Pages

Thursday, April 29, 2021

ஸ்வர்ணலதா காலம் என்ற தேர் ராஜா காலத்துப் பாடல்களோடு ஒரு பயணம்




நெஞ்சமே பாட்டெழுது

அதில் நாயகன் பேரெழுது

மா

லை

யில்


யா

ரோ


மனதோடு 

பேச


ஸ்வர்ணலதாவை நினைக்கும் தோறும் தூரத்தில் எங்கோ யாரோ வீட்டு வானொலிப் பெட்டியில் இருந்து எழுந்து அலைந்து வரும் பாட்டலை போல மனதோடு பேசும்.

மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் என்று தமிழ் திரையிசை இயக்கத்தின் போக்கை மாற்றிய முப்பெரும் இசையாட்சியரிடம் பாடியவர், நாமெல்லாம் எப்படி எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை நமக்கான சொந்தமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோமோ அது போலவே ஸ்வர்ணலதாவைத் தமிழ்த் திரையுலகம் மட்டுமன்றி தென்னிந்தியாவும், ஏன் ஹிந்திக்குப் போன பாட்டரசிகளை விட ஸ்வர்ணக் குரல் இன்னும் அதிகமாக ஈர்த்தது ரஹ்மான் காலத்தில்.


2010 இல் நம்மை விட்டுக் கடப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்பு வரை தமிழில் பாடிக் கொண்டே இருந்தாலும், தெலுங்கு சினிமாவில் தன் கடைசிக் காலம் வரை பாடிக் கொண்டே இருந்திருக்கின்றார். 

“ஸ்வர்ணலதா தமிழ் சினிமாவுக்கு வருவதற்கு முன் சின்னப்பொண்ணா இருக்கும் போது கன்னட ராஜ்குமார் உடன் மேடைகளில் பாடியிருக்கிறார்” என்று சித்ராவே வாய் நிறையப் பாராட்டிய குரல். தான் பாடிய பாடல்களை இன்னொருவர் நகலெடுத்துக் கூடப் பாட முடியாத அளவுக்குப் பாடி விட்டுச் சென்றிருக்கிறார் ஸ்வர்ணலதா. அதுதான் அவரின் தனித்துவம்.

“சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா” என்று எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களால் “நீதிக்குத் தண்டனை” (1987) யால் அறிமுகப்படுத்தப்பட்டவர் அடுத்த ஆண்டே இளையராஜாவின் பாட்டுக் கோட்டையில் “உத்தம புத்திரி நானு” என்று துள்ளிசைத்தார். இரண்டுமே வெவ்வேறு பரிமாணங்கள். அதுவே அவர் பின்னாளில் ஒரு கட்டுக்குள் அடக்க முடியாக் குரல் என்ற முத்திரைக்கான அச்சாரம் போட்டது.

இளையராஜாவுக்கு ஸ்வர்ணலதா என்ற பெயர் பழக்கப்பட்டது தான். அது இன்னொரு ஸ்வர்ணலதா. அவர் குறித்து முன்னர் நான் எழுதிய பதிவு  

http://www.radio.kanapraba.com/?p=2842

இன்னொரு ஸ்வர்ணலதாவாக பத்து வருடங்கள் கழித்து அடையாளப்படும் இவரோ முன்னவர் போல ஒரு பாட்டோடு ஓய்வெடுக்காமல் தொடர்ந்து பாடிக் கொண்டே இருக்கின்றார். அதுவும் இளையராஜாவின் இசைத் தொழிற்சாலை அப்போதெல்லாம் வருடத்துக்கு ஐம்பது கடந்த படங்களின் பாடல்களை உற்பத்தி பண்ணும் போதெல்லாம் வேக வேகமாக ராஜாவின் இசை நாடி பிடித்துப் பயணப்பட்டோருக்கு இன்னும் இன்னுமாக வாய்ப்புகள். அப்படியாகவே ஸ்வர்ணலதாவைத் தாங்கிப் பிடித்து வைத்திருந்தது இளையராஜாவின் இசைக் கூடம்.

குரு சிஷ்யன் காலத்திலேயே நானே உன் காதலி (தாயம் ஒண்ணு) https://www.youtube.com/watch?v=czC0EAu2y4Y பாடலில் பி.சுசீலா, சித்ரா, மனோவுடன் கூட்டுக் குரலாக இவருக்கும் ஒரு வாய்ப்புக் கிட்டினாலும், ஒரு பெரிய மாற்றத்தை விளைவிக்க இரண்டாண்டுகள் காத்திருக்க வேண்டியது. நானே உன் காதலி பாடலிலும் அதே துள்ளிசைக் குரலாக ஸ்வர்ணலதா.

அப்படியாக “மாலையில் யாரோ மனதோடு பேச” பாடல் ஸ்வர்ணலதாவுக்காகவே காத்திருந்து வந்து கிட்டியது போலானது.

மீண்டும் அடையாளம் எடுபடாத பாட்டொன்று “எத்தனை ராத்திரி நித்திரை போச்சுது” https://www.youtube.com/watch?v=gTrNpafxAMQ அக்னி பார்வை வழியாக. கிட்டத்தட்ட “உத்தம புத்திரி நானு” பாடலைப் போலவே போதைக் கிறக்கத்தோடு இன்னொரு தங்கச்சி. மலேசியா வாசுதேவன் அவர்களும் தன் பங்குக்குக் கலக்கியிருந்தாலும் எடுபடாமல் போனது.


அதன் பிறகு விஸ்வரூபம் எடுக்கிறது ஸ்வர்ணலதாவின் பாட்டு இயக்கம்.

“போவோமா ஊர்கோலம்” (சின்னத்தம்பி) கள்ளங்கபடமற்ற காதலியின் ஊர்வலம்,

“மாசி மாசம் ஆளான பொண்ணு” (தர்மதுரை) விரகதாப சஞ்சாரம்,

“ஆட்டமா தேரோட்டமா” (கேப்டன் பிரபாகரன்) பழி தீர்க்கக் காத்துக் கிடக்கும் பேதை, 

“குயில் பாட்டு ஹோ வந்ததென்ன இளமானே” (என் ராசாவின் மனசிலே) முரட்டுக் கணவனின் உள்ளார்ந்த நேசத்தை உணர்ந்தவளின் கடைசி நிமிடங்கள் என்று தனது 18 வது வயதிலேயே ஒரு பாடகியின் பன்முகப் பரிமாணத்தை அடையாளப்படுத்தி விடுகிறார் 1991 இல். 

அதன் பிறகு அவர் குட்டி இளவரசி தான். இளவரசி என்று கைகள் எழுதும் போது மனசோ 

“பாடடி குயிலே பாசமலர்களை” 

https://www.youtube.com/watch?v=r6D09IZx_kQ

என்று தாவுகின்றது.

ஸ்வர்ணலதாவின் தனிப்பாட்டு உலகம், ஜோடிப் பாடல்கள் என்று பங்கு போட்டுக் கலக்க இசைஞானியின் பட்டறை வாய்ப்புகளை விரிக்கின்றது.

“என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்”

https://www.youtube.com/watch?v=vnHRkz4xmnQ

ஸ்வர்ணலதாவுக்காகவே இன்னோர் ஆண்டு காத்திருந்து வந்தது போல அந்தப் பாட்டு. தான் பாடியதை இன்னொருவர் நகல் கூட எடுக்க முடியாத அளவுக்கு உச்ச பட்சமான குரல் தானத்தைக் கொடுத்த பாட்டு.

2014 ஆம் ஆண்டில் ராஜா கோரஸ் புதிர் நிகழ்ச்சியை நடத்திய போது அதில் போட்டிப் பாடல் பதிலோடு ரசமான பின்னூட்டங்களைப் பகிர்வார் நண்பர் விஜய் VIJAY (@MAESTROSWORLD) அவர் சொன்னதை விட வேறு என்ன மிகுதியாகச் சொல்ல முடியும் என்பது போல இந்தப் பாட்டு.

அவரின் பின்னூட்டம் இதுதான் ;

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் – வள்ளி

எவ்வளவு முறை இந்த பாடல் கேட்டலும் தாகம் தணியாது. ஒவ்வொரு முறை கேட்கும்பொழுதும் பாடலின் சுவை அதிகரித்துக்கொண்டே இருக்கும். பாடல் ஆரம்பமாகும் விதமே தனி.

மிருதங்கம், செண்டை, ஜதி என்று நம் நாட்டின் பாரம்பரியத்தில் ஆரம்பித்து கிடார் மற்றும் மேற்கத்திய செவ்வியலுக்கு லாவகமாக தாவி மீண்டும் நம் நாட்டு சந்தத்துடன் கலந்து உறவாடி மறுபடி மேற்க்கத்திய புல்லாங்குழல் பாணியில் பெண் குழுவினரின் ஒத்திசைவும் சேர்ந்து நம்மை ஆட்கொள்ளும் அந்த ஆளுமை இசைஞானியை தவிர வேறு யாரும் அவ்விடத்தை அடையமுடியாது என்று நச்சென்று பறை சாற்றுகிறது.

ஸ்வர்ணலதாவின் மற்றுமொரு பரிமாணத்தை இந்த பாடல் மூலம் உணரலாம் பொதுவாக நல்ல தீர்க்கமான ஆணித்தரமான அழுத்தமான குரலில் பாடும் பாடல்களால் அறியப்பட்டவர் இந்த பாடல் மூலம் அவரின் இன்னொரு மென்மையான குரல் மாயத்தால் மயிலறகைப்போல் நம்மை வருடிச்செல்வதை உணரலாம்.

இந்த பாடல் ஆரம்பத்தில் ஸ்வர்ணலதா பெண் குழுவினர்களோடு சேர்ந்து பாடும் பொழுது ஒலிக்கும் அந்த எதிரொலி அவர் தனியாக சரணம் பாடும் பொழுதும் ஒலிக்கும் அற்புதம் அவரின் குரலில் அது இயற்கையாகவே இருக்கிறது என்று இசைஞானி நமக்கு எடுத்துக்காட்டும் ஒரு அற்புதம். ஸ்வர்ணலதா நம்மிடம் இல்லையென்றாலும் அவர் விட்டு சென்ற அந்த அதிர்வும் எதிரொலியும் நம்மை வாழ்நாள் முழுவதும் ஆட்கொள்ளும்.

இப்படியாக நண்பர் விஜய் இன் கருத்து.

“ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது”, “கண்ணா உன் கண்ணில் கண்ணீரோ” (உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்), ஏ ஜிங்கான் ஜினுக்குச்சான் சிட்டுக்குருவி (வீட்ல விசேஷங்க), வெடலப் புள்ள நேசத்துக்கு ( பெரிய மருது), புதிய பறவை பறந்ததே (தென்றல் வரும் தெரு) என்று எத்தனை ரக ரகமாக ராகமிசைத்து நெஞ்சை அள்ளினார்.

ஆனால் அவரின் அதிகம் அறியப்படாத தனிப்பாடல்களைத் தோண்டி எடுத்து ரசிப்பது சுகம். 

“முத்து முத்து முத்தாரம் தான் 

முங்கி வந்தேன் இந்நேரம் தான்”

https://www.youtube.com/watch?v=Gb2DLga6Z1k

தம்பிக்கு ஒரு பாட்டு படத்தில் வந்த இந்தப் பாட்டைக் கேட்கும் போது சைக்கிளில் ஏறித் தாயகம் பறந்து விடும் மனசு.

அப்படியே

“தை மாசம் கல்யாணம் அன்று காதல் ஊர்கோலம்”

https://www.youtube.com/watch?v=hHCYpCuUW4o

என்னைக் கல்யாண மேடையில் இருத்தி விடும். திருமண வீடியோவில் இந்தப் பாடலைத் தான் தாலி கட்டியதும் பொருத்த வேண்டும் என்று படப்பிடிப்பாளர் ஜெகதீசன் அண்ணாவிடம் விடாப்பிடியாகக் கேட்டுக் காட்சியோடு அச்சடித்த பாட்டை எப்படி மறப்பேன்? ஒவ்வொரு திருமண நாளிலும் வந்து போவார்கள் ஜெயச்சந்திரனும், ஸ்வர்ணலதாவும். அந்தக் கோரஸ் குரல்கள் ஆர்ப்பரிப்பு ஆசீர்வதிக்கும் நெல் மணி மழை போல. ஸ்வர்ணலதா குரலில் மணப் பெண்ணின் பூரிப்பு இருக்கும்.

மலையாள ஜோடிக் குரல்களாக ஜென்ஸி, சித்ரா, சுனந்தா வரிசையில் ஸ்வர்ணலதாவும் சேரும் ஜெயச்சந்திரன் ஜோடிப் பாட்டில் கேரளத்து வாழைப்பழப் பாயாசச் சுவை கொட்டும் இந்தப் பாட்டில்.

 அது போலவே 

“ஜல் ஜல் ஜல் சலங்கை குலுங்க ஒரு தேவதை வந்தாள்” (பொண்ணுக்கேத்த புருஷன்)

https://www.youtube.com/watch?v=D6PuINzu1t8

மூடி வச்சு மூடி வச்சு மறைச்சு வச்சதெல்லாம்

காத்தடிச்சுக் காத்தடிச்சுக் கலைஞ்சு போனதென்ன

மானே மருதாணி போடவா ஹோ

https://www.youtube.com/watch?v=QPrdth7RY-w

ஆஹா சொர்க்கம் என்று கொண்டாடும் அருண்மொழி & ஸ்வர்ணலதா ஜோடியை, இன்னும் கொஞ்சம் பாடல்களில் இருவரும் சேர்ந்திருந்தாலும்


என் கண்கள் சொல்லும்


என் கண்கள் சொல்லும்

மொழி காதலே

என்றென்றும் செல்லும் விலகாமலே

தனியாக நின்றாலும் உன் தாகமே

துணையாக வந்தாலும் தணியாதது...

https://www.youtube.com/watch?v=VoNEC1PqxRE


என்று புன்னைவனப் பூங்குயிலை அழைக்கும் போது இருவர் தொண்டையிலும் ஒட்டியிருக்கும் அதே சோக சாரீரம் இதைத் தாண்டி எதையும் சிந்திக்காது.

இவர்களுக்கும் முன்னவர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களோடு ஜோடி சேர்ந்தாலும் வெற்றிப் பாட்டுத் தான் என்று “நான் ஏரிக்கரை மேலிருந்து” (சின்னத்தாயி), “ நீ தானே நாள் தோறும்” (பாட்டு வாத்தியார்), “ஆறடிச் சுவரு தான்” (இது நம்ம பூமி) என்றும் விட்டு வைக்காது ஒட்டிக் கொண்டவர்.

எப்படி எண்பதுகளின் மனோ & சித்ரா குரல்களுக்கு ஒரு தனி அரங்கத்தைக் கொடுத்தது போல மனோ & ஸ்வர்ணலதாவுக்குத் தொண்ணூறுகளைக் கொடுத்து விடலாம். ராஜாவும் வஞ்சனை இல்லாமல் இந்த ஜோடிக்குத் தான் அதிக பட்சமாக 33 பாடல்களைக் கொடுத்திருக்கின்றார். 

ஒரு காலத்தில் வானொலியில் “அருகமணி கருகமணி” https://www.youtube.com/watch?v=WJ8rZQ4BvVU பாடலைத் தொடர்ந்து போட்டு ஏச்சும் வாங்கியிருக்கிறேன் நேயரிடமிருந்து.

“நெஞ்சுக்குள்ள நேசமணி...

நித்தவரும் பாசமணி...

வஞ்சி இவள் வாசமணி...

கொஞ்சி கொஞ்சி பேசும்மணி...”

பாட்டு முடிந்ததும் அதை முணுமுணுத்து ரசிப்பேன்.

மல்லியே சின்ன முல்லையே (பாண்டித்துரை), காட்டுக்குயில் பாட்டுச் சொல்ல, வெண்ணிலவு கொதிப்பதென்ன என்று சின்ன மாப்ளே, அந்தியிலே வானம் (சின்னவர்), சித்திரத்துத் தேனே வா ( நாடோடிப் பாட்டுக்காரன்) சிங்கார மானே (தாய் மொழி), சொல்லி விடு வெள்ளி நிலவே (அமைதிப்படை), பொன்னாட்டம் பூவாட்டம் (செவ்வந்தி), கண்ணே இன்று கல்யாணக் கதை கேளடி (ஆணழகன்), வெட்டுக்கிளி வெட்டி வந்த (பிரியங்கா), மலைக்கோவில் வாசலில் (வீரா), மார்கழி மாசம் (வியட்னாம் காலணி) என்று உச்சம் கண்டவை மனோ & ஸ்வர்ணலதா கூட்டணியில் என்றாலும் என்

மனசுக்கு நெருக்கமானது


“கல்லூரி வாசலிலே நட்டு வைத்த காதல் விதை

காயாகி கனிந்துவரும் காலம் உள்ள காலம் வரை


கல்யாணப் பந்தலுக்கு

காத்திருக்கும் வாழை இது

கண்ணா உன் கையணைக்க

பூத்திருக்கும் தாழை இது


ஒரு போக்கிரி ராத்திரி பார்க்கிற பார்வை தான்

https://www.youtube.com/watch?v=OFDMaqq0yis

கேரளக் குயில் கூவிடும் இசை

தித்தித்ததோ... தித்தித்ததோ...

ஆவணி திருவோணத்தில் உன்னை

சந்தித்ததோ... சந்தித்ததோ...


“நில்லாத வெண்ணிலா நில்லு நில்லு என் காதலி”

https://www.youtube.com/watch?v=NpqlSSqxZVA


ராஜாவும் ஸ்வர்ணலதாவும் ஜோடிக் காட்டிப் பாடிய சந்தோஷ கீதத்தைப் படத்தில் ஒட்டாமல் விட்டவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

“திசையறியாது நானே...

இங்கு தினசரி வாடினேனே...

இந்த பறவையின் வேடந்தாங்கல்...

உந்தன் மனமென்னும் வீடு தானே...”


ஸ்வர்ணலதாவின் ஏக்கத்தை ஒற்றியெடுத்து மனதார அதை ஏற்று 


நீண்ட காலம்...

நேர்ந்த சோகம்...

நீங்கி போக நானும் தீண்ட...

யோகம் விளைந்திட...


என்று பாடும் குரலாளர் எஸ்பிபி இன்று மோட்சத்தில் இசை மீட்டிக் கொண்டிருப்பரோ?

“என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி”

பாடலுக்கெல்லாம் ஒரு சில வரிகள் போதாதென்று பதிவே அர்ப்பணித்தேன் அன்றொரு சமயம்.

https://www.facebook.com/kana.praba/posts/10209336693679679


அது போலவே “உன்னை எதிர்பார்த்தேன் தென்றலிடம் கேட்டேன்”


https://www.facebook.com/kana.praba/posts/10211583638531896

யாரோடும் ஒட்டிப் போகும் எஸ்பிபி குரலோடு, யாரோடும் உச்சம் கொடுத்தவர் சேர்ந்தால் எப்படியிருக்கும் என்று காட்டியது.

கொட்டுகிற அருவியும்...


மெட்டுக்கட்டும் குருவியும்...

அடடடா அதிசயம்...


ஆண்:கற்பனையில் மிதக்குது...

கண்டதையும் ரசிக்குது...

இதிலென்ன ஒரு சுகம்...

ஸ்வர்ணலதா கூட்டில் ராக்கம்மா கையத் தட்டு” (தளபதி), ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் (மன்னன்), கானக் கருங்குயிலே (பாண்டித்துரை), காதலுக்குக் கண்கள் இல்லை மானே (நாடோடிப் பாட்டுக்காரன்), காலையில் கேட்டது கோவில் மணி (செந்தமிழ்ப் பாட்டு), ஓ என் தேவ தேவியே (கண்மணி), மாடத்துலே கன்னி மாடத்துலே (வீரா) போன்ற உச்சங்கள்.

தெலுங்கில் வந்த தளபதி பாடல்களில் "யமுனை ஆற்றிலே" பாடலை எதேச்சையாகக்  கேட்டுக் கொண்டிருந்தேன் ஒரு சமயம். 

தமிழில் பாடகி மித்தாலி பாடியது தெலுங்கில் ஸ்வர்ணலதாவுக்கே என்றானது. இது ஒரு ஆச்சரியம் மிகுந்த பேறு. 

இங்கேயும் பாருங்கள் அந்த ஏக்கமும், தேடலும் கொண்ட ஸ்வர்ணலதா இருக்கிறார். தமிழிலும் அவரே இருந்திருக்கலாமோ

https://www.youtube.com/watch?v=Xg36nIVijU4

காலம் என்ற தேரே 

ஆடிடாமல் நில்லு 

ஸ்வர்ணலதா என்ற கூடு பிரிந்து 11 ஆண்டுகள் கழிந்தாலும் நம் காலத்தேரை உயிர்ப்பித்து வைத்திருக்கும் பாடகிக்கு மானசீகமான பிறந்த நாள் வாழ்த்துகள்.


கானா பிரபா


0 comments: