சின்னஞ்சிறு பூவே
உன்னைத்தொடும் போதே
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே
குளிர் மேகம் கண்ணுக்குள்ளே
சிந்துதே தேனும் சொல்லுக்குள்ளே
எந்தன் மன வீணையின் சுக ராகம்
உனைத்தானே தினம் பாடுது.....
அப்போது இரண்டாம் கட்ட ஈழப் போ ர் சூடு பிடிக்க ஆரம்பித்த நேரம், கொழும்பில் படிப்பைத் தொடரலாம் என்று வீட்டுக்காரர் முடிவில் அங்கு போகிறேன். ஆனால் எனக்கெல்லாம் என் சொந்த ஊரே சொர்க்கம் என்று கொழும்புப் பள்ளிக்கூடத்தில் சேராமல் மூன்றாவது வாரத்திலேயே ஊருக்குத் திரும்பி விடுகிறேன்.
அந்த சில நாட்கள் கொழும்பில் இருந்த காலத்தில் என்பதாலோ என்னமோ
"சின்னஞ் சிறு பூவே உன்னைத் தொடும் போதே"
https://www.youtube.com/watch?v=6QlClbSxzb8
பாடலை எப்போது கேட்டாலும் அந்த நாட்களுக்கு இழுத்துப் போய் விடும்.
2015 ஆம் வருஷம் தமிழகத்துக்கு மூன்று நாள் சூறாவளிச் சுற்றுப் பயணம் போன போது அரை நாளை ரிட்சி தெருவுக்கும் அர்ப்பணித்திருந்தேன். அங்கே தான் எல்பி ரெக்கார்ட்ஸ் கிடைக்கும் என்ற நண்பர்களின் வழிகாட்டலில் அங்கு சென்று ஒரு கடையை மேய்ந்த போது நைந்து போய், பழுப்பேறிய அட்டைகளுடன் இருந்த எல்பி ரெக்கார்ட்ஸ் இற்கு மத்தியில் "ஆத்தா உன் கோயிலிலே" பட இசைத்தட்டு புத்தம் புதுசாக இருந்தது.
அப்போது பலதை அள்ளியதால் இது புறந்தள்ளுப்பட்டதே என்று என்னையே பின்னர் நொந்து கொண்டேன் சிட்னி வந்த பின்.
சின்னஞ்சிறு பூவே பாடலைக் கேட்கும் போதெல்லாம் அந்தக் கூட்டுக் குரல்களின் சங்கமமும், ஆரம்ப காலத்துத் தேவாத்தனமான புல்லாங்குழல் வாத்தியப்பாடும் சேர்ந்து கிறங்க வைக்கும்.
முதலில் தனித்தனியாக இயங்கும் இந்த இரண்டு இசை வரிசையும், இரண்டாவது சரணத்துக்கு முன்னர் கூட்டாக கோரஸும் புல்லாங்குழலுமாகச் சங்கமிக்கும் அந்த இசைப் பரிமாறலைக் கேட்கும் போது எழும் உள்ளக் கிளர்ச்சிக்கு எல்லையில்லை அப்பப்பா.....
எஸ்.ஜானகி & மனோ ஜோடிக் குரல்கள் இன்னொரு தனித்துவம் கொடுத்தவை. எப்படி இளையராஜாவின் இசையில் இவர்களுக்கு என்று ஒரு கொத்துப் பாடல் இருக்குமோ அது போலவே, தேவாவின் இசையில் அமைந்த பாடல்களில் இன்னும் சிலதும் உண்டு.
ஆறெங்கும் தானுறங்க
ஆறுகடல் மீனுறங்க..
ஸ்ரீரங்கம் தானுறங்க
திருவானைக்கா உறங்க.
நான் உறங்க வழி இல்லையே ராசா
இங்கே நாதியத்து கிடக்குது உன் ரோசா..
https://www.youtube.com/watch?v=ajomgl8MQ7E
தேவாவுக்கு அடையாளம் கொடுத்த “மனசுக்கேத்த மகராசா” படத்திலேயே இந்தக் கூட்டணி அவருக்குப் புகழ் சேர்த்திருக்கும்.
“சிந்தாமணிக் குயிலே
மணக்கும் புது செந்தாழம் பூ மடலே”
https://www.youtube.com/watch?v=mTTDgEXNNpY
நீங்கள் தேவாவின் ஆரம்பகாலத்தில் இருந்தே அவரின் தீவிர வெறியர் என்றால், ராமராஜன் & குஷ்பு நடித்து வெளிவராத படமான “மண்ணுக்கேத்த மைந்தன்” படத்தில் இடம்பெற்ற முன்சொன்ன ஜானகி & மனோ கூட்டுப் பாடலையும் விட்டிருக்கமாட்டீர்கள்.
“எருக்கஞ்செடியோரம் இறுக்கிப் பிடிச்சியே என் மாமா” என்று எஸ்பிபியுடன் ஜோடி போட்டவர் அந்தப் பாடலும்,
“தூதுவளை இலை அரச்சு
தொண்டையில தான் நனைச்சு
மாமன்கிட்டப் பேசப் போறேன் மணிக்கணக்கா”
https://www.youtube.com/watch?v=YaXtzK2guQY
“தாய் மனசு” மனசு படத்துக்காகக் கொடுத்த ஜானகி & மனோ கூட்டணியின் இந்தப் பாடலும் இந்த ஜென் ஸீ கிட்ஸ் ஐக் கூட விட்டு வைக்கவில்லையே.
“சூரியன்” படத்தில் தேவாவின் துள்ளல் “லாலாக்கு டோல் டப்பிமா” விலும் கோஷ்டி கானம் பாடினார்கள் மனோ & ஜானகி.
“காந்தி பொறந்த மண்” படத்தில்
ஒட்டகத்திலே நீ சட்டப்படி ஏறணும்னா
https://www.youtube.com/watch?v=pjShQxNQg5Q
இப்போது மீண்டும் ஒளித்தரத்தோடு கலக்கலாக யூடியுபில் கிடைக்கும் இந்தப் பாடல்.
“ஓ ஐயாமாரே” (நாடோடிக் காதல்)
https://www.youtube.com/watch?v=VUN2_0Yd6A4
இதையும் இந்தக் கூட்டணியில் சேர்க்கும் அரிய பாட்டு.
“எங்கே எங்கே பொட்டி வச்சா” என்ற பாடலும் “சக்ரவர்த்தி” படத்தில் இந்த ஜோடியில் மலர்ந்தவை. சக்ரவர்த்தியில்
“வாழைத் தோப்புக்குள்ள வாலிபத்துக் காத்தடிக்குதே”
https://www.youtube.com/watch?v=dPULc11MpdE
அந்த ரகளையை மறக்க முடியுமா என்ன?
இன்னொரு ரகளையைக் கேளுங்கள்
“மானா மதுரையிலே என்னோட மாமன் குதிரையிலே (நாடோடி மன்னன்)
https://www.youtube.com/watch?v=110BCp3gStE
இந்தப் பாடலை எல்லாம் ஜானும்மாவைத் தாண்டி யாரை நினைக்க முடியும்?
“அதிகாலை சுபவேளை” படத்துக்காக ஒலிப்பதிவு செய்து பின்னர் “பொண்டாட்டி ராஜ்ஜியம்” படத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட
“ராகம் ஒன்று அது சுகமானது”
https://www.youtube.com/watch?v=0QaJCsolfFg
அடிக்கடி நான் கேட்கும் தேவாப் பாட்டுகளில் ஒன்று.
என்னவொரு ரம்யம் கொடுக்கும் இது.
காத்து வரும் ஜன்னலில்
ஒரு காதல் வந்தது
அது காத்துக் கிடந்த ரெண்டு நெஞ்சை
சேர்த்து வைத்தது..
சின்னஞ்சிறு பூவே
உன்னைத்தொடும் போதே
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே
கானா பிரபா
29.07.2026

0 comments:
Post a Comment