பாரதிராஜாவின் படக் கதைக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் இசையமைத்த நிகழ்வும் அமைந்தது.
பாரதிராஜாவின் “கிழக்கே போகும் ரயில்” படத்திலும் பாலசுப்ரமணியம் பாடும் வாய்ப்பு அமையவில்லை என்றாலும் தெலுங்கில் அந்தப் படம் Toorpu Velle Railu என்று உருவான போது அந்தப் படத்தின் இசையமைப்பாளரே அவர் தான். ஆண் பாடகராக அனைத்துப் பாடல்களையும் பாடியளித்தார்.
தமிழில் சுதாகர் நாயகனாக நடித்த அதே பாத்திரத்தைத் தெலுங்கில் ஏற்றவர் எஸ்பிபிக்கு மிகவும் பிடித்த நடிகர் மோகன் தான்.
ராதிகாவை அந்தக் காலத்தில் ரயில் நடிகை என்று அழைப்பார்கள். சொல்லப் போனால் இன்னொருவரையும் ரயில் நடிகை என்று அழைக்கலாம். அதுவும் இரட்டை ரயில்.
அவர் “கிழக்கே போகும் ரயில்" திரைப்படத்தின் தெலுங்குப் பதிப்பான Toorpu Velle Railuதெலுங்குப் படத்தில் நாயகியாக அறிமுகமான ஜோதி.
அதென்ன இரட்டை ரயில் என்றால், அதே ஜோதி தமிழில் அறிமுகமான திரைப்படம் T.ராஜேந்தரின் “இரயில் பயணங்களில்".
இயக்குநர் இமயம் பாரதிராஜாவும், பாடும் நிலா SPB யும்
தம் திரையுலகத் தொடக்க காலத்திலேயே நட்போடு இருந்ததும்,
“மயிலு” கதையை எஸ்பிபியே “பல்லவி பிக்சர்ஸ்" இல் தயாரிக்க விரும்பியதும், அதில் அவரை டாக்டராக நடிக்க வைக்க இருந்ததும் கை கூடாமற் போனதும்,
பின்னர் “16 வயதினிலே” படத்தின் பூஜைப் பாடலான “செவ்வந்திப் பூமுடிச்ச சின்னக்கா” பாடலையும் எஸ்பிபி பாட முடியாமல் போனதும் நாமெல்லாம் அறிந்த செய்தி.
16 வயதினிலே தெலுங்கில் Padaharella Vayasu ஆனபோது அங்கே இசைமைப்பாளர் சக்கரவர்த்தி இசையில் பாலசுப்ரமணியம் மற்றும் எஸ்.ஜானகி மட்டுமே பாடகர்கள்.
புதிய வார்ப்புகள் Kotha Jeevithalu பாரதிராஜாவே தெலுங்கில் மீள எடுத்தது அங்கே எஸ்பிபி
எங்கும் நிறைந்த பாடலை தெலுங்கில் Pongi Porale என்று கொடுத்தார்கள்.
அலைகள் ஓய்வதில்லை படத்தை கார்த்திக் & அருணாவை வைத்து Seethakoka Chilaka என்று எடுத்த போது தரிசனம் கிடக்காதா? மற்றும் காதல் ஓவியம் பாடும் காவியம் இரண்டின் தெலுங்கு வடிவத்தைப் பாடியவர் எஸ்பிபி.
இப்படியாகத் தமிழில் பாரதிராஜாவின் படத்துக்கு நேரடியாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடும் வாய்ப்பு அமையாத சூழலில் அவருக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு “நிறம் மாறாத பூக்கள்” வழியாக பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளில் இசைஞானியின் இசையில் அமைகிறது.
அந்தப் பாடலின் ஆரம்பத்தை பாருங்கள், காத்திருந்து அமைந்தது போல இருக்கும், அதுதான்
“முதன்முதலாக் காதல் டூயட் பாட வந்தேனே”
இளையராஜாவின் சினிமாத்தேடலைப் பிரதிபலிக்குமாற்போல 46 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு முன்னோட்டப் பாடல் வாலியார் கை வண்ணத்தில் அமைகிறது. அதுவும் காட்சியொன்றில் இளையராஜாவுக்கு எஸ்பிபியே குரல் கொடுக்குமாற் போல அமையும் அந்தப் பாடல் தான், பாரதிராஜாவின் “நிழல்கள்” படத்தில் அமைந்த
“மடை திறந்து தாவும் நதியலை நான்”
பாடலாசிரியர் வைரமுத்துவின் பாட்டுப் பயணத்தின் திறவுகோலாய் அமைந்த பாட்டும் இங்கே நிகழ்கிறது.
“இது ஒரு பொன்மாலை பொழுது” ஆக.
இலங்கை வானொலியின் இசை அணித் தேர்வில் பலவாரங்கள் நின்று நிலைத்த பாட்டு அது.
தொடர்ந்து “அலைகள் ஓய்வதில்லை” படத்தில் “ஆயிரம் தாமரை மொட்டுக்களே” SPB & ஜானகி கூட்டில் அமைந்ததும் அதுவும் அந்தக் காலத்தில் இருந்து இன்று வரை இசைஞானியின் பாடல்களில் முத்திரைப்பாடலாக முகிழ்ந்து நிலைத்தது.
அந்த ஆரம்ப மிருதங்கத் தாள லயம், மிருதங்க விற்பன்னர் சீனாக்குட்டியின் மேதமை பறையும்.
SPB யின் பெருந்தன்மையின் மறு சான்று ஒன்றைச் சொல்ல வேண்டும். தான் பாட வேண்டிய பாடல் ஒன்றுக்காக Track இல் பாடுகிறார் தீபன் சக்ரவர்த்தி. அதைக் கேட்டவர், இது நல்லா இருக்கே இப்படியே இருக்கட்டும் என்று சொல்லி விடுகிறார்.
அப்படி தீபன் சக்ரவர்த்திக்கு அமைந்த பாடல் தமிழக அரசின் சிறந்த பாடகருக்கான விருதையும் அள்ளி வழங்கிய
“பூஜைக்காக வாழும் பூவை”
“காதல் ஓவியம்” பாரதிராஜாவின் படைப்புகளில் ரசிகர்கள் கொண்டாடாத படமாக அமைந்தாலும், அங்கே வைரமுத்து வரிகளில் இசைஞானி இளையராஜா கொடுத்த பாடல்கள் காலம் தாண்டிய காவியப் பாடல்கள்.
“குயிலே...குயிலே... எந்தன் கீதங்கள் கேட்காயோ....”
காதலர்களின் சோகராகங்களில் ஒன்றானது.
“நதியில் ஆடும் பூவனம்” கேட்கும் போதே நதி நீரில் கால் நனைத்து அலம்பும் சுகத்தை அள்ளித் தரும்.
“பூவில் வண்டு கூடும்”
“வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள்”
என்று அந்த நாட்டிய மங்கைக்கும், பாடகனுக்குமான பந்தத்தை இசை மொழி காட்டும் பாடல்கள். இவற்றோடு “அம்மா அழகே” என்று “காதல் ஓவியம்” படப் பாடல்கள் பாரதிராஜா காத்திருந்து எஸ்பிபிக்கு அளித்த விரு(ந்)து போல.
“பேசிப் பேசி ராசியானதே ஏஏஏஏ
பொத்தி வச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தை விட்டு”
“மண்வாசனையிலும் தன் வாசனை காட்டிய எஸ்பிபி & ஜானகி கூட்டு இன்னொரு மணிமகுடப் பாட்டு.
“ஒரு கைதியின் டைரி” படத்தில் வந்த
“நான் தான் சூரன்”
காட்சிப்படுத்தாத பாட்டு.
“கடலோரக் கவிதைகள்” படத்தில் “போகுதே போகுதே”
என்று ஒற்றைப் பாடலைத்தான் எஸ்பிபி பாடியிருந்தாலும்,
இந்தப் படக் கதையை சிரஞ்சீவியை வைத்து பாரதிராஜா “ஆராதனா” என்று மீள எடுத்த போது அவரே எல்லாப் பாடல்களிலும் மூலப் பாடகர் ஆனார்.
பாரதிராஜாவின் இன்னொரு தெலுங்குப் படமான “ஜமதக்னி”யில் எஸ்பிபி பாடாவிட்டாலும், அந்தப் படத்தை வைரமுத்து தமிழுக்காகப் பதிப்பித்து வெளிவராமல் முடங்கிப் போன “நாற்காலிக் கனவுகள்” படத்தில் அவற்றைச் சுவீகரித்தார்.
படம் வராவிட்டால் என்ன,
“ஒரு வார்த்தை சொல்லு பாடலுக்கு” இசை ரசிகர்கள் அடிமையாகிப் போனார்கள்.
இப்படியாக இசைஞானி இளையராஜாவின் இசையில் பாரதிராஜா இயக்கிய படைப்புகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அணி செய்த பாடல்கள் தொடர்ந்து வரும் பயணத்தில் தொண்ணூறுகளில் அமைந்த “புது நெல்லு புது நாத்து” படத்தில்
“பூப் பூப்பூ பூப்பூத்த சோலை” ரம்யம் தந்தது.
பாரதிராஜாவின் பாசறையில் இன்னும் சில இசையமைப்பாளர்கள் இணைந்த போது அங்கேயும் அடி நாதமாக விளங்கியவர் எஸ்பிபி.
அந்த வகையில் ஹம்சலேகா இசையில் “கொடி பறக்குது” பாடல்களில்
“சேலை கட்டும் பெண்ணுக்கொரு”
“ அன்னை மடியில்”
“ஓ காதல் என்னை”
என்றும்,
அப்படியே அந்த இசைக்கூட்டணியின் 90களில் “எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று”, “நந்தவனப் பூக்கள்” என்று கேப்டன் மகளிலுமாகத் தொடர்ந்தார் எஸ்பிபி.
பாரதிராஜா & தேவேந்திரன் கூட்டு நிகழ்ந்த போது “வேதம் புதிது” படத்தில் “கண்ணுக்குள் நூறு நிலவா” பெரும் புகழ் ஈட்டியது என்றால், படமாக்காத “சந்திக்கத் துடித்தேன் பொன்மானே” கேட்காதவர்கள் கேட்டுப் பாருங்கள் கிறங்கி விடுவீர்கள்.
“மருதாணி வச்சு” வித்யாசாகர் இசையில் “பசும் பொன்”, “உன்னால் முடியும்” தேவா இசையில் தமிழ்ச் செல்வன்” என்றும் பாரதிராஜா & எஸ்பிபி கூட்டணியில் அமைந்த பாட்டு வரிசை இருக்கும்.
“பச்ச ஒடம்புக்காரி பார்த்து நடக்கச் சொல்லுங்க”
இதில் வரும் அந்த எஸ்பிபியின் நெகிழ்வை பாரதிராஜா கேட்ட கணம் எப்படித் தன் உணர்வைப் பிரதிபலித்திருப்பார் என்று கேட்க ஆசைப்பட்டேன். அந்த அற்புதமான பாடல் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் “கிழக்குச் சீமையிலே” படத்தில் “மானூத்து மந்தையிலே மான்குட்டி பெத்த மயிலே” என்று அமைந்தது. அந்தப் பாடலுக்காகத் தனிப் பதிவே எழுதியிருக்கிறேன். இன்று வரை தாய்மாமன் சீர் பாடகன் ஆகி விட்டார் எஸ்பிபி.
இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவில் தெலுங்கு தேசமும் கண்ணீர் வடித்தது. அதுவொரு காவியப் பாட்டு அவர்களைப் பொறுத்தவரை. அதனால் தான் பாரதிராஜா தெலுங்கு தேசத்தில் அதிகம் பங்களித்திருக்காவிட்டாலும், இசைஞானி இளையராஜா கொடுத்த அந்தப் பாடல் காலங்கள் தாண்டி இன்றும் தம் தலைமேல் உச்சமாக வைத்திருக்கும் பாட்டு.
அதுதான், அலைகள் ஓய்வதில்லை படத்தின் தெலுங்கு மொழியாக்கமாக அமைந்த Seethakoka Chilaka படத்தில் வரும் பாட்டு.
தமிழில் இசைஞானி & ஜென்ஸி பாடியதைத் தன் சகோதரியோடு கொடுத்திருப்பார் எஸ்பிபி. அதுதான்
Maate Manthramu manase bandhamu
https://www.youtube.com/watch?v=GFIuEVx2y2A
தம் உலகத்தில் இருந்து இந்தப் பாடலை ரசித்துக் கொண்டிருப்பார்கள் பாரதிராஜாவும் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் இப்போது.
கானா பிரபா
08.07.2026


0 comments:
Post a Comment