Pages

Sunday, June 12, 2022

“சக்கு சக்கு வத்திக்குச்சி சடுன்னுத்தான் பத்திக்கிச்சு ஒயிலே ஒயிலே” 💃🕺

27 வருடங்களுக்குப் பிறகு தன் பழைய கெத்தோடு வந்து துள்ளிசைத்துக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல். ஆனால் துரதிஷ்டவசமாக பாடலை எழுதிய கவிஞர் பிறைசூடன் அவர்களும், இசையமைத்துப் பாடிய (சுஜாதாவுடன்) ஆதித்யன் அவர்களும் நம்மோடு இல்லை.

பழைய பாடல்கள் மீளுருவாவது தமிழ் சினிமாவில் அப்படியொன்றும் புதுமையல்ல. “பேர் வச்சாலும்” பாடல் கூட 30 வருடங்கள் கழித்து 2.2K kids ஆல் கொண்டாடப்பட்ட போது 

“டேய்! நம்ம யுவன் போட்ட பாட்டைத் தான் 

முன்னாடி அவர் அப்பா போட்டது” 

என்று பேசிக் கொண்டார்கள்.

ஆனால் “சக்கு சக்கு” பாடல் எல்லாம் கொண்டாடப்படும் போது ஒரு தனிப் புளகாங்கிதம் மனதில் தோன்றிப் பரவசமாக்கும். இதே போலத் தான் செளந்தர்யன் இசையில் சிந்து நதி - பூ படத்தில் வந்த “ஆத்தாடி என்ன உடம்பு” https://www.youtube.com/watch?v=zWSwx-3wSiA பாடல் ஹிப் ஹாப் ஆதியால் “நட்பே துணை”யில் https://www.youtube.com/watch?v=8ydPi2viWFE வைரல் ஆகி (பார்த்தீர்களா எனக்கும் 2K kids எழுத்து வருது ) கொண்டாடப்பட்ட போது நாமும் கொண்டாடி மகிழ்ந்தோம்.

காரணம் இந்த மாதிரி அதிகம் பேசப்பட்டாத இசையமைப்பாளர்களுக்கு ஏதோ ஒரு வகையில் கெளரவம் கிட்டுகிறதே என்ற திருப்தி தான்.

“அமரன்” பாடல்கள் வெளிவந்து பட்டி தொட்டியெல்லாம் முழங்கிய போது இலங்கையில் பண்பலை வானொலிகள் தோற்றம் பெற்ற சமயம் அது. எனவே அதற்குப் பின் “ரோஜா” பாடல்கள் வெளிவந்த போது இந்த மாதிரியான எலெக்ட்ரானிக் கருவிகளின் சப்தங்களை நாம் ஆதித்யனிடமேயே முன்பே கேட்டு விட்டோமே என்ற உணர்வே எழுந்தது. அப்போது என்னுடைய மன நிலை ஆதித்யனுக்கும் ரஹ்மானுக்கும் ஒரு சுற்றுப் போட்டி இருக்கும் என்று.

ஆனால் பல வருடங்கள் கழித்து சன் சிங்கர் நிகழ்ச்சியில் “ஒயிலா பாடும் பாட்டுல” https://www.youtube.com/watch?v=Bh2FnegeVIc

பாடலை ஒரு சிறுமி பாடி முடித்ததும் 

 முதன்மை நடுவராக இருந்த கங்கை அமரன் அவர்கள் ஒரு செய்தியைச் சொன்னார்.

“இந்தப் பாட்டு வந்த சீவலப்பேரி பாண்டி படத்தின் பாடல்களுக்கு கீபோர்ட் வாசிச்சது ஹாரிஸ் ஜெயராஜ், இதற்கு முன்னால

“அமரன் படத்தில் கீ போர்ட் வாசித்தது ஏ.ஆர்.ரஹ்மான்.

என்று. அப்பேர்ப்பட்ட திறமைகளின் கூட்டோடு ஆதித்யன் தன் ஆரம்ப காலத்தைக் கட்டமைத்திருக்கின்றார்.

“அமரன்” படத்தின் பாடல்களைக் கேட்டால் அப்படியே பளிங்கு மாதிரி மேம்பட்ட ஒலித்தரம் தெரியும். இன்று ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களைக் கொண்டாடுவதும் இதே மாதிரியானதொரு உச்சபட்ட ஒலி நய நுணுக்கங்களுக்காகத் தான்.

“அமரன்” படத்தின் பாடல்களில் “சந்திரரே சூரியரே” (ஜேசுதாஸ் பாடியது), முஸ்தபா ஆகிய இரு பாடல்களையும் விஸ்வகுரு இசையில் வைரமுத்து எழுதினார். மீதி 6 பாடல்களையும் இந்தப் படத்தில் அறிமுகமான ஆதித்யனுக்காக கவிஞர் பிறைசூடன் எழுதினார்.

பின்னாளில் தன் பேட்டியில் தனக்கு ஒரு படத்தின் முழுப்பாடல்களும் வேண்டும் என்று ஆசைப்பட்ட போது ஆதித்யன் ஓரளவு அதற்குக் களம் அமைத்துக் கொடுத்ததாகவும், அமரன், லக்கிமேன் போன்றவை உதாரணங்கள் என்றும் பிறைசூடன் குறிப்பிட்டிருக்கின்றார்.

இதோ ஆதித்யன் & பிறைசூடன் கூட்டணி ஒன்று சேர்ந்து தம் கூட்டணியில் உச்ச பட்ச ஹிட் பாடலைக் கொடுக்கிறார்கள். அதுதான் “சக்கு சக்கு வத்திக்குச்சி சட்டுன்னு தான் பத்திக்கிச்சு”

அசுரன் (1995) படத்துக்காக அமைகின்றது.

அப்போது ஹாலிவூட்டில் வேற்றுக் கிரகவாசிகளின் படங்களின் கதைகளை உருவித் தமிழில் படங்கள் வெளியான காலத்தில் தக்காளி சீனிவாசன் வெகு பிரபலமான பெயர். அவருடைய தயாரிப்பில் பிரபு (அமலாவும் ஹிஹி) நடித்த “நாளைய மனிதன்”, “அதிசய மனிதன்” போன்ற படங்களை இயக்கியவர் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான வேலு பிரபாகரன் அவர்கள். இந்த மாதிரித் தந்திரக் காட்சிகள் வரும் படங்களை இது போலவே என்.கே.விஸ்வநாதன் போன்ற ஒளிப்பதிவாளர்களையே இயக்க விடுவதுண்டு.  அப்படியாகத் தான் ஆர்.கே.செல்வமணி தயாரித்த “அசுரன்” படத்துக்கும் வேலு பிரபாகரன் அவர்களே இயக்குநர்.

வீரப்பனின் கதையை மையப்படுத்தி கேப்டன் பிரபாகரனின் “வீரபத்திரன்” என்ற பாத்திரத்தை உருவாக்கிய செல்வமணி இங்கே அசுரன் கதையை எழுதிய போது அதே வீரபத்திரனைக் கொண்டு வருகிறார். மன்சூரலிகானுக்கும் அதே பாத்திரம். அவரின் தம்பி மாதையனாக ( நிஜத்தில் அண்ணன், சமீபத்தில் தான் சிறையில் இறந்து போனவர்) நெப்போலியன், நெப்போலியனின் முறைப் பெண் ஆக ரோஜா. மாதையன் கொல்லப்பட்ட சூழலில் வீரபத்திரனை வேட்டையாட வரும் காவல்துறையில் அருண் பாண்டியன் கூட்டணி. சத்திய மங்கலம் காட்டுப் பகுதியில் வீரபத்திரனைத் தேடும் வேட்டையில் தன் அணியினர் ஒவ்வொருவராகக் கொல்லப்பட, அதற்குப் பின்னால் இருப்பது பூமிக்கு வந்த வேற்றுக்கிரக வாசிகள் என்று வீரப்பனின் கதைக்குள் ஆர்னால்டின் Predator ஐத் திணித்து, அப்படியே குழப்பியடித்துப் போட்ட படம் தான் அசுரன். நன்றாக வர வேண்டிய படத்தில் விசித்திராவின் காமக் களியாட்டம், செந்திலின் கொடுமையான நகைச்சுவை இழுவைத் திரைக்கதையோடு பயமுறுத்தி விட்டது.

என்ன கொடுமை என்றால் இதே மாதிரி வீரப்பனின் தம்பியாக நெப்போலியன் நடித்த தரணி இயக்கிய முதல் படம் எதிரும் புதிரும். 

ரோஜாவுக்கும் நெப்போலியனுக்கும் இடையில் நிச்சயதார்த்தம் நடக்கும் போது தான் இந்த “சக்கு சக்கு” பாடல் பிறக்கிறது. பிரபுதேவா & ராஜூ சுந்தரம் தொடக்கி வைத்த நடன இயக்குநர் ஒரு பாட்டுக்கு ஆடும் ராசியாக நடன இயக்குநர் கல்யாண் (கல்லூரி வாசல் வில்லன்) இந்தப் பாடலில் தோன்றி ஆடுவார். 

இந்தப் பாட்டுக்கு கவிஞர் பிறைசூடன் அவர்கள் வந்தமைந்தது ஒரு அழகான நிகழ்வு. ஏனெனில் இதே ஆர்.கே.செல்வமணியின் “ஆட்டமா தேரோட்டமா” பாடலுக்கும் வீரபத்திரன் குழு ஆட்டம் போடும் சூழலுக்கு அவரே பாட்டு எழுதுகிறார். ஆனால் இம்முறை ஆதித்தனோடு ராசியான கூட்டணியாக இன்னொரு வாசல் வழியாக வருகிறார் பிறைசூடன்.

“சக்கு சக்கு வத்திக்குச்சி” பாடல் வெளிவந்த காலம் சின்னத்திரையில் Music Video யுகம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. ஒரு பக்கம் சன் டிவியின் சூப்பர் ஹிட் பாடலாக, பின்னாளில் SS Music தத்தெடுத்துக் கொண்டது போல என்று போட்டுத் தாக்கினார்கள். மன்சூரலிகான் தன் தனித்துவமான உடல் மொழியோடு பாடலில் அதகளம் பண்ண, வெட்கப் புன்னகையோடு நெப்போலியன், தன் கனவு கை கூடும் குதூகல ஆட்டத்தோடு ரோஜா குழு என்று பாடல் அவ்வளவு அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கும். 

“சக்கு சக்கு வத்திக்குச்சி” பாடலின் துள்ளிசை மட்டுமல்ல அந்தப் பாடலின் 

அமைப்பே அழகாக இருக்கும். பங்க்ரா பாணியோடு நம் தமிழ்ப் பண்பாடும் கலந்து கட்டி ஆடும் அழகியல் தொனிக்கும்.

தூண்டில் போட்டது கண்ணிலா

அட நீயும் உள்ளது என்னிலா

தேரில் வந்தது தேன் பலா 

போதை வந்தது நெஞ்சிலா

மஞ்சள் பூசிடும் பெண் நிலா

அவள் மங்கை ஆனதும் திருவிழா

தெய்வம் வந்தது நேரிலா

குளிர் தென்றல் வந்தது ஓர் உலா

பூ ..மாலை போட வா...

பூ...ங்காற்றே ஓடி வா...

இந்த வரிகளைப் படிக்கும் போதே அந்தத் துள்ளலும், தாமததித்து மீண்டும் கலக்கும் வரிகள் என்று அற்புதமான மெட்டுக் கட்டமைப்பு அது.

இந்தப் பாடலுக்கெல்லாம் ஆதித்யன் என்ற பாடகரைத் தாண்டி வேறொருவரையும் சிந்திக்க முடியாது. 

பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா Harish Sai Raghavendra தன்னுடைய காணொளித் தளத்தில் பாடலாசிரியர் பிறைசூடன், இசையமைப்பாளர் ஆதித்யன் ஆகியோர் குறித்த நெகிழ்வான அனுபவப் பகிர்வையும் பகிர்ந்திருக்கிறார் பாருங்கள். 

https://youtu.be/OGaxSYgs6Vk

இசையமைப்பாளர் ஆதித்யன் குறித்த என் முந்திய பதிவு

https://www.facebook.com/1393380529/posts/10224943115270465/?d=n

“சக்கு சக்கு” பாடல் விக்ரம் புண்ணியத்தில் மீண்டும் இணையத்தைக் கலக்கிய போது இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தானும் அந்தப் பாடலில் இணைந்து பங்களித்ததை மகிழ்வோடு பகிர்ந்தார். 

https://twitter.com/Jharrisjayaraj/status/1533737175241613312?s=20&t=znFt8WeBaCE8bgIqu8GDRA&fbclid=IwAR2r8t1YROyasacaMkOIyj7kSz9OwbNBYnwAeHrbrV1ZECWZ3ZZVgFDOnIM

இன்று இசையமைப்பாளர் ஆதித்யனும், பாடலாசிரியர் பிறைசூடனும் நம்மோடு இருந்திருந்தால் இன்னும் அக மகிழ்ந்திருப்பார்கள் இல்லையா?

கானா பிரபா

12.06.2022

புகைப்படம் நன்றி : நடிகர் நெப்போலியன் தளம்


0 comments: