Pages

Friday, November 10, 2017

இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎸 🎻 காலையும் நீயே மாலையும் நீயே 🎷 🥁 உழைத்து வாழ வேண்டும் 🎺


எவ்வளவு தான் திறமை இருப்பினும் ஒரு அறிமுக இசையமைப்பாளருக்கு அதிஷ்டமென்பது இவ்வளவு தூரம் கிடைக்குமா என்றே இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணத்தை ஆச்சரியத்தோடு நோக்க வேண்டியிருக்கிறது.
எடுத்த எடுப்பிலேயே எண்பதுகளின் உச்சமாக விளங்கிய தயாரிப்பாளர் கோவைத்தம்பியின் “மண்ணுக்குள் வைரம்”, அதனைத் தொடர்ந்து அதுவரை இசைஞானி இளையராஜாவோடு வெற்றிக் கூட்டணியாக இயங்கிய இயக்குநர் இமயம் பாரதிராஜாவோடு “வேதம் புதிது” இவற்றைத் தொடர்ந்து 1988 ஆம் ஆண்டு தேவேந்திரனுக்கு இரட்டை அதிஷ்டம் வாய்க்கிறது. அதுவே இந்தப் பதிவில் சொல்லப்படுகின்றது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய உச்ச நட்சத்திரங்களுக்கு அடுத்து வைக்கக் கூடிய அளவுக்கு திரையுலகில் அப்போது மின்னியவர் விஜய்காந்த். அதிலும் கிராமியம், நகரம் என்று எல்லா விதக் கதைப் பின்னணியும், ஏற்கனவே அனுபவப்பட்ட இயக்குநர்கள், அறிமுக இயக்குநர்கள் என்று விஜய்காந்த் அளவுக்கு தில்லாக நடித்துத் தள்ளிய நடிகர் யாருமிலர். இப்படியானதொரு கால கட்டத்தில் ஒரே ஆண்டில் விஜய்காந்த் நடித்த இரண்டு படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு தேவேந்திரனுக்குக் கிட்டுவதென்பது எவ்வளவு பெரிய அதிஷ்டம். அவற்றில்
ஒன்று ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் “காலையும் நீயே மாலையும் நீயே” இன்னொன்று அமீர் ஜான் இயக்கத்தில் “உழைத்து வாழ வேண்டும்”.
இசையாசிரியராகப் பள்ளியொன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தேவேந்திரனை அப்பள்ளி விழாவுக்குப் பிரதம விருந்தினராக வந்த இயக்குநர் ஆர்.சுந்தரராஜன் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டுகிறது. அப்பள்ளி விழாவில் தேவேந்திரன் இசைமைத்து மாணவர்கள் பாடிய பாட்டு ஆர்.சுந்தரராஜனை வசீகரிக்க, அவரும் தேவேந்திரனைத் தன் புதிய படத்துக்கு ஒப்பந்தம் செய்கிறார். ஆனால் அந்தப் படம் அப்போது எடுக்க முடியாத சூழல் ஏற்படவே தேவேந்திரனின் அறிமுகம் “மண்ணுக்குள் வைரம்” வழியாக நிகழ்கிறது.
(தேவேந்திரன் - ஆர்.சுந்தரராஜன் சந்திப்பு குறித்த தகவல் உதவி நன்றி விக்கிப்பீடியா)
எண்பதுகளில் மாமூல் கதைகளை வைத்து இசையால் அவற்றுக்குத் தங்க முலாம் பூசி பெரு வெற்றிகளைக் குவித்தவர் ஆர்.சுந்தரராஜன். அவர் நினைத்திருந்தால் இளையராஜாவோடு சேர்ந்து இன்னொரு படம் பண்ணியிருக்கலாம். ஆனால் முன்னர் ஒரு பதிவில் நான் குறிப்பிட்டது போல அந்தக் காலகட்டத்து உச்ச இசைமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா என்று படத்துக்குப் படம் கலந்து கட்டி இசைக் கூட்டணி போட்டவர் ஆர்.சுந்தரராஜன். அவர் வழியாகத் தேவேந்திரன் அறிமுகம் நிகழாவிட்டாலும் ஆர்.சுந்தரராஜனின் குரு பாரதிராஜா, பாரதிராஜாவின் சிஷ்யர் மனோஜ்குமார் போன்றோரால் ஏற்கனவே
அடையாளப்படுத்தப்படுவதற்குக் காரணி ஆகி விட்டார்.
ஆர்.சுந்தரராஜன் கலந்து கொண்ட நிகழ்வில் தன் மாணவர்களுக்காக இசைத்த பாடலைச் சிறிது மாற்றம் செய்து “பொங்கியதே காதல் வெள்ளம்” என்று ஆக்கினாராம் தேவேந்திரன்.
கிராமியத் தெம்மாங்கில் “மண்ணுக்குள் வைரம்”, சாஸ்திரிய சங்கீதம் கலந்து பாடிய “வேதம் புதுது” ஆகிய படங்களுக்குப் பின்னால் இரண்டு பெரிய மசாலாப் படங்களைக் கையிலெடுக்கிறார் தேவேந்திரன்.
“காலையும் நீயே மாலையும் நீயே” இந்தப் படத்தில் விஜய்காந்த் மற்றும் பிரபு என்று இரட்டை நாயகர்கள். கூடவே விஜய்காந்துக்கு அப்போது வகை தொகையில்லாமல் ஜோடி கட்டிய ராதிகா இங்கேயும்.
“குக்கு கூ எனக் கூவும் குயிலோசை” அடடா இந்தப் பாட்டைக் கேட்டு எத்தனை வருடமாகி விட்டது உச்சுக் கொட்டுமளவுக்கு இனிய மெல்லிசை எஸ்.ஜானகி மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஜோடி சேர. பாடலுக்குக் கொடுத்த இசையில் அதீத ஆர்ப்பரிப்பு இல்லாவிட்டாலும் இந்தப் பாட்டுக்குப் போட்ட மெட்டு வசீகரிக்க வைக்கிறது. அப்படியே இந்த மெட்டைத் தேவேந்திரன் ஆர்.சுந்தரராஜனுக்கு எப்படிச் சொல்லியிருப்பார் என மனதில் ஓட்டிப் பார்க்க முடிகிறது.
“வாடி என் சிட்டுக் குருவி” மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி குழு பாடியது அதிகம் பிரபலமாகாததொன்று.
ஆனால் ஜெயச்சந்திரன் மற்றும் எஸ்.ஜானகி பாடிய இந்தப் படத்தின் மூன்றாவது ஜோடிப் பாடல் “சம்மதம் சொல்ல வந்தாள்”அதகளம். அந்தக் காலத்து ரெக்கார்டிங் பார்களின் தேவ கீதமாக இந்தப் பாட்டு இருந்தது. எஸ்.ஜானகி என்ற பாடகியை மட்டும் வைத்துக் கொண்டு எஸ்.பி.பியோடு மெது வேகப் பாட்டு, மலேசியா வாசுதேவனோடு தெம்மாங்கு ரகம், ஜெயச்சந்திரனோடு மெல்லிசை என்று மூன்று முத்துகளைக் கொடுத்துத் தனி முத்திரை பதித்திருக்கிறார் தேவேந்திரன். “காலையும் நீயே” பாடல் எஸ்.ஜானகி குழுவினர் பாடியது இரண்டு பாட்டாகக் கிட்டுகிறது.
“ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன்” பாட்டைக் கேட்டாலே எண்பதுகளின் காளையர்க்குக் கண்கள் பழுத்து விடும். பழைய காதலியை நினைத்து ஒன்றில் பாட்டைத் தேடுவார்கள் அல்லது பாட்டிலைத் தேடுவார்கள். “காலையும் நீயே மாலையும் நீயே” படத்தில் இருந்து உச்சமாக இருக்கும் ஒரு பாட்டைக் காட்டச் சொன்னால் கண்ணை மூடிக் கொண்டு “ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன்” https://youtu.be/3pwdEh0cyqk பாடலை நோக்கித் தாராளமாகக் கையை நீட்டலாம். இந்தப் பாடலின் மெட்டு, கே.ஜே.ஜேசுதாசின் மது தோய்த்த தளர்ந்த, விரக்தியான, சோகம் சொட்டும் ரசங்கள் காட்டும் குரலினிமை, வரிகள், அதனோடு இசைந்து பயணிக்கும் இசை என ஒரு சோகப்பாட்டை அனுபவித்துக் கேட்க முடியுமென்றால் இந்தப் பாடல் அதற்கான பரிபூரண தகுதி கொண்டது.
“அம்மாடி என்ன செய்ய மன்னிக்கணும் என்னைத்தான்
யார்கிட்ட சொல்லி அழுவேன்” என்று முத்தாய்ப்பாய் வரும் இடம் பாடலைக் கேட்ட பின்னரும் நினைவில் பாடிக் கொண்டிருக்கும்.
“காலையும் நீயே மாலையும் நீயே” படத்தின் பாடல்களை அறிமுகம் ராஜசுந்தர், கவிஞர் வாலி மற்றும் கங்கை அமரன் ஆகியோர் எழுதினார்கள்.
ரெங்கபாபு மற்றும் செல்வி ஆகிய பாடகர்கள் அறிமுகமானார்கள். ரெங்கபாபு - செல்வி தம்பதி track இல் பாடிய பாட்டு “குக்குக்கூ எனக் கூவும் குயிலோசை” இந்தப் பாட்டு இவர்களின் குரலில் தனக்குப் பிடித்தமானது என்று எனக்கு Vinyil Records தந்த அன்பர் “காலையும் நீயே மாலையும் நீயே” இசைத்தட்டைத் தன்னுடனேயே வைத்து ஆசையோடு இன்றும் கேட்டு வருகிறார்.
அனைத்துப் பாடல்களையும் கேட்க
https://youtu.be/DJx3McKzZuw
“வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்த பின்னே அது தாழை மரம்” https://youtu.be/6i1sNyWOvTY இந்தப் பாடலை அச்சரம் பிசகாமல் பாடிய எண்பதுகளின் வாலிபக் குருத்துகளைக் கண்டிருக்கிறேன். “உழைத்து வாழ் வேண்டும்” திரைப்படத்துக்காக தேவேந்திரன் போட்ட மெட்டு இன்று முப்பது ஆண்டுகள் கடந்தும் கே.ஜே.ஜேசுதாஸ் பேர் சொல்லும் பாட்டு.
எண்பதுகளின் சோகப் பாடல்கள் அதுவும் தனிப் பாடல்கள் என்றால் கே.கே.ஜேசுதாஸ் தான் உச்சம். எப்படி இளையராஜாவுக்கு ஒரு “கனவு காணும் வாழ்க்கை யாவும்”, ரவீந்திரனுக்கு ஒரு “பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்”, எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு ஒரு “ராஜ்ஜியம் தான் ஏதுமில்ல ராஜனாக இருந்தேன்”, மனோஜ் - கியானுக்கு ஒரு “அழகான புள்ளி மானே” என்று இந்தச் சோகப்பட்டியலை நீட்டிக் கொண்டு போக முடிகிறதோ அங்கே கண்டிப்பாக தேவேந்திரனின் “ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன்” பாடலும் “வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்” பாடலும் இருக்கும்.
உழைத்து வாழ வேண்டும் படத்திலும் விஜய்காந்துக்கு ராதிகா ஜோடி. மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில் கோவைத்தம்பி தயாரிக்க, அமீர்ஜான் இயக்கிய படமிது.
“முத்துக்கள் பதிக்காத கண்ணில் முத்தங்கள் பதிக்கட்டுமா” https://youtu.be/-BxG0XersDU கே.ஜே.ஜேசுதாஸ் & சித்ரா ஜோடியில் பிரபலமான பாடலாக அமைந்தது.
“வெண்ணிலவை முதல் நாள் இரவில் படைத்தான்” https://youtu.be/EldFmSj4nwg பாடலும் எஸ்.பி.பி மற்றும் கூட்டுக் குரலோடு இனிமை சேர்த்த பாட்டு.
“பூமி என்ன பூமி” என்றொரு பாட்டு மலேசியா வாசுதேவன் குரலில் இடம் பிடித்தது. Life is funny என்றொரு போட்டிப் பாட்டு அனுராதா, எஸ்.பி.பி & குழுவினர் பாடியது கடனே என்று சேர்த்தது.
காலையும் நீயே மாலையும் நீயே மற்றும் உழைத்து வாழ வேண்டும் ஆகிய படங்களை இந்தத் தொடர் எழுதுவதற்கான ஆராய்ச்சிக்காகப் பார்த்தேன். என்னதான் திறமையான இசை வல்லுநராக இருப்பினும் திரைப்படமொன்றுக்குத் தேவையான, அதுவும் இந்த இரண்டு மசாலாப் படங்களுக்கும் உயிர் நாடியாக விளங்கும் பின்னணி இசையில் அதிகம் தேற முடியாத நிலையே தேவேந்திரன் இசையில் தென்பட்டது. இரண்டு படங்களின் மாமூல் திரைக்கதையமைப்பும் இவற்றை மீண்டும் பார்த்து ரசிக்க முடியாமல் ஆக்கி விட்டது.
‪கானா பிரபா‬
‪10.11.2017‬

0 comments: