1955 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி மண்டலின் வாத்திய விற்பன்னர் பழநியின் மகனாகச் சென்னையில் பிறந்த எஸ்.பி.வெங்கடேஷ் என்று கேரளத்தில் கோலோச்சிய இசையமைப்பாளர், எண்பதுகளில் தியாகராஜனின் “பூவுக்குள் பூகம்பம்" வழியாக சங்கீதராஜன் என்று தமிழிலும் அறியப்பட்ட தென்னிந்திய சினிமாவின் மிக முக்கியமான இசை நட்சத்திரம்.
தனது எழுபதாவது வயதில் பெப்ரவரி 3 ஆம் திகதி நம்மை விட்டு விண்ணுலகம் சென்று விட்டார்.
எண்பதுகள் தொண்ணூறுகளில் மலையாளத் திரையிசைப் பாடல்களில் மட்டுமல்ல பின்னணி இசைக்காகவும் வேண்டி அழைக்கப்பட்டவர்.
“பிரேம யுத்தா" என்ற கன்னடத் திரைப்படம் வழியாக 1981 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் அவதாரம் எடுத்தார்.
“ராஜாவின்ட மகன்” என்ற மலையாள சினிமா (தமிழில் மக்கள் என் பக்கம் என்று மீள எடுக்கப்பட்டது) எஸ்.பி.வெங்கடேஷ் ஐ மலையாள சினிமாவின் மிக முக்கியமானதொரு இசையமைப்பாளராக அடையாளப்படுத்தியது.
1993 ஆம் ஆண்டில் பைத்ருகம் என்ற மலையாள சினிமா இவருக்கு சிறந்த இசையமைப்பாளர் என்ற கேரள அரசின் விருதைப் பெற்றுத்தந்தது.
மின்னாரம், கிலுக்கம், ஸ்படிகம், மன்னர்மதி ஸ்பீக்கிங், கெளரவர், வாத்சல்யம், Johnnie Walker, காபுலிவாலா உள்ளிட்ட மலையாளத்தின் மிக முக்கியமான வெற்றிச் சித்திரங்கள் பலவற்றில் எஸ்.பி.வெங்கடேஷின் பங்களிப்பு உண்டு.
நடிகர் தியாகராஜன் தயாரித்து, இயக்கி தானே இருவேடமிட்டு நடித்த "பூவுக்குள் பூகம்பம்" என்ற திரைப்படத்தின் மூலம் 1988 இல் தமிழுக்கு அறிமுகமானவர் சங்கீதராஜன் என்று தமிழில் அடையாளப்பட்டார். அந்தப் படத்தில் வரும் "அன்பே ஒரு காதல் கீதம்" அந்தக் காலகட்டத்தின் பிரபலமான பாடல்களில் ஒன்றாக அமைந்திருந்தது.
சங்கீதராஜன் தொடர்ந்து காவல் பூனைகள், என் கணவர், சேலம் விஷ்ணு, தீச்சட்டி கோவிந்தன், விக்னேஷ்வர், பாட்டாளி மகன், நல்வாழ்த்துக்கள், இதுதாண்டா சட்டம், நிலாக்காலம், மறு விசாரணை, நதியோர கீதங்கள் போன்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்ததோடு எஸ்.பி.வெங்கடேஷ் என்ற பெயரில் கூட தமிழில் ஒரு சில படங்களுக்கு இசையமைத்திருக்கின்றார்.
“அன்பே ஒரு ஆசைகீதம் காதில் கேட்டாயோ”, “ஒரு காலம் வரும் “ பாடல்கள் “பூவுக்குள் பூகம்பம்" படத்துக்காகவும், “மயங்கினேன் மன்னன் இங்கே” , “வளையல் சத்தம் யம்மா யம்மா” ஆகிய பாடல்கள் “சேலம் விஷ்ணு" படத்துக்காகவும் அமைந்து தமிழில் புகழ் பூத்த பாடல்களாக எண்பதுகளில் விளங்கியது.
விக்னேஷ்வர் படத்தில் இவர் கொடுத்த பாடல்களும், பின்னணி இசையும் வித்தியாசமாகவும், தனித்துவமாகவும் இருக்கும்.
எஸ்.பி.வெங்கடேஷ் அவர்கள் வழங்கிய பேட்டி ஒன்றில் இருந்து அவரின் இசைப் பின்னணியை இவ்வாறு பகிர்ந்துள்ளார்.
1968 ஆம் ஆண்டில் HMV records இற்காக நாகூர் ஹனீபாவின் பாடல்களுக்கு பான்ஜோ வாத்தியம் வாசித்துத் தன் இசைப் பயணத்தைத் தொடங்கினார்.
மாஸ்டர் வேணு என்ற புகழ்பூத்த இசையமைப்பாளரின் தெலுங்குப் படத்தில் மாண்டலின் வாத்திய வாசிப்போடு திரையுலகில் நுழைந்தார். பின்னர் சலபதிராவ், பாபுராஜ், தட்சணாமூர்த்தி ஸ்வாமி, சலீல் செளத்ரி, தேவராஜன், ராகவன்,ஷியாம் என்று இவர் பணியாற்றிய இசையமைப்பாளர்கள் அதிகம்.
கண்ணூர் மாஸ்டர், அர்ஜீனன் , ரவீந்தர், ஏ.டி.உமர், ஷியாம் ஆகியோர் இசையமைப்பாளர்களாக இருந்த படங்களில் இசை ஒருங்கமைப்பாளராக விளங்கியிருக்கிறார். பதிவை எழுதியவர் கானா பிரபா
புகழ் பூத்த இசையமைப்பாளர் ஷியாம் எஸ்.பி.வெங்கடேஷின் அப்பாவின் சீடர் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னடத்தில் புகழ்பூத்த இசையமைப்பாளர் விஜயபாஸ்கரிடம் மண்டலின், கிட்டார் போன்ற வாத்தியங்களை வாசித்தவரை 1975 இல் உதவியாளராக ஆக்கிப் பெருமை சேர்த்தார்.
1975 கோடீஸ்வரராவ் என்ற ஒலிப்பதிவாளர் விஜயபாஸ்கரிடம் எஸ்.பி.வெங்கடேஷைப் பரிந்துரைக்கவும், அற்புதமான பின்னணி இசையை ஒரு காட்சிக்குக் கொடுத்து அவர்களை இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்.
“பிரேம யுத்தா” என்ற கன்னடப் படத்தில் இசையமைப்பாளராக உயர்ந்தார்.
மலையாள இயக்குநர் ஜோஷியின் கவனிப்பைப் பெற்ற இவர் கொடுத்த பின்னணி இசை மலையாளத்தில் திறவுகோலானது.
ஷியாம் இசையமைத்த “நிறக்கூட்டு” படத்தில் இடைவேளைக்குப் பின் பின்னணி இசை வெங்கடேஷுக்குக் கிட்டுகிறது.
அதைத் தொடர்ந்து “ஷியாமா” படத்துக்கும் பின்னணி இசை கொடுத்ததால் கவரப்பட்டவர்கள், “ராஜாவிண்ட மகன்” என்ற படத்தில் இசையமைப்பாளர் ஆக்குகிறார்கள். ஜோஷியின் கதாசிரியர் டென்னிஸ் ஜோசப் இவரை ஊக்குவித்தவர்களில் மிகமுக்கியமானவர் என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
எஸ்.பி.வெங்கடேஷ் வாய்ப்புத் தேடிய ஆரம்பகாலத்தில் தந்தையுடன் ஜேசுதாஸ் ஐச் சந்தித்த போது, இவர் பான்ஜோ வாத்தியத்தை வாசித்துக் காட்டவும்,
இரண்டு ஆப்பிள்களை எடுத்து வந்து “இந்த ஆப்பிள் போல நீ வருவாய்” என்று வாழ்த்தினாராம்.
பதிவு கானா பிரபா.
கனக நிலாவே, முத்துமணித் தூவல் தராம், தும்பிப் பெண்ணே வா வா போன்ற அற்புதமான பாடல்களை ஜேசுதாஸ் இவரின் இசையில் பாடிப் புகழ் பூத்த மலையாளப் பாடல்கள்.
இவருக்கு மிகப் பிடித்த பாடகி சித்ரா, தான் கொடுக்கும் பாடலை முழு ஈடுபாட்டோடு அற்புதமாகக் கொடுப்பாராம். சித்ரா 90 வீதமான பாடல்களை இவரிடம் பாடியிருக்கிறாராம். எம்.ஜி.ஶ்ரீகுமாரும் இவரிடம் பாடிய பாடகர்களில் மிக முக்கியமானவர்.
“துள்ளாத மனமும் துள்ளும்” படத்தின் பெங்காலி வடிவமான “சதி” என்ற திரைப்படத்துக்கு இவர் இசையமைத்து பெரும் புகழும், பெங்காலித் திரைப்பட வரலாற்றில் 10 வது வசூல் சாதனையை இன்றுவரை தக்க வைத்திருக்கிறது. 25 லட்சம் கேசட்டுகள் விற்பனையாகிச் சாதனை படைத்தன.
கண்ணெதிரே தோன்றினாள், கில்லி, பத்ரி போன்ற படங்களின் பெங்காலிப் பதிப்புகளுக்கும் இவரே இசை.
கன்னடத்தில் டாக்டர் ராஜ்குமார் பாடிய அஸ்வமேதா படப் பாடலான “கிருதய சமுத்ரா கலகி” பாடல் நட்சத்திரப் பாடலாக மிளிர்ந்து கொண்டிருக்கிறது.
மலையாளம், கன்னடம், பெங்காலி, இவற்றோடு தமிழ் சினிமா ஈறாக எஸ்.பி.வெங்கடேஷ் என்ற இசையாளுமை வசீகரித்த பாடல்களை இன்றும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் இசை உலகத்தில்.
கானா பிரபா
03.02.2026





0 comments:
Post a Comment