Pages

Showing posts with label பரிசுப்போட்டி. Show all posts
Showing posts with label பரிசுப்போட்டி. Show all posts

Sunday, January 31, 2010

2009 றேடியோஸ்பதி பரிசுக் கட்டுரை - ரவிஷங்கர்ஆனந்த்

கடந்த டிசம்பர் , 2009 ஆம் ஆண்டு றேடியோஸ்பதி வாயிலாக ஒரு போட்டியை வழங்கியிருந்தேன். அந்தப் போட்டியில்
1. 2009 ஆம் ஆண்டில் அதிகம் கவனிக்கப்பட்ட/கவனத்தை ஈர்த்த தமிழ்த்திரையிசைமைப்பாளர்
2. 2009 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் பாடல்களைச் சிறப்பாகவும், பொருத்தமாகவும் பயன்படுத்திய படங்கள் குறித்த அலசல்
3. கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும் போது 2009 ஆண்டின் தமிழ்த் திரையிசை எப்படி இருந்தது?








ஆகிய மூன்று தெரிவுகள் வழங்கப்பட்டிருந்தன. இவற்றில் ஏதாவது ஒரு தலைப்பில் ஆக்கம் எழுதி அனுப்பக் கோரப்பட்டிருந்தது. அதன்பிரகாரம் ரவிஷங்கர்ஆனந்த் போட்டியின் முதற் தலைப்பான "2009 ஆம் ஆண்டில் அதிகம் கவனிக்கப்பட்ட/கவனத்தை ஈர்த்த தமிழ்த்திரையிசைமைப்பாளர்" இனைத் தேர்ந்தெடுத்துக் கட்டுரை எழுதியிருந்தார்.
அவருக்கு றேடியோஸ்பதியின் வாழ்த்துக்களோடு பரிசாக என்.சொக்கன் எழுதிய "ஏ.ஆர்.ரஹ்மான்' என்ற நூல் வழங்கிக் கெளரவிக்கப்படுகின்றது. தொடர்ந்து ரவிஷங்கர் ஆனந்த் எழுதிய பரிசுக் கட்டுரை இதோ.

உலகில் அனைத்தும் இசைக்கடிமை, அந்த இசையே உனக்கடிமை
















தலைப்பை பார்த்த உடன் உங்களுக்கு புரிந்து இருக்குமே, யாரை பற்றிய பதிவென்று!

” எனக்கு தான் தலைவர்கள் என் ரசிகர்கள்,அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்” என்று இன்று வரை விருந்தென்ன, அதற்கும் மேல் படைத்து கொண்டு இருக்கும் என் தலைவர் இசைஞானிய பத்திதானுங்க… குள்ளமான அவர் இசை களத்தில், தொட்ட உயரங்கள் தான் எத்தனை!

அவருடைய ஆரம்ப நாட்கள், அவர் பாடுபட்டு திரை உலகில் கால்பதித்தமை, இவை எல்லாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதை பற்றியே கூறி மீண்டும் உங்களை வெறுபேற்ற விரும்பவில்லை.

இத்தனை ஆண்டுகள், பிறகும் இன்றைக்கும் அந்த ராசாவுக்கு மட்டும் ஏன் இன்னும் இத்தனை மரியாதை? அவரை நம்பியே, இன்னும் எத்தனை படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எத்தனை எத்தனை!! அவர் கையில் இன்றய தேதியில் மட்டும் 35 படங்கள் உள்ளதாம்.!! யுவன்சங்கரை விட அதிக படங்கள் ராசாவின் கையில் உள்ளதாக ஒரு தகவல்!!!
65 வயது தாத்தாவுக்கு எப்படி இது சாத்தியமாகிறது??

இவர் இப்படி தமிழகத்திலேயே இருந்து விடுகிறாரே, அவர் 80-ல் போட்ட பாடலை இந்திக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஒருவர் ஏங்குகிறார்!! ஒரு புறமிருக்க, அட நாமளும் புகழ் அடையணுமே, என்ன பண்ணலாம், அட்லீஸ்ட் அவரை திட்டியாவது புகழ் அடைய மாட்டோமா என்று ஏங்கும் தமிழ் நாடே அறியாத தமிழ் எழுத்தாளர் ஒருவர்!!! கேட்டால், கேரளாவில் என்னை பற்றி கேள் என்று எஸ்கேப் ஆகிரார்.!
இதுல என்ன ஒரு தமாஷ் என்றால், பல மலையாளிகள், ராஜாவை, மலையாளி என்றல்லவோ நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.

சரி சொல்ல வந்த விஷயத்தை, சொல்கிறேன், ராஜா அடைந்த உச்சங்கள் என்ன, அதற்கு அவர் மெற்கொண்டுள்ள தவங்கள் என்ன? ஒரு அலசல். What makes Raaja different from others?

வயதாகிவிட்டதே என்று கவலை கொள்ளாமை
நம்ம ராஜா, தனராஜ் மாஸ்டர் கிட்ட மேற்கத்திய இசை கத்துக்கும் போது அவர் வயது 26. அவருக்கு அன்னக்கிளி படம் வாய்ப்பு வந்தபோது அவர் வயது 34!!. 34 வயதில் தான் அவர் தன் திரைப்பட இசையமைப்பாளராகத் துவங்குகிறார்.
அவருடைய நாற்பதுகளிலும், ஐம்பதுகளிலும் (80, 90-களில்), அவர் தான் பிசியான இசைஅமைப்பாளர்!! காலை 5 மணிக்கு எழுந்தால், இரவு 1-2 வரை இசைப்பணி முடித்து தான் வீடு திரும்புவார்! இன்றும் அப்படியே!!
சிம்பனி இசை அமைக்கும் போது அவருக்கு வயது 50. இன்றும் வயது ஆக ஆக, இசை இன்னும் பொலிவு பெற்றெ காணப்படுகிறது.. குறையக்காணோமே!!

உடல் நிலைகளை காரணம் காட்டாமை
ஒரு சின்ன தலைவலி, காய்சல் என்று கூட வேலைக்கி டிமிக்கி கொடுக்காதவர், அவர் நினைத்தால் நாளைக்குப் பாத்துக்கலாம் என்று தள்ளி போடலாம், ஆயினும் அவ்வாறு செய்யாதவர். நான் அறிந்த இரண்டு உதாரனங்கள் கூறலாம்:
1. றேடியோஸ்பதியில் வந்துள்ளது, காய்ச்சளை பொருட்படுத்தாது, ஈரத்துணியை தலையில் போட்டு கம்போஸ் செய்யும் புகைப்பட புதிர்
2. ”காதலின் தீபம் ஒன்று” பாடலை அவர் எப்படி கம்போஸ் செய்தார் தெரியுமா? பேசவே இயலாத நிலையில், விஸில் அடித்து!
3. "கத கேளு கத கேளு கருவாயன் கத கேளு" என்ற பாடலை நன்றாகக் கவனித்துக் கேட்டீர்கள் என்றால், ஆப்பரேஷன் முடித்து அவர் அன்று அனுபவித்த வயிற்று வலியும் இன்னைக்கும் புரியும்.
இதற்கெல்லாம் ஒரே காரணம், தன்னை நம்பி வந்துவிட்டர்கள், அவர்கள் வருந்தக்கூடாதென, தன்னை வருத்திக்கொள்ளும் attitude!!
80/90-ளில் வந்த முக்கால்வாசி படங்களை இன்றைக்கு உக்கார்ந்து பார்க்க முடியாது! ஆனால், அதை இன்றைக்கும் பார்க்கவைப்பது, அருடைய பாடல்களுக்காகவும், பின்னணி இசைக்காகவும் மட்டுமே என்பதை உறுதியாகவும், ஆதாரப்பூர்வமாகவும் சொல்ல முடியும்.

அதிகம் பேசாது செயலில் காட்டும் தன்மை
தலைவர் அதிகம் பேச மாட்டார், ஆனால் செயலில் வீரர். அன்றும் சரி இன்றும் சரி, தேவை இல்லா பேச்சு அவரிடம் கிடயாது. சில சமயங்களிள், வாரக்கணக்காக யாரிடமும் பேசாது, ராகங்களுடன் வாழ்கிறார்!
ஆடம்பரமின்மை அவர் கொண்ட கொள்கை, தங்க நகை அனிய மாட்டார்.. கதர் வேட்டி தான், கதர் ஜிப்பாதான். எப்போதாவது வெளி நாடுகள் சென்றால், குளிருக்காக கோட் அணிவார்!

புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆற்றல்
சொன்னா நம்புவீங்களா? நம்ம ராஜாவுக்கு ஆர்குட் என்றால் என்ன? யாஹூ க்ரூப்ஸ் என்றால் என்ன? எந்த எந்த இணையத் தளங்கள் மூலம் பாடல்களை மக்கள் ட்வுன்லோடு செய்கிறார்கள் என்றெல்லாம் கூட தெரியுமாம்.
யுவன் காலத்திலும் தல களத்தில் கலக்குகிறார் என்றால், சும்மாவா! கூம்பு ஒலிபெருக்கி காலம் தொட்டு, ஸ்டீரியோ காலம் கலக்கி, டிஜிட்டல் இசையிலும் பின்னுகிறார்!!

பன்முகத்தன்மை
” மேகத்தில் ஈரம் போல், கண்ணுக்குள் நீரேனம்மா?
பூமிக்குள் வைரம் போல், நெஞ்சத்தில் நீ தானம்மா!”
என்று ஒரு தேர்ந்த திரைபட கவிஞர் போல எழுதும் அவரே,
” ஒரு முறையா? இரு முறையா? பல முறை
பலப்பிறப்பெடுக்க வைத்தாய்” என்று ஒரு பட்டினத்தார் ரேஞ்சுக்கும் எழுதுவார்!

” பூஜையில் குத்து விளக்கை ஏற்றவைத்து அது தான் நல்லதென்பார்கள்,
படத்தில் முதல் பாடலை பாட வைத்து, அது நல்ல ராசி என்பார்கள்” என ஒரு யதார்த்த கவிஞனாவார்!
பல படங்கள் எடுத்து தயாரிப்பாளறாக கலக்குவார்!
போட்டோகிராபி அவருடைய பொழுதுபோக்கு

இசைஞானம்:
முக்கியமான ஒரு விஷயம், அவருடைய, இசை ஞானத்தை பத்தி நான் சொல்லி நீங்க தெரிஞ்சுக்கணுமா?? ஜாங்கரி இனிக்கும் என்று தான் சொல்ல முடியும், அது எப்படி இனிக்கும், எவ்வளவு இனிக்கும் என்று சொல்லவா முடியும்? தின்று பார்த்தால் தானே, உணர முடியும்? அவர் இசை உங்களை அமைதிப்படுத்தவில்லையா? அழ வைக்கவில்லையா? காமத்தை தூண்டவில்லையா? சிரிக்கவைக்கவில்லையா?, தாய் பாசத்தை உணர்த்தவில்லையா? தேச பக்தி கொள்ள வைக்கவில்லையா?
காதலிக்க தூண்டவில்லையா? இறைவனை அடைய உதவவில்லையா? தாலாட்டுபாடி தூங்க வைக்கவில்லையா?
ஆனந்தமாக ஆட வைக்கவில்லையா? உங்கள் மனசோர்வுகளை நீக்கவில்லையா?

ஒன்று மட்டும் சர்வ நிச்சயம், யாரிடமும் இருந்து காப்பி அடிக்காமல், மற்றவர்கள் தன்னிடமிருந்து காப்பி அடித்துவிட்டு போகட்டும் என்ற பெருந்தன்மை, அவரை இன்னமும் வியப்புற என்னை பார்க்க வைக்கிறது! அவரை அண்ணாந்துதான் பார்க்கவைக்கிறது!!

எத்தனையோ பாடுகளை, அதை பாடல்களாய்- நான்
விற்றேன் இது வரையில்!
அத்தனையும் நல்லவையா,? இல்லை கெட்டவையா? – நான்
அறியேன் உண்மையிலே?

ஐயா, நீங்கள் விற்றவை யாவும், நல்லவையே!! நல்லவையே!! நல்லவையே!!

Wednesday, December 2, 2009

2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான பரிசுகளுடன்

வணக்கம், வந்தனம், சுஸ்வாகதம், welcome to றேடியோஸ்பதி.
2009 ஆம் ஆண்டு றேடியோஸ்பதி போட்டியில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக றேடியோஸ்பதி ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் அந்தந்த ஆண்டுகளில் வெளிவந்த தமிழ்த் திரையிசைப் பாடல்களை மையமாக வைத்துப் போட்டிகளை நடாத்தியதை நீங்கள் அறிவீர்கள். தெரியாதவர்களுக்காக

2007 இல்
உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்?

2008 இல்
2008 இன் சிறந்த இசைக்கூட்டணி?

ஆகிய போட்டிகளை உங்கள் ஆதரவோடு வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். அந்த வகையில்
இந்த 2009 ஆம் ஆண்டு மூன்றாவது ஆண்டாக வரும் றேடியோஸ்பதி போட்டியை சற்று வித்தியாசமாகத் தரலாம் என்று வந்திருக்கின்றேன்.

2009 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த்திரைசைப்பாடல்கள், மற்றும் 2008 இல் பாடல்கள் வெளியாக 2009 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த்திரைப்படங்கள், மற்றும் தமிழ்த் திரையிசைமைப்பாளர்களை மையப்படுத்தி இந்தப் போட்டி அமைகின்றது.

போட்டி இதுதான், இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று தலைப்புக்களில் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து நீங்கள் கட்டுரை அல்லது பதிவு எழுத வேண்டும். பதிவர்கள் தமது சொந்த வலைப்பதிவில் எழுதிய பின்னர் கட்டுரைக்கான தொடுப்பை இங்கே பின்னூட்டமாகத் தர வேண்டும்.

பதிவர்களாக இல்லாதவர்கள் தமது கட்டுரைகளை kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தால் தற்காலிகமாக ஒரு இடத்தில் அது வலைப்பதிவாகத்
தரப்படும்.

போட்டிக்கான ஆக்கங்கள்

1. 2009 ஆம் ஆண்டில் அதிகம் கவனிக்கப்பட்ட/கவனத்தை ஈர்த்த தமிழ்த்திரையிசைமைப்பாளர்

ஏன் கவனிக்கப்பட்டிருந்தார், அந்தத் தகுதியை எட்ட அவர் உழைத்த உழைப்பு என்ற விரிவான அலசல் எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கே ஒரு விஷயம் குறித்த இசையமைப்பாளர் தமிழ்த் திரையில் தான் 2009 இல் பங்களித்திருக்க வேண்டியதில்லை. தமிழ் இசையமைப்பாளரின் பொதுவான இசைச் சாதனை. அங்கீகாரம் குறித்த கோணத்தில் எழுதலாம்

2. 2009 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் பாடல்களைச் சிறப்பாகவும், பொருத்தமாகவும் பயன்படுத்திய படங்கள் குறித்த அலசல்
பாடல்கள் திரைப்படங்களுக்குத் தேவை இல்லை என்ற சூழலில் 2009 இல் வெளியான தமிழ்த்திரைப்படங்களில் பொருத்தமாகப் பாடல்களைப் பயன்படுத்திய படங்கள்

3. கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும் போது 2009 ஆண்டின் தமிழ்த் திரையிசை எப்படி இருந்தது?

ஏற்றம் மிகுந்ததாக இருந்தது அல்லது ஒப்பீட்டளவில் 2009 ஆம் ஆண்டு இசைவரவுகள் முன்னைய ஆண்டுகள் மாதிரி இல்லை என்ற கோணத்தில் விளக்கமான ஒப்பீடுகள் வேண்டப்படுகின்றன.


2009 ஆம் ஆண்டில் வெளியான திரையிசைப்பாடல்களின் பட்டியலைக் காண

போட்டி விதிமுறைகள்

1. போட்டிக்கான ஆக்கங்களை ஜனவரி 1, 2010 ஆண்டுக்கு முன்னதாக எழுதிப் பதிவாக்க வேண்டும். பதிவுத்தொடுப்பை அறியத் தரவேண்டியது அவசியம்.

2. ஒருவர் மூன்று தலைப்புக்களிலும் தனித்தனி ஆக்கமாக எழுதலாம்.

3. போட்டியில் பங்கேற்கும் கட்டுரைகளில் இறுதிச் சுற்றுக்குத் தகுதியானவை தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவர்களால் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிச் சுற்றுக்கு விடப்படும். இறுதிச் சுற்றில் உங்களின் தீர்ப்பே முடிவானது. ஆகக்கூடிய வாக்குகள் பெற்ற மூன்று ஆக்கங்கள் தேர்ந்தெடுக்கப்படும். நடுவர்களாகப் பங்கேற்போர் போட்டியில் பங்கு பெறத் தடை உண்டு

4. உங்கள் ஆக்கங்கள் வெறும் படங்களின்/இசையமைப்பாளர்களின் பட்டியலாக இருந்தால் புள்ளிகள் குறைவாக வழங்கப்படும் அதே நேரம் உச்ச பச்ச மேதமையான கர்னாடக இசை ஒப்பீடு, ராக ஒப்பீடு போன்றவையும் எதிர்பார்க்கப்படவில்லை. உங்கள் ஆக்கம் எல்லோரையும் சென்றடையும் விதத்தில் உள்ள இசையாக இருக்கட்டுமே.

முத்தான அந்த மூன்று ஆக்கங்களுக்கும் கிடைக்கும் பரிசு தனித்துவமானது.
தமிழ் சினிமா இசை சம்பந்தப்பட மூன்று நூல்கள் வென்ற ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்கப்பட இருக்கின்றன.