Pages

Friday, December 23, 2022

அங்கும் இங்கும் பாதையுண்டு இன்று நீ எந்தப் பக்கம் ❤️


கே.பாலசந்தர் என்ற படைப்பாளியின் கருவூலத்தின் இசை மொழியாக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும், அதன் பாட்டுத் தலைவனாக பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியமும், 

தன் படைப்பை ஒரு ஐந்து நிமிடப் பாடலால் முன்னோட்டமாகக் காட்டும் திறனாக கவியரசு கண்ணதாசனும் விளங்கிருந்ததை அவர் தம் படைப்புகளின் வழியாகப் பல்வேறு உதாரண வெளிப்பாடுகளாக அமைந்திருப்பதை ஆதாரம் பகிரலாம். வி.குமார் காலத்திலும், எம்.எஸ்வி காலத்திற்குப் பிறகும் திறன் வாய்ந்த இசைக்கூட்டு இருந்தது மறுப்பதற்கில்லை. 

“SPB பாடகன் சங்கதி" நூலை எழுதிய போது ஒரு தனி அத்தியாயத்தை கே.பாலசந்தர் & எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூட்டுக்கு ஒதுக்கினேன். அவ்வளவு பெறுமானமும், தனித்துவமும் கொண்ட கூட்டணி அது. அதைத் தாண்டியும் இன்னும் இன்னும் தோண்டத் தோண்ட எழுத வேண்டும் என்று ஊற்றெடுக்கும் திறன்கள் அவர்கள்.

கே.பாலசந்தர் படைப்புகளில் ஜோடிப் பாடகராக அமைந்தது ஒரு விதம், நான்கு சுவர்கள் படத்தில் செளந்தரராஜனுக்குக் கொடுத்த அதே பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கும் கொடுத்து அழகு பார்த்த “ஓ மைனா” இரு வேறு பரிமாணங்கள், அவள் ஒரு தொடர்கதையின் விகடகவி கோபால் குரலாகத் தமிழ் கடந்தும் ஒலித்த “கடவுள் அமைத்து வைத்த மேடை”என்று இவற்றையெல்லாம் தாண்டி 

ஒரு படைப்பினை அடையாளத்தும் வகையில் அந்தப் படத்தின் முழு ஓட்டத்துக்கும் பின்னணிக் குரலாக வந்த 

“மான் கண்ட சொர்க்கங்கள்" (47 நாட்கள்),

https://www.youtube.com/watch?v=A4KruXv7k3I

நண்பர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போடும் சூழ்நிலைக்கான பாடலாகத் தொனிக்கும்

“நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம் 

 ஆண்டு பாருங்கள் தோழர்களே (புன்னகை)

https://www.youtube.com/watch?v=CJQEjl7K8ZE

படைப்பின் தலைப்பைக் கோடிட்டுக் காட்டும்

“மன்மத லீலை”

https://www.youtube.com/watch?v=u-fzYbVNjc0

“நினைத்தாலே இனிக்கும்"

https://www.youtube.com/watch?v=G0fJmoD7iXw

“தப்புத் தாளங்கள்"

https://www.youtube.com/watch?v=SnoYoiV8PXI

“தில்லு முல்லு"

https://www.youtube.com/watch?v=1LK_nQNjrTM

“உன்னால் முடியும் தம்பி"

https://www.youtube.com/watch?v=xc9wBTJpr74

“மகாகவி சுப்ரமணியபாரதியின் சிந்தனையைத் தன் கருவுக்குத் தோதாய்ப் பொருத்தி எஸ்பிபியைப் பாட்டுடைத் தலைவன் ஆக்கிய “வறுமையின் நிறம் சிகப்பு", பாடகனின் கதை என்றால் அது எஸ்பிபியின் குரல் அன்றோ என்றமைந்த “கேளடி கண்மணி" என்று இன்னும் ஏராளம் உதாரணங்கள் அழகழகாய்ப் பூக்கும்.


என் மனசுக்கு நெருக்கமான “நூல்வேலி” படத்தில் வந்த அந்த அமைதியான மெளலி என்ற பாத்திரப் படைப்புக்குக் கொடுத்த

தேரோட்டம் ஆனந்த செண்பகப் பூவாட்டம்

https://www.youtube.com/watch?v=jbmp4F9thc0

என்று குணச்சித்திரக் குரலாகவும் மிளிர்ந்திருப்பார்.

இவற்றோடு மிக முக்கியமானதொரு பாடலாக நான் நினைத்துக் கொள்வது, இந்தப் பதிவின் ஆரம்பப் பத்தியில் குறிப்பிட்ட கூட்டணியில் மிளிர்ந்த

“அங்கும் இங்கும்

பாதையுண்டு இன்று நீ

எந்தப் பக்கம் அங்கும்

இங்கும் பாதையுண்டு

இன்று நீ எந்தப் பக்கம்

ஞாயிறுண்டு

திங்களுண்டு எந்த

நாள் உந்தன் நாளோ

ஞாயிறுண்டு

திங்களுண்டு எந்த

நாள் உந்தன் நாளோ...”

https://www.youtube.com/watch?v=JmMKpqRZSiE

மும்முனைச் சூழலில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய ஒரு தர்மசங்கடமானதொரு நிலையில் நாயகியைப் பார்த்துக் கேட்குமாற்போல இந்தப் பாடல்.

கதாசிரியர்கள் தாம் எழுதிய கதையின் கதை மாந்தர்களோடே பேசிப் பார்ப்பார்களோ என்று நான் எண்ணுவதுண்டு. அதற்கு மிகப் பெரும் ஆதாரமாகவும் இந்தப் பாடலைக் கொள்ள முடியும். தான் சிருஷ்டித்த அனு என்ற பெண்ணைப் பார்த்து கவியரசர் மொழி பெயர்ப்பில் கே.பாலசந்தர் கேட்கிறாரோ இப்படி?

“கல்லைக் கண்டாள்

கனியைக் கண்டாள் கல்லும்

இன்று மெல்ல மெல்ல

கனியும் மென்மைக்

கண்டாள்”

கனி என்பதைப் பெயராகவும், வினையாகவும் ஆக்கும் திறனோன் கவியரசர்.

“கண்ணா என்றால்

முருகன் வந்தான் முருகா

என்றால் கண்ணன் வந்தான்

எந்த தெய்வம் சொந்தம் என்று

கூறிப் பூஜை செய்வாள் அவள்”

இங்கே உவமையில் காட்டும் துணைப் பாத்திரங்கள் எல்லாமே தெய்வம் இதில் ஏது தன் தெய்வம் என்று அங்கேயும் ஒரு கவிஞர் கிடுக்குப் பிடி.

“எந்த நாள் உந்தன் நாளோ” என்று கேட்கும் போது எப்பேர்ப்பட்டதொரு பரிவைக் கொட்டுவார் நம் பாடும் நிலா பாருங்கள்.

"இன்று நீ" என்பதன் பரிமாணங்களையும் உன்னிப்பாகக் கேட்க வைத்து நெகிழ வைப்பார்.

"கல்லைக் கண்டாள்" மிதப்பில் ஒரு ஏக்கத் தொனியைக் குரலில் படர விடுவார்.

“அங்கும் இங்கும் பாதை உண்டு" பாடல் கச்சேரி மேடையிலேயே உருவான கதையை மெல்லிசை மன்னர் சொல்லக் கேட்டுச் சிலிர்த்ததுண்டு.

https://www.youtube.com/watch?v=itZBjFs4_yc

ஆனால் இந்தப் பாடலைக் கேட்கும் தோறும் கே.பாலசந்தர் என்ற படைப்பாளியோடு கண்ணதாசன், விஸ்வநாதன், பாலசுப்ரமணியம் என்று நான்கு தூண்களும் சேர்ந்து கொடுத்த அந்தப் பிரமிப்பு எப்போதும் அகல்வதில்லை.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் நம்மை விட்டு எட்டு ஆண்டுகள் இன்றோடு.

சொந்தம் ஒன்று

பந்தம் ஒன்று வெள்ளை

உள்ள கிள்ளை ஒன்று

நடுவில் ஊஞ்சல் ஒன்று

தொடர்கதையோ

பழங்கதையோ விடு

கதையோ எது இன்று

அங்கும் இங்கும்

பாதையுண்டு இன்று நீ

எந்தப் பக்கம் ஞாயிறுண்டு

திங்களுண்டு எந்த நாள்

உந்தன் நாளோ

https://www.youtube.com/watch?v=0yHs_FyCdB4

கானா பிரபா

23.12.2022


0 comments: