Pages

Thursday, June 23, 2022

இசையமைப்பாளர் ஹம்சலேகா 71 🎸❤️

கோவிந்தராஜூ கங்காராஜூ என்ற இயற்பெயர் கொண்டவர் இசையைப் படைக்கும் பிரம்மனின் புனைபெயர் தாங்கி "ஹம்சலேகா" ஆனவர். இவர் பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் இயங்குபவர். இன்று தனது 71 வது அகவை
காண்கிறார்.
“பருவ ராகம்” படத்துக்குப் புதுப் புதுக் குரல்களில் புத்திசை கொடுக்க வேண்டும் என்று நான் நினைத்து அந்த முயற்சியில் சோர்ந்து தோல்வி காணும் நம்பிக்கையற்ற தருணத்தில் தான் எஸ்பிபி பாட வந்தார்.
என்னுடைய திரையுலக வாழ்க்கையின் விதியை அப்படியே மாற்றி எழுத வைத்தார்”
என்று நேசிப்போடு எஸ்பிபியை நினைவு கூருகிறார் ஹம்சலேகா. ( நன்றி : metrosaga இணையம்)
“பூவே உன்னை நேசித்தேன்
பூக்கள் கொண்டு பூஜித்தேன்”
கர்னாடகா எல்லை தாண்டி தமிழகத்தில் ஊடுருவி ஒரு மிகப் பெரிய இசைத் தாக்கத்தை, அதுவும் இளையராஜா காலத்தில் நிகழ்த்திக் காட்டியது “பருவராகம்”.
தமிழராக இருந்தாலும் கன்னட சினிமா உலகில் கடை விரித்தவர் தயாரிப்பாளர் வீராச்சாமியும் மகனும் நடிகனுமான ரவிச்சந்திரன்.
ரவிச்சந்திரன் நடித்த கன்னடத் திரைப்படமான “பிரேம லோகா” மிகப் பெரிய வெற்றியைக் குவித்தது. பாடல்கள் சூப்பர் ஹிட். அதுவே தமிழில் “பருவ ராகம்” ஆனது.
எனது வாழ்க்கைத் துணை என் மனைவி
எனது திரையுலகத் துணை ரவிச்சந்திரன்
என் இசையுலகத் துணை எஸ்பிபி என்று நன்றியோடு கொண்டாடினார் “பிரேம லோகா (பருவ ராகம்) தந்த விளைச்சலால் தொடர்ந்த பந்தத்தால்.
நாயகன் ரவிச்சந்திரன் கதை, திரைக்கதை, இயக்கத்தைக் கவனித்துக் கொண்டார். ஹம்சலேகா பாடல்கள் தமிழுக்கு வந்த போது அம்சலேகா ஆனார்.
பருவ ராகம் படத்தில் மொத்தம் 11 பாடல்கள். அவற்றுள்
கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி கூட்டில்
“காதல் இல்லை என்று சொன்னால்”
எஸ்.ஜானகி & எஸ்பிபி கூட்டுச் சேர்ந்த
“பூவே உன்னை நேசித்தேன்”
பட்டி தொட்டியெங்கும் எண்பதுகளில் பருவ ராகம் பாடியது.
“பிரேம லோகா” கன்னடப் பாடல் திரட்டு
“பருவ ராகம்” தமிழ்ப் பாடல் திரட்டு
“கொடி பறக்குது” படத்தில் இணைந்த இயக்குநர் பாரதிராஜா மற்றும் இசையமைப்பாளர் ஹம்சலேகா கூட்டணி இன்னொரு இளையராஜா ஊடலோடு மீண்டும் "கேப்டன் மகள்" படத்துக்காகச் சேர்ந்தது.
"நந்தவனப் பூக்கள் பூத்ததே" பாடல் பிடித்துப் போனதுக்குக் காரணமே எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொடுக்கும் அந்த கெத்தான குரல் தான்.
“எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று” பாடலில் மெது மெதுப்பாகப் பாடும் எஸ்பிபியா இப்படி ஒரு மிரட்டல் குரலில் பாடுவது என்ற பிரமிப்பும் கூடவே.
மென்மையாக ஒடுங்கும் சித்ரா குரலுக்கு மாறுபட்ட வில்லத்தனம் மிளிரும் குரல் நெப்போலியனுக்கான முதல் பாடல் என நினைக்கிறேன். இதே மாதிரித் தானே "மண வினைகள் யாருடனோ" என்று எம்.எஸ்.விஸ்வநாதன் முதன் முதலாக ரஜினிக்கு குரல் கொடுத்திருப்பார்.
கேப்டன் மகள் பாடல்கள்
அந்தக் காலத்தில் “கொடி பறக்குது” பாடல்கள் ஒரு புறம் பட்டையைக் கிளப்ப, இன்னொரு புறம் “கொடி பறக்குது” சேலைக்கும் ஏக மவுசு. ஒரு படத்தில் நாயகி அணியும் வித்தியாசமான நிற வடிவமைப்புக் கொண்ட சேலைக்கு அந்தப் படத்தின் பெயரையே வைத்து விடும் பாரம்பரியம் அது. சேலைக் கடைகளில் தீபாவளிக்கு “கொடி பறக்குது” சேலை என்ற விளம்பரம் யாழ்ப்பாணத்தின் நகரப் பகுதி விளம்பர ஒலிபரப்பு லவுட்ஸ்பீக்கட் வழியே பரவியது இன்னும் பசுமையாக நினைவில்.
தமிழில் இளையராஜா & பாரதிராஜா கூட்டணியில் விரிசல் வந்த போது இசையமைப்பாளர் தேவேந்திரனோடு “வேதம் புதிது” வழியாக ஒரு மெல்லிசைக் கூட்டணி எழுந்தது. தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி, அமலாவோடு பாரதிராஜா சேர்ந்து எதிர்பார்ப்பைக் கிளப்பிய படமாக “கொடி பறக்குது” வந்தது. அம்சலேகாவோடு முதன்முறை இணைந்தார் பாரதிராஜா.
சொல்லி வைத்தது போலக் கில்லி அடித்தது கொடி பறக்குது படப் பாடல்கள். தன் பாணியில் ஒவ்வொரு பாடல்களுக்கும் அறிமுகம் வேறு கொடுத்துச் சிறப்பித்திருந்தார் “கொடி பறக்குது” இசைப் பேழையில் பாரதிராஜா.
“ஓஓஓ காதல் என்னைக் காதலிக்கவில்லை”
இரண்டு வடிவங்களில் ஒலிப்பதிவானது.
ஒன்று எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு வாணி ஜெயராம், இன்னொன்று சித்ரா சேர்ந்தது. படத்தில் வந்தது எஸ்பிபி & வாணி ஜெயராம் சேர்ந்தது தான்.
“சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு” எண்பதுகளின் பாடல் தொகுப்புகளில் தவிர்க்க முடியாத பாட்டு. கூடவே சேலைக் கடைகளுக்கான வானொலி விளம்பரங்களுக்கும் கை கொடுத்தது.
எஸ்பிபியின் “அன்னை மடியில்” உருக வைத்தது, மொத்தத்தில் கொடி பறக்குது படம் வணிக ரீதியாகப் போகா விட்டாலும், பாடல்கள் இளையராஜாத்தரமாக இருந்தன.
கொடி பறக்குது பாடல்கள்
ரஜினிக்கும் ஹம்சலேகாவுக்கும் அப்படி என்ன ராசியோ, கொடி பறக்குது பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியும் படம் எதிர்பார்த்த அளவில் போகாத சூழலில், இன்னொரு படம் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது அதுதான் “நாட்டுக்கு ஒரு நல்லவன்”. ரஜினி ரசிகர்களே இந்தப் படத்தைக் கெட்ட கனவாக மறக்க நினைக்கும் வேளை இங்கேயும் அம்சலேகா தான் கை கொடுக்கிறார். கானா பிரபா
எஸ்பிபி & எஸ்.ஜானகி பாடிய “சின்னக் கண்ணம்மா”, “தென்றலே தென்றலே” ஆகியவை ரசிக்கும் ரகம்.
நாட்டுக்கு ஒரு நல்லவன் படத்தைத் தயாரித்தவர் கன்னட நடிகர் ரவிச்சந்திரன், தான் கன்னடத்தில் அறிமுகமாக்கிய குஷ்புவோடு இங்கே ரஜினியோடு இணை நாயகனாகவும் நடித்தார். அதாவது கன்னடத்தில் ரவிச்சந்திரன், தெலுங்கில் நாகார்ஜூனா, தமிழில் ரஜினி என்று மூன்று நாயகர்கள் மூன்று மொழிகள் என்று சம காலத்தில் இந்தப் படங்களை இயக்கி வெளியிட்டார் ரவிச்சந்திரன். தமிழ், தெலுங்கில் இணை நாயகனாக ரவிச்சந்திரன், கன்னடத்தில் தானே முக்கிய நாயகனாகவும், ரமேஷ் அரவிந்த் இணை நாயகனாகவும் என்று இயக்கிய அந்தப் படங்கள் மூன்று மொழிகளிலுமே பப்படம் ஆயின.
நாட்டுக்கு ஒரு நல்லவன் பாடல்கள்
பிரபல தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டி (நடிகர் விஷாலின் அப்பா) 1989 இல் இரண்டு படங்களில் இசையமைப்பாளர் அம்சலேகாவை ஒப்பந்தம் செய்தார். அதில் ஒன்று “இது உங்க குடும்பம்”,
ரகுவரன் ராதிகா போன்றோர் நடித்தது. பாடல்கள் பெரிதாகப் போய்ச் சேரவில்லை எனினும் அந்தக் காலகட்டத்தில் பழைய பாடல்களைக் கலந்து புது வரிகளை இட்டுக் கட்டிப் பாடல்கள் புனையும் மரபிருந்தது. உதாரணத்துக்குத் தாய்க்கு ஒரு தாலாட்டு படத்தில் வரும் “அலையில பிறந்தவள்” பாட்டு இளையராஜாவின் பங்குக்கும், சங்கர் - கணேஷ் இரட்டையர்கள் இராம நாராயணன் படங்களிலும் இந்தக் கலவைப் பாடல்களைக் கொடுத்து வந்தனர். அதே பாங்கில் இது உங்க குடும்பம் படத்தில் “நாணமோ இன்னும் நாணமோ” என்ற கலவைப் பாடலை மலேசியா வாசுதேவன், சித்ரா ஆகியோர் பாடினர்.
இது உங்க குடும்பம் பாடல்கள்
“ஜாடிக்கேத்த மூடி” படத்தில் மொத்தம் ஐந்து பாடல்களும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், நான்கு பாடல்கள் எஸ்.ஜானகியோடு என்று அள்ளிக் கொண்டார்.
“தாலி கட்டிய கட்டிய தங்கக்கிளியே
தள்ளிப்படுத்துக்கடி”
“விட்டு விட்டுத் துடிக்குது மனசு”
என்று எஸ்பிபி & எஸ்.ஜானகி கொடுத்த ஹிட் பாடல்கள் பாண்டியராஜனுக்கு இந்தப் படம் வழியாகப் போய்ச் சேர்ந்தது.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் Dir RV Uthayakumar & இசைஞானி இளையராஜா கூட்டணி தொண்ணூறுகளில் எப்படிக் கலக்கியது என்பதை இந்த உலகமே அறியும். ஆனால் ஆர்.வி.உதயகுமாரின் முதல் இரண்டு படங்களில் “உரிமை கீதம்” மனோஜ் - கியான் இரட்டையர்கள் இசையிலும், தொடர்ந்து வந்த “புதிய வானம்” படம் அம்சலேகாவின் இசையிலும் வந்தது. கானா பிரபா
புதிய வானம் படத்திலும் ஐந்து பாடல்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியமே சுளையாக அனைத்தையும் எடுத்துக் கொண்டார். சிவாஜிக்கும் & சத்யராஜுக்குமான கூட்டுப் பாடலை மலேசியா வாசுதேவன் & எஸ்.பி.பாலசுப்ரமணியம் (பெண் குரல் பேபி சங்கீதா) சேர்ந்து “ஒரு பாடல் சொல்கிறேன்” என்றும்,
“ராக்குயிலே” என்ற சூப்பர் ஹிட் பாடலையும் ஆர்.வி.உதயகுமாரே எழுதினார்.
புதிய வானம் பாடல்கள்
இயக்குநர் P.வாசு நட்சத்திர இயக்குநராக மிளிர்ந்து கொண்டிருந்த காலத்தில் “வேலை கிடைச்சிடுச்சு” படம் அமைகிறது அவருக்கு. ஶ்ரீ ராஜகாளியம்மான் நிறுவனத்தின் தயாரிப்பு.
வாசுவுக்கு மிகவும் பிடித்த சத்யராஜ் தான் நாயகன், இதைத் தொடர்ந்து “நடிகன்” படத்திலும் இந்தக் கூட்டணி பட்டையைக் கிளப்பியது. அதற்குப் பின்னர் கூட சின்னத்தம்பி படத்தில் சத்யராஜே நடிக்க வேண்டியிருந்தது. தயாரிப்பாளர் பாலு வேறு சத்யராஜின் தீவிர ரசிகர். ஆனால் சத்யராஜ் பிரபு தான் பொருத்தமானவர் என்று மறுத்துத் திருப்பி விட்டார்.
இப்பேர்ப்பட்ட சத்யராஜ், கவுண்டமணி, P.வாசு கூட்டணி இருந்தால் வேலை கிடைச்சிடுச்சு சொல்லவா வேண்டும்.
இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தையும் கவிஞர் வாலியே கவனித்துக் கொண்டார்.
“நெனச்சதும் நடந்தாச்சு உனக்கொரு வேல கிடைச்சிடுச்சு” பாட்டு அந்தக் காலத்தில் வானொலிகளின் பிரியப் பாட்டு.
“எலேலேலோ ஆஆஆஆஆ”
எஸ்.பி.பியின் அற்புதமான ஆலாபனை அந்த வயல் தோப்பு எங்கும் வியாபிப்பது போன்ற பிரமை எழ, பாட்டு வருகிறது இப்படி
“சேத்துக்குள்ள நாத்து நட்டு
நாத்துக்கொரு பாத்தி கட்டுறோம்
காட்டுக்குயில் போட்டுத் தந்த
மெட்டுக்குள்ள பாட்டுக் கட்டுறோம்”
என்று “கூட்டுக் குரல்கள் குலவ”
“களினியிலே நெல் மணிகள் கண் மலர”
என்று தொடரும் அற்புதமான பாட்டுத் தலைவன் எஸ்பிபி & கூடவே சின்னக்குயில் சித்ரா இணையும் அற்புதமான பாட்டு, வேலை கிடைச்சிடுச்சு படத்தில் உண்டு.
வேலை கிடைச்சிடுச்சு பாடல்கள்
என்னைப் பொறுத்தவரை அம்சலேகா தமிழுக்கு வந்து கொடுத்த கொடி பறக்குது பாடல்க்ளையோ அன்றி கேப்டன் மகள் பாடல்களையும் கடந்து நான் வெகுவாக ரசிக்கும் பாட்டு இது. உண்மையில் அம்சலேகா அந்தக் கர்னாடக மண்ணின் இசைச் சாயத்தைத் தமிழில் கலக்க விட்டிருப்பது போன்ற அற்புதமான கலாசாரப் பரிமாற்றமாக இந்தப் பாட்டை எப்போதும் ரசிப்பேன்.
இதே படம் கன்னடத்தில் மீள் தயாரித்த போதும் அம்சலேகா தான் இசை. அங்கே இதே சூழலுக்கு எஸ்பிபி & சித்ரா பாடும் இன்னொடு வடிவத்தில் மிளிரும் இந்தப் பாடலை Kolu Kolenna Kole ( படம் ரெளடி எம்.எல்.ஏ) https://www.youtube.com/watch?v=oXA1Ti8EseA என்று கொடுத்திருக்கிறார் பாருங்கள் அங்கே தான் அவரின் இசை வற்றாத நதி என்று நிரூபிக்கிறது.
சங்கீத சாகர ஞானயோகி பஞ்சாட்சர கவி படத்தில் மொத்தம் 10 பாடல்கள். கே.ஜே.ஜேசுதாஸ் உட்பட்ட ஜாம்பவான்களோடு தன் பங்குங்கு 3 பாடல்களை எஸ்பிபி பாடினார். இந்தப் படத்தின் வழியாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்குச் சிறந்த பாடகர் என்ற விருதும், ஹம்சலேகாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் என்ற விருதும் ஆக தேசிய விருதைச் சுவீகரித்துக் கொண்டனர்.
அதுவரை கவனிக்கப்படாத நாயகனாக, தமிழில் “பொய்முகங்கள்" என்ற தோல்விப் படத்திலும், கன்னடத்தில் ஒரு சில படங்களையும் நடித்த பக்காத் தமிழர் ரவிச்சந்திரனும், அது போலவே ஒரு முக்கிய அடையாளம் இல்லாமல் இயங்கிய ஹம்சலேகாவும் “பிரேமலோகா” (பருவ ராகம்) வெற்றியைத் தொடர்ந்து அடுத்த தசாப்தங்கள் கன்னட லோகத்தையே கூட்டணி போட்டு கட்டியாண்டார்கள்.
இசையமைப்பாளர் ஹம்சலேகா எண்பதுகளில் தொடங்கி கன்னடப் படவுலகில் இசையமைப்பாளராக, கதாசிரியராக, பாடலாசிரியராக இயங்கியிருக்கிறார். கன்னட உலகில் அவர் ஒரு கடல்.
ஹம்சலேகா குறித்த விரிவாகவும், அவரோடு எஸ்பிபி இயங்கிய பன்முகப்பட்ட பாடல்கள் குறித்தும் மூன்று அத்தியாயங்களில் SPB பாடகன் சங்கதி நூலில் விபரித்துள்ளேன்.
அந்த நூலின் மூன்றாம் பதிப்பு இங்கே விற்பனையில்
அகநாழிகை Pon Vasudevan Aganazhigai வழியாக
வாட்சாப் + 91 70101 39184
கானா பிரபா


0 comments: