Pages

Monday, September 24, 2012

கிரீடத்தை இறக்கி வைத்த நடிகர் திலகன்

'பவித்ரம்" என்றதொரு மலையாளப் படம், கிட்டத்த ஏழெட்டு வருஷங்களுக்கு முன்னர் பார்த்திருந்தேன். இளந்தாரி மகன் மோகன்லால் ஷோபனாவுடன் காதல் வயப்பட்டு கல்யாணம் முடிக்கும் தறுவாயில் ஒரு புறம், இன்னொரு புறம் மூத்த மகன் சீனிவாசன் மணம் முடித்தும் குழந்தைப் பாக்கியம் இல்லாதிருப்பவர், இவர்களின் பெற்றோர் திலகன், ஸ்ரீவித்யா. தன் மூத்தமகனுக்குக் குழந்தை கிடைக்கவேண்டும் என்று வேண்டுதலோடு இருக்கும் ஸ்ரீவித்யாவுக்கு திலகன் மூலம் மீண்டும் ஒரு குழந்தை. பிறக்கும் போதே தாயைப் பரலோகம் அனுப்பிய பாவம் அந்தக் குழந்தைக்கு. திலகனுக்கோ தன் இச்சையின் விளைவு குழந்தையாக வந்து எள்ளலுக்கு ஆட்படும் அவமானம், ஒரு நாள் எல்லோரது கண்காணாத இடத்துக்குப் போய்விடுகிறார். தன் காதலை இழந்து, தந்தையாகவும், சகோதரனாகவும் மாறவேண்டிய அவல வாழ்வில் மோகன்லால். இறுதியில் எல்லாம் இழந்து பைத்தியக்காரன் ஆகிவிடுவார் மோகன்லால் . இப்படியான சின்னப்பாத்திரம் என்றாலும் மிகை நடிப்பற்ற, இயல்பான தன் நடிப்பினால் கேரளம் கடந்தும் அறியப்பட்டவர் திலகன். செங்கோல், கிரீடம் போன்ற படங்களில் திலகனின் பங்கு பெரும்பங்கு.

மலையாள சினிமாவின் குணச்சித்திரங்களின் பட்டியலில் முரளி, கொச்சின் ஹனீபா, ராஜன்.பி.தேவ் ஐத் தொடர்ந்து திலகனின் இழப்பு இன்று. இப்படியான மலையாள நடிகர்களை பெரும்பாலும் வில்லத்தனமாகக் காட்டும் எல்லையோடு நிற்கும் தமிழ் சினிமாவிலும் திலகனின் பரவலான அறிமுகம் சத்ரியன் படத்தின் அருமை நாயகம் என்ற வில்லனாக மலையே கவிழ்ந்தாலும் காட்டுக்கூச்சல் கத்தாத மென் நடிப்பில் பன்னீர்ச்செல்வம் என்ற விஜயகாந்த் இற்கு பெரும் தலைவலியாகப் படம் முழுதும் வருவார். பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகனுக்கோ கடுப்பேத்தும் நோகாமல் கொல்லும் இவரின் வில்லத்தனம். கரகரத்த சிரிப்பும், தீர்க்கமான பார்வையும், அலட்சியமான முகபாவமும் திலகனின் சொத்து.

சாணக்யன் போன்ற மலையாளப்படங்களில் முக்கிய வில்லன் பாத்திரத்தில் வைத்திருந்தாலும் தமிழில் கமல் போன்ற முன்னணி நடிகர்களே திலகனை ஆராதிக்கவில்லை. சத்ரியனுக்குப் பிறகு அவருக்குக் கிடைத்த பாலா படத்தில் சிறப்பாகச் செய்திருந்தாலும் அதற்கு முன் வந்த மேட்டுக்குடி படம் தான் அவருக்கான இன்னொரு சொல்லிக்கொள்ளும் படமாகத் தமிழில் கிட்டியது. மலையாளத்தின் எண்ணற்ற படங்களில் நடித்துக் கரைகண்டிருந்த திலகனின் சமீப ஆண்டுகள் தொழில் ரீதியில் அல்லல் மிகுந்தவை ஆனாலும் சளைக்காத போர்க்குணத்தோடு தன் கருத்தில் வழுவாது இருந்தவர். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.
திலகன்  oil paint வரைஞர்:  Rajasekharan Parameswaran

3 comments:

Unknown said...

நல்ல திறமையான நடிகர், மனிதர் "சத்திரியன்" படத்தில் மிரட்டிவிட்டார் தமிழ் திரையுலகத்தை! மலையாள திரையுலகத்திற்கு ஈடு செய்யமுடியாத இழப்பு!

கோமதி அரசு said...

திலகன் அவர்களின் இழப்பு கலைத்தாயின் இழப்பு தான். அருமையான நடிகர்.

அவருக்கு அஞ்சலிகள்.
அவரை பிரிந்து வாடும் அவர் குடும்பத்தார்களுக்கு ஆறுதலை அந்த இறைவன் அருள வேண்டும் என பிராத்திக்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான குரலில் மிரட்டுபவர்...

ஈடு செய்யமுடியாத இழப்பு...