கவியரசு கண்ணதாசன் புதியவர்களின் அறிமுகங்களுக்குப் பாட்டெழுத முதலில் உட்கார்ந்தால் அவரின் வாயில் இருந்து அறச்சொல் முதலில் பிறக்காதாம்.
அப்படித்தான் இதுவும் நிகழ்ந்திருக்க வேண்டும்.
ஒருவர், பாரதிராஜா புதிய தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறார்,
இன்னொருவர் கதா நாயகனாக அரிதாரம் பூசுகிறார்,
கண்ணதாசன் தன் பேனாவை எடுக்கிறார்
வான் மேகங்களே
வாழ்த்துங்கள்.. பாடுங்கள்
https://www.youtube.com/watch?v=Rp2K0qoSS34
இவ்விதமாக கே.பாக்யராஜ் நாயக அறிமுகத்துக்குக் கண்ணதாசனின் வாழ்த்துப் பா அமைந்தது.
இரண்டு வாட்டி மெட்டைக் கேட்டு விட்டுக் கடகடவென்று எழுதி விட்டாரே என்று ஆச்சரியம் பொங்க இந்த ஆண்டு கூடப் பேசினார் கண்ணதாசன் பெருமையை கே.பாக்யராஜ்.
அவர் வியந்தது “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு” 16 வயதினிலே பாடலைத்தான்.
இம்முறை பாக்யராஜ் முறை, அவர் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார். கண்ணதாசன் பேனா துள்ளிக் குதிக்கிறது, அந்த பஸ்ஸில் துள்ளிக் குதித்துக் கற்பனை பண்ணும் பாக்யராஜ் போலவே,
பாடல் பிறக்கிறது
காதல்
வைபோகமே
காணும்
நன் நாள் இதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடி கிளிகள்
கூடி இணைந்து
ஆனந்தப்
பண்பாடுமே….
https://www.youtube.com/watch?v=EruNrx2eiUw
நான் இசையமைப்பாளராக முன்பே பிறந்து விட்டாலும் எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம் தந்தது “சுவரில்லாத சித்திரங்கள்” என்பார் கங்கை அமரன்.
“காதல் வைபோகமே” பாடல் காலம் தாண்டி இன்றும் காதலர் கீதம் தான் இல்லையா?
கங்கை அமரன் இசையில், கே.பாக்யராஜ் இயக்கிய “மெளன கீதங்கள்” படத்தில் கண்ணதாசன் பாட்டெழுத வருகிறார். தாம்பத்ய சங்கீதமாக அந்தப் பாடல்.
மாசமோ மார்கழி மாசம்
நேரமோ ராத்திரி நேரம்
இந்த மாதிரி ஒட்டுறவான பாடலைக் காட்டினால் தானே அந்தத் தம்பதியின் பிரிவின் வலியை அழுத்தமாகக் காட்ட முடியும்.
“அந்த 7 நாட்கள்”
வாத்யாரே! சொந்தமா ஒரு ட்யூன் போட முடியாமல் மியூசிக் போட சான்ஸ் கேட்டு அலையுறியே?” என்று அலுத்துக் கொள்ளும் உதவியாளன் கோபியின் வாத்தியார்
பாலக்காட்டு மாதவன். இவர்களை டாக்டர் ஆனந்த் சந்திக்கிறார். தன்னைத் தயாரிப்பாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களை அழைத்துச் செல்கிறார்.
கதையின் அவுட்லைன், பாட்டு வரும் சூழலைக் கேட்கிறார் பாலக்காட்டு மாதவன்.
“நான் கதை சொல்றதை விட நீங்க general ஆ ஏதாவது ட்யூன் போடுங்க நான் கதையில சேர்த்துக்கிறேன்”
இந்த இடத்தில் பாலக்காட்டு மாதவன் சொல்லும் கருத்து அச்சொட்டாக இயக்கு நர் கே.பாக்யராஜைப் பிரதிபலிக்கும், இப்படி
“ஒரு இசையமைப்பாளர் எப்பவுமே கதை என்ன, கதாபாத்திரங்கள் என்னென்ன,
கதாபாத்திரங்களுடைய குணாதிசயங்கள் என்ன இதை நன்றாக மனசில் வாங்கிக் கொள்ள வேண்டும்,
அப்படி இல்லை என்றால் இசைக்கும் படத்துக்கும் சம்பந்தமே இருக்காது”
டாக்டர் ஆனந்த், அதான் அந்தத் தயாரிப்பாளர் கதையைச் சொல்கிறார்,
அது பாலக்காட்டு மாதவனும் வசந்தியும் கொண்ட காதல் கதையும், அதன் நீட்சியாக வசந்தியும் ஆனந்தும் திருமண பந்தத்தில் இணைந்ததும், வசந்தி விஷம் குடித்ததுமாகச்
சொல்லச் சொல்ல, பாலக்காட்டு மாதவன் அது தன் கதை என்று தெரியாமல் உச் கொட்டுகிறார்.
இந்த இடத்தில் பாக்யராஜின் பண்பைப் பாருங்கள். அந்தக் காலகட்டத்தில் நடிகர் ராஜேஷ் பாக்யராஜின் வழிகாட்டி பாலகுருவின் “கன்னிப் பருவத்திலே” படத்தில் அறிமுகமாகி, அப்படம் வழியே பாக்யராஜுக்கும் அறிமுகமானவர். தொடர்ந்து ராஜேஷ் செய்த ஈகோத்தனத்தன் தன் வாய்ப்பை இழந்ததாக ராஜேஷ் கூடப் பேட்டியில் சொல்லி இருப்பார்.
அப்பேர்ப்பட்டவருக்கு ஒரு மறுவாழ்வுப் படம் “அந்த 7 நாட்கள்”. இந்தப் படத்தில் ராஜேஷ் இன் டாக்டர் பாத்திரம் எவ்வளவு கனதியானது என்பதை பாலக்காட்டு மாதவன் அந்தப் பாத்திரம் மீது அனுதாபப்படுவதன் மூலம் வெளிக்கொணர்ந்திருப்பார் பாக்யராஜ் அதுதான் பாக்யராஜ்.
பாடலின் தொடக்கத்தில் அவர் சந்தம் போடும் அந்த அழகைப் பாருங்கள் எவ்வளவு தூரம் உன்னிப்பாகப் பார்த்திருப்பார்.
ச க ம ப க ம க ச நி ச நி பக ம நி ப ச
தென்றலது உன்னிடத்தில்
சொல்லி வைத்த
சேதி என்னவோ….
https://www.youtube.com/watch?v=T79zxMNhvbg
ஒரு நாள் முழுக்க இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
மெல்லிசை மன்னரின் எண்பதுகளும் இன்னும் அதிகமாகக் கொண்டாடப்பட வேண்டியவை. அதுவும் அந்த ஆர்மோனியக்காரின் காதல் கதைக்குப் பொருத்தமான பண் அமைத்துப் பாடல்களில் கூட அந்த நிறத்தைக் கலவையாக்கிக் கொடுத்த அழகுணர்ச்சியைச் சிலாகித்துக் கொண்டே அந்த ஏழு நாட்கள் பாடல்களைக் கேட்க வேண்டும்.பதிவு கானா பிரபா
பாலக்காட்டு மாதவன் என்ற பாக்யராஜ் மெட்டமைக்கும் தோற்றப்பாட்டிலேயே மெல்லிசை மன்னரை ஞாபகப்படுத்துவார்.
“கவிதை அரங்கேறும் நேரம் மலர்க்கணைகள் பரிமாறும் தேகம்” பாடலிலும் சரி,
“தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ” பாடலும் கூட ஆரம்பத்தில் கொடுக்கும் ஸ்வர ஆலாபனையில் அந்த இசையமைப்பாளனின் காதல் ஒட்டியிருக்கும்.
“ஸ்வர ராக” பாடலில் மலையாளமும், தமிழும் காதல் கொள்ளும் பாட்டு,இதுவும் தென்றலது பாடலும் கண்ணதாசன் கை வண்ணம்.
எண்பதுகளில் சங்கீதத் திலகம் கே.வி.மகாதேவனைக் கொண்டாட ஒரு சங்கராபரணத்தையும், இசைஞானி இளையராஜாவுக்கு சிந்து பைரவியுமாக அமைய,
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அந்த 7 நாட்கள் ஐ எழுதி வைக்கலாம் போல. அதுவும் ஜெயச்சந்திரனுக்கு வைதேகி காத்திருந்தாளுக்கு முன் வந்த ஒரு பொக்கிஷம் இது.
பின் வரும் வரிகளில் தபேலாவை வழித்து தாள லயம் கொண்டும் மெல்லிசை மன்னரின் முத்திரை இசையோடு கேட்டால் பேரின்பம்.
உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை
இன்று தங்கரதம் ஏறியது
உன்னைப் பார்த்து சொல்லும் வார்த்தை
இன்று கங்கையென மாறியது
கே.பாக்யராஜ் இன் பாடலாசிரியர்கள் இன்னும் வருவார்கள் ❤️
ஒளிப்படங்கள் நன்றி : Old Tamil movie stills தளம்
கானா பிரபா
01.07.2026



0 comments:
Post a Comment