Pages

Tuesday, November 9, 2021

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்



இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் & இசைஞானி இளையராஜா கூட்டணி தொண்ணூறுகளில் எப்படிக் கலக்கியது என்பதை இந்த உலகமே அறியும். ஆனால் ஆர்.வி.உதயகுமாரின் முதல் இரண்டு படங்களில் “உரிமை கீதம்” மனோஜ் - கியான் இரட்டையர்கள் இசையிலும், தொடர்ந்து வந்த “புதிய வானம்” படம் அம்சலேகாவின் இசையிலும் வந்தது.
எப்படி ஆபாவாணன் குழு என்ற திரைப்படக் கல்லூரி மாணவர் கூட்டத்துக்கு மனோஜ் கியான் இரட்டையரின் மிரட்டும் இசை கை கொடுத்ததோ அது போல அடுத்த பிரிவு மாணவர் அணியில் இருந்து வந்த ஆர்.வி.உதயகுமாருக்கு முகவரி எழுதிய “உரிமை கீதம்” படத்துக்கும் மனோஜ் – கியான் தான் இசை. கார்த்திக் – பிரபு ஆகிய இரண்டு பெரும் நட்சத்திரங்கள் இணைந்த இப்படத்தின் எல்லாப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டானதில் வியப்பில்லை அப்படியொரு பிரபலம் கிட்டியது. அதில் “மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்” (வித்யாவுடன்) https://www.youtube.com/watch?v=DpKo-qDU9Y0 இனிமை சொட்ட, “பொன் மானே நில்லடி” (சித்ராவுடன்), “விடுகதை போட்டு விட்டு விடை ஒன்று தேடுகிறேன் ( உமா ரமணன், சுந்தரராஜன் இணைந்து) பாடல்களும் ரசிக்கப்பட்டவை.
அந்த நேரம் சத்யா மூவீஸ் தயாரிப்பில் சங்கர் - கணேஷ், கங்கை அமரன் உள்ளிட்டோர் இசையமைப்பாளர்களாக இருக்க, இந்தப் படம் நடிகர் சிவாஜி கணேசன் & சத்யராஜ் இணைந்து நடித்த பிரமாண்டப் படமாக அமைந்தது. தனது முதல் படமான
“உரிமை கீதம்” படத்தில் அனைத்துப் பாடல்களையும் தானே எழுதிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் “புதிய வானம்” படத்தில் மற்றைய பாடலாசிரியர்களுக்கும் வழி விட்டார்.அப்படியாக கங்கை அமரன் கூட ஒரு பாட்டை எழுதினார். இந்தப் படத்தில் எழுந்த நட்பால் கங்கை அமரன் இளையராஜாவிடம் ஆர்.வி.உதயகுமாரிடம் அறிமுகப்படுத்தினார். பின்னர் தொடந்தது அந்த இசைக் கூட்டணி. அதன் பிறகு தொடர்ந்து 9 படங்களில் இளையராஜா & ஆர்.வி.உதயகுமார் இணைந்த போது பெரும்பாலும் ஆ.வி.உதயகுமாரும், ஒன்றிரண்ட்ஜ் வாலியுமாக இருக்க, சிங்காரவேலன் படத்தில் மட்டும் பாடலாசியர் கலவையில் கங்கை அமரனுக்கு ஒரேயொரு பாட்டு கிடைத்தது, அது “ஓ ரங்கா ஶ்ரீலங்கா கொப்பரத் தேங்கா”.
இந்தப் படத்திலும் ஐந்து பாடல்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியமே சுளையாக அனைத்தையும் எடுத்துக் கொண்டார். சிவாஜிக்கும் & சத்யராஜுக்குமான கூட்டுப் பாடலை மலேசியா வாசுதேவன் & எஸ்.பி.பாலசுப்ரமணியம் (பெண் குரல் பேபி சங்கீதா) சேர்ந்து “ஒரு பாடல் சொல்கிறேன்” என்றும்,
“ராக்கிளியே” என்ற சூப்பர் ஹிட் பாடலையும் ஆர்.வி.உதயகுமாரே எழுதினார்.
புதிய வானம் பாடல்களைக் கேட்க
கானா பிரபா
இசைஞானி இளையராஜாவோடு ஆர்.வி.உதயகுமார் கூட்டணி அமைத்த முதற்படமாக அமைந்தது தொடர்ந்து வந்த "கிழக்கு வாசல்". தயாரிப்பாளர் ஜி.தியாகராஜனின் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இசைஞானி இளையராஜாவை வைத்துப் பண்ணிய வெற்றிப்படங்களில் "கிழக்கு வாசல்" பெரு வெற்றி கண்ட படமாக அமைந்து சாதனை படைத்தது. கார்த்திக், ரேவதி ஆகியோரின் சினிமாப் பயணத்தில் தவிர்க்க முடியாத படமாக இது இன்றளவும் இருக்கின்றது.
"தாங்கிடத்தத்த தரிகிட தத்த" என்று சந்தம் போட்டு நெஞ்சின் கதவுகளைத் தட்டி உள்ளே சென்று உட்காரும் "அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்" பாடலாகட்டும் சித்ராவின் தேன் குரலில் "வந்ததேஏஏஏஏ குங்குமம்" என்ற மெல்லிசையாகட்டும் படத்தில் மீதமுள்ள பாடிப் பறந்த கிளி உள்ளிட்ட எல்லாப் பாடல்களையும் சேர்த்து கிழக்கு வாசல் படத்தின் பாடல்கள் தங்கக் கிரீடம் சூட்டவேண்டிய தராதரம்.
கிழக்கு வாசல் பாடல்கள்
ஒரு படம் இடைவேளைக்குப் பின் மீண்டும் தன் வழக்கமான இரட்டை நாயகர்கள் செண்டிமெண்டில் வந்த படம் "உறுதிமொழி" இதில் சிவகுமார், பிரபு முக்கிய நாயகர்கள். கானா பிரபா
ஆர்.வி.உதயகுமாரோடு திரைப்படக் கல்லூரி மாணவராக இருந்து வெளியே வந்து ஒளிப்பதிவாளராக இயங்கிய ரவி யாதவ், இவரின் தயாரிப்பில் வந்த படமே உறுதிமொழி. இப்போது ரவி யாதவ் முழுமையாகத் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி மும்பை சென்று விட்டார். கிழக்கு வாசல் கொடுத்த பெருங்கவனிப்போடு ஒப்பிடுகையில் உறுதிமொழி திரைப்படம் பெரிதாக எடுபடவில்லை. ஆனால் இந்தப் படத்தில் வந்த "அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே புதுராகம் நான் பாடவா" பாடல் அந்த நாளில் சென்னை வானொலியில் திரைகானத்திலும், நேயர் விருப்பத்திலும் ஒலித்துத் தன் இருப்பைக் காட்டியது இன்னும் இந்த ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி கொடுத்த இந்த ஜோடிப்பாட்டை நேசிப்பவர்கள் நெஞ்சாங்கூட்டில் வைத்திருப்பர்.
உறுதி மொழி பாடல்கள்
தொடர்ந்து கார்த்திக், சிவகுமார் கூட்டணியோடு வந்தது "பொன்னுமணி". இந்தப் படத்தை எவ்வளவு தூரம் தமிழகத்து ரசிகர்கள் ரசித்தார்களோ தெரியவில்லை. ஆனால் ஈழத்து ரசிகர்களிடையே இந்தப் படம் வந்த காலகட்டத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மின்சாரம் இல்லாது மண்ணெண்ணையில் நீர் இறைக்கும் மெஷினை இயக்கி மின்சாரம் தருவித்துப் படம் பார்த்த அந்தக் கற்காலத்தில் வந்த பொற்காலச் சினிமா இது. இசைஞானி இளையராஜாவின் மூத்த புதல்வர் கார்த்திக் ராஜா தன் தந்தையை "ஏ வஞ்சிக்கொடி" என்று முதன்முதலில் பாடவைத்து இசையமைத்தார். ஏனைய பாடல்களில் "நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா" எம் ஊரில் நாதஸ்வரம் வாசிப்பவர்களின் வாசிப்பில் அந்தக் காலத்தில் தவிர்க்க முடியாத ஒரு பாடலாகக் கல்யாண வீடுகளிலும், கோயில் திருவிழாவின் ஜனரஞ்சக வாசிப்பு நேரத்திலும் இடம்பிடித்த பாடலது.
பொன்னுமணி பாடல்கள்
"பாவலர் கிரியேஷன்ஸ்" இளையராஜாவின் அண்ணன் பாஸ்கர் தயாரிப்பில் கமலை "சிங்காரவேலன்" ஆக்கி ஆர்.வி.உதயகுமார் இயக்கிய படம். "அதிவீரராம பாண்டியன்" என்ற படத்துக்காக கமல் தனக்குக் கொடுத்த கால்ஷீட் என்றெல்லாம் தம்பி கங்கை அமரன் கோபித்தார். ஆனாலும் படம் இன்னொரு கரையில் வளர்ந்தது. படத்தில் வில்லன் உட்பட எல்லோருமே சிங்காரமாக இருக்கவேண்டும் என்பதை முன்னுறுத்துவதாக அப்போது பேட்டியில் எல்லாம் சொன்னார் ஆர்.வி.உதயகுமார். இசைஞானி இளையராஜாவின் நீண்ட சாம்ராஜ்யத்தில் எக்கோ இசைத்தட்டுக்கள் காலம் பெரியது. ஆனால் அவர்களோடு கொண்ட பிரிவால் தயாரிப்பாளர் ஏக்நாத் உடன் சேர்ந்து பனையோலை விசிறியைச் சின்னமாகப் போட்டு வந்த "ராஜா ரெக்காட்ஸ்" இல் சிங்காரவேலனும் வந்தது. அப்போது பாடல் ஒலிநாடா வாங்குபவர்களுக்குப் போட்டியும் பரிசு வெல்பவர்களுக்கு சிங்காரவேலன் படத்தின் வெற்றி விழாவில் கெளரவமும் கிட்டும் என்றெல்லாம் விளம்பரம். சும்மாவே இசைஞானியின் பாடல்கள் பட்டையைக் கிளப்பும், அதிலும் தன் குடும்பத் தயாரிப்பில் வந்த படம் என்றால் சொல்ல வேண்டுமா? பம்சுக்க பம்சுக்க பம்பம் தான் ;0
புதுச்சேரி கச்சேரி பாடலில் வரும் "டைகராச்சாரி" சொல் மட்டும் ஒலி இழந்து இலங்கை வானொலியில் ஒலித்தது, காரணம் ஏன் என்பதும் வேணுமோ? கானா பிரபா
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் பாடல் இன்றளவும் என்னை இம்சை செய்யும் இனிய காதலியாய்
சிங்கார வேலன் பாடல்கள்
"சின்னக்கவுண்டர்" ஆர்.வி.உதயகுமாருக்கு கிழக்கு வாசலுக்குப் பின் மீண்டும் பெரியதொரு வெற்றியைக் கொடுத்து அழகு பார்த்தது. படத்தில் விஜயகாந்த், மனோரமாவின் கெட் அப் மற்றும் சுகன்யாவின் பொருத்தமான பாத்திரத் தேர்வு, கவுண்டமணி செந்தில் இவற்றையெல்லாம் விஞ்சி இசைஞானி இளையராஜா போட்டுக் கொடுத்த ஒவ்வொரு பாடல்களுமே வெறும் அஞ்சு பாட்டுக் கணக்கல்ல. ஒவ்வொன்றும் காட்சிகளோடு இழத்துச் சேர்த்த முத்துக்கள். அதிலும் "முத்துமணி மாலை என்னைத் தொட்டுத்தொட்டுத் தாலாட்ட" பாடல் கடந்த ஒரு வருஷமாக நான் செய்யும் புதிய வானொலி நிகழ்ச்சியான "முத்துமணிமாலை" இன் மகுடப்பாடல். இந்தப் பாடல் வந்த சமயத்தில் இலண்டனில் இருக்கும் அண்ணர் வாங்கித் தந்த டேப் ரெக்காடரில் அப்போது இயங்கிய எஃப் எம் 99 என்ற வானொலியை ஒலிக்கவிட்டு "முத்துமணி மாலை" பாடலைப் பதிவாக்கியது ஒரு அழகிய நினைவாக.
சின்ன கவுண்டர் பாடல்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் பார்வை தொடர்ந்து வெற்றிப்படம் கொடுக்கும் ஆர்.வி.உதயகுமார் மீது விழுந்த போது அது ஏவி.எம் என்ற பெரும் தயாரிப்பு நிறுவனமும் கூட்டுச் சேர "எஜமான்" படமாகியது. படம் முழுவதும் ரஜினியை வேஷ்டி கட்டவைத்து வானவராயர் ஆக்கியது ஒரு புதுமை என்றால், ஏவிஎம் உடன் ஊடல் கொண்டிருந்த இசைஞானி இளையராஜாவை வைத்துத் தான் படம் பண்ணுவேன் என்று விடாப்பிடியாக இருந்து அதைச் சாதித்தது ஆர்.வி.உதயகுமாரின் இன்னொரு சாதனை. கிழக்கு வாசல் படத்தில் வாலியும் பாட்டெழுதினார் ஆனால் தொடர்ந்து வந்த உறுதி மொழி, பொன்னுமணி படங்களில் முழுமையாக ஆர்.வி.உதயகுமாரே எல்லாப்பாடல்களையும் எழுதினார். மீண்டும் வாலிக்கும் ஒரு வாய்ப்பு எஜமான் படத்தில்.
இசைஞானி இதில் கொடுத்த பாடல் முத்துக்கள் ஒவ்வொன்றுமே நட்சத்திரத் தகுதி. அதிலும்
"ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இனியான இளமானே துணையான இளமானே"
என்ற பாடல் உச்சம். இதே பாடலை சோக மெட்டோடு ராஜாவே பாடியிருப்பது படத்தில் மட்டும் வரும்.
எஜமான் பாடல்கள்
நடிகர் பிரபுவின் 100வது படம் யார் இயக்குவது என்ற தகுதிச் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு வாய்ப்புக் கொடுக்கப்பட்டவர் ஆர்.வி.உதயகுமார். அமெரிக்கா சென்ற நதியாவை மீண்டும் களமிறக்கி, மீனாவையும் சேர்த்து இரட்டை ஜோடியாக்கி "ராஜகுமாரன்" படமாக்கினார். அன்றைய காலகட்டத்தில் இந்தப் படத்துக்கான விளம்பரம் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பே படத்தின் வெற்றிக்கு ஆப்பு வைத்தது. என்னதான் இசைஞானி இளையராஜாவின் முத்தான பாடல்கள் இருந்தாலும் வெற்றி கொடுக்காத படம், பாடல்களை மட்டுமே வெற்றியாக்கியது. "சித்தகத்திப் பூக்களே" பாடலோடு "என்னவென்று சொல்வதம்மா" பாடல் மறக்கமுடியாத எஸ்.பி.பி கானம்.
ஆர்.வி.உதயகுமாருக்கு. தனக்கு ஆரம்ப காலத்தில் வெற்றி தேடித்தந்த நாயகன் கார்த்திக்கை வைத்து இலக்கியத்தரமான தலைப்பை வைத்தவர் கூட்டணியில் ஒரு சறுக்கலாக அமைந்தது நந்தவனத் தேரு.
அழகான அறிமுகம் ஶ்ரீநிதிக்கும் ஒரு முற்றுப்புள்ளி.
வழக்கம் போல எல்லாப்பாடல்களும் ஆர்.வி.உதயகுமார் எழுதினார். குறிப்பாக "வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே"
பாடல் வெற்று வார்த்தைக் கவிஞர் அல்ல இவர் என்பதைக் காட்டிய ஒரு பாட்டு. மீண்டும் ஒருமுறை கேட்டுப் பாருங்கள் மீண்டும் ஒருமுறை கிறங்கிப் போவீர்கள்.
தமிழ் சினிமாவின் எண்பதுகளின் முக்கிய நட்சத்திரங்கள் அனைவரையும் இயக்கிப் பெருமை கொண்ட ஆர்.வி.உதயகுமாருக்கு முழுமையாக அரிதாரம் பூசிக்கொண்டால் என்ன என்று தோன்றியிருக்கும். அவ்வப்போது சிறு சிறு துண்டு வேடங்களில் வந்தவர், நடிகர் ஜெயராமோடு, தானும் நாயகனாகி "சின்ன ராமசாமி பெரிய ராமசாமி" என்ற படத்தை இயக்கினார். படத்தில் நடித்த பல நடிகர்களே ஃபீல்டை விட்டுப் போய்விட்டார்கள் ஆனால் படம் வருஷங்கள் கடந்தும் வெளிவராமல் இன்னும் பெட்டிக்குள் தூங்குகின்றது. இதுவரை இசைஞானி இளையராஜா, ஆர்.வி.உதயகுமார் சேர்ந்த கூட்டணியில் இறுதிப்படம் என்ற பெருமை மட்டும் தான் இப்போது இதற்கு. வாழையடி வாழையா என்ற கே.ஜே.ஜேசுதாஸ் பாடி இந்தப் படத்துக்காக இசைத்த பாடல் மட்டும் இன்னும் ஒலிக்கிறது வானொலிகளில்.
இசைஞானி இளையராஜாவோடு இணைந்து இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கொடுத்த இந்த முத்தான பத்துப் படங்களோடு இன்னொரு சுற்றும் இணையவேண்டும் என்பதே உங்களைப் போன்ற என் ரசிகனின் அவா. பார்ப்போம் பொறுத்து.

ஆர்.வி.உதயகுமார் அர்ஜீனுடனும் நட்சத்திரக் கூட்டணி அமைத்தார் சுபாஷ் படம் மூலம். அந்த நேரம் அர்ஜுனுடன் ராசியான இசையமைப்பாளராக இயங்கி வித்யாசாகரின் இசைக்கு ஆர்.வி.உதயகுமார் கொடுத்த வரிகள் பாடல்களாகப் பரிணமித்தன.
குறிப்பாக “முகம் என்ன மோகம் என்ன” https://www.youtube.com/watch?v=ZhdSLwbQNqU

அந்தப் படத்தில் உச்சம் தொட்ட பாட்டு.

ஆர்.வி.உதயகுமாரின் முதல் படத்தைத் தயாரித்த சுபஶ்ரீ பட நிறுவனமே சுபாஷ் படத்தைத் தயாரித்ததும் குறிப்பிடத்தக்கது.


பின்னர் விக்ராந்த் நாயகனாக தமிழில் அவர் கொடுத்த படம் கற்க கசடற.
தெலுங்கில் திருட்டுப் பயலே படத்தை இயக்கியுமிருந்தார்.

“ஹாய் ஹாய் ஹாய் ஹாய் வெண்ணிலவே ஹாய்” இந்தப் பாடல் பின்னாளில் ஆர்.வி.உதயகுமார் தாரக ராமுடு என்ற தெலுங்குப் படத்தை இயக்கிய போது கோட்டி இசையில் இடம் பிடித்த பாட்டு.
இன்றும் தெலுங்கு தேசம் இப்பாடலைக் கொண்டாடுவதை இசை மேடைகளில் தரிசிக்கலாம். அப்படி ஒன்று எஸ்பிபியின் மேடைப் பகிர்வாக
இந்தப் படம் தெலுங்கில் இருந்து தமிழுக்கு “வெள்ளி நிலவே” என்ற பெயரில் மொழி மாற்றப்பட்ட போது தேடி தேடி ரசித்து வருகிறேன்
ஆர்.வி.உதயகுமார் அவர்கள் வெளியார் படங்களிலும் பாடலாசிரியராக இயங்கியதைப் பின்னர் பகிர்வாகத் தருகின்றேன்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாடலாசிரியர் & இயக்குநர் ஆ.ர்.வி.உதயகுமாருக்கு.
கானா பிரபா
09.11.2021
தயவு செய்து இந்தப் பதிவை வாட்சாப்பிலோ பிரதி எடுத்தோ, பெயரை அழித்தோ பகிராதீர்.

0 comments: