Pages

Sunday, August 15, 2021

❤️ மெளன ராகம் ❤️ 35 ஆண்டுகள் 🎸



ஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு 35 ஆண்டுகளைத் தொடுகின்றது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் கடந்து இன்றளவும் ரசிகர் மனதில் நீங்கா இடம் கொண்டு நிலைத்திருக்கின்றது.

வெளியே கலகலப்பான திவ்யாவாகத் திரியும் அவளின் உள்ளே கனன்று கொண்டிருக்கும் கடந்து போன காதலின் இழப்பைச் சொல்லமுடியாத வேளை, சூழ்நிலைக்கைதியாகத் திருமண பந்தத்தில் இணைகின்றாள். காதலை மனதில் பூட்டி வைத்து மெளனராகம் பாடும் அவளும், கரம் பிடித்தவனும் "தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் தம் திருமண பந்தத்தைத் தொடர்ந்தார்களா என்பதே இந்தக் காவியத்தின் மையம்.

ஒரு எளிமையான கதையை எடுத்துக் கொண்டு, பொருத்தமான பாத்திரங்களையும், துறை தேர்ந்த தொழில் நுட்பக் கலைஞர்களையும் இணைத்துப் படைக்கும் எந்த ஒரு படைப்பும் காலத்தைத் தாண்டிப் பேச வைக்கும் என்பதை இன்று திசைமாறிப் பயணித்துக் கொண்டிருக்கும் மணிரத்னம் போன்ற படைப்பாளிகளுக்கும் பாடமெடுக்கும் படங்களில் கண்டிப்பாக மெளன ராகத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

வெளியே ஆர்ப்பாட்டம் காட்டி உள்ளே மெளன ராகம் பாடும் திவ்யா என்ற பாத்திரத்தில் ரேவதி, மனைவியின் மனம் கோணாது அவள் வழியே விட்டுத் துணையாகப் பயணிக்கும் கணவனாக என்ற சந்த்ரு மோகன், திவ்யாவின் கல்லூரிக்காலக் காதலனாக மனோ என்ற குணச்சித்திர பாத்திரத்தில் கார்த்திக் என்று இவர்களின் திரையுலக வாழ்க்கையில் மறக்கமுடியாத வகையில் இவர்களுக்கென்றே வார்த்தெடுக்கப்பட்ட பாத்திரப்படைப்புக்கள். அதிலும் குறைவாகவே வந்தாலும் நிறைவாகவே நிற்கும் கார்த்திக் இன் குணச்சித்திர வேடம் இன்றளவும் பேசப்படும் அளவுக்கு இன்னொரு தமிழ் சினிமா இப்படியானதொரு பாத்திரத்தைக் கொடுத்திருக்கின்றதா என்பதை யோசித்துத் தான் கண்டுபிடிக்க வேண்டும். மோகனின் பாத்திரத்தோடு இணைந்து கச்சிதமாகப் பொருந்திப்போகும் சுரேந்தரின் பின்னணிக்குரலையும் சொல்லி வைக்க வேண்டும்.


கதை,திரைக்கதை, வசனம், இயக்கம் என்று பன்முகப் பொறுப்புக்களையும் அள்ளிப்போட்டுக் கொண்டு மணிரத்னம் இயக்கிய சொற்பமான படங்களில் இதுவுமொன்று. அந்த நாளில் சுஹாசினியைக் கைப்பிடிக்காத வேளை என்பதும் எமக்கு ஒரு பாக்கியம். பகல் நிலவு திரைப்படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு வந்தாலும், நாயகன் கொடுத்த பெரும் அங்கீகாரத்துக்கு முன் "மெளன ராகம்" என்ற இந்தப் படைப்புக்குத் தயாரிப்புப் பொறுப்பை அவரின் சகோதரர் ஜி.வி என்ற வெங்கடேஷ்வரன் ஏற்க, ஒளிப்பதிவை பி.சி.ஶ்ரீராம் ஏற்றிருக்கின்றார். பாடல்கள் அனைத்தையும் வாலி எழுத, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி என்ற இரட்டைக் குரல்கள் மாத்திரமே முழுப்பாடல்களுக்கும் பயன்பட்டிருக்கின்றார்கள்.

இசைஞானி இளையராஜாவின் எண்பதுகளின் முத்திரைகளில் "மெளன ராகம்" இசை ரசிகர்களுக்குப் பாடல்களிலும் சரி, கதையோடு பயணிக்கும் பின்னணி இசை என்று இரட்டைப் பெருவிருந்து கிடைத்த படங்களில் ஒன்று. எண்பதுகளிலே உச்சத்தில் இருந்த இசைஞானியின் திறனுக்குத் தீனி கொடுத்த விதத்தில் சொற்பமே அமைந்து போன கதைக்களங்களில் இதுவுமொன்று. ராஜா ஐந்து பாட்டுக் கொடுத்தால் போதும் என்ற சினிமா வர்த்தகனிடம் இருந்து விலகி, ராஜாவின் இன்னொரு பரிமாணத்தையும் உள்வாங்கி அதைக் கொடுத்த வகையில் மணிரத்னத்துக்கும் அந்தப் பெருமை சென்று சேர்கின்றது.


இந்தப் படத்தின் பின்னணி இசைப் பிரிப்பு வேலைகளைச் செய்யும் போது கவனமாக ஒவ்வொரு துளியாகச் சேமிக்க வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டேன். எனவே இந்தப் பணியைக் கொஞ்சம் கவனமாகவும் நிதானமாகவும் செய்யத் தொடங்கினேன். கூடவே இப்படியான படைப்புக்களுக்கு ரசனை உள்ள சகபதிவரைத் துணைக்கழைத்து அவரின் பார்வையில் காட்சிப்படுத்தல்களில் இழையோடும் இசை குறித்த வர்ணனையை எதிர்பார்த்த போது கை கொடுத்துச் சிறப்பித்தவர் "மாதவிப்பந்தல்" புகழ் என் அருமைச் சகோதரன் கே.ஆர்.எஸ் என்ற கண்ணபிரான் ரவிசங்கர். எங்களோடு இணைந்து, இந்தப் பணியில் கே.ஆர்.எஸ் இற்கு அவ்வப்போது காட்சித் துண்டங்களை வழங்கிப் பதிவை எழுத உதவிய நண்பர் சுரேஷ் உம் இணைந்து எம் மூன்று பேரின் உழைப்பு இந்தப் பதிவில் இணைந்து சிறப்பிக்கின்றது.

பாடல் வரிகள் தான் முக்கியம்!

பின்னணி இசை = 'பின்'-அணி தான்!

ஆனால் அதையும் மீறி, பாடல் சாராத அழகிய BGM-களை MSV குடுத்திருக்காரு! காசே தான் கடவுளடா படத்தில், தேங்காய் சீனிவாசன் பணம் திருடப் போகும் அந்த திக்திக் காட்சிகளை மனத்தில் ஓட்டிப் பாருங்கள்! துள்ளலான அழகிய BGM!

* 'பின்னால்' இருந்த BGM-ஐ, 'முன்னால்' கொண்டு வந்து...

* தாளம் மட்டும் அல்லாமல், ராகத்தையும் கொண்டாந்து வைத்து...

* பியானோ முதல் புல்லாங்குழல் வரை...பல இசைக்கருவிகளையும் BGM-இல் நடை பயில விட்டு...

* 'பின்'-அணியை 'முன்'-அணி ஆக்கி...பல வர்ண ஜாலங்கள் காட்டத் துவங்கியது... = இ-ளை-ய-ரா-ஜா!

பாடல் காட்சிகளிலே வரிகளும் முன் வந்து நிற்பதால், இசை சற்று முன்னும் பின்னும் வாங்கும்!

ஆனால் படத்தின் சீன்களில்? = அது இசை-அமைப்பாளனின் ஆடுகளம்! BGM-இன் முழு வீச்சு இங்கே தான்!

அன்னக்கிளி படத்தில் தொடாத BGM-களை எல்லாம்...முள்ளும் மலரும் படத்தில் தரத் தொடங்கினார்...

அது அப்படியே சிகப்பு ரோஜாக்கள், உதிரிப் பூக்கள், ஜானி, ராஜ பார்வை, மூன்றாம் பிறை என விரிந்து...மெளன ராகம் என்னும் படத்தில் தலை விரித்து ஆடியது!

தொடர்ந்து இசைஞானி அள்ளி வழங்கிய "மெளன ராகம்" என்ற காவிய ரசத்தைப் பருகுவோம்.

மெளனராகம் முகப்பு இசை

படித்தில் வரப் போகும் சிலிர்ப்புகளை, டைட்டிலிலேயே சொல்லி விடும் இசை!

தமிழ்ப் பட டைட்டில் இசையில்...

இதை மட்டும் மறக்க முடியாத ஒன்றாக ஆக்கி விட்டார் ராஜா!

ஆரம்பத்தில் பியானோவில் மட்டுமே வலம் வரும் இசை...

உடனே சந்தோஷத் துள்ளலுக்கு மாறி...

சிறிது நேரத்தில் மீண்டும் மாறிச் சோகம் இசைக்க...

அத்தனை வயலின்களும் சேர்ந்து கொள்ள....டைட்டில் முடிந்து...வீட்டில் விடியற்காலை அலாரம் ஒலிக்கிறது! 🙂

படம் முழுதும் தூவித் தூவி வரும் இந்த மாய இசையைக் கேளாத காதுகளே இல்லை! ஒலிக்காத செல்பேசிகளே இல்லை!

http://radio.kanapraba.com/mounaragam/mr1.mp3

ரேவதி தன் தங்கையோடு, அண்ணன் அண்ணியின் கொஞ்சலைச் சீண்டிப்பார்க்கும் குறும்புக் காட்சி

http://radio.kanapraba.com/mounaragam/mr2.mp3

தன்னைப் பெண் பார்க்க வரும் மாலைவேளை அதைத் தவிர்க்க ரேவதி தன் நண்பிகளோடு மழையில் லூட்டி அடிக்கும் "ஓஹோ மேகம் வந்ததோ பாடலோடு"

http://radio.kanapraba.com/mounaragam/megam1.mp3

காலம் கடந்து வீடு திரும்பும் ரேவதி மாப்பிள்ளை வீட்டார் காத்திருந்து போய் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் குஷியாக உள் நுழைய அங்கே அவர்களைக் காணும் அதிர்ச்சித் துளி இசையாக

ஓகோ மேகம் வந்ததோ...பாட்டு முடிஞ்சி...ஹைய்யா அம்மா-அப்பாவை ஏமாத்தியாச்சே-ன்னு வீட்டுக்கு வந்தா....மாப்பிள்ளை காத்துக் கிடக்காரு!

கையில் செருப்போடு, அவளும் நோக்கினாள்! அண்ணலும் நோக்கினான்! 🙂

அதிர்ச்சியில் சித்ரவீணை பேசுகிறது, மூன்றே நொடிகளுக்கு!

http://radio.kanapraba.com/mounaragam/mr3.mp3

பெண் பார்க்க வரும் மோகன் - ரேவதி தனிமையில் சந்திக்கும் வேளை,2 நிமிடம் 10 செக்கன் ஓடும் காட்சியில் இடையில் வரும் உரையாடலையும் இணைத்திருக்கின்றேன் காட்சி, உரையாடலோடு வரும் இசை எவ்வளவு தூரம் இழைந்திருக்கின்றது என்று உணரக்கூடிய வகையில்

http://radio.kanapraba.com/mounaragam/mr4.mp3

"அவரு உன் கிட்ட ஏதோ தனியாப் பேசணுமாம்" என்று சொன்னவுடன், பிடிக்கலீன்னாலும்...இன்ப அதிர்ச்சியா ஒரு வயசுப் பொண்ணுக்கு?

= ஒரே ஒரு ஒத்தை மிருதங்க ஒலி.....டங்ங்ங் ! BGM-ஐக் கேளுங்க! 'மெளனம்' என்பதைக் கூட இசையாக்க வல்ல 'தெறமை' ராஜாவுக்கே உரித்தானது!

அங்கே துவங்கிய மிருதங்க ஒலி, "உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு"-ன்னு மோகன் சொல்லும் வரை, 1 beat, 2 beat, 3 beat-ன்னு வித்தை காட்டும்!

ரேவதியை மாப்பிளைக்கு பிடித்திருக்கு என்று குடும்பமே குதூகலத்தில் இருக்க, "எனக்குப் பிடிக்கல" என்றவாறே தன் எதிர்ப்பைக் காட்டும் காட்சியில்

http://radio.kanapraba.com/mounaragam/mr5.mp3

தன் தந்தைக்கு Heart attack என்றறியும் போது வரும் காட்சியில் இழைந்தோடும் அதிர்ச்சியும், சோகமும் இசையில் தெறிக்க

http://radio.kanapraba.com/mounaragam/mr6.mp3

ரேவதி, மோகனைக் கரம்பிடிக்கும் மணமேடை

http://radio.kanapraba.com/mounaragam/mr7.mp3

முதல் இரவில் காதலோடு கணவன், தள்ளி நிற்கும் அவள்

கல்யாணம் முடிஞ்சி First Night Scene எனக்கு ரொம்பப் பிடிக்கும்! 🙂

முதலிரவுக்குப் பயப்படும் ரேவதி, கதவை மூடும் போது சோக வயலின்...

அதுவே மெல்லீசா இன்ப இசையா மாறி...

மோகன் லுக்கு விடும் போது, சக் சக் சக் சக்-ன்னு ஒரு கிக் இசையாகி.....தீண்டும் இன்பம்!!

http://radio.kanapraba.com/mounaragam/mr8.mp3

டெல்லிக்கு வரும் தம்பதிகள், மோகன் ஆசையாகத் தன் வீட்டைச் சுற்றிக் காட்ட, ரேவதி காட்டும் அசட்டை

http://radio.kanapraba.com/mounaragam/mr9.mp3

மோகன், ரேவதி மனம் விட்டுப் பேசும் காட்சி

http://radio.kanapraba.com/mounaragam/mr10.mp3

தன் மனைவிக்கு ஆசையாக முதல் பரிசு வாங்கித் தரக் கணவன் கடைவீதியில், "இந்தக் கடையில் விவாகரத்து வாங்கிக்கொடுக்க முடியுமா" என்று கேட்கும் அவள், "நிலாவே வா செல்லாதே வா" பாடலோடு

http://radio.kanapraba.com/mounaragam/mr11.mp3

"என் இதயத்தில உங்களைக் கணவரா ஏத்துக்க முடியல" படத்தின் மூல இசை அப்படியே அடித்துப் போட்டவன் மெல்ல எழுந்து நகர்ந்து வருவது போல மெதுவாகப் பயணிக்க

"நீங்க தொட்டா கம்பளிப்பூச்சியைத் தொட்டமாதிரி"தபேலாவின் அதிர்வோடு

இதற்கு என்ன எழுத முடியும்? நீங்களே கேளுங்கள்!

தபேலா மட்டும் துடிதுடிக்க...இறுதியில் சுரத்தே இல்லாத மணி, அடிச்சிக்கிட்டே இருக்கும்...மென் உணர்வுகள்!!!

http://radio.kanapraba.com/mounaragam/mr12.mp3

கார்த்திக் அறிமுகமாகும் காட்சி ஆர்ப்பரிக்கும் இசைக்கூட்டணியோடு

ஒரு மனிதனின் குணத்துக்கு BGM போட முடியுமா? - Karthik Entry!

* கார்த்திக் = துள்ளல்

* ரேவதி = தில்லு

* மோகன் = மென்மை

படத்தில் இது வரை வராத Trumpet முதல் முறையா முழங்க...

சண்டைக் காட்சியிலும் டிஷ்யூம் டிஷ்யூம் சத்தம் மெல்லிதாகவே கேட்க...

கார்த்திக்கின் துள்ளல் இசையே, முழுசும் ஆக்ரமிப்பு!

http://radio.kanapraba.com/mounaragam/mr13.mp3

எம்.பி மகனைத் தாக்கிய குற்றவாளி ஆள் அடையாள அணிவகுப்பில் கார்த்திக்கைக் காட்ட ரேவதி முன் வருகையில்

http://radio.kanapraba.com/mounaragam/mr14.mp3

போலீஸ் அடி வாங்கி தள்ளாடி வரும் கார்த்திக், மூல இசை சோகராகமாகி பின்னர் குதூகலித்துப் பயணிக்கிறது

பெயிலில் எடுக்கும் போது....

நொண்டும் கார்த்திக்கின் சோக டைட்டில் இசையே,

கண்ணடிக்கும் கார்த்திக்கின் துள்ளல் டைட்டில் இசையாக மாறி...

http://radio.kanapraba.com/mounaragam/mr15.mp3

ரேவதியை கல்லூரியில் சந்திக்கும் கார்த்திக் தன் காதலைப் பகிரும் காட்சி

http://radio.kanapraba.com/mounaragam/mn.mp3

பஸ்டாண்டில் மீண்டும் சந்திக்கும் ரேவதி கார்த்திக்

http://radio.kanapraba.com/mounaragam/mr16.mp3

coffee shop இல் காதலால் சீண்டிப்பார்க்கும் கார்த்திக்

http://radio.kanapraba.com/mounaragam/mr17.mp3

தன் தந்தையைக் குறும்பு செய்த கார்த்திக் இன் சேஷ்டையைப் பார்த்து மனம் விட்டுச் சிரிக்கும் ரேவதி, கூடவே கார்த்திக் உம் இணைந்து கொள்ள சந்தோஷ மழையில் இசையும் கூட

http://radio.kanapraba.com/mounaragam/mr18.mp3

கல்லூரி லைப்ரரியில் கார்த்திக் ரேவதி சந்திக்கும் காட்சி, கூடவே ஒலிபெருக்கி மூலம் ஊரைக்கூட்டிச் சொல்லும் காதலோடு இணைகிறார்கள் மனதால் ஒருமித்து. இசைத்துண்டத்தின் இறுதித் துளிகளில் படத்தின் மூல இசை இன்னொரு பரிமாணத்தில்

http://radio.kanapraba.com/mounaragam/mr19.mp3

தன் போராளிக்குணத்தைக் காதலுக்காகத் தியாகம் செய்து கொட்டும் மழையில் ரேவதியைச் சந்திக்கும் காட்சியில் கல்யாணத்துக்கு நேரம் குறிக்கையில்

http://radio.kanapraba.com/mounaragam/mr20.mp3

கல்யாண நாளன்று போலீஸ் துரத்தலில் கார்த்திக், கார்த்திக் இன் இறுதி நிமிடங்கள்

கார்த்திக் ஜீப்பில் இருந்து குதிக்கும் போது, வயலினும் குதிக்கிறது! வயலினும் ரோட்டில் ஓடுகிறது!

அதுவே டைட்டில் BGM-ஆக மாறி...திவ்யா...ஆவி அடங்குகிறது! காதல் அடங்குகிறதா?

http://radio.kanapraba.com/mounaragam/mr21.mp3

மோகன் ரேவதிக்கு ஆசையாகக் கொடுக்கும் பரிசு

விவாக ரத்துப் பத்திரமும், கொலுசும் = ஷெனாயில் துவங்கி, மாங்கல்யம் தந்துனானே!

http://radio.kanapraba.com/mounaragam/mr22.mp3

பூஜா கா குங்கும் ஹை! சிந்தூர் லகாதோ - என்று அலுவலகப் பெண் வாழ்த்த, எல்லாரும் வாழ்த்த.....

மேடையைப் போலே வாழ்க்கை அல்ல! நாடகம் ஆனதும் விலகிச் செல்ல...

http://radio.kanapraba.com/mounaragam/mr23.mp3

ரேவதி மோகனுக்காக ஆசையாகச் சமைத்துவிட்டுக் காத்திருக்க, வேலையில் இருந்து தாமதமாக வரும் மோகன் அதற்காக வருந்தும் காட்சியின் பின்னணி இசை

http://radio.kanapraba.com/mounaragam/mr24.mp3

டெல்லி சுற்றிப்பார்க்க ரெடி

http://radio.kanapraba.com/mounaragam/mr25.mp3

விவாகரத்து தம்பதிகள் தாஜ் மகாலைக் காணும் திடீர்க் காட்சி.....பனிவிழும் இரவு நனைந்தது நிலவு

ஒரு பெண்ணின் அலை பாயும் குரல்.....ராஜா இதை மட்டும் ஏன் இப்படிச் செய்தார் என்பது தான் எனக்கு இன்னமும் புரியவில்லை:(

முதன் முதலாகப் பார்க்கும் போது, தாஜ் மகாலின் கம்பீரம்......அது இசையில் வரவில்லையோ???

http://radio.kanapraba.com/mounaragam/mr26.mp3

விபத்தில் சிக்கிய மோகனை, மருத்துவமனையில்..."என் புருசன்" என்று தாலி தூக்கிக் காட்டும் காட்சி...ஷெனாய் ரசிகர்கள் விரும்பி ரசிப்பார்கள்!

ஷெனாய் ஒலிக்க, தம்பூராவைச் சுண்டும் ஒரே ஒலி ஊடாடும் அழகு!

http://radio.kanapraba.com/mounaragam/mr27.mp3

முப்பது நாள் கடந்து முதன்முதலில் காதலோடு தன் கணவனைப் பார்க்கையில் "சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா"

http://radio.kanapraba.com/mounaragam/mr28.mp3

மோகன் வீட்டில் மேற்கத்திய இசை கேக்கறாரோ? = Violin Ensemble Orchestra!

Wow! ரேவதி கொலுசு சத்தம் போடாமல் குதிகாலில் காதல் சொல்லி வர...

ஆனால்.....மோகனோ எரிஞ்சு விழ...ரேவதியின் காதல் கண்ணீரில் துளிர்க்கிறது!

http://radio.kanapraba.com/mounaragam/mr29.mp3

மோகன் பொட்டு வைத்து விட, காலிங் பெல் அடிக்க, சென்னைக்கு டிக்கெட் வர...அதே டைட்டில் இசை...ஆனால் வேறு சாயலில்!

http://radio.kanapraba.com/mounaragam/mr30.mp3

தில்லியை விட்டுப் போகும் போது, தில்லிக்கு வந்த அதே இசை!

ரேவதியின் பேச்சே ஒரு இசை தானோ? = "உங்களுக்கு பிடிச்சிருக்கு! ஒத்துக்கத் தான் மனசில்ல! ஆனா நான் ஒத்துக்கறேன்! வெட்கத்தை விட்டு ஒத்துக்கறேன்!"

http://radio.kanapraba.com/mounaragam/mr31.mp3

வயலின்கள் அரசாங்கம் - புகைவண்டியின் கூக்குரல் - தபேலாவின் தவிப்பு - மோகன் ஓட்டம் - ரேவதி ஓட்டம் - அதே டைட்டில் BGM!

= அது தான் மெளனத்தின் ராகம் = ராஜாவின் ராகம் = மெளன ராகம்!

http://radio.kanapraba.com/mounaragam/mr32.mp3

BGM என்பது கத்தி மேல் நடக்கும் வித்தை!

தன் இசைப் புலமையைக் காட்ட வேணும்-ன்னு நினைச்சா, இசையே பெருசாகி, காட்சி கவிழ்ந்து விடும் அபாயம்...

அதே சமயம், தம்பதிகள் பேச வேண்டிய இடத்தில் எல்லாம், இசை மட்டுமே பேச, இந்தத் தம்பதிகள் பேசிக் கொள்ள மாட்டார்களா என்று ஏங்க வைக்கும் இசை!

Mute-ல்ல போட்டு, BGM இல்லாம, மெளன ராகம் கடைசிச் சீனை, சும்மா ஒருக்கா பாருங்க...

இளையராஜாவுக்கு இப்பதிவிலே முகஸ்துதி செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள்!

மனித உணர்வுகளை இசையோடு கோர்த்துக் கட்டும் மாயம்!

அதுவும் ஒரே டைட்டில் இசையை, பல அவதாரங்களில் ஓட விடும் மாயம்!

ஏ, மாயக் காரனே, வித்தைக் காரனே,

ஒலிக்கு அடிமையாக்கும் மகா பாவியே....

இசை லோகத்தில் இருக்கும் இளைய-ராஜாவே......உனக்கு ஸ்தோத்திரம்! மெளன ராக ஸ்தோத்திரம்!!

பின்னணி இசைப் பகிர்வில் நயவுரை எழுதிய நண்பர் கே.ஆர்.எஸ் இற்கும் நன்றிகள்.

கானா பிரபா


0 comments: