடலை அடையாளப்படுத்தும் சூழல் இருந்திருக்கிறது. ஒரு இசையமைப்பாளர் தன்னை நிலை நிறுத்துவதற்கும், தன் பாடலை மிகஇலகுவாகக் கடைக்கோடி ரசிகனிடம் கொண்டு சேர்ப்பதற்கும் இங்கே உறுதுணை எஸ்பிபியின் குரல்.
அந்த வகையில் எஸ்பிபியின் குரல் புதிய புதிய இசையமைப்பாளர்களுக்கு எவ்வளவு தூரம் தோதாய்த் தோள் கொடுத்தது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
படம் நன்றி : ஏவிஎம் நிறுவனம்

Monday, September 28, 2020

லதா மங்கேஷ்கர் 91 ❤️ இசைஞானி இளையராஜாவும் லதா மங்கேஷ்கரும் 🎸



ஆராரோ ஆராரோ
நீ வேறோ நான் வேறோ
தாயாய் மாறி நான் பாட
சேய் போல் நீயும் கண்மூட....
நாடு கடந்து, சொந்தம் அற்று, புலம் பெயர்
வாழ்வியல் சூழலில் நள்ளிரவு கடந்த வானொலி ஒலிபரப்புகளில் தனியனாக நிகழ்ச்சி செய்யும் போது இந்தப் பாடலை ஒலிபரப்பும் போதெல்லாம் ஒரு காதல் பாடலாக அன்றி தாயின் அரவணைப்பில் முதுகு தடவும்.
“ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ”
பாடல் மட்டுமல்ல இசைஞானி கொடுத்த இது போன்ற வரம் தந்த சாமிக்குச் சுகமான லாலிகள் எல்லாமே தனிமை களையும் தாயின் தாலாட்டுகள் தான். அதனால் தான் லதா மங்கேஷ்கர் என்ற பாடகியின் மொழிச் சுத்தம் கடந்து அந்த ஒலியின் கனிவோடு கட்டுண்டு கிடக்கச் செய்து விடும்.
லதா மங்கேஷ்கர் தமிழில் பாடியது என்றால் இன்றைய யுகத்துக்கு சத்யாவின் “வளையோசை கலகலவென”
பாடல் தான் அதிகம் தெரிந்திருக்கும். அந்தப் பாடலில் துள்ளாட்டம் போடும் எஸ்பிபிக்குத் தோதாய் ஒரு அமலாக் குரலாக
“சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது”
லதாவின் செல்லக் குரல் இருக்கும்.
ஆனால் சத்யா வந்த 1988 க்கு முன்பே
முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் லதா மங்கேஷ்கர் குரல் “ஆன்” ஹிந்தி தமிழ் வடிவம் கண்ட போதே வந்திருக்கிறது. அதில் ஆச்சரியமான ஒற்றுமை என்னவெனில் இசைஞானி மனம் திறந்து போற்றும் நெளஷத் தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர். ஒரு உபரித்தகவல் நெளஷத் இசையில் Mughal-e-Azam” என்ற ஹிந்திப்படப் பாடல் தமிழில் அக்பர் திரைப்படப் பாடலாக பி.சுசீலா குரலில் காலம் மறக்கடிக்காத பாடலான “கனவு கண்ட காதல்” என்று வந்ததையும் சொல்லி வைக்க வேண்டும்.
நெளஷத் இசையில் வெளிவந்த வான ரதம் ( Uran Khatola என்ற ஹிந்திப் படத்தின் தமிழ் வடிவம்) படத்திலும் “இன்று எந்தன் நெஞ்சில் சக்தி”
என்ற பாடலை லதா மங்கேஷ்கர் பாடியிருக்கிறார்.
ஒரு பொழுது இசைஞானி இளையராஜாவின் தெலுங்குப் பாடல்களை இசை வட்டில் கொடுத்துக் காலைத் தீனியாகச் சுவைத்துக் கொண்டிருக்கும் போது
“தெல்ல சீரக்கு தகதிமி தபனலு” https://youtu.be/NgJSt2F_8nY பாடல் வந்தது. முன்பு கேட்ட ஞாபகமும் இல்லை
ஆனால் பழக்கி வைத்த கிளியைப் போலச் சட்டென்று மனதில் உட்கார்ந்து கொண்டு விட்டது. இப்போது போலக் கேட்டுக் கேட்டுப் பழக்கப்படுத்தி ரசிக்க வேண்டிய தொல்லை இல்லையே இந்த மாதிரி ராஜா கொடுத்த பாடல்களில்.
ஆகா எவ்வளவு அபரிதமான துள்ளிசை வார்ப்பு, எஸ்.பி.பாலசுப்ரமணியமும் லதா மங்கேஷ்கரும் பாடும் அந்த உற்சாகத் தொனி அப்படியே “வளையோசை கலகலவென” பாடலைத் துணைக்கழைத்து வருகிறது. கூட்டுக் குரல்களின் உற்சாக ஆர்ப்பரிப்பு ராஜா பாடல்களில் வழமையே என்றாலும் வழக்கமாக இசை மேடையில் குஷியாகி மேலதிக சங்கதி போடும்
எஸ்.பி.பி இங்கே இடையிசையிலும் அந்த உற்சாக விளையாட்டைக் காட்டுகிறார். Aakhari Poratam திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கிறது இந்தப் பாட்டு.
லதா மங்கேஷ்கர் பல்லாண்டுகளுக்குப் பிறகு
தமிழிலும் தெலுங்கிலும் பாட வந்த போது நானே அவருக்கு ஜோடிக் குரலாக அமைந்திருக்கிறேன் என்று பெருமை பட இந்தக் காணொளியின் பாட்டு முடிவில் எஸ்.பி.பி பேசுகிறார் பாருங்கள் https://youtu.be/otmuLVbjcQU
இசைஞானி இளையராஜா தமிழில் கொடுத்த பாடல்களையே ஆண்டு அனுபவிக்க இந்த ஆயுசு போதாது. தெலுங்கிலும் இன்ன பிற மொழிகளிலும் அவர் கொடுத்த இந்த மாதிரித் திரவியங்களை ஆண்டு அனுபவிக்க இன்னொரு பிறவி வேண்டும்.
எங்கிருந்தோ அழைக்கும் என் கீதம்
என் உயிரில் கலந்தே அது பாடும்
சேர்ந்திடவே உனையே ..ஓ...ஓ
ஏங்கிடுதே மனமே
சேர்ந்திடவே உனையே ..ஓ...ஓ
ஏங்கிடுதே மனமே
அந்தப் பள்ளி நாட்களில் அருட்செல்வம் மாஸ்டரின் டியூஷன் சென்டரின் நவராத்திரி கால வாணி விழாவில் பெரிய வகுப்பு அக்கா ஒருவர் பாடியது மனக் கிடங்கில் இன்னும் பழுது படாது பசுமையாய் இருக்கிறது.
இசைஞானி இளையராஜா தன் இசையில் ஒவ்வோர் பாடகியருக்கும் இம்மாதிரியான ஏதேதோ எண்ணம் வளர்த்த, மாலையில் யாரோ, பொன்வானம் பன்னீர்த்தூவுது
ரகங்களைக் கொடுத்துக் கெளரவித்திருக்கிறார். அப்படி லதா மங்கேஷ்கருக்குக் கிட்டிய அபரிதமான பாட்டு இது. அதுவும் அந்த இசையோடு கூட்டுச் சேரும் போது அமானுஷ்ய உலகில் சஞ்சரித்துப் பாடுமாற் போல இருக்கும்.
லஜ்ஜா ஹிந்திப் படத்தில் இளையராஜா பின்னணி இசைத்த போது ஒரேயொரு பாடலையும் லதாவைக் கொண்டு பாட வைத்தார். அந்தப் பாட்டு இதயம் போகுதே போல ஒரு சோக ராகம் மீட்டும். அது இதுதான்.
இசைஞானி இளையராஜாவுக்கு டிசெம்பர் 4 ஆம் திகதி 1998 இல் மத்தியப் பிரதேச அரசாங்கம் லதா மங்கேஷ்கர் விருது கொடுத்துக் கெளரவித்தது.
இசைஞானி இளையராஜாவின் இசையில் லதா மங்கேஷ்கர் பாடியது சொற்பம். ஆனால் அனைத்துமே சொர்க்கம்.
அள்ளித்தான் கிள்ளித்தான் காதலன்தான்
அன்னத்தை எண்ணம்போல் ஆடவைத்தான்
ஆராரோ ஆராரோ
நீ வேறோ நான் வேறோ....
கானா பிரபா

Thursday, July 9, 2020

My mind is always agile - கே.பாலசந்தர் 90



இப்படியொரு ஆங்கிலத்தனமான தலைப்போடு நான் தொடங்க காரணமே இதை உள்ளதை உள்ளவாறு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர் வாயால் சொன்ன போது தான். அப்போது அவர் எழுபதைக் கடந்து விட்டிருந்தார்.

ஒரு மனிதனின் சுறு சுறுப்பான இயக்கத்துக்கு உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, தன்னைப் புதுப்பித்துக் கொண்டே புதிய புதிய சிந்தனைகளோடு ஓடிக் கொண்டிருக்க வேண்டும். என் அப்பாவுக்கு அடுத்து இப்படியானதொரு சுறு சுறுப்பானதொரு இயக்கத்தை எட்ட நின்று பார்த்தது கே.பாலசந்தர் போன்றவர்கள் வழி தான்.

மேடை நாடகம்.
சினிமா,
சின்னத்திரை நாடகம்
ஆகிய களங்களில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் கொடுத்த விரிவான பங்களிப்பை இனியொருவர் தமிழ்ச்சூழலில் கொடுக்கவே முடியாது.
ஒவ்வொரு களத்திலும் முந்திய களத்தின் பாதிப்பே இருக்காது. ஏனெனில் சினிமாவுக்கு மேடை நாடகம் போட்ட இயக்குநர்களின் படங்களையும் பார்த்திருக்கும் அனுபவம் தான் இப்படியெல்லாம் எண்ண வைக்கிறது.

“என்ன இடைஞ்சல்கள் வரட்டும், அதை மீறிப் போராடித் தன்னைப் பரிபூரணமா நம்பி இறங்கியவர்கள் யாரும் வெற்றி அடையாமல் இருக்கவே முடியாது” - கே.பாலசந்தர்

“1972ல் ஹார்ட் அட்டாக், 6 மாத ஓய்வின்போது புதுசு புதுசாக படம் பண்ண யோசனை தோன்றி கலாகேந்திராவை ஆரம்பித்தோம்” என்கிறார் இயக்குநர் சிகரம். இதையெல்லாம் அவர் வாழ்ந்திருந்த காலத்தில் கொடுத்த பேட்டிகள் வந்த போது குறிப்பெடுத்து வைத்திருந்தேன். இன்று அவரின் 90 வது பிறந்த நாளுக்கு ஒப்புவிக்கக் கால நேரம் கூடியிருக்கிறது.

சிந்து பைரவி படத்தில் 14 விநாடிகளே அமையும் ஒரு காட்சி அது.
சங்கீத உலகம் போற்றும் ஜே.கே.பி என்ற இசை மேதை வழி தவறிக் காதலில் விழுந்து பின் அதைத்தொலைத்த வேதனையில் குடியில் சரணாகதி கொள்கிறார்.
கையிருப்பு எல்லாம் மெல்ல மெல்லத் தேயும் வேளை எஞ்சிருந்த காரும் எதற்கு என்று ஜே.கே.பி மனைவி அது நாள் வரை வாகனச் சாரதியாக இருந்தவரை வழியனுப்புகிறார்.

அந்த அதிர்ச்சியைத் தாங்கமுடியாது கார் மீது புதைந்து அழுகிறார் சாரதி. அப்படியே காமெராவின் கோணம் கார்க் கண்ணாடி வழியாக மது போதையால் நிறைந்து சித்தம் கலங்கி நிற்கும் ஜே.கே.பியைக் காட்டும். இவ்வளவு நுணுக்கமான காட்சியை "பூமாலை வாங்கி வந்தான்" பாடலின் இடையிசையின் ஒரு சில நிமிடங்கள் மாத்திரமே பயணிக்கும் இசையில் 14 விநாடிகளை நிரப்பிய காட்சி தான் இது. இதையே கே.பாலசந்தரின் திறமையான இயக்கத்தின் ஒரு சோறு பதமாக என்னால் காட்டமுடியும்.


நாடக மேடை மரபில் கட்டியக்காரனின் வருகை தனித்துவமானது. கே.பாலசந்தரது படைப்புகளைப் பார்த்தால் கண்டிப்பாக ஒரு பாத்திரம் இதே பாங்கில் அமைக்கப்பட்டிருக்கும். தனியாக ஒரு கட்டுரையில் எழுத வேண்டியது இந்தப் பார்வையில்.

அதே போல் ஒரு பாடல் கதையோட்டத்தின் கீற்றாக இருக்கும்.

“இல்லாத உறவுக்கு 
என்னென்ன பேரோ” என்றும்

“நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான் 
குடிக்கின்ற கோப்பையை உடைத்துவிட்டான் 
மீண்டும் அவள் முகம் நினைத்து விட்டான் 
சபதத்தை அவன் இன்று உடைத்துவிட்டான்”
என்றும் சிந்து பைரவியில், வைரமுத்துவைத் துணைக்கழைத்திருப்பார்.

அது போலவே எழுத்தாளர் சிவசங்கரியின் 47 நாட்கள் கதையைப் படமாக்கிய போது அந்தப் படம் முழுக்க “மான் கண்ட சொர்க்கங்கள்” பாட்டு ஓடும். 8 நிமிடம் 21 விநாடி ஓடும் பெரும் பாட்டைப் பகுதி பகுதியாகக் காட்சிகளில் இழைய விட்டிருப்பார் கே.பாலசந்தர். 

“இந்திய தாய் நாட்டை 
எண்ணுகிறாள் மங்கை
சென்றிட வழியில்லை 
தேம்புகிறாள் நின்று
தாய் வீட்டு தெய்வங்கள் 
துணையாக வாராதா இப்போது”

அவர் சொன்ன கதைச் சுருக்கத்தை அப்படியே உள்வாங்கி கவிதைச் சுருக்கமாகத் தந்தார் கண்ணதாசன் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் துணையோடு.

“அங்கும் இங்கும் பாதை உண்டு
  இன்று நீ எந்தப் பக்கம்”
 
என்று அவர்கள் படத்தில் நாயகி மூன்று தலைக் கொள்ளி எறும்பாகச் சிக்கித் தவிக்கும் போதும்,

“முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா”

என்று உவமைக் கவிஞர் சுரதா வழியாக நீர்க்குமிழியிலும்,

“கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா -உன்
கணங்களும் என்ன கண்களில் என்ன நீரோட்டமா“
என்று வாலியின் துணையோடு மனதில் உறுதி வேண்டும் படத்தின் நாயகிக்கான அசரீரிப் பாட்டாகவும்,

“கல்யாண சுகமுமில்லை 
கடமைக்கு முடிவும் இல்லை
எத்தனை இரவு கண்டாய் 
என்ன நீ உறவு கண்டாய்
கண்மூடும் வேளையிலும் 
எம்மைதான் கனவு கண்டாய்”
என்று “மூத்தவள் நீ இருக்க” பாடல் வழியாக அரங்கேற்றத்திலும்,

“காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்“ (ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்) என்று அபூர்வ ராகங்களிலும்,

“ஆத்திரத்தாலும் அவசரத்தாலும்
அங்கொரு கன்னி தாயானாள்
ஆத்திரக்காரனையே திருத்தி ஒருத்தி சாத்திரப்படியே தாயானாள்” (நானொரு கதா நாயகி)  நச்சென்று மூன்று முடிச்சு கதை சொல்வதிலும்,

“பந்தம் என்பது சிலந்தி வலை 
பாசம் என்பது பெரும் கவலை
சொந்தம் என்பது சந்தயடி 
இதில் சுற்றம் என்பது மந்தையடி“

என்று அவள் ஒரு தொடர்கதை நாயகி சுஜாதாவுக்குமாக ஒவ்வொரு படத்தின் கருவினைக் காட்டும் சித்திர வரிகள் இருக்கும். இதுவுமொரு நீட்டி எழுத வேண்டியதொன்று. அதில் படாபட் ஜெயலட்சுமியின் பாத்திரமும் தனியே ஆராயப்பட வேண்டியதொன்று.

“கே.பாலசந்தர் சினிமாவில் ஒரு அகிம்சாவாதி, படத்தின் வியாபாரத்துக்கு 
நாலு சண்டைக் காட்சியை வலிந்து வைக்க விடவே மாட்டார்.
கவர்ச்சி என்பது காட்சியின் பின்னணியில் இருக்கணும், முன்னணியில் துகிலுரிப்பது அல்ல என்பதைச் செய்து காட்டியவர்” என்கிறார் இயக்குநர் சக நடிகர் மெளலி.

இயக்குநர் சிகரம் கே.பாலச்ச்ந்தர் அளவுக்கு கின்னஸ் சாதனை படைக்குமளவுக்கு அறிமுகங்களை உருவாக்கியவர்கள் யாரும் இல்லை என்று நடிகர் விவேக் ஒருமுறை சொல்லியிருந்தார்.

உடனே “மனதில் உறுதி வேண்டும்” படம் ஞாபகத்துக்கு வர அந்தப் படத்தை YouTube இல் ஓட விட்டு எண்ணினேன். சுஹாசினி தவிர முன்னணி நட்சத்திரங்களாக அந்தப் படத்தில் மட்டும் 
12 பேரை அறிமுகங்களாக இறக்கி விட்டிருக்கிறார். இம்மட்டுக்கும் சிந்து பைரவி என்ற ஒரு பெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்து விட்டு அடுத்ததாக இது, எப்பேர்ப்பட்ட துணிச்சல். 

தன் திரையுலக வாழ்வுக்கு வழிகாட்டியாக இருந்த ஆனானப்பட்ட எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்திலேயே “தண்ணீர் தண்ணீர்” (மூலக்கதை கோமல் ஸ்வாமிநாதன்)
எடுத்துச் சிக்கலையும் சம்பாதித்தவர்.

“விசுவின் இந்த மேடை நாடகத்தைப் படமாக்குவோம்” என்று கவிதாலயா நிர்வாகி நடராஜன் சொன்னபோது இதையெல்லாம் சினிமாவா எடுக்கக் கூடாது” என்று கே.பாலசந்தர் மறுத்து விடுகிறார். ஆனால் விடாப் பிடியாக எடுக்கிறார்கள். படம் மாபெரும் வெற்றி.
அதுதான் மணல் கயிறு.

“எனக்கு இந்தப் படம் சுத்தமாப் பிடிக்கல”
அந்தப் படத்தின் வெற்றி விழாவில் எடுத்த எடுப்பியே தன் பேச்சை இப்படி ஆரம்பித்தாராம் பாலசந்தர். இதைச் சமீபத்தில் பேட்டியில் சொன்னவர் வி.நடராஜன்.
தன்னுடைய நிறுவனத் தயாரிப்பாக இருந்தாலும் படைப்பு மோசமாகப்பட்டால் பாரபட்சமின்றி விமர்சிக்கத் தவற மாட்டார்.
நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் “குணா” படத்தை முதல் காட்சி பார்த்து விட்டு “என்னடா படம் எடுத்து வச்சிருக்கிறான்” என்று கமல் குறித்து கவிதாலயா கிருஷ்ணனிடம் அலுத்தது ஒரு பக்கம், “மகா நதி” பார்த்து விட்டு மை டியர் ராஸ்கல் என்று அழுது நெகிழ்ந்து கமலைத் 
தன் பிள்ளையின் வெற்றியில் பரம திருப்தி காணும் தந்தையின் பூரிப்பிலுமாகக் கடிதம் எழுதியிருக்கிறார்.

அது போல தன்னுடைய பாசறையில் இல்லாத இன்னொரு இயக்குநர் சாதித்தாலும் எழுதிப் பாராட்டி விடுவார். இதைப் பல இயக்குநர்களின் பேட்டி வழியாகச்  சொல்லக் கேட்டிருக்கிறோம்.
“மதராசப் பட்டணம்” படத்தை உச்சி குளிரப் பாராட்டிய பாலசந்தரின் கடிதத்தை குமுதமோ, விகடனோ அப்போது பிரசுரித்தது.

தன்னுடைய படைப்பின் கதை மாந்தர்கள் வழியே பிரச்சார நொடி இல்லாமல் சமூகக் கருத்துகளைச் சொன்னவர்.
எனக்கு சின்னத்திரை நாடகங்களில் பெரிய ஈர்ப்பு இல்லாவிட்டாலும் அதன் ஆரம்ப யுகத்தில் பார்த்த விரல் விட்டு எண்ணக் கூடிய நாடகங்களில் ஒன்று 
பாலந்தரின் ரயில் சினேகம்.
இன்னொன்று துண்டு துண்டாகப் பார்த்த ப்ரேமி. இதில் ஒரு பாத்திரம் பேசும்
சமூக விமர்சனத்தை இன்னும் நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்ப்பேன், அதன் சாரம் இது தான் ;
“சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் மீது சதா விமர்சனங்களைக் கொட்டிக் கொண்டிருப்பவர்கள் பலருக்கு உள்ளூரத் தமக்கு அந்த பிரபல அந்தஸ்து வராததின் காழ்ப்புணர்வும் ஒரு காரணம்”
இது உளவியல் ரீதியாக அனுபவித்து உணர வேண்டியது. .

“ஈர்ப்பு என்பது நம்மிடம் இருப்பது மற்றவரிடம் இருந்தாலும் வரலாம் நம்மிடம் இல்லாதது மற்றவரிடம் இருப்பதாலும் வரலாம்” - கே.பாலசந்தர்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 
இன்னமும் வாழும் இயக்குநர் சிகரத்துக்கு.

கானா பிரபா
09.07.2020

இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம்


"இருதயமே துடிக்கிறதா....

துடிப்பது போல் நடிக்கிறதா....❤️

“எனக்கு வரவேண்டிய வாய்ப்புகள்

எல்லாம் இவருக்கே போக வேண்டும்

என்று வேண்டிக் கொள்கிறேன்”

இப்படிச் சொன்னவர் இலேசுப்பட்டவர் அல்ல திரையிசையின் இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்த ஒரு மகோன்னதமான இசையமைப்பாளர் சரத், அவர் அப்படித் தன் வாய்ப்புகள் இவருக்கே போக வேண்டும் என்று கை காட்டியது இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் அவர்களைப் பார்த்து.

இது நடந்தது ஒரு தசாப்தத்துக்கு முந்திய Zee தமிழ் இசைப் போட்டியின் இறுதி நிகழ்வில் நடுவராக இருவரும் வந்து சிறப்பித்தவேளை.

அதைக் கேட்ட மாத்திரத்திலேயே மெய் சிலிர்த்தது அப்போது, இப்போது நினைத்துப் பார்த்தாலும் அந்த மானசீகமான பாராட்டைக் கேட்டு நெகிழ்வேன். போட்டி, பொறாமை நிறைந்த உலகில் இப்படியும் நிறைந்த மனத்தோடு இருக்கிறார்களே என்று எண்ண வைக்கும்.

எண்பதுகளில் எப்படி இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மனுக்கு ஒரு விசாலப்பட்ட திரையிசை வாய்ப்பு கிட்டவில்லை என்று ஏங்கும் அதே பரிமாணத்தில் தான் புத்தாயிரத்தில் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் அவர்களையும் அடிக்கடி நினைத்துப் பார்க்க வைக்கும்.

அழகிய தீயே படத்தில் வரும் “விழிகளின் அருகினில் வானம்” பாடல் வந்த புதிதில் வெறி பிடித்தது போலத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருப்பேன். அது மட்டுமா இசைஞானி இளையராஜாவின் பாடல்களை மட்டுமே கேட்பேன் என்று கடும் விரதத்தோடு இருந்த நண்பர் ஒருவரை என் காரில் அமர்த்தி இந்தப் பாடலை ஓட விட்டு சிட்னியில் ஒரு குறும் யாத்திரை சென்று விட்டுத் திரும்பும் போது இந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருந்தார் அந்த நண்பர்.

நான் வெற்றிக் களிப்பில் முறுவலித்தேன்.

அதுதான் ரமேஷ் விநாயகம் அவர்கள் கொடுத்த உன்னத இசைக்கு என் கட்டை விரல் கைமாறு.

“விழிகளின் அருகினில் வானம்” பாடலை முன் சொன்ன ரமேஷ் விநாயகத்தின் அருமை நண்பர் இசையமைப்பாளர் சரத் எவ்வளவு அனுபவித்துப் பாடுகிறார் பாருங்கள். அந்த ஸ்வர ஆலாபனையிலே கட்டுக்கடங்காத காதல் பிரவாகமாகப் பரவுகிறது.

https://youtu.be/vZ_Vaa3rK1I

பூ போன்ற கன்னி தேன்

அவள் பேர் சொல்லி தித்தித்தேன்

அது ஏன் என்று யோசித்தேன்

அட நான் எங்கு சுவாசித்தேன்

காதோடு மெளனங்கள்

இசை வார்க்கின்ற நேரங்கள்

பசி நீர் தூக்கம் இல்லாமல்

உயிர் வாழ்கின்ற மாயங்கள்

நண்பர் ரஜினிராம் Rajini Ramachandran இன் சகோதரர் கவிவர்மன் எழுதிய அந்த “விழிகளின் அருகினில் வானம்” பாடலைச் சிலாகித்து எழுதவே பயம் கலந்த மரியாதை இருக்கும் எனக்கு

எனக்கு இப்படியென்றால் ரமேஷ் விநாயகம் அவர்கள் இசையமைத்த “தில் மேரா” (கஸ்தூரி மானினமே)

https://youtu.be/owdu6RGQquk

பாடலைப் பாடியது எனக்கு மிகப் பெரிய சவால் என்று ஒரு மேடையில் சிலாகித்தார் அந்தப் பாடலின் மூலப் பாடகி மாதங்கி. இந்துஸ்தானி மரபில் பிறந்த அந்தப் பாடலை ஒரு பாட்டம் சிலாகித்து விட்டுத்தான் அடுத்த கேள்விக்குப் போனார் மாதங்கி. அதில் ரமேஷ் விநாயகம் அவர்களின் சாகித்தியம் மீதான ஒரு பெரிய பிரமிப்பும், மரியாதையும் அவரின் குரலில் ஒட்டியிருந்தது.

நாயகன் படத்தின் பின்னணி இசையில் இசைஞானி காட்டிய நுணுக்கத்தை இவர் காட்சியோடு விளக்கிக் காட்டிய கணம் ஒரு ரசிகனாக இன்னோர் பக்கம் மரியாதை விளைவித்தார்.

“என்ன இது என்ன இது

என்னைக் கொல்வது

என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது......”

https://youtu.be/ehL7CZEUKzM

காதலர்கள் தங்களுக்குள் மட்டுமே கேட்குமாற் போல ஒரு அமுக்கமான ஓட்டத்தில் முழுப் பாடலையும் பாடி விட முடியுமா? முடியும் என்ற விடையோடு ஒரு இசையமைப்பாளருக்கு இப்படியொரு தெள்ளமுதுக் குரலும் உண்டே என்ற அதிசயத்தையும் கொடுக்கும் பாட்டு.

தேன் குடித்து விட்டுப் பாடுவது போல வழுக்கிக் கொண்டு போகும்.

தொட்டுத் தொட்டுத் தொட்டுச் செல்லும் ஐஸ் காற்றிலே https://youtu.be/2DZ4aVAs994

இன்னொரு தேங்காய்ச் சொட்டு.

தேமதுரக் குரலோன் ரமேஷ் விநாயகத்தைப் பாட்டுக்காரராகவும் அழகு பார்த்த ஹாரிஸ் ஜெயராஜின் “யாரிடமும் தோன்றவில்லை”

https://youtu.be/0R2nC9sN43A

அப்படியே பட்டு விரிப்பில் பஞ்சு மெத்தை சுகம்.

கேட்காத ஓசைகள்

இதழ் தாண்டாத வார்த்தைகள

இமை ஆடாத பார்வைகள்

இவை நான் கொண்ட மாற்றங்கள்

சொல் என்னும் ஓர் நெஞ்சம்

இனி நில் என ஓர் நெஞ்சம்

எதிர்பார்க்காமல் என் வாழ்வில்

ஒரு போர்க்காலம் ஆரம்பம்

இருதயமே துடிக்கிறதா

துடிப்பது போல் நடிக்கிறதா?

இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் அவர்களின் பிறந்த நாளில் இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே கொண்டாடி வாழ்த்துகிறேன் இன்னும் நிறைய எழுத வேண்டும் உங்களைப் பற்றி அப்படியும் அடங்காது ❤️

https://youtu.be/G628iHHLgxQ

கானா பிரபா

Wednesday, July 1, 2020

இசைத் தேன் நிலவு ஏ.எம்.ராஜா ❤️



இலங்கை வானொலி கடல் கடந்து கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் அதன் முன்னணிக் குரல் கேஏஏஏஏ.எஸ்ஸ்ஸ்.ராஜ்ஜ்ஜ்ஜா வின் உருவத்தைத் தங்களுக்குத் தோதான கம்பீரமான நடிகராகக் கற்பனை செய்து கொண்டு அவரைப் பார்க்க இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கலையத்துக்குப் படையெடுத்தார்களாம் தமிழகத்தில் இருந்து சில வானொலிப் பிரியர்கள். அவர்கள் வந்திருக்கும் சேதி அறிந்து கூச்ச சுபாவம் கொண்டவர் வெட்கத்தோடு மறைந்தோடி விட்டாராம் அந்த கே.எஸ்.ராஜா.

வானொலிக்கு ஒரு கே.எஸ்.ராஜா போல பாட்டுக்கு ஒரு ஏ.எம்.ராஜா முன்னவர் கவர்ச்சிகரமான குரலாளன் என்றால் பின்னவர் தேன் கனிந்து சொட்டும் பாட்டுக்காரர்.
தன் முகத்தை அடையாளப்படுத்த விரும்பாத ஒலிபரப்பாளர் ஒருபுறம், ஆனால் ஏ.எம்.ராஜாவை நினைத்தால் அவரின் குரல் ஜெமினி கணேசனாக உரு மாறி விடும். நிஜத்தோற்றத்தோடு ஒட்டவே முடியாமல் அச்சொட்டாகப் பொருந்திப் போய் விடும்.
அதனால் தானோ என்னமோ எம்.ஜி.ஆர் தொட்டுப் பல நடிகர்களுக்கும் பாடியிருந்தாலும் இந்த ஏ.எம்.ராஜாவைத் தொடர்ந்து நினைக்க வைப்பவை ஜெமினி கணேசன் பாட்டுகள்.

தனது 22 வது வயதில் பாட வந்தவர் 40 வயதுக்குள் பாடகராக, இசையமைப்பாளராகக் கோலோச்சி விட்டு எழுபதுகளோடு தன் முக்கிய பாட்டுப் பயணத்தை முடித்து விட்டார். அதன் பிறகான பத்தாண்டுகள் மேடைப் பாடகராகவே அதிகம் அறியப்பட்டார். தமிழ்த் திரையிசையில் இசையமைப்பாளர்களின் ஆயுள் குறைவு, இங்கே ஆயுள் என்பது அவர்களுக்குச் சுக்கிர திசை காட்டும் காலம். ஏ.எம்.ராஜாவும் அதில் ஒருவரே.

“ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம் 
என்ன வேண்டும் சொல்லு ஏன் இந்த வம்பு.......” (அன்பு ரோஜா)

https://youtu.be/6CcKN_p5Qgo

“செந்தாமரையே செந்தேன் இதழே
பெண் ஓவியே கண்ணே வருக கண்ணே வருக...” (புகுந்த வீடு)

https://youtu.be/ZIJgMsoGUu8

“எதைக் கேட்பதோ எதைச்ச் சொல்வதோ
நான் அறியாத பெண் அல்லவோ.....” (பத்து மாத பந்தம்)

என்று எழுபதுகளின் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் சங்கர் - கணேஷ் இரட்டையர்கள் இந்த ஏ.எம்.ராஜாவுக்கு மானசீகமாகக் கொடுத்த பிரியாவிடைப் பாடல்கள் போலவே இருக்கும். 

வாழ்க்கையிலும் இணைந்த  ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியுமாக, தமிழ்த் திரையிசையின் நீண்ட நெடும் காலத்துப் பாட்டு ஜோடி.

“பழகத் தெரிய வேணும் உலகில் 
பார்த்து நடக்க வேண்டும்
பெண்ணே......”

https://youtu.be/HG6DaH_5MN0

இந்தப் பாட்டைக் கேட்டால் பெண்ணியவாதிகளுக்குக் கோபம் வராது அப்படியொரு ஆற்றுப்படுத்தும் குரல். 

“இதய வானின் உதய நிலவே 
எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய்....”

https://youtu.be/UuZmjOyjapU

என்னுடைய நள்ளிரவு வானொலி ஒலிபரப்புகளில் அந்தக் காலத்தில் அடிக்கடி நான் ஒலிபரப்புவது . அமரர் கல்கியின் “பார்த்திபன் கனவு” படத்துக்காக இன்னுமொரு பெரும் எழுத்தாளர் விந்தன் எழுதிய பாட்டு அது.  அந்த இருட்டுப் பொழுதுகளின் ஏகாந்தத்தை இசையால் மொழி பெயர்ப்பதாக உணர்வேன்.

“பழகும் தமிழே பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா சுகமா...”

அதே படத்தில் கண்ணதாசனும் தன் பங்குக்குக் கொடுத்த இன்னொன்றும் சேர, ஏ.எம்.ராஜாவுக்கு இன்னொரு விதமாகப் பாடுவாரோ என்று எண்ண வைப்பார் பி.சுசீலா.

“மலரே மலரே தெரியாதோ
மனதில் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்
காதலர் உன்னை காண வந்தால்
நிலையை சொல்வாயோ என் கதையை சொல்வாயோ

https://youtu.be/BXUtr3fskag

ஏ.எம்.ராஜாவை ஒரு இசையமைப்பாளராக நான் அதிகம் கொண்டாடுவது இந்தப் பாடலில் தான், அதற்காக அவர் ஒரு இசையமைப்பாளராகத் தன் சாகித்தியத்தை மற்றைய பாடல்களிலும் காட்டாதவர் அல்லவே.

“நிலவும் மலரும் பாடுது
  என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது”

https://youtu.be/bXsz7BYKC50

அந்தப் பாடலின் ஆரம்பத்தில் விழும் ஒலிக்கீற்றின் ஜாலதரங்கம் அப்படியே காட்சியாகப் படகில் பயணிக்கும் காதலர்களின் சூழலுக்குப் பொருதிப் போகும். எப்படி இவர் காட்சியை உய்த்துணர்ந்து இசை கொடுத்தாரோ என்று எண்ண வைக்கும் மிக நுணுக்கமான சங்கதி அது.

“மனதினிலே பிரிவுமில்லை மாற்றுவாரில்லை
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்”

எவ்வளவு அழகாகச் சுற்றி வந்து மூலஸ்தானத்தில் பாடலை மையம் கொள்ள வைப்பார் இந்தத் தேர்ந்த இசையமைப்பாளர் சக பாடகர் ஏ.எம்.ராஜா.

“அருகில் வந்தாள் உருகி நின்றாள் அமைதி தந்தாளே”

https://youtu.be/q5I9V85_0Vs

களத்தூர் கண்ணம்மாவின் காதலன் ஜெமினியின் சோக ராகத்தைக் கேட்கும் போது மனசுக்குள் ஜெமினிக்குப் பொருந்துவது P.B.ஶ்ரீனிவாசா அல்லது A.M.ராஜாவா என்று குட்டிப் பட்டி மன்றம் போடும். ஆனால் சாலமன் பாப்பையாவின் பட்டி மன்றம் போல தராசின் தட்டுகள் ஒரே நிலையில் நிற்கும்.

தனிமையிலே...தனிமையிலே....தனிமையிலே
இனிமை காண முடியுமா....”

https://youtu.be/kii2WqDjJfQ

முகப்பு வரிகளை மட்டும் எடுத்து கொரோனா யுகத்தின் பாடலாகச் சொல்லி மகிழ்ந்தோம் சமூக வலைத்தளங்களில்.

கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீயில்லையே...நான் இல்லையே...

https://youtu.be/3ZLdDkkRMbo

உங்களுக்கு ஒரு போட்டி, மேற்குறித்த பாடலில் ஏ.எம்.ராஜா பாடும் அந்தச் சங்கதியை மட்டும் கவர்ந்து அச்சொட்டாகப் பாடித்தான் காட்ட முடியுமா?  ஒரு தேர்ந்த சிற்பியின் மை வண்ணத்தில் மெல்ல மெல்ல உருப் பெறும் சிலையாகவல்லோ இந்தப் பாடலும் பிறக்கிறது. 

ஒரு திறமையான கலைஞனுக்குத் தோதான படைப்பாளியும் தோள் கொடுத்தால் அது ரசிகர்களுக்குப் பொக்கிஷமாக வந்து விளையும், அதுதான் ஏ.எம்.ராஜாவும் இயக்குநர் ஶ்ரீதரும் இணைந்த போது கிட்டியது. கல்யாணப் பரிசு பாடல்களைக் கேட்கும் போது இசையமைப்பாளராக ராஜாவின் உச்சம் தெரியும். “உன்னைக் கண்டு நான் ஆட” படம் வந்து ஐம்பது வருடங்கள் கழித்தும் வானொலிகளின் தீபாவளிப்பாடலாக இருக்கிறது. 
வாடிக்கை மறந்ததும் ஏனோ, ஆசையினாலே மனம், காதலிலே தோல்வியுற்றான் என்று அள்ள அள்ளக் கொட்டும் கல்யாணப் பரிசுகள்.

“ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்....”

https://youtu.be/R_k_dBlRn20

ஏ.எம்.ராஜா & சுசீலா குரல்கள் ஓடிக் கொண்டிருக்கும் போது இவை என்ன குரல்களா இல்லை வாத்தியங்களின் கூட்டா என்று பிரித்தறிய முடியாததொரு இசைவு.

ஏ.எம்.ராஜா என்ற தேன் நிலவின் நூற்றுக்கணக்கான பாடல் சமுத்திரத்தில் முக்குளித்து முத்தெடுக்கலாம் ஒவ்வொன்றும் தரும் இனிமையே தனி சுகம் தரும்.

பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா

https://youtu.be/0qV8W1z6ZZo

என்றும் பதினாறாக இருக்கும் இந்தப் பாடல் போலவே சாகாவரம் கொண்டு நம் 
இதய வானின் உதய நிலவு ஏ.எம்.ராஜா அது ஒரு தேன் நிலவு

அங்கமெல்லாம் தங்கமான மங்கையைப் போலே - நதி
அன்ன நடை போடுதம்மா பூமியின் மேலே
கன்னி உந்தன் காதலனைக் காணவில்லையா
இந்தக் காதலிக்குத் தேன் நிலவில் ஆசையில்லையா.....

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 
நம் இசைத் தேன் நிலவு ஏ.எம்.ராஜாவுக்கு ❤️

காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே (பாட்டுக்) கடலும் நீயே

கானா பிரபா
01.07.2020

Thursday, April 23, 2020

இசைஞானியின் ❤️ எஸ்.பி.பி ⛳️ இயற்கையும் காதலும் 💓


நேற்று முழுக்க "பாடும் வானம்பாடி ஹா" பாடலில் கரைந்து போயிருந்த எனக்குத் திடீரென்று ஒரு யோசனை உதித்தது. கிட்டத்தத்த இதே பாடல் பாங்கில் இயற்கை சூழ, திகட்டத் திகட்டக் காதல் கொண்டு பாடும் பாடல்களைத் தொகுத்தால் என்ன என்று நினைத்தேன்.
ஆனால் மனசு படிப்படியாக விதிமுறை போட்டது.
இந்த கொரோனாக் காலத்தில் இன்னும் மனசை அழுத்தும் சோகப் பாடலாக இருக்கக் கூடாது,
இசைஞானி இளையராஜாவின் இசையாக இருக்க வேண்டும் (விதி விலக்கு மெல்லத் திறந்தது கதவு, செந்தமிழ்ப் பாட்டு, செந்தமிழ்ச் செல்வன் ஆகிய படங்களுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கூட்டு இசை)
எஸ்.பி.பி மட்டுமே தனித்துப் பாடவேண்டும், கோரஸ் இருந்தாலும் பாதகமில்லை,
இந்தப் பாடல்களின் மைய நாதத்தில் இயற்கையும் பின்னிப் பிணைய வேண்டும்,
பொதுவான பாடலாகத் தொனித்தாலும் காதலுக்கும் பொருந்தும் வகையிலே இருக்க வேண்டும்,
ஒரு படத்துக்கு ஒரு பாட்டுத் தான்
இப்படியாக கிட்டத்தட்ட நான்கரை மணி நேரம் உழைத்து மூளையைக் கசக்கிப் பிழிந்து 43 பாடல்களைத் திரட்டி விட்டேன்.
ஆனால் மனம் சொல்லுக் கேட்டால் தானே?
இன்னும் பத்துப் பாடல்கள் மேற் சொன்ன விதிமுறைக்குள் அடங்காவிட்டாலும் தவிர்க்க முடியாது என்று போட வைத்து விட்டது.
ஆக மொத்தம் (விஜயகாந்த் குரலில் படிக்கவும்) 54 பாடல்கள், சராசரியாக 270 நிமிடங்கள், அல்லது 4 மணி நேரம் 50 நிமிடங்கள் என்ற கணக்கில் ஒரு தொகுப்பை உருவாக்கி விட்டேன்.
இங்கே நான் சேமித்த அனைத்துப் பாடல்களையும் தேர்ந்தேடுத்த உச்ச ஒலித்தரத்திலேயே தேடித் தேடித் தொகுத்தேன். அப்படியும் தர்ம சீலன் படத்தின் "கிண்ணாரம் கிண்ணாரம்" பாடல் இணையத்தில் தனிப்பாடலாக இல்லாத காரணத்தால் சுடச் சுட அதையும் என் யூடியூப் தளத்தில் ஏற்றி விட்டுச் சேர்த்தேன்.
முழுத் தொகுப்பையும் கேட்க
https://www.youtube.com/playlist…
1. பாடும் வானபாடி ஹா - நான் பாடும் பாடல்
2. இளஞ்சோலை பூத்ததா - உனக்காகவே வாழ்கிறேன்
3. வா பொன்மயிலே - பூந்தளிர்
4. காதலில் தீபம் ஒன்று - தம்பிக்கு எந்த ஊரு
5. சன்யோரிட்டா I Love You - ஜானி
6. பனி விழும் மலர் வனம் - நினைவெல்லாம் நித்யா
7. விழியிலே மலர்ந்தது - புவனா ஒரு கேள்விக்குறி
8. பொன்னாரம் பூவாரம் - பகலில் ஓர் இரவு
9. ஹேய் ஓராயிரம் - மீண்டும் கோகிலா
10. ஒரு பூவனத்துல - கழுகு
11. தோகை இளமயில் - பயணங்கள் முடிவதில்லை
12. கீதம் சங்கீதம் - கொக்கரக்கோ
13. பூவில் வண்டு கூடும் - காதல் ஓவியம்
14. தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி - ஆனந்தக் கும்மி
15. விழிகள் மீனோ - ராகங்கள் மாறுவதில்லை
16. எங்கே எந்தன் காதலி - எனக்குள் ஒருவன்
17. ஜோடி நதிகள் பாதை விலகி - அன்பே ஓடி வா
18. தேன் சுமந்த - கைராசிக்காரன்
19. இதயம் ஒரு கோவில் - இதயக் கோயில்
20. வந்தாள் மகாலஷ்மியே - உயர்ந்த உள்ளம்
21. கவிதை பாடு குயிலே - தென்றலே என்னைத் தொடு
22. சின்ன மணிக்குயிலே - அம்மன் கோயில் கிழக்காலே
23. என்ன சத்தம் இந்த நேரம் - புன்னகை மன்னன்
24. வா வெண்ணிலா - மெல்லத் திறந்தது கதவு
25. மலையோரம் வீசும் காத்து - பாடு நிலாவே
26. மஞ்சப் பொடி தேய்க்கையிலே - ‪செண்பகமே செண்பகமே
27. பாதக் கொலுசு பாட்டு - திருமதி பழனிச்சாமி
28. பச்சமலைப் பூவு - கிழக்கு வாசல்
29. வனக்குயிலே - பிரியங்கா
30. கேளடி கண்மணி - புதுப்புது அர்த்தங்கள்
31. மண்ணில் இந்தக் காதலன்றி - கேளடி கண்மணி
32. அரைச்ச சந்தனம் - சின்ன தம்பி
33. எங்கிருந்தோ இளங்குயிலின் - பிரம்மா
34. பாக்கு வெத்தல - மை டியர் மார்த்தாண்டன்
35. தங்க நிலவுக்குள் - ரிக்‌ஷா மாமா
36. வைகாசி வெள்ளிக்கிழமை - ராசா மகன்
37. குயிலே இளமாங்குயிலே - செந்தமிழ்ச் செல்வன்
38. கலைவாணியோ ராணியோ - வில்லுப்பாட்டுக்காரன்
39. தெற்கே பிறந்த கிளி - இன்னிசை மழை
40. ஓ பட்டர் ஃப்ளை (தனி) - மீரா
41. ஒரு கோலக்கிளி - உழைப்பாளி
42. கொஞ்சிக் கொஞ்சி - வீரா
43. என்னவென்று சொல்வதம்மா - ராஜகுமாரன்
44. நந்தவனம் பூத்திருக்குது - இல்லம்
போனஸ்
1. நடந்தால் இரண்டடி - செம்பருத்தி
2. பூவுக்குப் பூவாலே - ஆனந்த்
3. வனமெல்லாம் செண்பகப்பூ - நாடோடிப் பாட்டுக்காரன்
4. நாடோடிப் பாட்டுகள் நான் படிப்பேன் - என்னுயிர் கண்ணம்மா
5. சின்னச் சின்னத் தூறல் என்ன - செந்தமிழ்ப் பாட்டு
6. கின்னாரம் கின்னாரம் கேக்குது - தர்மசீலன்
7. தேனே தென்பாண்டி மீனே - உதய கீதம்
8. இனிய கானம் - பாட்டு பாடவா
9. வானம் கீழே வந்தால் என்ன - தூங்காதே தம்பி தூங்காதே
10. என் வாழ்விலே - தம்பிக்கு எந்த ஊரு
11. இளமை எனும் பூங்காத்து - பகலில் ஓர் இரவு
12. பொன் மாலைப் பொழுது - நிழல்கள்
13. பொன்னி நதி - முதல் வசந்தம்
இந்தப் பாடல்களைக் கேட்டு விட்டு தொகுப்பு தரும் அனுபவத்தை மறவாமல் சொல்லுங்கள்
இந்தக் கொடும் காலத்தை மறந்து நிம்மதியாக இசையோடு வாழுங்கள்.
கானா பிரபா

காதல் பித்து பிடித்தது இன்று பார்த்தேனே ❤️ ️



எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு ஒரே படத்தில் ஒன்பது பாடல்கள் 💚

காதல் ஒரு கவிதை என்ற படத்தைப் பற்றித் தெரிந்திருக்கிறீர்களா? என்றால் பலருக்குத் தெரிந்திருக்காது ஆனால் Maine Pyar Kiya ஐக் கேட்டால் ஹிந்திவாலாக்களில் இருந்து தமிழ் வாலாக்கள்வரை தெரியாதவர்கள் மிகச் சொற்பம். எண்பதுகளின் இறுதியில் வெளிவந்த இந்தப்படம் அப்போதிருந்த அனைத்துச் சாதனைகளையும் அடித்துத் துவம்சம் செய்துவிட்டு வெற்றிக் கொடி நாட்டிய படம். சல்மான்கானின் ஆரம்ப காலப் படம். நாயகி பாக்யஶ்ரீக்கும் கோயில் கட்டாத குறை. இந்தப் படத்தின் இயக்குநர் சூரஜ் பர்ஜாட்ஜா ஒரு சூரன் தான் இல்லாவிட்டால் இந்த Maine Pyar Kiya படத்தைத் தொடர்ந்து ஒரு சிறு இடைவேளை விட்டு ஐந்து வருடம் கழித்துவந்து எடுத்த Hum Aapke Hain Koun..! படம்கூட அசுரத்தனமான வெற்றியைக் குவித்தது. அதிலும் சல்மான்கான் தான் நாயகன், இரண்டு படங்களிலும் ராம் லக்‌ஷ்மண் தான் இசையமைப்பாளர்.
Maine Pyar Kiya படத்தின் தெலுங்கு, மலையாளப் பதிப்புகளோடு அப்போது தமிழில் “காதல் ஒரு கவிதை” என்ற பெயரில் இந்தப் படம் வெளியானது.படத்தில் மொத்தம் 11 பாடல்கள்,அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலியே எழுதினார்.அந்தக் காலத்து ஆல் இந்தியா ரேடியோ வானொலிப் பிரியர்கள் இந்த காதல் ஒரு கவிதை படப் பாடல்களில் குளிர் காய்ந்திருப்பார்கள். அந்த நேரம் இளையராஜா அலையிலும் ஓரமாக வந்த மென் புயல் இந்தப் பாடல்கள்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் ஹிந்தியில் ஏற்கனவே ஏக் துஜே கேலியேவில் பாடியதை எல்லாம் பாலசந்தர், கமலஹாசன் பந்தமாக வைத்துக் கொள்ளலாம் ஆனால் ஒரே படத்திலேயே மொத்தம் 9 பாடல்களை சுளையாக வாங்குவதெல்லாம் பெரிய சாதனை தான். இரண்டு பாடல்கள் ஒரே மெட்டில் இருந்தாலும் (சோகம், ஜோடிப் பாட்டு. என் சிற்றறிவுக்கு எட்டிய விதத்தில் சங்கராபரணத்தில் அதிக பட்சம் 9 பாடல்களைப் பாடிய எஸ்.பி.பிக்கு அடுத்த பாய்ச்சல் இது. ஹிந்தியில் பிலிம்பேர் விருதையும் இந்தப் பாடல்களுக்காகச் சுவீகரித்துக் கொண்டார். Maine Pyar Kiya படத்தின் ஓட்டத்தோடு போட்டி போட்டது அந்தப் படத்தின் பாடல்கள் விற்பனை வருவாய். இன்றும் மூக்கில் கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சும்மாவாமுதல் ஐந்து இடங்களில் பல்லாண்டுகளாக இருந்தது இந்தப் படப் பாடல்களின் சாதனை.
இந்த மாதிரி அரிய பாடல்களைச் சேகரிக்கும் எனக்கு 13 வருடங்களுக்கு முன் ஃபைனாஸ் Music Corner இல் காதல் ஒரு கவிதை படத்தின் இசைத் தட்டில் இருந்து குறு வட்டுக்குப் பதிய வைத்து வாங்கி வந்தேன். ரெக்கார்டிங் பார் காரர் கூட விநோதமாகப் பார்த்திருப்பார்.அந்தப் பாடல்களைச் சேதாரம் இல்லாமல் இங்கே தருகிறேன் அனுபவியுங்கள்.
காதல் பித்து பிடித்தது இன்று (தமிழில் சித்ரா பாடும் இந்தப் பாட்டு ஹிந்தியில் லதா மங்கேஷ்கர் பாடியது)
https://soundcloud.com/kanapra…/kaathal-pithu-female-version
காதல் பித்து பிடித்தது இன்று - எஸ்.பி.பி தனிக்குரலில்
காதல் பித்து பிடித்தது இன்று - எஸ்.பி.பி & சித்ரா ஜோடிப் பாட்டு
கானா பிரபா