அழகு மிகுந்த ராஜகுமாரி
மேகமாகப் போகிறாள்
வரிகளைக் கேட்டதுமே பாரதிராஜா காலத்து வெள்ளுடைத் தேவதைப் பெண்ணாகவும் அவளின் பின்னால் நீண்டு பரவி அலையும் வெண் சரிகையாகவும் அந்த மேகக் கூட்டம் தோன்றும்.
பின்னெப்போதாவது பாடல் கேட்காத சூழலிலும் அவ்வரிகளை அனிச்சையாக வாய் முணுமுணுக்கும்.
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூட பார்க்கிறாள்...
ஆனானப்பட்ட மலையையே மூடப் பார்க்கும் முகில் கூட்டத்தையே பெரிதாகப் பார்க்கும் உவமைச் சிறப்பு.
தார் ரோடை மங்கையின் கூந்தலுக்கு ஒப்பிட்டுப் பார்க்கிறார்.
ஆலங்கொடி மேலே கிளி..
தேன் கனிகளை தேடுது...
வாகனம் ஓட்டும் அந்த நாயகன் சுற்றிலும் உள்ளதை உன்னிப்பாகப் பார்த்து ரசித்துத் தன்னோடு பயணிக்கும் பயணிகளுக்கும் காட்சிகளை ருசிக்கப் பரிமாறுகிறார்.
இவ்வளவு அழகான இயற்கை பரந்து விரிந்திருக்கிறதே கொட்டிக் கிடக்கிறதே அப்படியே வாழ்ந்தாலே போதுமே அப்படியிருக்க, உறுத்தல் எழுகிறது இங்கே
பள்ளம் சிலர் உள்ளம் என
ஏன் படைத்தான் ஆண்டவன்?
ஆண்டவன் படைப்பில் உயர்ந்ததை எல்லாம் காட்டிக் கொண்டு போகும் கவிஞர் இங்கே நொந்து விட்டு அப்படியே
நல்லதை நினை மனமே என்று சொல்லுமாற்போல,
“கனியிருப்பக் காய் கவர்ந்தற்று” என்று கடந்து போகிறார்,
“பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்”
என்று அவனின் உயர் படைப்புக்காகவே வாழ்த்தத் தேடுகிறார்.
வெட்ட வெளி தனில் கொட்டிக் கிடக்குது என்று ஒரு கவித்துவமான தலைப்பில் இசைஞானி இளையராஜா நூலொன்றை எழுதியிருந்தார். அதற்கு முற்பட்ட காலத்தில் இயற்கையில் கொட்டிக் கிடக்கும் உன்னதங்களை அந்தக் குறுகிய ஐந்து நிமிடப் பயணத்திலேயே கவியரசர் அழகாக அடக்கி வைத்துக் கொடுத்தார்.
அந்த ஜீப் வண்டிச் சத்தம், பறவைகளின் ரீங்காரம் எல்லாவற்றையும் ராஜ இசை காட்சிப்படுத்தும், கூடவே ஜேசுதாஸ் குரல் கவிஞரின் வரிகளைக் காப்பாற்றி வைத்திருக்கும்.
இறைக்க இறைக்க ஊற்றெடுக்கும் கிணறு போலத் தன் வாழ்வின் சொற்ப வருடங்களில் கவியரசர் எழுதிப் போனதில் இதுவும் ஒன்றெண்டால் இன்னும் பத்தாண்டுகளாவது வாழ்ந்திருந்தால் அந்த கவி நதி எவ்வளவெல்லாம் கொடுத்திருக்கும்?
இளைய பருவம் மலையில் வந்தால்
ஏகம் சொர்க்க சிந்தனை...❤️
https://youtu.be/yRQvEZ7Gdws?si=t39VzBFKUXlLl196
கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள் நினைவில்
கானா பிரபா
24.06.2025
0 comments:
Post a Comment