Pages

Friday, March 12, 2010

இளையராஜாவும் பாக்யராஜும்






















எண்பதுகளில் கலக்குக் கலக்கிய நட்சத்திர இயக்குனர்களில் பாக்யராஜின் பாணி தனித்துவமானது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. அழகான திரைக்கதை அமைப்பும் அந்தத் திரைக்கதைக்கேற்ற பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்துத் திறமையாகப் பயன்படுத்துவதிலும் துறை போனவர் இவர். பாக்யராஜின் குருநாதர் பாரதிராஜாவின் சிவப்பு ரோஜாக்கள், நிறம் மாறாத பூக்கள் போன்ற திரைப்படங்களுக்குக் கதாசிரியராக இருந்து பாரதிராஜாவின் ஆரம்ப வெற்றிகளில் பங்கு போட்டவர். அதை அன்றைய பத்திரிகைகள் தம் சீண்டல்களுக்கும் உபயோகப்படுத்தி இருவருக்கும் இடைவெளியை ஏற்படுத்தப் பார்த்தன.

பாரதிராஜாவுடன் ஒப்பிடும் பாக்யராஜின் தனித்துவம் என்னவென்றால் என்னதான் திறமையான இயக்குனர் என்றாலும் அன்றைய காலகட்டத்தில் இளையராஜாவின் இசை என்ற பெரும் பலத்தை உபயோகித்துத் தான் ஒரு படி மேலான வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்ற காலகட்டத்தில் இவர் எதிர்பாராதவிதமாகக் கதாநாயகனாக அறிமுகமான "புதிய வார்ப்புக்கள்" தவிர்ந்து, பாக்யராஜ் இயக்குனராகத் தன்னை வெளிப்படுத்திய சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தில் இருந்து பெரும்பாலான படங்களை இளையராஜாவின் உதவியின்றி மற்றைய இசையமைப்பாளர்களோடு கைகோர்த்தே இயக்கியிருக்கின்றார். அந்த வகையில் கங்கை அமரன், சங்கர் கணேஷ், எம் எஸ் விஸ்வநாதன், தீபக், தரண் இவர்களுடன் தானே இசையமைத்தும் படங்களை இயக்கியிருக்கின்றார்.

இன்னொரு ஆச்சரியமான உண்மை என்னவென்றால் இளையராஜாவோடு இணைந்து பணியாற்றிய படங்களில் "முந்தானை முடிச்சு" போன்ற பெருவெற்றி பெற்ற ஒரு சில படங்களோடு ஒப்பிடும் போது இவர் மற்றைய இசையமைப்பாளர்களோடு பணியாற்றிய போது கிடைத்த வெற்றிப்படங்களின் பட்டியல் சற்றே நீளம். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பாக்யராஜின் படங்களில் பாடல்கள் அவை யார் இசையமைத்தாலும் சோடை போனதேயில்லை. திருஷ்டிக்கழிப்பாக "வேட்டியை மடிச்சுக்கட்டு" வந்து பாக்யராஜின் முத்திரை இயக்கத்துக்கு ஒரு இடைவெளியைப் போட்டது.




























இந்தத் தொகுப்பிலே பாக்யராஜ் என்ற இயக்குனரோடு இளையாராஜா இணைந்த போது உருவான படங்களின் பாடல் தொகுப்பைப் பார்ப்போம்.


இன்று போய் நாளை வா


மூன்று பையன்களும், காதலிக்க ஒரு பெண்ணும் என்று அமைந்த சுவாரஸ்யமான நகைச்சுவைச் சித்திரம். பாக்யராஜோடு , பாரதிராஜாவின் இன்னொரு அறிமுகம் ராதிகா இணைந்த இந்தப் படத்தில் ராஜாவின் கைவண்ணம் சற்றே கம்மி தான் என்றாலும் மலேசியா வாசுதேவன், பி.சுசீலா பாடும் "பல நாள் ஆசை திருநாள் ஆச்சு மண நாள் காண்போம் வா வா" ஒரு காலகட்டத்து இளசுகளின் சுப்ரபாதமாக இருந்ததாம்.




விடியும் வரை காத்திரு

இந்த அப்பாவியும் கொலைகாரன் பாத்திரமாக தேறுவானா என்று நினைத்த ரசிகர்களின் நினைப்பை மாற்றி ஒரு த்ரில்லர் கதையை தன் பாணியில் சுவாரஸ்யமாகக் கொடுத்த பாக்யராஜுக்கு ராஜா போட்ட அன்பு மெட்டு "நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு", மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி குரல்களில்.



முந்தானை முடிச்சு

அடிக்கடி ஏவிஎம் உடன் முண்டு பிடிக்கும் ராஜாவைச் சமாளித்து பாக்யாஜ் முடிச்சுப் போட்ட இந்தப் படம் ஏவிஎம் சரித்திரத்தில் மட்டுமல்ல பாக்யராஜின் வாழ்நாளில் மறக்க முடியாத வெற்றிக்கனியைக் கொடுத்து ஓயாமல் ஓடிக்கொண்டே இருந்தது. படம் பார்க்க வருபவர்களுக்கு முருங்கைக்காய் கட்டு கொடுக்கும் அளவுக்கு விளம்பர உத்தியும் தனித்துவமாக இருந்தது. பாக்யராஜின் இந்த சுவாரஸ்யமான படத்தின் தானும் தனித்து நிற்கவேண்டும் என்று இளையராஜா போட்ட மெட்டுக்கள் எல்லாமே ரோஜா மொட்டுக்கள்.
குறிப்பாக அந்திவரும் நேரம் பாடல் எடுத்த விதத்திலும் மனதை அள்ளியது. மலேசியா வாசுதேவன் குரலை விலக்கி எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாக்யராஜுக்குக் குரல் கொடுக்க, புதுமுகமாக அறிமுகமான ஊர்வசிக்கு எஸ்.ஜானகி




தாவணிக்கனவுகள்


எதிர்பாராத வெற்றி அடுத்து என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுக்க முடியாமல் தடுமாற்றத்தைக் கொண்டு வந்து சிலசமயம் படுகுழியில் தள்ளி விடும். நடிப்புச் சிங்கம் சிவாஜி கணேசன் தலையில் ஒரு தாவணிக்கடையே சுமத்திவிட்டு கதையில் கோட்டை விட்ட திரைக்கதைச் சிங்கத்துக்கு ஒருவகையில் சுருக்குக் கயிறு ஆகிருக்கும், கடவுள் புண்ணியத்தால் சுமாராக ஓடி ஒளிந்த இந்தப் படத்திலும் இளையராஜாவின் மெட்டுக்கள் 80களில் அவர் கொடுத்த பெரும்பாலான படங்களின் பாணியில். அந்த வகையில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும், எஸ்.ஜானகியும் பாடும் "செங்கமலம் சிரிக்குது"





தூறல் நின்னு போச்சு


வில்லனாகப் பழகிப் போன நம்பியாரை நல்லதொரு குணச்சித்திரப்பாத்திரத்தில் நடிக்க வைத்ததோடு சுலக்க்ஷணாவையும் அறிமுகப்படுத்திய இந்தப் படத்தின் தலைப்பு கூட பாக்யராஜ் தன் படங்களுக்குத் தனித்துவமாக சிரத்தையோடு அமைக்கும் தலைப்புக்களின் வரிசையில் அமைந்தது. இந்த இசைத்தொகுப்புக்கு இந்தப் படத்தில் இருந்து எந்தப் பாடலை எடுப்பது எதை விடுவது என்று திணறவைக்கும் அளவுக்கு எல்லாப் பாடல்களுமே வெகு சிறப்பாக அமைந்தது. இளையராஜா - பாக்யராஜ் இணைந்த சிறந்த வெற்றிக் கூட்டணியில் பாடல்களுக்கும் பங்குண்டு என்று காட்டியது. "தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி" மலேசியா வாசுதேவன், ஜானகி குரல்களில் கேட்கக் கேட்க இனிமை



சின்னவீடு

"முந்தானை முடிச்சு திரைப்படத்தில் தங்கை ஊர்வசியை காதலியாக அறிமுகப்படுத்திய பாக்ய ராஜ் சில ஆண்டுகளின் பின் அவர் சகோதரி கல்பனாவை மனைவியாக அறிமுகப்படுத்திய "சின்ன வீடு" சில்மிஷங்கள் நிறைந்த பாக்யராஜ் தனமான வீடு இது.
ஒரு ரேஞ்சியில் அமையும் கிளுகிளுப்பாடல்கள் பாக்யராஜ் படங்களில் தானாக அமைவதுண்டு. அது சின்ன வீட்டில் கூட இல்லையென்றால் எப்படி? ஆனால் இங்கே நான் தருவது இதே படத்தில் அமைந்த வெள்ள மனம் உள்ள மச்சான்" மலேசியா வாசுதேவன்,சுனந்தா குரல்களில்




ராசுக்குட்டி


பாக்யராஜ் வேண்டாமென்று வைத்துக் கொண்டாலும் பஞ்சு அருணாசலம் தயாரித்தால் இளையராஜா தானே இசை. அப்படி அமைந்தது தான் இந்தக் கூட்டணி. பாக்யராஜின் கலகலப்பான நகைச்சுவையும், திரைக்கதை அமைப்பும் சாதாக் கதையைக் கூட மசாலா தோசை அளவுக்கு ஆக்கிவிடும். ராசுக்குட்டி படம் மறந்து போயிருக்கலாம், ஆனால் இப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் "ஹோலி ஹோலி ஹோலி" மறக்க முடியாத பாடல்



ஓரு ஊர்ல ஒரு ராஜ குமாரி

சில சமயங்களில் என்னதான் இளையராஜா மாங்கு மாங்கென்று உழைத்தாலும், பொருத்தமான படம் அமையாவிட்டால் விழலுக்கு இறைத்த நீர் தான். அது என்னதான் மீனாவை ராஜகுமாரியாக்கினாலும் பொய்க்காது என்று நிரூபித்த படம். எல்லாப் பாடல்களுமே வித்தியாசமான இனிமையான மெட்டுக்கள். குறிப்பாக மனோ பாடும் "வந்தாள் வந்தாள் ராஜகுமாரி" க்கு இழைத்து இழைத்துப் பண்ணிய மெட்டும், இசையும் முத்துச்சரமாக ஒரு சிம்பொனிப் பரவசம் தான்.



வீட்ல விசேஷங்க

மலையாள பாக்யராஜ் பாலசந்திரமேனன் இயக்கி பாக்யராஜ் நடிக்க இருந்த படம், இரண்டு இயக்குனர்களுக்கும் ஈகோவால் தமிழ் பாக்யராஜே இயக்கி நடித்த படம். முதற்கோணல் முற்றும் கோணலாய் விசேஷமாக எதுவுமில்லை என்று சொல்லிவைத்தது. படத்தின் ஒளிப்பதிவை ஏற்றது யாரோ கத்துக்குட்டி போல, படம் தொடங்கி முடியும் வரை நடுவில் ஒரு ஒளிக்கோடு இருக்கும் வரை பார்த்துக் கொண்டார். திரையிசைப்பாடல்களைப் பொறுத்த வரை ஈழத்து ரசிகர்களுக்குப் பிடிக்கும் சில பாடல்கள் இந்திய ரசிகர்ளுக்குப் பிடிக்காது என்பதற்கு உதாரணமாக இந்தப் படத்தின் பாடல்கள் இலங்கையில் வெகுபிரபலமாக இருந்தன. குறிப்பாக அருண்மொழி, ஜானகி பாடும் "மலரே தென்றல் பாடும் கானம் இது" பதினாறு வருஷங்களுக்கு முந்திய காதல் கதைகளை நினைவு படுத்தும்

26 comments:

ஆயில்யன் said...

அந்தி வரும் நேரம் - எத்தனையோ முறை கேட்டாலும், அலுத்து போகாத பாடல்களில் ஒன்று! என் அப்பாவின் ஞாயிறு ஸ்பெஷல் பாடல்கள் கலெக்‌ஷனில் இதுவும் உண்டு

தங்கசங்கிலி மின்னும் பைங்கிளி - ராசாவின் கைவண்ணத்தில் இனிய பாடல் என்னோட மொபைல் ப்ளேலிஸ்ட்ல இருக்கே! :)

மற்ற சில பாடல்கள் இப்பொழுதுதான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்!

பாக்யராஜ் - இளையராஜா ஸ்பெஷலுக்கு வளர நன்னி!

Thamiz Priyan said...

நல்ல தொகுப்பு பாஸ்! பாக்யராஜ் பாடல், இசையை விட திரைக்கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்... துறல் நின்னு போச்சில் தானே மூக்குத்திப் பூ பாட்டு??

யோ வொய்ஸ் (யோகா) said...

“மலரே தென்றல் பாடும் காலமிது” இன்னும் நான் ரசித்து கேட்கும் பாடல் அண்ணா

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி ஆயில்ஸ்

Robin said...

பாடல்கள் தெரிவு அருமை.
நன்றி.

கோபிநாத் said...

கலக்கிட்டிங்க தல...சூப்பர் தொகுப்பு ;)

Unknown said...

அண்ணோய்...
இப்பைக்கு பிரபலமாய் இருக்கிற பின்னணி இசைக்கோர்வையும் ‘சின்னவீடு' தானே??? (நாகிர்தனா திரனா..)

கானா பிரபா said...

தமிழ் பிரியன் said...

நல்ல தொகுப்பு பாஸ்! பாக்யராஜ் பாடல், இசையை விட திரைக்கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்... துறல் நின்னு போச்சில் தானே மூக்குத்திப் பூ பாட்டு?//

நன்றி பாஸ், மூக்குத்திப்பாட்டு மெளன கீதங்களில். வயசானாவே இப்படித்தானாம் ;)

கானா பிரபா said...

யோ வொய்ஸ் (யோகா) said...

“மலரே தென்றல் பாடும் காலமிது” இன்னும் நான் ரசித்து கேட்கும் பாடல் அண்ணா//

வாங்கோ யோகா, இரண்டுபேர் ரசனையும் ஒன்று போல ;)

தாருகாசினி said...

சூப்பர் கலக்சன் அண்ணா....சும்மாவே இளையராஜா பாட்டு எண்டா உயிரைக்குடுத்து கேக்கிற ஆள் நான்...ஒரு பாட்டு பிடிச்சா கொஞ்சநாளைக்கு எண்ட திருவாசகம் திருப்பள்ளிஎழுச்சி எல்லாமே அந்தப்பாட்டாதான் இருக்கும்..இப்ப எல்லாம் "ஹோலி ஹோலி..." தான்....பாட்டில தொடக்கத்தில் ஒரு இசை வருமே ..அதயே ஒரு பத்து தரம் திருப்பி திருப்பி போட்டு கேட்பன் எண்டா பாத்துகொள்ளுங்க.... ஏற்கனவே ஓட்டு போட்டிட்டன்...நீங்க எழுதினதுக்காக இல்ல ...என்ட இளையராஜாவுக்காக ....:)

கானா பிரபா said...

Robin said...

பாடல்கள் தெரிவு அருமை.
நன்றி.//

வருகைக்கு நன்றி ரொபின்


கோபிநாத் said...

கலக்கிட்டிங்க தல...சூப்பர் தொகுப்பு ;)//

;) நன்றி தல

கானா பிரபா said...

Kiruthikan Kumarasamy said...

அண்ணோய்...
இப்பைக்கு பிரபலமாய் இருக்கிற பின்னணி இசைக்கோர்வையும் ‘சின்னவீடு' தானே??? (நாகிர்தனா திரனா..)//

தம்பிறீ

ஓம் இதுதான் அது ;)

//தாருகாசினி said...

ஏற்கனவே ஓட்டு போட்டிட்டன்...நீங்க எழுதினதுக்காக இல்ல ...என்ட இளையராஜாவுக்காக ....:)//

ஓட்டுப் போட்டதுக்கு நன்றி தங்கச்சி, வோட்டும் வச்சிட்டீங்களே பின்னூட்டத்தில் ;)

Unknown said...

நல்ல பாடல்கள் தேர்வு. "பல நாள் ஆசை திருநாள் ஆச்சு மண நாள் காண்போம் வா வா" இப்போது தான் முதன் முதலாய் கேட்கிறேன். பாடலை மிகவும் ரசித்தேன்.

அன்புடன்
மீனாட்சிசுந்தரம்

S Maharajan said...

தங்கசங்கிலி மின்னும் பைங்கிளி -

“மலரே தென்றல் பாடும் காலமிது”

இரண்டும் என்னோட பேவரைட்டு
நல்ல தொகுப்பு தல!

mani said...

\\தும்பி வா // இந்த மெட்டு தூறல் நின்னு போச்சு என்ற படத்தில் வரவேண்டிய மெட்டு.
தூறல் நின்னு போச்சு படத்திற்கான கம்போசிங்கிள் ராஜாவுடன் இருந்து மெட்டுக்களை தேர்வு பண்ணியது இயக்குனர் பாண்டியராஜான்தான், பிறகு மெட்டுக்களை கேட்ட பாக்யராஜ்க்கு \\தும்பி வா// மெட்டு பிடிக்காமல் போக ராஜாவிடம் வேறு மெட்டு கேட்க உடனே அவர் கொடுத்த மெட்டுத்தான் நாம் திரையில் கேட்ட \\தங்க சங்கிலி// என்ற பாடல்; இதை பாண்டியராஜான் ஒரு பேட்டியில் குறிபிட்டிருந்தார் ..

கானா பிரபா said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மீனாட்சி சுந்தரம் மற்றும் தல மகராஜன்

வணக்கம் மணி

தும்பிவா பாட்டு ஏற்கனவே 1982 இல் வந்த ஓளங்கள் படத்தில் வந்துவிட்டதே, இந்த மெட்டை மீண்டும் ராஜா பயன்படுத்த எண்ணியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

mani said...

\\ தும்பிவா பாட்டு ஏற்கனவே 1982 இல் வந்த ஓளங்கள் படத்தில் வந்துவிட்டதே, இந்த மெட்டை மீண்டும் ராஜா பயன்படுத்த எண்ணியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.// சரிதான் கானா, நான் தமிழில் முதன் முதலாக தூறல் நின்னு போச்சு என்ற படத்தில் தான் வந்திருக்கவேண்டிய மெட்டு இது என்று போட்டிர்க்கவேண்டும்; !!இந்த இரண்டு தொகுப்பையும் பார்த்திருக்கிறீர்களா !! http://www.youtube.com/watch?v=y0JXkgigVRI
http://www.youtube.com/watch?v=ZDCRoA9BSoE

வாசுகி said...

பாக்யராஜ் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர். அவரது 'வீட்டில விசேசங்க ', மெளன கீதங்கள் படம் பார்க்க கிடைக்கவில்லை.

தங்கசங்கிலி மின்னும் பைங்கிளி - ஒவ்வொரு நாளும் இந்த பாடலை கேட்பேன்.

'இது நம்ம ஆளு' படமும் இளையராஜா இசை தானே??? இல்லையா?
அம்மாடி இது தான் காதலா, சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் போன்ற பாட்டுகள் இனிமையானவை.

கானா பிரபா said...

இணைப்புகளுக்கு மிக்க நன்றி மணி, பார்க்கின்றேன்

வாங்கோ வாசுகி, கன காலத்துக்குப் பிறகு
இது நம்ம ஆளு இசை பாக்யராஜே தான், ராஜா அல்ல‌

geethappriyan said...

http://thatstamil.oneindia.in/movies/specials/2010/03/ilayaraja-is-the-pride-india-moh.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+oneindia-thatstamil-all+%28Oneindia+-+thatsTamil%29

தல நேரம் இருந்தால் படியுங்க.

geethappriyan said...

தல அத்தனையும் முத்து.
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்களின் தொகுப்புக்கு மிக்க நன்றி

கானா பிரபா said...

வருகைக்கும் இணைப்பும் நன்றி தல கார்த்திகேயன், இணைப்பை வாசித்து ரசித்தேன்

suresh said...

excellent post
in andhi neram song

second stansa

padam muthal thalaivarai

parthirentha thalaivarai

i excellent

i think it is gangai amaran

great job friend

t v suresh

கானா பிரபா said...

மிக்க நன்றி சுரேஷ்

Anand said...

இன்று உங்கள் ட்வீட் பார்த்து இங்கு வந்தேன். அருமையான பதிவு அண்ட் பாடல் தெரிவு.
நன்றி கானா சார் !.

கானா பிரபா said...

மிக்க நன்றி ஆனந்த்