Pages

Saturday, August 22, 2026

மாலைப் பொழுதின் மயக்கத்திலே


 மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி….

அடிமனதில் இசைஞானி இளையராஜா பாடுவது போலவே தொனிக்கும் எனக்கு.
ஏனெனில் அவருக்கு உயிருக்கு உயிரான பாட்டு.

“நான் இசையமைப்பாளன் ஆகக் காரணமான பாட்டு. இவர்கள் இல்லாமல் நானில்லை” என்று மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் & ராமமூர்த்திக்கு முன்னால் வாக்குமூலம் சொன்னார் அல்லவா?

“நானா பாடலையே நீதான் பாட வச்சே” என்று சுசீலாம்மாவைப் பார்த்து ராஜா பாடுவாராம், அதற்கும் காரணம் இந்த “மாலைப் பொழுதின் மயக்கத்திலே” பாடல் தான்.

இந்தப் பாடலைப் பற்றி கடந்த 65 ஆண்டுகளாகப் பேசாத வாய் இல்லை என்போம்.

பாக்யலட்சுமி படத்தை இந்தப் பாடலுக்காகவே ஒரு சமயம் பார்த்திருந்தேன்.
ஆச்சரியமாக இந்தப் படத்தில் ஒரு குறியீடு இருந்தது.
அது
“வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்”
என்று பாரதியார் பாடிய சாட்சாத் சரஸ்வதி தேவி தான்.

அதென்ன குறியீடு?
இளம் விதவையாக அதாவது தன் கணவன் இறந்து விட்டான் என்ற பொய் நினைப்பில் இருக்கிறாள் கமலா (செளகார் ஜானகி).
கமலா (தாமரைப்பூ) வணங்கும் தெய்வமாகப் படத்தில் காண்பிக்கப்படுவது சரஸ்வதி தேவியை.
அத்தோடு கமலாவின் அந்தத் தூய வெள்ளுடை தானே சரஸ்வதியின் சேலையும்?

“மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
கனவு கண்டேன் தோழி”

பாடலை கமலா பாடுகிறாள், தான் பால்ய விவாகம் செய்த, திரும்பி வந்த கணவன் முன்னால், அவனோ தன் தோழியின் கணவாகக்கப்பட்டவன் ஆகியிருக்கிறான்.
இதேதும் அறியாத அந்தத் தோழி மீட்டுகிறாள் சரஸ்வதியின் நாத வாத்தியமான வீணை !

செளகார் ஜானகியிடம் பேட்டி எடுத்தால் மறக்காமல் ஞாபகப்படுத்துவார்
“பாக்யலட்சுமியை விட்டுட்டீங்களே” என்று. சாய் வித் சித்ராவிலும் நடந்தது.

மெல்லிசை மன்னர்கள், சுசீலாம்மா இவர்களைத் தாண்டி ஆதார சுதியாக இருக்கும் அந்தக் கண்ணதாசன் கவிச்சிறப்பை என்ன சொல்ல?

கனவில் வந்தவர் யாரென கேட்டேன்
கணவர் என்றார் தோழி

கனவு => கணவர்
சந்தத்துக்கு எழுதும் கைப்பக்குவம் பாருங்கள் அந்தச் சொல் விளையாட்டு தரும் வியப்பு.

கண்ணதாசன் பாடல்களில் காட்சிச் சூழல் தாண்டி உலகியல் தத்துவம் பொதிந்திருக்கும்.
இந்த வரிகள் எல்லாச் சூழலுக்கும் பொருந்தும் தானே?

இன்பம் சில நாள் துன்பம் சில நாள்
என்றவர் யார் தோழி
இன்பம் கனவில் துன்பம் எதிரில்
காண்பது ஏன் தோழி !

கானா பிரபா
22.08.2026 



0 comments: