Pages

Saturday, March 3, 2018

தீர்த்தக்கரை தனிலே.....செண்பகப் புஷ்பங்களே

தீர்த்தக்கரை தனிலே.....செண்பகப் புஷ்பங்களே
நான் போடும் தாளங்கள் விழி நீரின் கோலங்கள்
பாடுங்கள் ஜீவ ராகங்களே.....❤️

சோகத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் மட்டும் தேவையில்லை அந்த உணர்வாக மாறி விட்டாலே போதும் அதனை மொழி பெயர்த்துச் சொல்லி விடும். அதனால் தானோ என்னவோ பறவைகளும், மிருகங்களும் ஏன் மனிதர்களும் கூடத் தங்களின் ஏக்கத்தைத், துயரை வெளிப்படுத்தும் பாங்கு வேறுபட்டிருக்கும். 

இங்கே இந்தப் பாடலில் நாயகனுக்கு ஏதுவாக இயங்கும் வாத்தியங்கள் இசை மொழியில் பகிரும் அந்தந்த வெளிப்பாடுகள் கூட அப்படித்தான். தான் கொடுக்கும் இசையில் மாறுபட்டாலும் சோகம் என்ற பொதுச் சொல்லின் கீழ் ஓசையெழுப்புகின்றன.

பாடலின் ஆரம்பத்தில் வந்து போகும் பெண்ணின் குரலொலியை இசைக்கோவையொன்று ஒற்றியெடுத்து நாயகன் காதில் போட்டு விட அவன் தொடர்ந்து பாட ஆரம்பிக்குமாற் போபத் தொடங்குகிறது இந்தப் பாட்டு.

சோகப் பாடல்கள் ஏன் விரும்பி ரசிக்கப்படுகின்றன என்று கேட்டால் அவை வெறுமனே சோக உணர்வை மட்டும் கடத்துவதோடில்லாமல் துவண்டு போயிருப்பவன் முதுகைத் தடவி ஆறுதல்படுத்தும் பண்பு கொண்டவை.
உன் சோகத்தை நான் பங்கு போட்டுக் கொள்கிறேன் உன்னை நான் ஆற்றுப்படுத்துவேன் என்று இந்தப் பாடல்கள் மறை பொருளில் அவனுக்குச் சொல்லி வைக்கின்றன. அந்த மாதிரியானதொரு உணர்வோட்டம்  மிகுந்த பாட்டு இது. 

“தீர்த்தக்கரை தனிலே செண்பகப் புஷ்பங்களே” பாடல் வெளிப்படையாக ஒரு ஜனரஞ்சகம் பொதிந்ததாகத் தோன்றினாலும் அந்தப் பாட்டின் பயணத்தில் ஒரு சாஸ்திரிய சங்கீதத்தின் சாயம் ஒட்டியிருக்கும். பாடலை  உன்னிப்பாகக் கேட்கும் போது ஒவ்வொரு வரிகளையும்
நீட்டி நிரவி பாடும் பாங்கில் அதைக் கோடிட்டுக் காட்டுவார் ஜேசுதாஸ். ஒடுங்கிப் போய்த் தன் குரலைத் தணித்துக் காட்டும் போதே மெலிதான
சோக ராகத்துக்கான இலக்கணம் அமைந்து விடும்.
ஆனால் அந்த சாஸ்திரிய சங்கீதத்தனம் வெளிப்படையாகத் தெரியாத அளவுக்கு ஜாலம் கொண்டு படைக்கப்பட்டிருக்கும். அந்த வரிகளை இன்னொரு சிட்டிகை  அதிகப்படியாகப் போட்டு இன்னும் நீட்டினால் அந்தப் பாட்டின் ஜீவனே தொலைந்து விடுமளவுக்குக் கையாளப்பட்டிருக்கும் பாட்டு இது.

ஒரு பாடலைக் கேட்டு முடித்த பின்னர் அதையே திரும்பக் கேட்பதோ அல்லது அதே சாயல் கொண்ட இன்னொன்றைக் கேட்பதோ இயல்பு.
“தீர்த்தக்கரை தனிலே செண்பகப் புஷ்பங்களே” பாடலின் ஆண் குரலின் முதல் ஓசை வடிவத்தை மட்டும் கொடுத்த பாடகி ஜென்ஸி அதே பாடலை முழுமையாகவும் தனியாகப் பாடியிருக்கிறார். இவ்விரண்டையும் தவிர எனக்கு இன்னொரு பாடல் இந்தச் சூழலில் நினைவுக்கு வரும். அந்தப் பாடல் கூட கே.ஜே.ஜேசுதாஸுக்குத் தனியாகவும் ஜென்ஸிக்குத் தனியாகவும் என்று கொடுக்கப்பட்ட பாடல். அதுதான் “மீன் கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்”.

“தீர்த்தக்கரை தனிலே செண்பகப் புஷ்பங்களே” பாடலுக்கு முரணான ரிதத்தில் அமைந்தது
“மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்”. முன்னையது ஒரு வட்டம் போட்டு அங்கேயே சுற்றி மெது வேகத்தோடு பாடும் பாட்டென்றால் பின்னது துள்ளிசை போட்டுக் குதித்துக் கொண்டு போகும் தாளக் கட்டு.

மெல்லிசை தழுவிய பாடல் ஒன்று நம் உள்ளுணர்வுகளை மட்டுமன்றி, உடலையும் கூட ஆட்டிப் பார்க்கும் சக்தி கொண்டதென்றால் இந்த “மீன் கொடித் தேரில்” பாடலும் அத்தகையதே. பாடலின் தொடக்கம் முதல் முடிவிடம் வரை கொல்லம் போகும் நீர் வழித்தடத்தில் ஆலப்புழாவின் படகு வீடொன்றில் அமர்ந்து செல்லும் சுகமான நகர்வு கிட்டும். பாடல் முடியும் போது எழும் ஓசையென்னவோ கடலலையொன்று வந்து முத்தமிட்டுப் போவது போல.
இந்த இரு பாடல்களின் பொதுத்தன்மை “பிரிவுத்துயர் பேசும் இசை”. ஆனால் இரண்டினதும் இசை கோப்பு மாறுபட்டு நம்மை ஆட் கொள்ளும்.

நாண மேக வானிலே...
நானும் நீயும் கூடியே...
மோக ராகம் பாடியே...
போடும் சோக நாடகம்

காவிரி ஓரமாய்...கோவலன் காதலி..
பூவிழி மாதவி...காதலில் பாடிய
கானல் வரி சுகம் தேடிடும் நெஞ்சங்களே..
கொஞ்சவா.......

தீர்த்தக்கரை தனிலே செண்பகப் பூஷ்பங்களே (ஜேசுதாஸ் குரலில்)
https://youtu.be/r6xg3TMM8Hg

தீர்த்தக்கரை தனிலே செண்பகப் பூஷ்பங்களே (ஜென்ஸி குரலில்)
https://youtu.be/nZNitgJB8AM

மீன்கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான் (ஜேசுதாஸ் குரலில்)
https://youtu.be/TzexE2LUVqk

மீன்கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான் (ஜென்ஸி குரலில்)
https://youtu.be/3gFM3-GK-vE

1 comments: