Pages

Sunday, October 19, 2008

"நெற்றிக்கண்" பின்னணிஇசைத்தொகுப்பு


கடந்த றேடியோஸ்புதிரில் "நெற்றிக்கண்" திரைப்படத்தின் பின்னணி இசையைக் கொடுத்து ஒரு புதிரைக் கேட்டிருந்தேன். இயக்குனர் கே.பாலசந்தர் முன்னர் தனது நண்பர்களுடன் இணைந்து "கலாகேந்திரா" என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை ஏற்படுத்தி தனது இயக்கத்திலேயே பல படங்களை இயக்கியிருந்தார். பின்னர் 1981 இல் கவிதாலயம் என்ற பெயரில் (பின்னர் கவிதாலயா ஆயிற்று) தயாரிப்பு நிறுவனம் ஏற்படுத்தி வெளியாட்களையும் தனது தயாரிப்பில் படங்கள் இயக்கச் செய்தார். அந்த வரிசையில் கவிதாலயம் தயாரித்த முதல் படமே "நெற்றிக்கண்" இதன் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.

லீலைகள் செய்யும் கிருஷ்ணன் போல தந்தையும், அடக்கமான ராமன் போல மகனுமாக இரட்டை வேடத்தில் ரஜினிகாந்த் செய்திருப்பார். கூடவே லஷ்மி, சரிதா, மேனகாவுடன் பின்னாளில் அதிரடி நாயகியாக விளங்கிய விஜயசாந்தி இப்படத்தில் ஒரு ரஜினிக்கு மகள், இன்னொரு ரஜினிக்கு தங்கையாக சிறுவேடமொன்றில் நடித்திருப்பார்.

இப்படத்தின் இசை, இசைஞானி இளையராஜா. பாடல்களைப் பொறுத்தவரை, "ராமனின் மோகனம்" (கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி), "தீராத விளையாட்டு பிள்ளை" (ஏஸ்.பி.பாலசுப்ரமணியம்), "மாப்பிளைக்கு மாமன் மனசு" (மலேசியா வாசுதேவன், பி.சுசீலா), "ராஜா ராணி ஜாக்கி" (எஸ்.பி.சைலஜா, மலேசியா வாசுதேவன்)ஆகிய பாடல்கள், எல்லாமே ரசிக்கக் கூடியவை.


இளையராஜாவின் ஆரம்பகாலப் படங்களில் பின்னணி இசையில் பெரிய அளவிற்கு இப்படம் முத்திரை பதித்தது என்று சொல்வதற்கில்லை. காரணம் இந்த முழுநீள மசாலாப்படத்தில் இசையால் தூக்கி நிறுத்தும் காட்சிகளுக்குப் பதில் ரஜினியின் ஸ்டைல் நடிப்பையே நம்பியிருக்கின்றார்கள். ஆனாலும் படத்தின் முகப்பு இசையும், பின்னர் இங்கே நான் கொடுத்திருக்கும் இசைத் தொகுப்புக்களும், இப்படத்திலும் தன்னைக் காட்ட முடியும் என்று ராஜா உணர்த்தியிருக்கின்றார். ஓவ்வொரு படத்திலும் குறித்த ஒரு வாத்தியத்தின் முக்கியத்துவத்தைக் காட்டும் ராஜா இப்படத்தில் வயலினை முக்கியத்துவப்படுத்தியிருக்கின்றார் என்பதை இப்படப் பின்னணி இசைத் தொகுப்பில் இருந்து கண்டு கொள்ளலாம்.

இசை 1
படத்தின் முகப்பு இசை, இதில் கலவையாக மெல்லிசையும், ஆர்ப்பரிக்கும் வாத்திய இசையும், கூடவே ராமனின் மோகனம் பாடலை நினைவுபடுத்தும் அந்த மெட்டிசையும் விரவியிருக்கின்றது.



இசை 2
மகன் ரஜினியை நல்லவர் என்பதைக் காட்டும் காட்சி. இதில் புல்லாங்குழல் ஆரம்பத்துடன், கிட்டார் இசை கலக்கின்றது.



இசை 3
தந்தை ரஜினி சில்மிஷ மன்னர் என்பதைக் காட்ட குறும்போடு வரும் இசை முன்னதில் இருந்து வேறுபட்டது. 2.30 நிமிடங்களுக்கு வசனமே இல்லாமல் இவரின் அறிமுகக் காட்சி இசையாலேயே நிரப்பப்பட்டிருக்கின்றது.



இசை 4
மேலே இசை 3 இல் தந்த தந்தை ரஜனிக் காட்சியின் இசைத்துண்டில் இருந்து வயலின் வாசிப்பை மட்டும் பிரித்தெடுத்துத் தருகின்றேன். இந்த இசை தான் இப்படத்தின் உயிர்நாடி இசை. தந்தை ரஜினி வரும் காட்சிகள் பலவற்றில் இதுதான் பயன்பட்டிருக்கின்றது.



இசை 5
இசை 3 மற்றும் இசை 4 இல் தந்த அந்த வயலின் இசை நோஸ்ட்ஸ் விசில் சத்த வடிவில், அப்பா ரஜினி தன் சில்மிஷத்தை ஆரம்பிக்கத் தயாராக இருக்கிறார் என்பதைக் காட்ட.




இசை 6
இசை 3, இசை 4 மற்றும் இசை 5 இல் வந்த அதே இசை இங்கே வயலினில் சற்று மெதுவாக. அப்பா ரஜினி சரிதாவிடம் அடி வாங்கிய ஏமாற்றத்தில் இருப்பதைக் காட்ட




இசை 7
மேலே இசை 4, 5, 6 இல் வந்த அதே இசை மெதுவாக வயலின் இசைக்கப்படுகின்றது. மனைவியிடம் மாட்டிய ரஜினி




இசை 8
மேனகா, ரஜினி மீது காதல் கொள்ளும் காட்சி, ராமனின் மோகனம் பாட்டின் மெட்டு புல்லாங்குழல் இசையாக.




இசை 9
மேலே இசை 8 இல் தந்த ராமனின் மோகனம் மெட்டு சோக இசை புல்லாங்குழலில், மேனகா காதல் தேல்வி விரக்தியில்




இசை 10
ராமனின் மோகனம் பாடல் சோகப் பாடலாக எஸ்.ஜானகி படத்தில் மட்டும் பாடும் பாடல், இசைத்தட்டில் இது இருக்காது.




இசை 11
அப்பா ரஜினியை கண்காணிக்கும் மகன் ரஜினி




இசை 12
படத்தின் இறுதிக் காட்சி இசை

Thursday, October 16, 2008

றேடியோஸ்புதிர் 25 இவர் 81 இல் "துணை" நடிகை: 92 இல் "இணை" நடிகை

இந்த வார றேடியோஸ்புதிர் மூன்று வார இடைவெளியின் பின் மீண்டும் பட்டையைக் கிளப்பும் ராஜாவின் பின்னணி இசையோடு வருகின்றது.

கேள்வி இதுதான். இப்படம் தமிழ் திரையுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவர் நடித்த படம். 1981 இல் வெளிவந்த அப்படத்தின் பின்னணி இசையை இங்கே கொடுத்திருக்கின்றேன். இந்தப் படத்தில் நாயகனின் தங்கையாக சிறு வேடத்தில் நடித்தவர் 11 வருஷம் கழித்து 1992 இல் அதே நாயகனுக்கு நிகரான பாத்திரத்தில் நடித்தவர். அந்த நாயகி யார் என்பதே கேள்வி.

இங்கே கொடுக்கப்பட்டிக்கும் 1981 இல் வெளிவந்த அப்படத்தின் பின்னணி இசையே சுலபமாக உங்களுக்கு மேலதிக தகவலைக் கொடுக்க இருக்கின்றது. அதை நீங்களே கேட்டுப் புரிந்தால் வெற்றிக்கனி, இல்லாவிட்டால் குற்றம் குற்றமே ;-)





மேலே உள்ள ஒலிச்சுழலில் கேட்க வசதி இல்லாதவர்களுக்காக இந்த ஒலிச்சுழல்

puthir25.mp3 - Kana Praba

மேலே கொடுக்கப்பட்ட போட்டிக்கான பதில்;


அந்த நடிகை விஜயசாந்தி. 33 பேர் சரியான பதில் அளித்திருக்கின்றீர்கள்.
இவர் 1981 இல் வெளிவந்த "நெற்றிக்கண்" திரைப்படத்தில் அப்பா ரஜினியின் மகளாகவும், மகன் ரஜினியின் தங்கையாகவும் சிறு வேடம் ஏற்றவர், பின்னர் 1992 இல் வெளிவந்த மன்னன் திரைப்படத்தில் ரஜினியின் ஜோடியாக சவால் விடும் பாத்திரத்தில் நடித்தார். இப்போட்டியில் கேட்கப்பட்ட அந்தக் காட்சியின் பாடல் நெற்றிக் கண் படத்தில் இருந்து "மாப்பிளைக்கு மாமன் மனசு" (youtube; ivanrockyrock)

Sunday, October 12, 2008

இசையமைப்பாளர் சந்திரபோஸின் முத்தான பத்து மெட்டு

எண்பதுகள் என்பது தமிழ் திரையுலகில் அசைக்கமுடியாத இளையராஜா காலம். தீபாவளிப் படங்களில் எல்லாமே ராஜாவின் இசையில் பல வருடங்களாக வந்த காலமும் இருக்கின்றது, அதே போல் அந்தக் காலகட்டத்தின் முதல் வரிசை நாயகர்களின் முதல் தேர்வே இளையராஜாவாகத் தான் இருந்தது. அந்த வேளையில் சிறு முதலீட்டில் உருவான படங்களுக்கும், பெரிய நாயகர்கள் நடித்த ஒரு சில படங்களுக்கும் ஆபத்பாந்தவர்களாக இருந்த இசையமைப்பாளர்கள் வரிசையில் சங்கர்-கணேஷ், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், கங்கை அமரன் வரிசையில் மிக முக்கியமாகக் குறிப்படத்தக்கவர் இசையமைப்பாளர் சந்திரபோஸ்.

1978 இல் வெளியான "மச்சானைப் பார்த்தீங்களா" திரைப்படம் சந்திரபோஸுக்கு நல்லதொரு அறிமுகத்தைக் கொடுத்திருந்தது. அதில் குறிப்பாக "மாம்பூவே சிறு மைனாவே" பாடல் காலத்தால் விஞ்சிய ஒரு தேன் விருந்து.ஒரு சிறு இடைவெளிக்குப் பின் சந்திரபோஸின் அலை அடிக்க ஆரம்பித்தது கே.பாலாஜியின் "விடுதலை" திரைப்படத்தின் மூலம். எண்பதுகளின் மத்தியிலே கே.பாலாஜியின் மொழிமாற்றப்படங்களிலே கங்கை அமரனுக்கு மாற்றீடாக "விடுதலை" (குர்பானியின் மொழிமாற்றம்)திரைப்படத்தில் சந்திரபோஸின் இசைதான் வந்து கலக்கியது. பொதுவாக இப்படியான மொழிமாற்றுப் படங்களிலே மூலப்படங்களின் பாடல்கள் முழுவதையுமே நகல் எடுப்பது வழக்கம். ஆனால் "விடுதலை" திரைப்படத்துக்காக விஷேஷமாக சந்திரபோஸால் மெட்டமைக்கப்பட்ட "நீலக்குயில்கள் ரெண்டு" பாடல் மீண்டும் இவர் அடுத்த இசையாட்டத்தில் ஆட சிறப்பானதொரு வாய்ப்பைக் கொடுத்தது. அடுத்த சில ஆண்டுகளில் ஏ.வி.எம் நிறுவனத்தின் செல்ல இசையமைப்பாளரானார்.

சந்திரபோஸின் இசை ஜாலங்கள் ராஜாவின் இசையைப் போல மந்திரித்து வைக்கவில்லை என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. இளையராஜாவுக்கு சவால் இளையராஜாவே தான். ஆனால் அவருக்கு அடுத்த வரிசை இசையமைப்பாளர்களில் தனித்துவம் மிக்கவராக சந்திரபோஸ் இருந்ததாலேயே மற்றைய இசையமைப்பாளர்களை ஓரம் கட்டிவிட்டு அவரின் இசையில் மலர்ந்த பாடல்கள் ரசிகர்களின் காதுகளை வெகுவாக ஆக்கிரமித்தன. இளையராஜா என்னும் மகா கலைஞன் இசையாட்சி நடத்திக் கொண்டிருக்கும் வேளை அவருக்கு ஈடு கொடுத்து இன்னொரு இசையமைப்பாளரின் பாடல்களையும் ரசிகர்களைக் கேட்க வைக்க இன்னொருவருக்கும் திறமையும் வல்லமையும் வேண்டும். அந்த வல்லமை சந்திரபோஸிற்கு இருந்திருக்கின்றது. அந்தக் காலகட்டத்தில் ராஜாவைச் சீண்டவோ என்னவோ "வில்லதி வில்லனையும் ஜெயிச்சுடுவேன், நான் ராஜாதிராஜனையும் தோற்கடிப்போன்" என்று மதுரைக் காரத் தம்பி திரைப்படத்திலும், கங்கை அமரன் இயக்கத்தில் இளையராஜா இசையில் வந்த "அண்ணனுக்கு ஜே" படத்தை சீண்டுமாற் போல என்று நினைக்கிறேன் "உங்கப்பனுக்கும் பே பே" என்று "ராஜா சின்ன ரோஜா"விலும் பாட்டுப் போட்டிருந்தார் சந்திரபோஸ். ராஜா-வைரமுத்து விரிசல் கடலோரக் கவிதைகளைத் தொடர்ந்து வரவும், வைரமுத்துவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தது சந்திரபோஸ் இசையமைத்த படங்கள். சொந்தக்காரன் திரைப்படத்தில் வைரமுத்துவின் குரலையும் பயன்படுத்தி ஒரு பாடலும் பண்ணியிருக்கிறார். இசையமைப்பாளர் சந்திரபோஸை வானொலிப் பேட்டி ஒன்று எடுத்து அவர் காலகட்டத்து இசையனுபவங்களைத் திரட்டவேண்டும் என்பது என் வெகுநாட் கனவு.

உண்மையில் கடந்த றேடியோஸ்புதிரைத் தொடர்ந்து இன்னொரு இசைப்படைப்பைத் தான் கொடுக்க இருந்தேன். ஆனால் என் நினைப்பை மாற்றி சந்திரபோஸின் பாடல்களையே முழுமையாகக் கொடுக்க ஏதுவாக அமைந்தது, கடந்த புதிரின் பின்னூட்டம் வாயிலாக R.லதா, இசையமைப்பாளர் சந்திரபோஸ் குறித்து வழங்கிய இந்தக் கருத்துக்களை அவருக்கு மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டே பகிர்கின்றேன்.

From: R.Latha on Mon Feb 18 5:31:35 2008.
தமிழ் சினிமாவில் 350-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் சந்திரபோஸ். இதில் ரஜினி நடித்த மனிதன், ராஜா சின்னரோஜா உள்ளிட்ட ஏவி.எம்.மின் தயாரிப்பில் வந்த 12 படங்களும் அடங்கும். 1977-ல் தொடங்கிய இவரது இசை சாம்ராஜ்யம் தொடர்ந்து 20 வருடங்களுக்கும்மேலாக நிலைத்தது.

ஒய்வெடுக்கிறாரோ என்ற யோசித்த நேரத்தில் இதோ வந்து விட்டேன் என்று சின்னத்திரையில் ஆஜர். இம்முறை இசையமைப்பாளராக அல்ல, நடிகராக. மெட்டிஒலி சித்திக் தயாரித்த மலர்கள் தொடரில் லிங்கம் என்ற வில்ல கேரக்டரில் தனது நடிப்பால் ரசிகர்களை பயமுறுத்தவும் செய்தார்.

இந்த லிங்கம் கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு இவரை தொடர்ந்து நடிப்புக்கு முகம் காட்ட வைத்தது. இந்த கேரக்டரில் இவரது நடிப்பை பார்த்த டைரக்டர் தினேஷ் இவரை தனது கத்திக்கப்பல் படத்தில் மெயின் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் போட்டு விட்டார்.அதோடு ஏவி.எம்.மின் வைர நெஞ்சம் தொடரிலும் மாமனார் கேரக்டரில் குணசித்ர நடிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். மெகா சேனலில் இப்போது திகிலும் தெய்வீகமுமாய் யார் கண்ணன் இயக்கத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஜனனம் தொடரில் வைத்தியராகவும் வந்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

"இனி தொடர்ந்து நடிப்பு தானா?''

ஜனனம் தொடர் படப்பிடிப்பில் இருந்தவரிடம் கேட்டபோது...

"நடிக்கும் ஆசையில் தான் சினிமாத் துறைக்கே வந்தேன்.ஆனால் வெளிப்படுத்த முடிந்தது எனக்குள் இருந்த இசையைத்தான். 12 வயதிலேயே பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நடிக்கவந்து விட்டேன். கலைஞர் நடித்த மணிமகுடம் நாடகத்தில் கூட நடித்திருக்கிறேன். கலைஞரின் பராசக்தி நாடகமாக நடந்தபோது அதிலும் நடித்திருக்கிறேன்.என் நடிபபில் எனக்கே திருப்தி ஏற்பட்ட நேரத்தில் தான் சினிமாவுக்கு நடிக்க வந்தேன்.எதிர்பாராமல் இசையமைப்பாளராகி அதில் பிரபலமான நேரத்தில் நடிப்பு ஆசையை ஒத்தி வைத்தேனே தவிர, நடிப்பார்வம் உள்ளூர கனன்று கொண்டுதான் இருந்திருக்கிறது. அதுதான் இத்தனை வருடம் கழித்து மறுபடியும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இசையமைப்பில் சாதித்ததையும் தாண்டி நடிப்பில் சாதிக்க வேண்டும். அதுதான் இப்போதைக்கு எனக்குள் விதவித கேரக்டர்களாய் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.''


இப்படி சந்திரபோஸ் பற்றிப் பேசிக் கொண்டே போகலாம். அவரின் அரிய பாடல்கள் பலவற்றைத் தேடித் தேடிச் சேமித்தும் இருக்கின்றேன். ஆனால் இந்த வாரம் சந்திரபோஸின் இசையில் மலர்ந்த முத்தான பத்து காதல் மெட்டுக்களை மட்டும் தருகின்றேன். இன்னொரு சந்தர்ப்பத்தில் எஞ்சிய பாடல்களோடு அவற்றின் சிறப்பையும் தருகின்றேன்.

"மச்சானைப் பார்த்தீங்களா" திரைப்படம் வி.சி.குகநாதன் இயக்கத்தில் சிவகுமார், சுமித்ரா போன்றோர் நடித்து 1978 இல் வெளிவந்த திரைப்படம். இப்படத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா பாடும் "மாம்பூவே சிறு மைனாவே" பாடல் ஆரம்ப தபேலாவும், மெலிதாக இழையோடும் கிட்டார் இசையும் கலக்க, ஒரு காலகட்டத்தில் றேடியோ சிலோனில் கலக்கிய பாடல் என்று இப்போதும் அந்த நாளைய இளைசுகள், இந்த நாளைய பெருசுகள் சொல்லும். அதே காலகட்டத்தில் இளையராஜா போட்ட பாடல்களை நினைவுபடுத்துவதே இந்த இசையின் பலவீனம். அருமையான பாடகர் கூட்டும், இசையும் கலக்க இதோ "மாம்பூவே"




தொடர்ந்து 1982 இல் வெளிவந்த வடிவங்கள் திரைப்படம் , ராம்ஜி என்ற ஒரு நடிகர் நடித்தது. ஆனால் படத்தின் பெயரை இன்றும் ஞாபகம் வைக்க உதவுவது சந்திரபோஸின் இசை. இப்படத்தில் இவரே பாடிய "நிலவென்ன பேசுமோ" என்ற அருமையான சோகப்பாடல் இன்றும் இருக்கின்றது. கூடவே எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் பாடும் 'இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே" ரசிகர்களின் இதய வானில் பச்சென்று இடம்பிடித்த காலம் ஒன்றும் இருக்கின்றது. அதற்கும் இலங்கை வானொலியை ஆதாரம் காட்டவேண்டி இருக்கின்றது.




கே.பாலாஜியின் இன்னொரு மொழிமாற்றுத் திரைப்படம் "விடுதலை". சிவாஜி, ரஜினி, விஷ்ணுவர்த்தன் போன்ற பெருந்தலைகளைப் போட்டும் இசைக்கு மட்டும் சந்திரபோஸை மீண்டு(ம்) திரைக்கு வரவழைத்த படம். புத்துணர்ச்சியோடு சந்திரபோஸ் மெட்டமைத்திருக்கின்றார் என்பதற்கு சிறப்பானதொரு உதாரணம், இப்படத்தில் வரும் "நீலக் குயில்கள் ரெண்டு" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடல். இடையிலே ஹோரஸ் குரலாய் 'ஓஹோஹோ ஓஹோஓஹோஓஒ" என்று சந்திரபோஸ் கலப்பது வெகு சிறப்பு.



எண்பதுகளில் ஏ.வி.எம் நிறுவனத்துக்கு மாபெரும் வெற்றியைக் கொடுத்த திரைப்படம் சங்கர் குரு. அர்ஜீன, சீதாவுடன் பேபி ஷாலினி பாடிக் கொண்டே வரும் "சின்னச் சின்னப் பூவே" பாடலும் இப்பட வெற்றிக்குக் கைகொடுத்த சமாச்சாரங்கள் என்றால் வைரமுத்து வரிகளில் சந்திரபோஸ் இசையமைத்த "காக்கிச் சட்டை போட்ட மச்சான்" பாட்டு கூட இந்த வெற்றியில் பங்கு போட்டது.இதோ மலேசியா வாசுதேவன், மற்றும் அந்தக் காலகட்டத்தில் சந்திரபோஸின் இசையில் அதிகம் பாடிய சைலஜா குரல்களில் "காக்கிச் சட்டை போட்ட மச்சான்"



ஆண்பாவம் படம் கொடுத்த போதையும் பாண்டியராஜன் கன்னாபின்னாவென்று படங்களை நடித்து வைக்க, பதிலுக்கு ரசிகர்களும் அவர் படங்களுக்கு டூ விட்டுக் கொண்டிருந்த வேளை டில்லிக்கு ராஜான்னாலும் "பாட்டி சொல்லைத் தட்டாதே" என்ற மந்திரத்தோடு வெற்றிக் கனியை அவருக்குக் கொடுத்தது. இப்படத்தில் வெத்தல மடிச்சுக் கொடுத்த பொம்பளை பாடல் சோகம், சந்தோஷம் இரண்டிலும் கேட்க இதமான பாடல்கள். அத்தோடு "வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சு" பாடல் அந்தக் காலகட்டத்தில் நம்மூர் திருவிழாக்களில் நாதஸ்வரக் கலைஞர்களின் வாசிப்பில் தவறாது இடம்பிடித்த கலக்கல் பாடல். அந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா ஆகியோர் பாடுகின்றார்கள்.



ஏ.வி.எம் தயாரிப்பில் வசந்தி என்றொரு படம் வந்தது. மோகன், மாதுரி ஆகியோர் நடித்திருப்பார்கள். அப்படத்தில் வரும் கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா பாடும் "ரவிவர்மன் எழுதாத கலையோ" என்று. அப்பாடலில் நாயகன் பாடுவதாக " பூமாலையே உன்னை மணப்பேன், புதுச் சேலை கலையாமல் அணைப்பேன்" என்று வைரமுத்து எழுதியிருப்பார். அணைக்கும் போது சேலை கலையாதா என்று என்று ஒரு ரசிகர் வைரமுத்துவிடம் ஒருமுறை கேட்கவும் அதற்கு "முதலிரவில் அணைக்கும் போது சேலைக்கு என்ன வேலை என்று சொன்னாராம் அந்தக் குறும்புக்கார வைரமுத்துக் கவிஞர். இதோ அந்தப் பாடல்.



மலையாளத்தின் சிறந்த மசாலாப் படங்களையும் குடும்பப் படங்களையும் கொடுத்து வரும் சத்யன் அந்திக்காட் எடுத்து மோகன்லால், சிறினிவாசன் போன்றோர் நடித்த "காந்திநகர் 2nd Street" அதுவே பின்னர் சத்யராஜ், ராதா, பிரபு (கெளரவம்) ஜனகராஜ் நடித்த "அண்ணா நகர் முதல் தெரு" ஆனது. "மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு" பாடலை அந்தக் காலகட்டத்தில் காதல் திரி வைத்தவர்களுக்கு ஒருமுறை போட்டுக் காட்டுங்கள். முகத்தில் ஒரு புன்னகை தானாகக் கிளம்பும். பலரைக் காதலிக்க வைத்ததும், காதலியை நினைத்து மனசில் பாடவைத்ததும்" இந்த எஸ்.பி.பி, சித்ரா பாடும் பாட்டு. "ராத்தூக்கம் ஏனம்மா கண்ணே உன்னாலே" என்று காதலன் பாடவும் பதிலுக்கு "ராசாவே நானும் தான் கண்கள் மூடல்லே" என்று காதலியும் பாடும்போது புதுசா புதுசா அதில் காதில் கேட்டு காதலிக்கத் தோன்றும் மீண்டும் மீண்டும். என்னவொரு அற்புதமான மெட்டும், இசையும்.



எண்பதுகளில் ஏ.வி.எம்மின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்திரபோஸுக்கு போனஸாய் கிடைத்தவை ரஜினிகாந்திற்கு மாபெரும் வெற்றிகளைக் கொடுத்த "மனிதன்", ராஜா சின்ன ரோஜா" திரைப்படங்களில் இசையமைக்கும் வாய்ப்புக்கள். ரஜினியின் திரைப்படங்களில் இளையராஜாவுக்கு அடுத்து இன்னொரு இசையமைப்பாளரின் பாடல்கள் வெகுவாக அன்று பேசப்பட்டதென்றால் அவை இவை இரண்டும் தான். குறிப்பாக ரஜினியின் "ராஜா சின்ன ரோஜாவில்" வரும் "பூ பூ போல் மனசிருக்கு" பாடலும் "மனிதன்" திரைப்படத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா பாடும் "ஏதோ நடக்கிறது" பாடலும் மெல்லிசையாக மனதில் இடம்பிடித்த அருமையான பாடல்கள். இதோ ஏதோ நடக்கிறது கேளுங்கள், இதமாய் இருக்கிறதல்லவா சொல்லுங்கள்.



நடிகர், இயக்குனர் பார்த்திபனுக்கு இளையராஜாவே முதல் படத்தில் இசையமைக்காத வாய்ப்பு. ஆனாலும் சந்திரபோஸுடன் இணைந்து "புதிய பாதை" போட்டார். இப்படத்தின் பாடல் காசெட் அப்போது வெளியானபோது ஒவ்வொரு பாடலுக்கும் வைரமுத்துவின் முத்தான குரல் விளக்கமும் இருக்க வந்திருந்தது. "பச்சப்புள்ள அழுதிச்சின்னா பாட்டு பாடலாம் இந்த மீசை வச்ச கொழந்தைக்கு என் பாட்டு போதுமா?" என்று வாணி ஜெயராம் கேட்க, எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ன சொல்கின்றார் என்பதைப் பாடலிலேயே கேளுங்கள்.



இசையமைப்பாளர் சந்திரபோஸுன் உச்சம் குறைந்து மெதுவாகக் குறைந்த காலகட்டத்தின் போது வந்தது ஏ.வி.எம்மின் "மாநகரக் காவல்".விஜய்காந்த், சுமா ஆகியோர் நடித்திருக்க, சந்திரபோஸின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் "தோடி ராகம் பாடவா" என்று கேட்க சித்ரா சொல்லும் " மெல்லப்பாடு" என்று பதில் போடும் பாட்டோடு அடுத்த கட்ட சினிமா யுகமும் ஆரம்பித்தது, புதுப்புது இசை (இளவரசர்கள்)யமைப்பாளர்கள் வந்தார்கள். குறுநில மன்னர்களும் மெல்ல மெல்ல விலகினார்கள். சந்திரபோஸும் நீண்ட பல வருசங்களாய் இசையமைப்பில் இருந்தும் விலகப் போனார்.

Thursday, October 9, 2008

றேடியோஸ்புதிர் 24 - இந்த இசையமைப்பாளரிடம் பாடிய அந்த இசையமைப்பாளர்?

இன்று விஜயதசமி நன்னாளிலே இன்னுமொரு றேடியோஸ்புதிரில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். எல்லோரும் அவல், சுண்டல், இனிப்பு வகையறாவெல்லாம் சாப்பிட்டு எந்தவிதமான கஷ்டமான கேள்விக்கும் முகம் கொடுக்கத் தயாராக இருப்பீர்கள். ஆனாலும் உங்களைச் சோதிக்காமல் நேரடியாக ஒரு பாடலைக் கொடுத்தே கேள்வி கேட்கின்றேன்.

தமிழ் திரையுலகில் முழு நேரப் பாடகர்கள் சிலரும் ஒரு சில படங்களுக்கு இசையமைப்பாளர்களாக இருந்திருக்கின்றார்கள். அதே நேரம் முழு நேர இசையமைப்பாளர்களும் தம் படங்களுக்குப் பாடியும் இருக்கின்றார்கள். அதேவேளை ஒரு இசையமைப்பாளர் இன்னொரு இசையமைப்பாளரின் இசையிலும் ஒரு சில பாடல்களைப் பாடியிருக்கின்றார்கள்.

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் பாடலை இசையமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். பாடலைக் கேட்கும் போது சற்று வித்தியாசமான குரலில் ஒரு பாடகரின் குரல் இருக்கும். காரணம் இவர் முழு நேரப் பாடகர் அல்ல. முழு நேர இசையமைப்பாளராக இருந்தவர். குறிப்பாக எண்பதுகளில் கடிவாளம் போட முடியாத ராஜாவின் இசைக்கு "ஓரளவு" சவாலாக இருந்தவர். ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் அரவணைப்பும் அதற்கும் காரணம். இசையமைப்பாளராக வருவதற்கு முன்னர் இன்னொரு இசையமைப்பாளருடன் (அவரும் திரையுலகுக்கு வர முன்னர்) இணைந்து கச்சேரிகளும் நடாத்தியவர். இப்போதெல்லாம் இவரை சின்னத்திரை நடிகராகத் தான் பார்க்க முடிகின்றது. சரி இந்தக் குரலுக்குச் சொந்தக்கார அந்த இசையமைப்பாளர் யார்?

<

Wednesday, October 8, 2008

நவராத்திரி கானங்கள்

இன்றைய நவராத்திரி நிறைவு நன்னாளிலே சிறப்பாக தேவியரைத் துதிக்கும் தனிப்பாடல்கள் மற்றும் திரையிசைப்பாடல்களைத் தாங்கிய ஒன்பது தெய்வீக இசைத் துளிகளை உங்கள் முன் படையலாக்குகின்றேன். அவல், சுண்டல், வடை, முறுக்கு போன்ற நைவேத்யங்களோடு இந்த இசை நிவேதனமும் கலக்கட்டும்.

பாடல் ஒன்று

"தாய்மூகாம்பிகை திரையில் இருந்து இளையராஜா பாடும் "ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ"




பாடல் இரண்டு

"தாய்மூகாம்பிகை" திரையில் இருந்து பாலமுரளி கிருஷ்ணா, எம்.எஸ்.வி, சீர்காழி கோவிந்தராஜன், மலேசியா வாசுதேவன், ஜானகி பாடும் " தாயே மூகாம்பிகையே" (பாடல் உதவி; கோ.ராகவன்)



பாடல் மூன்று

"வியட்னாம் காலனி" திரையில் இருந்து பாம்பே ஜெயசிறீ பாடும் "கை வீணையை ஏந்தும் கலைவாணியே"




பாடல் நான்கு

"சரஸ்வதி சபதம்" திரைப்படத்தில் இருந்து ரி.எம்.செளந்தரராஜன் பாடும் "அகரமுதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி"



பாடல் ஐந்து

மஹாகவி காளிதாஸ் திரையில் இருந்து ரி.எம்.செளந்தரராஜன், பி சுசீலா பாடும் "கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்"



பாடல் ஆறு

தண்டபாணி தேசிகர் பாடும் "ஜகஜனனி"




பாடல் ஏழு

"மேல்நாட்டு மருமகள்" திரையில் இருந்து வாணி ஜெயராம் பாடும் "கலைமகள் கையில்"




பாடல் எட்டு

ஆத்மா திரையில் இருந்து ரி.என்.சேஷகோபாலன் பாடும் "இன்னருள் தரும் அன்னபூரணி"



பாடல் ஒன்பது

நிறைவாக ஜெயச்சந்திரன், பி.சுசீலா பாடும் வெள்ளிரதம் திரைப்படத்தில்
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடும் "அலைமகள் கலைமகள்"

Sunday, October 5, 2008

இசையமைப்பாளர் கே.பாக்யராஜ்

சினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்களாகியது. இது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, வங்காளத்தில் சத்யஜித் ரே மலையாளத்தில் பாலசந்திர மேனன் போன்றோரே இசையமைப்பாளர்களாக வந்திருக்கின்றார்கள். ஆனால் இவர்கள் நல்லதொரு படைப்பாளிகளாகவும் மற்றைய தொழில்நுட்பக் கலைஞர்களிடமிருந்து தம் படைப்புக்கு எது தேவை என்று தீர்மானித்து அளவோடு கேட்டு வாங்கி வெற்றிகரமானதொரு படைப்பாக ஆக்கியது போல தாமும் இசையமைப்பாளராக மாறித் தம் படைப்பில் கொடுத்திருக்கின்றார்களா என்பதை ரசிகர்களின் இசை ரசனையும் காலமும் தீர்மானித்தது. டி.ராஜேந்தரைப் பொறுத்தவரை ஒரு தலை ராகம் முதல் என் தங்கை கல்யாணி வரையான காலப்பகுதி வரை இசையமைப்பாளராகவும் தன் பங்கைச் சிறப்பாகச் செய்து வந்திருக்கின்றார்.
அவரைப் பற்றி இன்னொரு தொகுப்பில் கவனிக்கலாம்.

இவர்கள் எல்லோரையும் விட மரியாதையாக இசை உதவி என்று போட்டுக் கொண்டு தனக்குப் பிடித்த மெட்டுக்களைக் கொடுத்து மனோஜ் கியான் இரட்டையர்கள், கியான் வர்மா (மனோஜ் தவிர்த்து) போன்றவர்களிடம் பாட்டு வாங்கியவர் ஆபாவாணன்.

கே.பாக்யராஜ், தமிழ் சினிமாவின் தலைசிறந்த திரைக்கதை ஆசியர் என்ற பெருமையை சக இயக்குனர்களாலேயே வாயாரப் பெற்றவர். தன் குரு பாரதிராஜா போன்று இளையராஜாவின் இசையோடு இணைந்து தன் வெற்றியைப் பங்கு போட்டுக் கொள்ளாமல் தன்னுடைய சுவர் இல்லாத சித்திரங்கள் முதல் கங்கை அமரன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் கணேஷ், தீபக் என்று பல்வேறு இசையமைப்பாளர்களோடு இணைந்து சிறந்த பாடல்களைக் கொண்ட வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். கூடவே ஆராரோ ஆரிரரோ, அவசரப் போலீஸ் 100, பவுனு பவுனு தான் போன்ற தன் இயக்கத்தில் வந்த படங்கள், இது நம்ம ஆளு (பாலகுமாரன்) ,ஞானப் பழம் (விஸ்வம்) போன்ற பிற இயக்குனர் இயக்கத்தில் தான் நடித்த படங்கள், தென் பாண்டி சீமையிலே, பொண்ணு பாக்கப் போறேன் போன்ற பிறர் இயக்கத்தில் வந்த இவர் நடிக்காத திரைப்படங்கள் போன்றவற்றில் இசையமைப்பாளராகவும் வலம் வந்தவர் கே.பாக்யராஜ்.

வெற்றிகரமான கதாசிரியர், இயக்குனர் என்ற வரிசையில் வெற்றிகரமான இசையமைப்பாளராக கே.பாக்யராஜ் இருந்தாரா என்றால் இல்லையென்றே சொல்லவேண்டும். இவரது இசையில் பெரும் புதுமைகள் இருந்ததாகத் தெரியவில்லை. பச்சமலை சாமி ஒண்ணு என்று தானே இசையமைத்துப் பாடியும், சல சலவென ஓடும் குளிரோடையின் சங்கீதமே போன்ற இனிமையான பாடல்களையும் கொடுத்தாலும் அவை பத்தோடு பதினைந்து என்ற பட்டியலிலேயே இருக்கும். 80 களில் டி.ராஜேந்தர் கொடுத்த சிறப்பான, மற்றவர்களிடமிருந்து வித்தியாசப் படுத்தித் தனித்துவமாக இருந்த இசைமைப்பு அளவிற்கு கே.பாக்யராஜின் இசை அமையவில்லை. இருப்பினும் கே.பாக்யராஜ் என்ற இசைமைப்பாளரின் இசையில் மலர்ந்த, கேட்கக் கூடிய பாடல்கள் என்ற வகையறாக்களை இன்றைய தொகுப்பில் தருகின்றேன்.

"இது நம்ம ஆளு" திரைப்படம் பாலகுமாரனின் இயக்கத்தில் வந்த போது கே.பாக்யராஜ் இசையமைத்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் பாடிய "சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் தேவை"




பொண்ணு பாக்கப் போறேன் திரைப்படம் பிரபு, சீதா, மனோ (சிவாஜியின் தம்பி பையன்) நடிப்பில் வந்தபோது அந்தப் படத்தில் பாக்கியராஜ் இசையமைத்த "நான் உப்பு விக்கப் போனா மழை கொட்டோ கொட்டுனு கொட்டுது" பாடல் வெகு பிரபலம் அப்போது. இந்தப் படத்தில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் "சலசலவென ஓடும் குளிரோடையின் சங்கீதமே"



"ஆராரோ ஆரிரரோ" திரைப்படம் கே.பாக்யராஜ் இயக்கத்தில் மீண்டும் பானுபிரியாவை தமிழுக்கு இழுத்து வந்த படம். இப்படத்தில் வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் "ஓடப் பக்கம் ஒரு குருவி வா வாங்குது"



"பவுனு பவுனு தான்" படத்தின் மூலம் நடிகை ரோகிணியின் நடிப்பும், நல்ல கதையம்சமும் பேசப்பட்டது, ஆனால் படம் பெட்டிக்குள் சீக்கிரமே சுருண்டது. இந்தப் படத்தில் இருந்து எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "தென் மதுரை சீமையிலே சாமி ஆளாகி நா வாடுறேன்" என்னும் இனிமையான பாடல்.



"ஞானப் பழம்" ஆர்.பி.விஸ்வம் என்னும் அதுவரை வில்லத்தனங்கள் பண்ணிய கே.பாக்யராஜ் சீடரை இயக்குனராக்கியது. படமும் தோல்வி, ஆர்.பி.விஸ்வமும் வெற்றியை ருசிக்காமல் காலமாகிவிட்டார். ஞானப்பழம் திரைப்படம் தான் கே.பாக்யராஜ் இசையமைப்பில் இதுவரை இறுதியாக வந்த திரைப்படம்.
அந்தப் படத்தில் இருந்து சுஜாதா, உன்னிகிருஷ்ணன் பாடும் "யாரும் இல்லாத தீவொன்று வேண்டும்".



கடந்த றேடியோஸ்புதிரில் கேட்ட கேள்வியின் பதிலாக வருவது "காவடி சிந்து" திரைப்படம். எண்பதுகளில் பிரபலமாக இருந்த அமலாவோடு, தானே இயக்கி, நடித்து,இசையமைத்து கே.பாக்யராஜ் எடுக்கவிருந்த படம். ஆனால் ஏதோ காரணத்தினால் அப்படம் வெளிவராமலே போய் பின்னர் ரகுமான், ராதிகா நடித்து வெளிவந்த பட்டணந்தான் போகலாமடி திரைப்படத்தில், பாக்யராஜ், அமலா நடித்த "காவடி சிந்து" பாடற் காட்சி ஒன்று பயன்படுத்தப்பட்டது. இந்த காவடி சிந்து திரைப்படத்திற்காக எடுத்த புகைப்படத்தை முதற்படமாகத் தந்திருக்கின்றேன்.

இந்த வெளிவராத "காவடி சிந்து திரைப்படத்தில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் "யாரோ சொன்னாங்க, என்னன்னு"



காவடி சிந்து திரைப்படத்தில் இருந்து மேலும் ஒரு பாடல், எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் "என்ன குறை ராசாவே"

Thursday, October 2, 2008

றேடியோஸ்புதிர் 23 - பிரபலங்கள் இருந்தும் வெளிவராத அந்தப் படம்?


றேடியோஸ்புதிர் ஒரு வார இடைவெளிக்குப் பின் மீண்டும் ஒரு நாள் முன்னதாகக் களம் இறங்குகின்றது. ஜீஜீபி கேள்வியெல்லாம் கேட்காதீங்க என்று ஆயில்ஸ் பாப்பா வரை முறையிட்டதால் இந்த வாரம் மிகவும் கஷ்டமான கேள்வி என்ற நினைப்பில் ஒரு கேள்வி கேட்கின்றேன்.

நிலவே மலரே திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி மீசையில்லாமல், நடிப்புமில்லாமல் கொஞ்சக்காலம் ஓட்டியவர் நடிகர் ரகுமான். பிறகு தமிழ் வாய்ப்புக்கள் போய் மீண்டும் கே.பாலசந்தரின் "புதுப்புது அர்த்தங்கள்" படத்தின் மூலம் மீசையுடனும், கொஞ்சம் நடிப்புடனும் மீண்டும் வந்தவர். அந்தப் படம் கொடுத்த வாழ்வால் எக்கச்சக்கமாக அவர் தொடர்ந்து நடித்த படங்களில் அவரே மறந்து போன படமொன்றின் பெயர் "பட்டணந்தான் போகலாமடி". இந்தப் படத்தின் இசை சங்கர் கணேஷ். ஆனால் இந்தப் படத்தில் ஒரு பிரபலமான ஜோடி பாடும் பாடல் காட்சி இருக்கின்றது. அந்தப் பாடலின் இசை கூட அந்த ஜோடியில் ஒருவராக வரும் ஆண் பிரபலம் தான்.

அந்த ஆண் பிரபலம், அந்தக் காலகட்டத்தில் பெரும் புகழோடு நடித்துக் கொண்டிருந்த பெண் பிரபலத்தோடு இணைந்து நடிக்கவென பாடல்களும் இசையமைக்கப்பட்டு, ஒரேயொரு பாடற் காட்சியை மட்டும் எடுத்ததோடு கிடப்பில் போன படத்தின் பாடலே பின்னர் பட்டணந்தான் போகலாமடி படத்தில் பயன்படுத்தப்பட்டது.

கேள்வி இதுதான் அந்த வெளிவராத படத்தின் பெயர் என்ன?

கீழே இருக்கும் சொற்களில் பொருத்தமான இரண்டு சொற்களைப் பொருத்தினால் விடை தொபுகடீர் என்று வந்து குதிக்கும். இந்தப் படப்பெயர் 80 களில் வந்த பிரபலமான இசையோடு சம்பந்தப்பட்ட படத்தின் பாடலின் முதல் வரிகளில் இருக்கின்றது.

கரகம், காவடி, ஒயிலாட்டம், மேளம், பறை, உடுக்கு, இசை, நாதஸ்வரம், நாயனம், பைரவி, நாட்டை, கரகப்பிரியா,கீரவாணி, சிந்து, ரசிகப்பிரியா, சண்முகப் பிரியா