Pages

Friday, June 18, 2010

கீதாஞ்சலி => இதயத்தை திருடாதே இசைத்தொகுப்பு

எல்லோரும் ராவணன் படம் பார்த்துக் களித்துக்/களைத்துக் கொண்டிருக்கும் சமயம் கீதாஞ்சலி (தெலுங்கு) இதயத்தைத் திருடாதே (தமிழ்) இரண்டையும் இணைத்த டிவிடி ஒன்றை ஓடவிட்டு வழக்கம் போலப் பின்னணி இசைப்பிரிப்பு வேலைகளை ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக மெல்ல மெல்ல இசைஞானியின் இதயத்தைத் திருடிய இசை மீண்டும் திருட வைத்துக் கொண்டே பூவினை அதன் காம்பிலிருந்து காயம்படாது எடுப்பது போலப் பிரித்தெடுத்தேன். மொத்தமாக 19 இசைக்குளிகைகள் வந்தன. கூடவே கண்ணில் ஒற்றிக் கொள்ளும் பி.சி.ஶ்ரீராமின் காமிராக் கண் வழியே திருடிய காட்சிகளையும் டிவிடியில் இருந்து பாகம் பிரித்தேன். இப்போது உங்களுக்கும் இந்த இன்ப அனுபவம் கிட்டவேண்டும் எனப் பகிர்கின்றேன் இங்கே.





கீதாஞ்சலி, இயக்குனர் மணிரத்னம், இசைஞானி இளையராஜா, நாகார்ஜீனா என இந்தப் படத்தில் பணியாற்றிய முக்கிய கலைஞர்களுக்குப் பெரும் பேர் வாங்கிக் கொடுத்த படம் மட்டுமல்ல 21 வருஷங்களுக்குப் பின்னர் இன்றும் அதே புத்துணர்வைப் படம் பார்க்கும் இரண்டு மணி நேரம் கொடுக்கும் வல்லமை நிறைந்த காதல் காவியம். ஆரம்பத்தில் சற்றுத் தட்டு தடுமாறிப் பின்னர் மெளனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம் என்று தமிழில் தொடர்ச்சியான வெற்றிகளைக் குவித்த மணிரத்னம், மெல்ல ஆந்திராவை முற்றுகையிட்டு அப்போது வளர்ந்து வந்த வாரிசு நடிகர் நாகர்ஜீனாவை வளைத்துப் போட்டு கீதாஞ்சலி என்ற காவியத்தைக் கொடுத்தார். தந்தை நாகேஸ்வரராவ் தேவதாஸ் படத்தில் பின்னி எடுத்தவராயிற்றே, மகன் நாகார்ஜீனா விடுவாரா என்ன.



கூடவே ஜோடி கட்டிய கிரிஜா அப்போது புதுமுகம், அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார். கீதாஞ்சலி படத்தைத் தொடந்து மலையாளத்தில் பிரிதர்ஷன் இயக்கி மோகன்லால் நடித்த வந்தனம் படத்திலும் தலைகாட்டினார். அன்றைய காலகட்டத்தில் நடிகை அமலா மோகம் எங்கும் வியாபித்திருந்ததால் சற்றேறக்குறைய அதே முகவெட்டுடன் கிரிஜாவை மணி கட்டியிருக்கலாம். கீதாஞ்சலி படத்தின் வெற்றியில் கிரிஜாவின் அடக்கமான அதே சமயம் நாசூக்காகப் பண்ணும் குறும்பு நடிப்பும் பங்கு போட்டிருக்கும். நுறு நாட்களுக்கு மேல் ஓடிய கீதாஞ்சலி வெற்றிச் சித்திரம் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கதை, கலை இயக்கம் உட்பட ஆந்திர அரசின் ஏழு நந்தி விருதுகளையும், தேசிய அளவில் சிறந்த பொழுதுபோக்குச் சித்திரமாகவும் விருதுகளை அள்ளியது. பாரதிராஜாக்கள் காலத்துக்குப் பின் தமிழ் சினிமாவில் இன்னொரு பரிமாணத்தை ஆரம்பித்த மணிரத்னத்தின் ஓவ்வொரு வெற்றிப்படமும் வித்தியாசமான களங்களை அன்று கொண்டிருந்தது. அந்த வகையில் முழுமையாக காதலை மையப்படுத்தியிருந்தது இப்படம். மணிரத்னம் என்ற கலைஞனின் உயிர் நாடியாக ஒளிப்பதிவாளர் பி.சி.சிறீராமும் , இசைஞானி இளையராஜாவும் படமுழுதும் செயற்பட்டிருப்பது தெரிகின்றது.


எண்பதுகளில் தனிக்காட்டு ராஜாவாக இருந்த இசைஞானிக்கு கீதம், காதல், கிராமம் என்றிருந்தால் மனுஷர் அடிபின்னி விடுவார். அதைத் தான் இங்கேய்யும் காட்டியிருக்கின்றார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் முன்னர் பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் முரளியை வைத்து ஒரு படம் தயாரித்த போது அந்தப் படத்துக்கு கீதாஞ்சலி என்று பெயர் சூட்டியவர் இளையராஜா. சில வருஷங்களுக்குப் பின் அதே தலைப்பு தெலுங்குக்குப் போய் இன்னொரு கதையோடு வரும் போது அங்கேயும் தான் இசையமைப்பேன்னு எண்ணியிருப்பாரா என்ன? இன்னொரு விஷயம் இளையராஜாவின் பக்தி இசைத் தொகுப்பு ஒன்றுக்கும் பெயர் "கீதாஞ்சலி".

இந்தப் படத்தில் வரும் ஆத்தாடி அம்மாடி பாட்டின் இடையில் வரும் ஆர்மோனிய இசையைத் தன் இசைக் குழுவில் இருந்தவர் சரிவர உள்வாங்காமல் இசையமைக்க, சலித்துப் போய் அந்த ஆர்மோனிய இசையைத் தானே இசையமைத்துப் பாட்டை உருவாக்கினார் இளையராஜா என்று முன்னர் பாடகி சித்ரா சிட்னி வந்த போது சொன்னதை இங்கே சொல்லியிருக்கிறேன்.

பாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்டு

தெலுங்கில் "ஜல்லண்ட" என்றும் தமிழில் "ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டு தான்" என்றும் சித்ரா பாடும் அந்தப் பாட்டில் இசைஞானி இளையராஜாவே ஆர்மோனியம் வாசித்த பகுதி இதுதான்.



இதயத்தைத் திருடாதே பற்றிப் பேசிக்கொண்டே இருக்கலாம், எனவே இத்தோடு முற்று புள்ளி வைத்து ராஜாவை அழைக்கிறேன் இசை ராஜாங்கம் படைக்க



படத்தின் முகப்பு இசை ஒன்று



படத்தின் முகப்பு இசை இரண்டு



டாக்டரை கல்யாணம் பண்ணக் கேட்கும் பிரகாஷ் - பின்னணியில் விடிய விடிய நடனம் பாடலின் இசை வடிவம்



டாக்டரிடம் தனது வியாதி பற்றி அறியும் பிரகாஷின் அப்போதைய மனநிலையைக் காட்டும் இசை



பிரகாஷ் தன் பெற்றோரிடமிருந்து விலகித் தனியாகப் போகும் நேரம் துணையாக வரும் இசை



குறும்புக்கார கீதாஞ்சலியின் அறிமுகத்துக்குத் துணையாக வரும் இசை



"காவியம் பாடவா தென்றலே" பாடகி சித்ரா குரலில் ஒரு சில அடிகள், கீதாஞ்சலி பிரகாஷை கலாய்க்கும் தொனியில்



கீதா ஞ்சலியின் குறும்புத்தனக்காட்சி ஒன்றில் வளையவரும் இசைவடிவம்



விளையாட்டாக கீதாஞ்சலி சொல்லும் "ஐ லவ் யூ" பிரகாஷ் மனதில் விதையாக, பின்னணியில் எல்லாம் கலந்த இசைக்கலவை



பிரகாஷ் தன் மனம் இளைப்பாற பியானோ வாசிக்கும் காட்சி



கீதாஞ்சலியை தனியே விட்டு விட்டு வந்த விபரீதம் உணர்ந்து பிரகாஷ் அவளைத் தேடும் காட்சியில் பயம், ஏக்கம் எல்லாம் கலந்த இசையில் மேற்கத்தேய இசையோடு ஈடுகொடுக்கும் மிருதங்கத்தின் உணர்வும்




இந்தப் படத்தின் அடி நாதமாக விளங்கும் கதைக்கருவை கீதாஞ்சலி தன் உணர்வாக வெளிப்படுத்தும் நேரம் பரவசமாகப் பாயும் இசை பிரகாஷின் உள்ளத்துடிப்பாய் , இப்படத்தின் உச்சபட்ச இசை ஆலாபனை இதுதான். இதில் வரும் வயலின்களின் ஆர்ப்பரிப்பு ஏற்கனவே ராஜாவின் தனி ஆல்பமான nothing but wind இல் வரும் Mozart I Love You என்ற பாகம் தான்.



கீதாஞ்சலியை கல்யாணம் பண்ணச் சீண்டும் பிரகாஷ், குறும்புக்கார இசையோடு



பிரகாஷ் கீதாஞ்சலியின் இதயத்தைத் திருடிய போது வரும் காதல் ரீங்காராம்



கீதாஞ்சலி தன் காதலை வெளிப்படுத்தும் நேரம் புல்லாங்குழலில் "ஓ ப்ரியா ப்ரியா" மெட்டிசைக்க



பிரகாஷிற்கு நோய் இருப்பதை அறிந்து கீதாஞ்சலி அவனை விட்டு விலகும் நேரம்



நோய் முற்றிய நிலையில் கீதாஞ்சலி, எல்லாம் தொலைத்த நிலையில் பிரகாஷ் வயலின் மட்டும் அவனுக்குத் துணையாக சோகராகம் இசைக்கிறது ஓ ப்ரியா ப்ரியா என்று ஒலிக்கும் வயலின் அந்த இசையை மெல்லப் புல்லாங்குழலுக்குக் கையளிக்கின்றது.



கீதாஞ்சலி பிழைப்பாளா என ஏங்கும் உணர்வாய் எழுப்பும் இசையலைகள் அவள் எழும்பியதைக் கண்டு ஆரவாரிக்கின்றன



படத்தின் இறுதிக்கட்டம் கீதாஞ்சலியோடு பிரகாஷ் இணைவானா என்ற ஆர்ப்பரிப்பில் இசை மட்டும் பரவி நிற்க 4.17 நிமிடக்காட்சியில் "ஓடிப்போயிடலாமா" எனக் கீதாஞ்சலி அவன் காதில் கிசுகிசுக்கும் ஒற்றை சொல் மட்டுமே வசனமாக இருக்கிறது.
ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி
நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்கலம்
ப்ரேமை நாடகம் பெண்மை ஆடிடும்



"கீதாஞ்சலி தெலுங்குப் படத்தில் வந்த பாடல்களின் தொகுப்பு

1. ஓ ப்ரியா ப்ரியா - எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா



2. நந்தி கொண்ட - எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா



3. ஓம் நமஹ -எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி



4. ஆமனி பாடவா - எஸ்.பி.பாலசுப்ரமணியம்



5. ஜல்லன்ர - சித்ரா



6. ஜகட ஜகட ஜகடம் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்



Friday, June 11, 2010

றேடியோஸ்புதிர் 56: தமிழில் வந்த அதே தலைப்பு தெலுங்கில்; ஆனால் வேறு வேறு

பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைத்து தமிழில் வந்த ஒரு படத்தின் அதே படத்தலைப்புடன் சில வருஷங்களுக்குப் தெலுங்கில் வந்த இந்தப் படம் இத்தனை புகழை அள்ளிக் குவிக்கும் என்று ராஜாவே அந்த நேரம் எண்ணியிருப்பாரோ தெரியவில்லை. ஆந்திர அரசின் ஏழு நந்தி விருதுகளோடு தேசிய அளவில் சிறந்த பொழுதுபோக்குச் சித்திரமாகவும் புகழப்பட்ட இந்தப் படத்தை வாரியணைத்துப் போற்றிப் புகழத் தமிழ் ரசிகர்களும் தவறவில்லை. இன்று எத்தனை பேருக்கு இந்தப் படம் ஒரு மொழி மாற்றுப் படம் என்று தெரியுமே என்னமோ அவ்வளவுக்கு திகட்டாத அவலாக இருக்கும் பாடல்கள் எல்லோருக்குமே ப்ரியமானவை.

இந்தப் படத்தின் இயக்குனருக்கும் சரி , இசைஞானி இளையராஜாவுக்கும் சரி குறித்த இந்தப் படம் இவர்கள் வாழ்வில் ஒரு மைல்கல். திருட்டில் அப்படி என்ன ஆசையோ தெரியவில்லை இயக்குனருக்கு இன்னொரு படத்துக்கும் திருட்டைத் தலைப்பாக்கினார். ஆனால் உழைப்போ நேர்மையாக இருந்தது இந்தப் படத்தில். பின்னணி இசையைக் கேட்டால் இதயத்தை உருக்கும்.

ராஜாவைச் சந்தித்தால் கேட்கவேண்டும் என்று ஒரு கேள்வி, தெலுங்கில் அவ்வளவு அழகாகப் பாடிய எஸ்.பி.பி ஐ ஒதுக்கி தமிழில் மனோவை ஒத்தியதன் காரணம் என்னவோ?

சரி சரி இதுக்கு மேலே சொன்னால் விடையை என்னிடமே கேட்பீர்கள் பின்னணி இசையைக் கேட்டவாறே படம் என்ன என்ற பதிலோடு பட்டையைக் கிளப்புங்கள், ராவணாவுக்கு முதல் பின்னணி இசை தருவேன் பாடல்களோடு கலந்துமக்கு ;)

சரியான பதில்

தெலுங்கில்: கீதாஞ்சலி

தமிழில்: இதயத்தைத் திருடாதே

இயக்கம்: மணிரத்னம்

போட்டியில் பங்குபற்றிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி

Tuesday, June 1, 2010

பின்னணிஇசை கலக்க ராகதேவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து


ஜீன் 2 ஆம் திகதி, இசைக்கு இலக்கணம் வகுத்த பண்ணைப்புரத்தில் பிறந்து உலகை ஆளும் எங்கள் இசைஞானி இளையராஜாவுக்குப் பிறந்த நாள். இன்பம், துன்பம், காதல் , பிரிவு, கல்யாணம், துறவு எல்லாவற்றுக்குமே தன் இசை நாதத்தால் இலக்கணம் வகுத்து இன்னும் எம்மை ஆள்பவர். பட பூஜைகளில் பிரமாண்டமான நோட்டீஸ், பதாதைகள் பட வெளியீடுகளில் நாயகனை மிஞ்சும் கட்அவுட் விளம்பரங்கள், இளையராஜா பேரைச் சொன்னாலே முழுதும் விற்றுப்போகும் படப்பெட்டிகள், இவையெல்லாம் இதுவரையும் இனிமேலும் யாருக்கும் கிட்டாத சிம்மாசனம், அதையெல்லாம் கடந்து பலகோடி ரசிகப்பெருமக்களின் நெஞ்சமெனும் சிம்மாசனத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் இளையராஜா என்னும் ராகதேவனைப் போற்றிப் புகழக் கூட அவர் பாடிய பாடலைத் தவிர வேறு தெரிவுகள் உண்டா என்ன?



அறுபத்தேழு அகவை தொடும் ராகதேவனே வாழிய நூறாண்டு, உன் கடைசித்துளி வியர்வையும் ஒரு மெட்டாக உதிரட்டும்.



பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுபட்டேன் - அந்தப்
பாட்டுக்கள் பலவிதம் தான்

காளையர்கள் காதல் கன்னியரை
கவர்ந்திடப் பாடல் கேட்டார்கள்
ஏழைகளும் ஏவல் அடிமைகளாய்
இருப்பதைப் பாடச் சொன்னார்கள்
கதவோரம் கேட்டிடும் கட்டில் பாடலை
மெட்டுப் போடச் சொன்னார்கள்
தெருவோரம் சேர்ந்திட திருவாசகம்
தேவாரம் கேட்டார்கள்
நான்படும் பாடுகள் அந்த ஏடுகள்
அதில் எழுதினாலும் முடிந்திடாது

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுபட்டேன் - அந்தப்
பாட்டுக்கள் பலவிதம் தான்

பூஜையில் குத்துவிளக்கை ஏற்றவைத்து
அதுதான் நல்லதென்றார்கள்
படத்தில் முதல் பாடலைப் பாடவைத்து
அதுநல்ல ராசியென்றார்கள்
எத்தனையோ பாடுகளை அதைப்பாடல்களாய்
நான் விற்றேன் இதுவரையில்
அத்தனையும் நல்லவையா அவௌ கெட்டவையா
நான் அறியேன் உண்மையிலே
எனக்குத்தான் தலைவர்கள் என் ரசிகர்கள்
அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுபட்டேன் - அந்தப்
பாட்டுக்கள் பலவிதம் தான்



இதுவரை றேடியோஸ்பதி மூலமாக இசைஞானி இளையராஜாவின் 22 படங்கள் வரை பின்னணி இசைத்தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கின்றேன். என் ஆயுள் முடிவதற்குள் இன்னும் என்னால் முடிந்த அளவுக்கு இந்த இசைப்பிரிப்பை, பல மணி நேரம் பிடிக்கும் வேலை என்றாலும் கொண்டு வர ஆசை. அதை விடப் பேராசை என்னவென்றால் ராஜாவால் உருவாக்கப்பட்ட எத்தனையோ ஆயிரம் பின்னணி இசைத்துண்டங்களை நவீன தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்தி அவை இசைவட்டுக்களாக வெளிவந்து சந்தையை நிரப்பி உலகெலாம் பரவ வேண்டும் என்பதே.

இதுவரை தொகுத்த பின்னணி இசைத் தொகுப்புக்களில் என்னைக் கவர்ந்த சில முத்துக்கள்

என்னுயிர்த் தோழன் - பின்னணி இசைத்தொகுப்பு

கள்ளமாக மறைந்திருக்கும் பார்க்கும் காதலியை அடியொற்றிய இசை (அட்டகாசமான இசைக்கலவை)



அபூர்வ சகோதரர்கள் பின்னணி இசைத் தொகுப்பு


எழுத்தோட்டத்தின் பின்னணியில் கமல், ஸ்ரீவித்யா வில்லன்களிடமிருந்து தப்பிக்கும் காட்சிக்கு வரும் வேக இசை (ட்ரம்ஸ் மற்றும் பல வாத்தியக் கலவை)



"கடலோரக் கவிதைகள்" - பின்னணி இசைத்தொகுப்பு

இந்தப் படத்தின் இறுதிக் காட்சி இசை என்னை வியக்க வைக்கின்றது. கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு மேலாக எந்தவிதமான வசனங்களும் இல்லாமல் வெறும் இசைக்கலவையோடு மட்டுமே பின்னப்பட்டு, வாத்தியக் கலவைகளின் நர்த்தனம் அழகிய பிரவாகமாகப் பெருக்கெடுக்கின்றது. அடி ஆத்தாடி பாடலின் இன்னொரு வாத்தியக் கோர்வையும் கலந்து இங்கே வயலின் உட்பட பல வாத்தியங்களில் அந்த மெட்டு இசைக்கப்படுகின்றது.




"ஆண்பாவம்" பின்னணி இசைத்தொகுப்பு

பாண்டியன் கொடுத்த கைக்கடிகாரத்தை சீதா தண்ணீர் குடத்தில் மறைத்து அவஸ்தை


"முதல் மரியாதை" பின்னணி இசைத் தொகுப்பு

பெரியமாப்பிளையும் (சிவாஜி), பரிசல்காரியும் (ராதா) போட்டிக்கு மீன்பிடித்தல், இருவரும் சேர்ந்து முயற்சி செய்யும் போது வரும் மீன் குவியலோடு பின்னணி இசை, கூடவே"என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல"



"நெற்றிக்கண்" பின்னணிஇசைத்தொகுப்பு

தந்தை ரஜினி சில்மிஷ மன்னர் என்பதைக் காட்ட குறும்போடு வரும் இசை முன்னதில் இருந்து வேறுபட்டது. 2.30 நிமிடங்களுக்கு வசனமே இல்லாமல் இவரின் அறிமுகக் காட்சி இசையாலேயே நிரப்பப்பட்டிருக்கின்றது.



"நிறம் மாறாத பூக்கள்" பின்னணிஇசைத்தொகுப்பு

படத்தின் முகப்பு இசை, ஆயிரம் மலர்களே சங்கதியோடு கலக்கும் சிறப்புப் படையல்



"குணா" பின்னணிஇசைத்தொகுப்பு

முதன் முதலில் ஆலயத்தில் அபிராமியைக் காணல்