Pages

Tuesday, June 21, 2016

பாடலாசிரியர் கங்கை அமரனின் புத்தகம்


"கங்கை அமரனின் திரையிசைப் பாடல்களை 1977 இல் இருந்து தொகுத்தால் பல திரவியங்கள் கிட்டும், நாட்டுப்புறத்தில் இருந்து நாகரிகம் வரை" என்றொரு ட்விட்டை நான்கு வருடங்களுக்கு முன்னர் பகிர்ந்திருந்தேன்.
என் போன்ற ரசிகர்களின் பல்லாண்டுக் கனவு இப்போது மெய்ப்படப் போகிறது என்பதை பாவலர் சிவா அவர்களின் பகிர்வில் இன்று அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
https://www.facebook.com/permalink.php?story_fbid=915970098513266&id=100003008540809

இன்னும் சொல்லப் போனால் கங்கை அமரன் அவர்கள் எழுதிய பாடல்களைச் சிலாகித்து ரசிக்கும் என் போன்ற ரசிகனுக்கு இந்த நூல் குறித்த எதிர்பார்ப்பு கங்கை அமரனை விட அதிகமாக இருக்கலாம்.

ஒரு திரைப்படப் பாடல் பிறக்கும் போது அதைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அறியும் போது வெகு சுவாரஸ்யம் மிக்கதாக இருக்கும், குறித்த பாடல் படமாக்கப்படுவதை விட. 
இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் சில சமயம் நடிகர்/தயாரிப்பாளர் என்று ஒன்று சேர்ந்து குறித்த பாடலைத் தருவிக்கும் சுவையான பின்னணி. இதைத் தான் கங்கை அமரன் அவர்களின் நூலில் வழியாகப் பாடல் பிறந்த கதையாக அறிய வேண்டும் என்ற வேட்கை எனக்கு.

திரையிசைப் பாடலாசிரியர்களில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , கண்ணதாசன், வாலி, வைரமுத்து, மு.மேத்தா, முத்துலிங்கம் போன்றோர் தமது திரையிசைப் பாடல் திரட்டுகளை நூலாகக் கொணர்ந்திருக்கிறார்கள். இவர்களில் குறித்த பாடலை ஒட்டிய சம்பவ விபரிப்போடு கூடிய பாடல் பிறந்த கதைகளை கண்ணதாசன், வாலி, வைரமுத்து, மேத்தா, முத்துலிங்கம் ஆகியோர் அளவுக்கு மற்றையோர் செய்ததாக என் வாசிப்பனுபவத்தில் நினைவில்லை.
கண்ணதாசனும், வைரமுத்து இது குறித்துப் பல நூல்களை எழுதியிருக்கிறார்கள். 
முத்துலிங்கம் அவர்களின் பாடல் பிறந்த கதை நூலில் சில சம்பவப் பின்னணிகள் மிகைப்படுத்தப்பட்டதோ என்ற உணர்வு மேலோங்கும்.
கவிஞர் வாலியின் நானும் இந்த நூற்றாண்டும் அளவுக்கு அவரது ஆயிரம் பாடல்கள் பகிர்வு சிறப்பாக இருக்கவில்லை. அவசர கதியில் மற்றைய பாடலாசிரியரின் பாடலும் வாலி கணக்கில் சேர்க்கப்பட்டிருந்தது.
கவிஞர் வைரமுத்துவின் இதுவரை நான் வாழ்வியல் பகிர்வு உள்ளிட்ட நான்கு திரையிசைப் பாடல் புத்தகங்களை வாங்கி வைத்துள்ளேன். ஆனால் இறுதியாக வந்த ஆயிரம் பாடல்கள் தொகுதியில் ஒற்றை வரியில் ஆங்காங்கே கொடுத்த பாடல் பிறந்த கதையை முழுதும் தொட்டிருக்கலாமோ என்ற நப்பாசை எழுந்தது.
இதுவரை ஏறக்குறைய இருபது நூல்கள் திரையிசைப் பாடல்களும் அவற்றின் பின்னணியுமாக அமைந்த வகையில் சேமித்து வைத்திருக்கிறேன்.

இன்னும் பஞ்சு அருணாசலம், நா.காமராசன், பிறைசூடன், பொன்னடியான் ஆகியோர் கூடத் தமக்குக் கிட்டிய பாடல் வாய்ப்புகளை ஒட்டிய நூலை ஆக்கியளிக்கலாம் என்பது இன்னொரு தீரா ஆசை. 
வானம்பாடி (கலைஞர் டிவி), மனதோடு மனோ (ஜெயா டிவி) வழியாக பிறைசூடனும், மனதோடு மனோ வழியாக மேலும் சில பாடலாசிரியர்களும் இவ்வாறான பாடல் பிறந்த கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள். அதெல்லாம் "ஏட்டில் இல்லாதது என் கதையா" கணக்கில்.

"இந்த மின்மினிக்கு" என்று பல்லவியைக் கண்ணதாசன் கொடுக்க, சரணம் முழுதும் எழுதிய கங்கை அமரன்.  
 "எடுத்து வச்ச பாலும்" பாடலை வாலி எழுதி விட்டு மற்றைய பாடல்களை அமர் எழுதுவதால் இதுவும் கங்கை அமரன் பெயரிலேயே இருக்கட்டும் என்ற சேதியும், "சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு" என்று விஞ்ஞானத்தைப் புதைத்த வரிகளை எழுதிய கங்கை அமரனும், தன் அண்ணன் பாவலர் வரதராசன் பெயரில் "மண்ணில் இந்தக் காதலின்றி" எழுதிய கங்கை அமரனும் என்று பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் சுய வரலாறுகள் உண்டு.

பாடலாசிரியர் கங்கை அமரனின் நூல் வெகு சிறப்பாக அமைந்து வெளி வர  என் வாழ்த்துகள்.

பாடலாசிரியர் கங்கை அமரனின் பாடல் வரிகளோடு அமைந்த பாடல்கள் குறித்து நான் எழுதிய சில இடுகைகள்.

புத்தம் புதுக்காலை என் சிலாகிப்பில்
http://www.radiospathy.com/2011/02/blog-post.html

புத்தம் புதுக் காலை பாடல் பிறந்த கதை

http://www.radiospathy.com/2014/11/blog-post_11.html

சிறு கூட்டுல 
http://www.radiospathy.com/2014/06/blog-post_7.html

மனதிலே ஒரு பாட்டு
http://www.twitlonger.com/show/n_1salis2

ராதா அழைக்கிறாள்
http://www.twitlonger.com/show/n_1so9rco

2 comments:

பாரம்பரிய மீனவன் said...

சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையோடு என்
முன்னே யார் வந்தது
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது

கையின்றே செங்காந்தழ் மலரை
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இலைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ
மை கொஞ்சம்.......
பொய் கொஞ்சம்........
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்தில்....

அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா..அ...
கொஞ்சத் தா..ஆ..
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்தில்

ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே அனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டும்...ஆ
மெய் தொட்டும்..ஆ
சாமத்திலே தூங்காத விழிகளில்
சந்தித்தேன் என்னென்ன மயக்கம்
தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது..
.................................
கங்கை அமரனின் ஒரு சோற்று பதம்..
படம்: ஆட்டோ ராஜா

கானா பிரபா said...

அதை எழுதியது புலவர் புலமைப்பித்தன்