Pages

Sunday, March 19, 2023

இசையமைப்பாளர் ஷியாம் ❤️🎸

"மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்"
https://www.youtube.com/watch?v=yCpdVX7mBOg

கேட்டதுமே "அடடா இளையராஜா என்னமா இசையமைத்திருக்கிறார்" என்று என் காது படச் சொன்னவர்கள் உண்டு. இன்னும் அப்படியே நம்புபவர்களும் உண்டு. ஆனால் அந்தப் பாடல் இடம்பெற்ற "மனிதரில் இத்தனை நிறங்களா" படத்தின் இசையமைப்பாளர் ஷியாம். இந்தப் பாடலில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு பின்னணியில் ஒலிக்கும் பெண் குரல் எஸ்.பி.சைலஜாவுக்கு

இதே படத்தில் "பொன்னே பூமியடி"
https://www.youtube.com/watch?v=Ym9ma0KcVd8
அந்தக் காலத்து றேடியோ சிலோன் நினைவுகளைப் பலருக்குக் கிளப்பி விடும் அழகான பாட்டு. எஸ்.ஜானகியும் வாணி ஜெயராமும் பாடியிருப்பார்கள்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடைய இசைப் பட்டறையில் விளங்கிய வாத்திய விற்பன்னர் சாமுவேல் ஜோசப் தான் இந்த ஷியாம்.

நாடக உலகில் இருந்து வந்தாலும் எண்பதுகளில் தன் படங்கள் ஒவ்வொன்றையும் சற்று மாறுதலான வடிவத்தில் கொடுத்துக் கவனிக்க வைத்தார் இயக்குநர் மெளலி.
"ஆனந்த தாகம் உன் கூந்தல் பூக்கள் சூடுமே" https://www.youtube.com/watch?v=ndKsYdKmqJ8

இந்தா இன்னொரு பாட்டு வானொலி நினைவுகளைக் கிளப்ப என்று வந்து சொல்லும் அந்தப் பாட்டு மெளலி இயக்கத்தில் ஷியாம் இசையில் தீபன் சக்ரவர்த்திக்குப் பேர் கொடுத்த முத்து, கூடப் பாடியவர் எஸ்.ஜானகி.
இதே படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம் பாடும் "இவள் தேவதை" https://www.youtube.com/watch?v=NYzqX49S0VQ
பாடலில் ஷியாமின் வயலின் முத்திரை இருக்கும்.
இந்தப் பாடல்கள் இடம் பிடித்த வா இந்தப் பக்கம் படமும் ரசிக்கும் வண்ணமிருக்கும்.

“நினைத்திருந்தது நடந்து விட்டது"
https://www.youtube.com/watch?v=g41IK_8oGJE
கெளசல்யாவோடு, எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றவை நேரில் படத்துக்காக இதே கூட்டணிக்காகக் கொடுத்ததும் எண்பதுகளின் பசுமை வண்ணங்கள்.

"காதல் கனவுகளே நீராடும் நினைவுகளே" (எஸ்.ஜானகி & எஸ்.பி.பாலசுப்ரமணியம்)
https://www.youtube.com/watch?v=Zt6u4K_0Gm4 என்ற அட்டகாஷ் பாட்டு இயக்குநர் மெளலியோடு இசையமைப்பாளர் ஷியாம் கூட்டமைத்துக் கொடுத்தது "நன்றி மீண்டும் வருக" படத்துக்காக.
இதே கூட்டணி ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது படத்திலும் இணைந்தனர்.

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த இசையமைப்பாளர் ஷியாமை உச்சத்தில் வைத்துக் கொண்டாடியது என்னவோ மலையாளத் திரையுலகம் தான். குறிப்பாக எண்பதுகளில் உச்ச நாயகர்களது பல படங்களில் இவரின் இசை வண்ணம் தான்.
மோகன்லாலின் நாடோடிக் காத்து படம் தமிழில் பாண்டியராஜன் நடிக்க கதாநாயகன் என்றான போது மலையாளத்தில் ஷியாம் இசைத்த "வைசாக சந்தே"
https://www.youtube.com/watch?v=GJCj4lfraDc
பாடலின் மெட்டைப் பயன்படுத்தி "பூ பூத்தது யார் பார்த்தது" 

https://www.youtube.com/watch?v=411Jbwg-ia4 

என்று இசையமைப்பாளர் சந்திரபோஸ் கொடுத்தார்.

சாமுவேல் ஜோசப் என்ற இயற்பெயர் கொண்ட, தமிழகத்தின் இசை மேதை ஷியாமைத் தமிழகத்தவர்களை விட அதிகம் கொண்டாடியது மலையாள தேசத்தவர்கள் தான்.
தட்சணாமூர்த்தி சுவாமிகளைத் தொடர்ந்து இன்றும் கேரளத்தவர்கள் போற்றிக் கொண்டாடும் இசை ஆளுமை இவர். நாடோடிக் காத்து, நியூ டெல்லி, ஒரு சிபிஐ டைரிக் குறிப்பு உள்ளிட்ட அதிரி புதிரி மசாலா வெற்றிச் சித்திரங்கள் ஒரு பக்கம், பிரதாப் போத்தனின் புகழ் பூத்த “டெய்சி" போன்ற காதல் மற்றும் அழுத்தமான கதைகள் போன்ற இரு பரிமாணங்களிலும் அங்கு கோலோச்சியவர் ஷியாம்.

இசையமைப்பாளர் ஷியாம் மலையாளத் திரையுலகில் கொடுத்த பங்களிப்பைப் பற்றி எழுதவே பல பக்கங்கள் தேவை.

தமிழ்த் திரையிசையின் மூத்த கிட்டார் இசை விற்பன்னர் பிலிப்ஸ் அவர்களோடு கூட்டாக “கருந்தேள் கண்ணாயிரம்" படத்திற்கு இசையமைத்த ஷியாமும் இருவருமாக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் பாசறை வாத்திய விற்பன்னர்கள்.
கருந்தேள் கண்ணாயிரம் படத்தில் சதன், மனோரமாவுடன் எஸ்பிபி பாடிய “பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னால" https://www.youtube.com/watch?v=mLy1pU16Ehc
பாடலை மறக்க முடியுமா என்ன?

அதே படத்தில் இன்னொரு பொக்கிஷம் “நேற்று வரை விண்ணில் இருந்தாளோ” https://youtu.be/xYz7x6BVyfA


“கலீர் கலீர்"
https://www.youtube.com/watch?v=rFWBggvEg4I

என்று தேவதை படத்துக்காக ஷியாமின் இசையில் எஸ்.ஜானகி பாடியதும் கூட இலங்கை வானொலியின் பொற்கால நினைவுகளைத் தட்டியெழுப்பும். கானா பிரபா

அப்படியே
“குப்பத்துப் பொண்ணு தொட்டுப்புட்டா”
https://www.youtube.com/watch?v=SS0AluO7hyY
என்று அதே ஜானகி, ஷியாம் இசையில் பாடிய குப்பத்துப் பொண்ணு பாடலைக் கேட்டால் ஜென்ம சாபல்யம் உங்களுக்கு.

“வானம் பன்னீரைத் தூவும்
காலம் கார்காலமே”

https://www.youtube.com/watch?v=kU-iWGPXuUY

“கள் வடியும் பூக்கள்" படத்துக்காக ஷியாம் கொடுத்ததை எல்லாம் எண்பதுகளின் திரையிசை ரசிகர்கள் மறக்காமல் தம் மனதில் பதியம் போட்டு வைத்திருக்கிறார்கள்.

புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் அழுத்தமான கதையம்சம் கொண்ட சந்தோஷக் கனவுகள் படத்தில்
“முத்து முத்துப் புன்னகையோ” https://www.youtube.com/watch?v=VMEL94BUCPg
வாணி ஜெயராமுடன்,
“மேகங்களே”
https://www.youtube.com/watch?v=YqZVtK7c_OA
சுசீலாவுடன் என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய அதிமதுரப் பாடல்கள் உண்டு கேட்டுப் பாருங்கள். இவையெல்லாம் ஷியாமின் வற்றாத இசை வெள்ளத்தின் ஊற்றுகள்.

இயக்குநர் ஆர்.சி.சக்தியின் அறிமுகப்படம், கமல்ஹாசனின் இணைக் கதைப் பங்களிப்பில் வெளியான "உணர்ச்சிகள்" படத்திலும் ஷியாமின் அற்புதமான " நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்" https://www.youtube.com/watch?v=-0zktlUIduM இசையமைப்பாளர் பேர் சொல்லும்.   தமிழில் ஏராளமான சிறு முதலீட்டுப் படங்களுக்கு ஷியாம் இசையமைத்தாலும் அவற்றில் வந்தவை, வராதவை என்று ஏராளம் உண்டு.

“பூவே வா வா”
https://www.youtube.com/watch?v=uVw0onqtBoE
பாடல் எல்லாம் “அந்தி மயக்கம்” என்ற வந்த சுவடே தெரியாதவைக்குக் கொடுத்தவை.
ஷியாம் அற்புதமான மனிதர் என்று அவரை வைத்துத் தொடந்து தமிழில் படங்களைத் தயாரித்த ஜெயதேவி குறிப்பிட்டிருக்கிறார் சமீப பேட்டியில். கானா பிரபா
ஜெயதேவியின் பிரமாண்டச் சித்திரம் விலங்கு படம் ஈறாக ஷியாம் தன் இசைச் சிறப்பைக் காட்டினார்.
“சொல்லத்தான் நினைத்தேன்'
https://www.youtube.com/watch?v=oxWHS_U_h_I
என்று எஸ்பிபியைப் பாட வைத்தவர் அதே மெட்டில்
“உன்னைத்தான் நினைத்தேன்"
https://www.youtube.com/watch?v=u9AiLyfaEhs
என்று ஜேசுதாஸைப் பாட வைத்திருப்பார்.
அதே படத்தில் தானே குழுவினரோடு பாடியுமிருக்கிறார் ஷியாம்
“இது எங்கள் ராஜாங்கம்"
https://www.youtube.com/watch?v=jSUacgpJqZg

என்று.


ஷியாமின் இன்னொரு இசைச் சித்திரம் பஞ்ச கல்யாணி படத்தின் அனைத்துப் பாடல்களையும் கேட்க
https://www.youtube.com/watch?v=s1wrwQTBEh0

மெல்லிசை மன்னர் குறித்து ஷியாமின் பகிர்வுகள்
https://www.youtube.com/watch?v=_EQC_DaGSTA

https://www.youtube.com/watch?v=gmu5foAyASc

எஸ்பிபி குறித்து ஷியாமின் கருத்துரை
https://www.youtube.com/watch?v=8NwZySKe0MU

மலையாள தேசத்தில் ஷியாமின் இன்னிசை வார்ப்புகள்

https://www.youtube.com/watch?v=a51KtDe32mQ

https://www.youtube.com/watch?v=BGUwY9sDGVA

இன்று 86 வது பிறந்த நாள் காணும் இசை மேதை ஷியாம் Samuel Joseph அவர்களைப் பல்லாண்டு காலம் இசை போல் வாழ வாழ்த்துவோம்.

கானா பிரபா
19.03.2023


3 comments:

Anonymous said...

இதில் வரும்..பூ பூத்ததை யார் பார்த்தது...பாடலை இன்னும் ராஜா sir..வரவில் வைத்து உள்ளேன்..

Anonymous said...

அருமை

Anonymous said...

"ஆனந்த தாகம் உன் கூந்தல் பூக்கள் சூடுமே" அருமையான இசையமைப்பு.