Pages

Monday, April 19, 2021

ராதிகாவுக்கான பி.சுசீலா பாடல்கள் இசைஞானி இளையராஜா இசையில்


“ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே

அழகாக என்னைத் தொட்டு அன்னம் போல் ஆடும் காற்றே”

https://www.youtube.com/watch?v=tig1izCadIA

இந்தப் பாடலில் மூழ்கியிருந்த போது ஒரு பக்கம் எண்பதுகளில்  பி.சுசீலாவின் பங்களிப்புகளை மனசு கணக்குப் போட்டுப் பார்த்தது.

ஶ்ரீப்ரியா யுகத்தில் இருந்து கெளதமி காலம் கடந்தும் அவரின் பங்களிப்பு இருந்தாலும் ராதிகாவுக்காக சுசீலாம்மா கொடுத்த பாடல்களுக்குள் மையம் கொண்டு விட்டேன்,

அப்படி அமைந்த பாடல்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு தினுசாக இருக்கும், வெவ்வேறு காட்சிச் சூழலுக்கு அற்புதமாக ஒட்டிக் கொண்டவை. அதிசயமாக காட்சியில் ராதிகாவை சுசீலா அவர்களின் குரலோடு பொருத்திப் பார்த்த பின் வேறெந்தக் குரல்களும் இவ்வளவு அச்சொட்டாகப் பொருந்திப் போகாது போல என்ற ஐயம் எழுவதற்கும் கூட அது வழி வகுத்தது.

“ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே” ஒரு அழகிய இயற்கை வர்ணிப்புப் பாடல். மாமுல் சினிமாவில் கதாநாயகி அறிமுகத்துக்கான பாடல்கள் இவ்வகை இயற்கையைக் கொண்டாடும் பாடல்களாகவோ அன்றித் தன் மனவுணர்வெழுச்சிப் பாடல்களாகவோ இருக்கும்.

இங்கே பஞ்சு அருணாசலம் அவர்களே பாடல்களோடு இயக்கவும் செய்த படமிது. முன்னாளில் “மலர்களில் ஆடும் இளமை புதுமையே (கல்யாண ராமன்) என்றோர் அழகிய இயற்கை வர்ணனைப் பாடலைக் கொடுத்த இவரே இன்னொன்றாக இதைக் கொடுக்கிறார்.

“ஆ..ஆஹா ஆ ஹாஹா....” என்று சங்கதியில் கூட சுசீலாம்மா வேறுபடுத்த்தித் தான் பாடலை ஆரம்பிப்பார். ஆனால் தொடரும் பாடலில் அதீத சங்கீதத்தனம் கொட்டாது, ராதிகாத்தனமான குறும்புத் துள்ளல் கொட்டிய குரலைக் கொடுத்திருப்பார்.

இந்தப் பாட்டின் பின்னணி இசையோட்டத்தில் ராஜா கையாண்டிருக்கும் தொடரிசை வாத்தியக் கூட்டு புதுமையானது, அந்தத் தாளத்தை ரசித்துக் கொண்டே இந்தப் பாட்டு உலகில் சஞ்சரிக்கலாம்.

“கேளாயோ கண்ணா…. 

நான் பாடும் கீதம்.....”.

https://www.youtube.com/watch?v=d6XuRWXEcYk

இந்தப் பாடலுக்குக் குரல் கொடுக்கும் போது பி.சுசீலாவுக்கு 50 வயது, ராதிகாவுக்கோ 23 வயது தான். ஒரு சோக ராகத்தை எடுத்துக் கொண்டு விரிகின்றது இந்தப் பாட்டு. 

“நானும் சொல்ல வார்த்தையின்றி

வாடும் பொன் மயில்

மௌனம் என்னும் பாடல் பாடும்

ஊமைப் பூங்குயில்...”

இங்கே கவிஞர் வாலியின் வரிகள். தன் ஒருதலைக் காதலோடு மருகும் அவளின் குரலைத் தேடிக் கேட்கும் இன்னொருத்தி அவள் தான் தான் மனதில் கொண்டவனின் முறைப் பெண்ணாக அமைந்தவள். இப்படியானதொரு காட்சிச் சூழலில் வரும் சுசீலாவின் குரலில் அப்படியே சரணத்தைக் கடக்கும் போது மெல்ல விலகி 

“நீ அறியாது ஏங்கிய மாது

என் பிழை எல்லாம் உன் பிழை ஏது”

என்று மாறும் தருணத்தை உள்ளூர உச்சுக் கொட்டி ரசிப்பேன். அற்புதமானதொரு மெட்டின் பரிமாணம் அது.

இதே கால கட்டத்தில் தான் ஜெயச்சந்திரன் குரலை விஜயகாந்துக்குப் பொருத்திப் பார்க்கும் அதிசயமும் நிகழ்ந்து அது வெற்றியும் பெறுகின்றது. இந்த நானே ராஜா நானே மந்திரியில் இருவரின் சங்கமப் பாடலாக அது மலர்கின்றது 

“மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்” என்று.

ஒரு பக்கம் விரக்தி, சோகம், இயலாமை, சுயபச்சாதாபம் கொண்டு ஒருதலையாய்க் காதலித்தவள் மருகிப் புலம்ப, இன்னோர் பக்கம் அவள் எடுத்துக் கொடுத்த காதல் மொழிகளையே தான் நேசித்தவள் மீது பகிரும் போது அந்தக் காதலன் குரலில் தேங்கி நிற்கும் குதூகலமும், துள்ளலும், ஏக்கத்தின் நேரான சிந்தனையுமாக இந்தப் பாடல் இரட்டை வேடம் கொண்டிருக்கிறது.

“மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே….”

https://www.youtube.com/watch?v=8WX0pJ2zuQA

என்று தொடங்கும் போதே தோல்வி கண்டவளின் மனப்பாட்டை எவ்வளவு துயர் சுமந்து ஏக்கத் தொனியோடு கொடுக்கிறார் இந்த சுசீலா பாருங்கள்.

அதையே மீள ஒப்புவிக்கும் ஜெயச்சந்திரன் குரலை

இந்த இடத்தில் வாசிப்பதை நிறுத்தி விட்டு ஒரு கணம் கேட்டுப் பாருங்கள் நான் சொல்லும் அந்தக் குதூகலம் உங்களிடம் கடத்தப்பட்டு விடும்.

தன் காதலியைக் காணுமிடத்து ஒரு காதலனுக்கு எழும் உள்ளத்து உணர்வை அப்படியே கொட்டிக் கொடுக்கிறது.

முதல் சரணத்தில் நின்றாடும் புல்லாங்குழல் ஓலியோடு கலக்கும் இசைத் துள்ளலைக் கேட்கும் கணமெல்லாம் ஊர்க் கோயில் கேணியின் படிக்கட்டுகளின் அந்தம் வரை துள்ளி ஓடும் உணர்வே எழும். காதலிக்கும் காலத்தில் தான் நேசித்தவரைக் காணும் போது எழும் சிலிர்ப்புக்கு நிகரானது இந்த ஒட்டுமொத்தப் பாட்டும்.

அந்த ஊரையே தன்னுடைய அடாவடியால் கட்டிப் போட்டவனுக்குள் ஒட்டியிருக்கும் வெள்ளாந்தித் தனம் கண்டு அவனை நேசிப்பவன், அவன் மனசில் தன் மாமன் மகள் பரிசம் போட்டிருப்பதைக் கண்டு, தன் காதலை மறைத்து அவனுக்குக் காதல் பாடம் சொல்லிக் கொடுக்கிறாள். ஆனாலும் அந்தப் பாடத்தின் இரண்டு பரிமாணங்களையும் தொடாமல் விட முடிவதில்லை. தன்னுள் தேக்கிய காதலையும், அது கொடுத்த பிரிவையும் தன்னுள் பாடி, அவனுக்குக் கொடுக்கும் போது அதை நேரான சிந்தனையோட்டமாக்கி விடுகிறாள்.

“ஒன்றாகும் பொழுதுதான்

இனிய பொழுதுதான்

உந்தன் உறவுதான் உறவு!”

இப்படியே சொல்லிக் கொடுப்பவள்

“அந்த நாளை எண்ணி நானும்”


என்று அவனுக்குக் கொடுத்து விட்டு


“அந்த நாளை எண்ணி நானும் வாடினேனே”

வாடும் பருவத்தைத் தனக்காக்கிக் கொள்கிறாள்.

அது போலவே முதல் சரணத்தில்

“இரு கண்ணும் என் நெஞ்சும்” என்று போகும் போது

“நீரிலாடுமோ?” என்பதைத் தனதாக்கிக் கொள்கிறாள்.

அங்கே தான் நிற்கிறது உண்மைக் காதல்.

பாடலை முடிக்கும் போதும் “மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்” என்று ஆரம்பிக்கும் போது அந்த “மயங்கினேன்” என்ற சொல்லில் எவ்வளவு தூரம் உடைந்து போகிறாள் என்பதை பி.சுசீலாவின் குரல் கீழிறங்கி மேல் வரும் கணம் உணரலாம்.

ஆத்மார்த்தமான அன்பைத் தேடும் அனைவருக்கும் இதுவொரு தேசிய கீதம். வார்த்தைக் கட்டுக்குள் எழுத முடியாத உணர்வலைகளை எழுப்பும் உன்னதம் இது.

பி.சுசீலாம்மாவின் குரலை அதுவும் தாலாட்டுப் பாடல்களுக்கு அவர் கொடுத்ததை வைத்து ஒரு ஆய்வு நூலே எழுதி விடும் அளவுக்கு அள்ளிக் கொடுத்திருக்கின்றார். இங்கே ராதிகாவுக்காகக் கொடுத்த பாடல்கள் அவை தாலாட்டுப் பாடல்களாகவும், குழந்தைப் பாடல்களாகவும் பல் பரிமாணம் கொண்டு விளங்குகின்றன.

அப்படியாக முதலில் பார்த்தால் வைரமுத்து வரிகளில் வரும் தாலாட்டுப் பாட்டு 

“வரம் தந்த சாமிக்கு பதமான லாலி

ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி”

https://www.youtube.com/watch?v=UGcI9JqSlf0

ஆஸ்திரேலியா வந்த புதுசு சுற்றும் முற்றும் யாருமே இல்லாத அந்நியச் சூழல், கால்வயிறு நிறைந்தாலே போதும் என்று சொற்பமே இருக்கும் டாலரைக் கணக்குப்பார்த்து சிப்ஸையோ ஒரு வெறும் ப்ரெட் துண்டத்துடன் ஜாம் என வயிற்றுக்குமாக அந்தக் காலம் அப்போதுதான் என் துணையாக, இன்னும் நெருக்கமாக வந்தமர்ந்து கொண்டது இலங்கையிலிருந்து கொண்டுவந்த இளையராஜாவின் பாடல்கள். வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி பாட்டு ஒலிக்கும் போதெல்லாம் ஏழுகடலுக்கு அப்பாலிருந்து பறந்து வந்து என் அம்மாவே என் முதுகைத் தடவிவிடுவதுபோல உணர்வேன் சில்லிட்டு நிற்கும் மனசு.

“ஏலே இளங்குயிலே என்னாசைப் பைங்கிளியே 

பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தீன்சுவையே”

https://www.youtube.com/watch?v=1wgCb4guX2M


“நோன்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க

தெய்வம் தான் தந்தது உன்னைத் தான் இளங்கிளியே”

அப்படியே அச்சொட்டாகப் பல்லாண்டுகளுக்குப் பின் என் வாரிசுக்க்காக என் மனசு ஆத்மார்த்தமாகப் பாடுவது போல இசைஞானி இளையராஜாவே எழுதி இசைமைத்த அந்த நினைவுச் சின்னம் படப் பாடல் இருக்கும்.

“மூடடி வாசற் கதவை

கண்கள் தான் பட்டு விடுமே

பாடடி பாசக் கவிதை

நெஞ்சம் தான் கெட்டு விடுமே”

பாட்டில் யதார்த்தத்தைக் கொடுக்கும் அந்த நிமிடம் ஆகா இசைஞானி என்றோர் கவிஞன் மீது இன்னுமொரு சொட்டு தேன்துளி மரியாதை.


இதே பாடல் மெட்டை “சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன செந்தூரச் செங்கல்லிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன” என்றும் கொடுத்திருப்பார்.

இந்தப் பதிவுக்குச் சம்பந்தம் இல்லாவிட்டாலும் பொறுத்தது போதும் படத்தில் இதே பாங்கில் “ஆராரோ பாட வந்தேனே” https://www.youtube.com/watch?v=OLM6eXbBHHE பாடலை சுசீலாம்மாவுக்கும், இளையராஜாவுக்கும் தனித்தனியாக அமைந்து “ஏலே இளங்குயிலே” பாடலின் அதே உணர்வை தான் கடத்தி நிற்கும்”

அது போல ராதிகாவுக்கான நேரடிப் பாடலாக இல்லாவிட்டாலும் 

கேளடி கண்மணி படத்தில் வரும் 

“கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று”

https://www.youtube.com/watch?v=mXfIEw1TU1c

கேட்டால் கண்கள் பொல பொலவென்று கொட்டித் தீர்க்கும்,


தாய் அன்பிற்கே...ஈடேதம்மா...


ஆகாயம் கூட அது போதாது...

தாய் போல் யார்...வந்தாலுமே....

உன் தாயை போலே அது ஆகாது...

P.சுசீலாம்மா குரலில் சுரக்கும் தாய்ப்பாலாக அந்தப் பாடல் எனக்குத் தொனிக்கும். என் பிள்ளை அருகில் இல்லாத சமயம் இந்தப் பாடலைக் கேட்டால் எப்படா போய்ப் பார்த்து அள்ளி அணைப்பேன் என்று தூண்டி விட்ட மந்திரப் பாட்டு இது. 

இது போல் ராதிகா நடித்தும் அவருக்கான பாடலாக இல்லாமல் கே.ஆர்.விஜயாவுக்காகக் கொடுத்த பாட்டு “பேர் சொல்லும் பிள்ளை நீதானே” (பேர் சொல்லும் பிள்ளை)

“தூரி தூரி தும்மக்க தூரி ஹோ”

https://www.youtube.com/watch?v=7JPVKV-QcA8

இந்தப் பாடல் படத்தில் குழந்தைகளோடு ராதிகா பாடும் சந்தோஷ மெட்டிலும், பின்னர் இழந்த குழந்தைகளை நினைத்துப் பாடும் சோகராகமாக இரு வடிவில் இருக்கும். சந்தோஷ மெட்டில் எஸ்.ஜானகி, யுவன், பவதாரணி சேர்ந்த அந்தப் பாட்டை பி.சுசீலாவுக்கான சோக சோக மெட்டு. சோகத்தை அப்படியே அள்ளிக் கொடுக்காமல் கொஞ்சம் தொய்வாகாப் பயணிக்கும் புதுமையைக் கொண்டு தென்றல் சுடும் படத்துக்காக ராதிகாவுக்காக அமைந்த சுசீலா பாட்டு இது.. 

“தத்தெடுத்த முத்துப் பிள்ளை யாரோ 

ஆல மரத்தடி தேடி அமர்ந்தவர் தானோ”

https://www.youtube.com/watch?v=ukx-KBpsHp4


ரெட்டை வால் குருவியில் இரண்டு மனைவியருக்கு ஒரே சமயம் பிரசவம், அந்த நேரம் வரும் பாட்டு இது. கங்கை அமரன் வரிகளில் பி.சுசீலாவுடன், சித்ரா இணைந்து பாடிய பாட்டு படத்தில் ராதிகா மற்றும அர்ச்சனாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 

இந்தப் பாட்டைக் குழந்தைப் பாடலா அன்றிக் காட்சியமைப்போடு பொருத்தி வேடிக்கைப் பாடலா என்று பட்டிமன்றமும் வைக்கலாம் 



“சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா

செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா”

https://www.youtube.com/watch?v=sp1m6qWuozw

கருவுற்றிருக்கும் தன் மனைவி மேல் கொள்ளை அன்பு கொட்டித் தீர்க்கப் பாடும் கணவன் பாட்டு. கூடவே அந்த அன்பை முழுமனதாக ஏற்று 

“தாய் தந்த பாசம் தந்தை உன் வீரம்

சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே”

என்று மனைவியின் குரலாய் ராதிகாவுக்குப் பொருந்திய பி.சுசீலாம்மா பாட்டு. இந்த மாதிரிப் பாடல்கள் எல்லாம் வெறும் திரையிசை என்று ஒதுக்க முடியாத குடும்ப பந்தத்தின் உணர்வோட்டத்தைப் பிரதிபலித்து நம்முள் கடத்துபவை. “மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்” பாடலுக்கு இந்தப் பாடல் சற்றும் குறைவில்லாதது ஆனால் காதல், திருமண பந்தம் என்று இருவேறு பரிமாணங்களின் உச்சம் கொட்டுபவை.

“பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்

கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்

அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்

அங்கங்கள் யாவும் இன்னும் எண்ணும்”


கானா பிரபா


0 comments: