Pages

Sunday, April 27, 2025

சிரித்துக் கொண்டே பாட்டுப் போட்ட இளையராஜா அதிர்ச்சியில் கே.பாலசந்தர்

சிரித்துக் கொண்டே பாட்டுப் போட்ட இளையராஜா

அதிர்ச்சியில் கே.பாலசந்தர்

இப்படித்தான் தலைப்பு வைத்திருக்க வேண்டும். அப்படியொரு அசகாயச் செயலை விபரிக்கிறார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.

புன்னகை மன்னன் பாடல் பதிவுக்காக இயக்குநர் கே.பாலசந்தர் குழுவினர், இசைஞானி இளையராஜாவோடு ஐந்து நாட் பயணத் திட்டத்தில் மதுரைக்குப் போய் ஒரு ஓட்டலில் தங்குகிறார்கள். 

அன்று காலை வாக்கில் கே.பாலசந்தர் படத்தின் கதையைச் சொல்லி ஐந்து பாடல்களுக்கான காட்சியைச் சொல்லி விட்டு, இளையராஜாவிடமிருந்து விடைபெற்று காலை 9 மணிக்கு விடை பெறுகிறார்கள்.

காலை 11 மணி அளவில் இளையராஜாவிடமிருந்து அழைப்பு.

ஐந்து பாட்டுகளுக்கும் மெட்டுப் போட்டுக் காட்டி விடுகிறார்.

அன்று மதியமே வைரமுத்துவும் பாடல்களை முடித்து விடுகிறார்.

ஆறாவதாக மாமாவுக்குக் குடும்மா குடும்மா பாடலை மாலை நேரம் தயாராக்கி விடுகிறார் இசைஞானி.

ஐந்து நாள் வேலை ஒரு மணி நேரத்தில் ராஜா கணக்கில் முடித்து வைக்கப்படுகிறது. இவரைத்தான் காசுக்காக அலைபவர் என்று ஒரு கூட்டம் இன்னமும் சொல்லிக் கொண்டு திரிகிறது பாருங்கள்.

இன்று வரை இந்தப் பாடல்கள் கூட இந்த நிமிடம் போட்டது போல அத்துணை புத்துணர்ச்சி வேறு.

"என்ன சத்தம் இந்த நேரம்" பாடல் ஒலிப்பதிவில் எஸ்பிபி பாடத் தயாராகும் போது

"இதைத் தணிந்த குரலில் பாடுங்கள்" என்று வேண்டுகோள் வைக்கிறார் ராஜா.

இந்தப் பின்புலத்தை சுரேஷ் கிருஷ்ணா சொல்லி முடித்ததும்

இப்போது இந்தப் பாடலைக் கேட்கும் போது, அந்தக் காதலர்களுக்கே தன் ஓசை படாமல் அந்தப் பாடல் அவர்களைப் பற்றிப் பாடுவது போலவொரு மனவெழுச்சி எழுகிறது.

Touring Talkies இல் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் அனுபவத் தொடரைத் தவற விடாதீர்கள்.


https://www.youtube.com/watch?v=ZJB_sO_pjWA

Thursday, April 24, 2025

இளையராஜா இசையமைக்க ஜெயகாந்தன் பாட்டு எழுதினார் ✍️

புகழ் சேர்க்கும் புது வாழ்வு

புலர்கின்ற நேரமிது

நிகழ்காலக் கருவறையில் 

நம் எதிர்காலம் துயில்கின்றது

கருவழிக்கும் கலியிருளை

செங்கதிர் வந்து கிழிக்கிறது

கரு விழியே

கண் மலரே

கரு விழியே

கண் மலரே

கண் திறந்து 

காணாயோ…..

https://youtu.be/zT4KPjJfy8M?si=c7nUIs2lK5sCS35s

இப்படியாக ஒரு குறும்பாடலையும்

எத்தனை கோணம் எத்தனை பார்வை

https://youtu.be/sqKKG6Mojio?si=28akaPKFn-vorJnn

என்ற பொதுவுடமை பொருள் பொதிந்த பாடலையும் மலேசியா வாசுதேவன் பாடவும், இசைஞானி இளையராஜா இசையில் எழுதியவர் எழுத்தாளர் ஜெயகாந்தன்.

“எத்தனை கோணம் எத்தனை பார்வை” படம் கூட முழுமையாக எடுக்கப்பட்டு இன்னும் வெளிவராமல் முடங்கியிருக்கிறது. அதன் பிரதி எங்கே இருக்கிறதென்றே தெரியவில்லை என்றார் படத்தின் இயக்குநர்  B.லெனின்.

ஒரு சாஸ்திரிய இசைப் பின்னணி கொண்ட கதை என்பதைப் பாடல்களைக் கேட்டமாத்திரம் அனுமானிக்க முடிந்தது. அதை உறுதிப்படுத்துமாற்போல இந்தப் படக் கதை பின்னாளில் வந்த “சிந்து பைரவி” ஐ ஒத்தது என்றார் லெனினின் சகோதரர் ஹிருதயநாத்.

விக்கிப்பீடியாவிலும் ஜெயகாந்தனின் “எத்தனை கோணம் எத்தனை பார்வை” என்ற நாவலில் இருந்து படமானது என்று குறிப்பிட்டார்கள்.

ஆனால் அந்த இரு தகவல்களுமே முற்றிலும் தவறானவை. லெனின் கொடுத்த ஒரு பேட்டியில் ஜெயகாந்தனின் “கரு” மற்றும் “காத்திருக்க ஒருத்தி” ஆகிய நாவல்களை இணைத்து எடுக்கப்பட்ட படம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்காகவே இந்த இரண்டு நாவல்களையும் படித்தேன். பின்னர் படத்தின் ஒளிப்படங்களோடு பொருத்திப் பார்த்த போது சரியாக ஊகிக்க முடிந்தது.

“கரு” கதையில் முற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு பெண், திருமணம் முடித்ததுமே குழந்தைப் பேறு என்ற சம்பிரதாயத்தில் உழல விரும்பாதவள். அவளின் இணையாக வருபவன் ஆதரவின்றி அலைக்கழிந்து, மல்யுத்தம் கற்ற வீரன். அவனின் பின்னணி மற்றும் போட்டிக் குழுப் பெயர் எல்லாம் அச்சொட்டாக “சார்பாட்டா பரம்பரை” படத்திலும் வருகிறது. அந்தக் கதையின் நாயகர்களாக ஶ்ரீப்ரியா மற்றும் தியாகராஜனைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

இரண்டாவது கதை “காத்திருக்க ஒருத்தி”. திருமணமானதுமே இசைக் கலைஞனான தன் கணவனின் குடி, மாதுப் பழக்கத்தால் வெறுத்துப் போய் அவனை ஒதுக்கும் ஒரு பெண் பின்னர் தன் மகனின் திருமணத்தின் போது தன் கணவனை எதிர்கொள்ளும் கதை.

இந்தக் கதையில் இசைக் கலைஞனாக சாருஹாசனும், மகனாக சுரேஷ் மற்றும் சுரேஷின் காதலியாக நளினி ஆகத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்.

இந்த ஊகங்களைப் படத்தின் எல்பி ரெக்கார்ட்ஸ் காட்சிகள் நிரூபிக்கின்றன.

இயக்குநர் B.லெனினுடன் இதற்காகவே ஒரு பேட்டி செய்ய ஆவல். அவரின் தொடர்பிலக்கம் தேடுகிறேன். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

இன்று எழுத்தாளர் ஜெயகாந்தனின் பிறந்த தினம்.

கானா பிரபா

24.04.2025






Wednesday, April 23, 2025

இந்திரலோகத்துச் சுந்தரி ராத்திரி கனவில் வந்தாளோ ❤️❤️❤️

திரையிசைப் பாடல் போட்டிகளில் Retro round என்று வரும் போது மிகப் பெரிய ஏமாற்றம் எழுவதுண்டு. காரணம் T.ராஜேந்தர் என்ற மிக உன்னதமான ஆளுமையைக் கணக்கில் எடுக்காமல் பழகிப் போனதை வைத்தே ஆண்டாண்டு காலமாக ஜல்லி அடிக்கிறார்களே என்று.

இந்திரலோகத்துச் சுந்தரி பாடலைப் பொறுத்தவரை திரையிசையின்  எல்லாக் கூறுகளையும் கலந்து அடித்த அற்புதமான படையல்.

அதில் மேற்கத்தேயமும் இருக்கும் அப்படியே கொண்டு போய் சாஸ்திரிய சங்கீதத்திலும் கலந்து விட்டு மீளவும் மேற்கத்தேயத்தில் முக்குளிக்கும்.

டி.ஆர் முத்திரையாக அந்த ட்ரம்ஸ் தாள லயத்தில் பாடல் தொடங்கும் ஆனால் திருப்பமாக பி.எஸ்.சசிரேகா வந்து

ஏலேலம்பர ஏலேலம்பர 

ஏலேலம்பர ஹோய்…

என்று ஒரு தெம்மாங்கு நிரவலைக் கொடுத்து விட்டு எஸ்பிபிக்கு வழிவிடுவார்.

வருபவர் ஆர்ப்பாட்டமாக வருகிறாரா பாருங்கள்?

மிகவும் தணிந்த குரலில் 

இந்திரலோகத்துச் சுந்தரி 

ராத்திரிக் கனவில் வந்தாளோ?...

என்று காதல் ரசம் சொட்டுவார் அந்த ராட்சசன். எந்த இடத்தில் எது தேவை என்றுணர்ந்தவர் அல்லவா?

அவர் குரல் கொடுக்கும் போது பின்னணியில் மின்மினி போல மினி மறையும் இசைக் கீற்றைக் கொடுப்பார் டி.ஆர்.

இங்கே பாருங்கள்

தென்றல் அதன் விலாசத்தை

தம் தோற்றமதில் பெற்று வந்தவள்

மின்னலதன் உற்பத்தியை

அந்த வானத்துக்கே கற்றுத் தந்தவள்

முகத்தைத் தாமரையாய்

நினைத்து மொய்த்த வண்டு

ஏமாந்த கதைதான் கண்கள்

சிந்து பைரவியியை சிந்தும் பைங்கிளியின்

குரலில் ஒலிப்பதெல்லாம் பண்கள்..

பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம்

அதில் பரதமும் படிக்குது அபிநயம்

அப்படியே இன்னொரு திசையில் பரத  நாட்டியத்துக்குள் கொண்டு போய் விடும் இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் துணைக்கழைப்பது மிக அற்புதமாகக் கவி வல்லமை காட்டவல்ல பாடலாசிரியர் டி.ராஜேந்தரை. அடுத்த சரணத்திலும் இன்னொரு குட்டி பரதநாட்டிய அரங்குக்கு வழி சமைப்பார்.

இந்த மாதிரி fusion அலங்காரத்துக்கு வீணை, புல்லாங்குழல், தபேலா எவ்வளவு அழகாக நயம் செய்கிறது பாருங்கள்.

டி.ராஜேந்தரின் உவமைச் சிறப்பு என்றொரு ஆராய்ச்சி நூல் எழுதினால் இந்தப் பாடல் சிகரமாக நிற்கும்.

லாலால லா லாலால லா

இந்திரலோகத்துச் சுந்தரி ராத்திரிக் கனவினில் வந்தேனோ

கொஞ்சமே வந்தாலும் கொஞ்சும் குரலில் அள்ளிச் செல்வார் சசிரேகா. அங்கேயும் ம்ம்ம் ம்ம் கொட்டி அரவணைப்பார் எஸ்பிபி.

உயிருள்ள வரை உஷா படத்தில் இருந்து தான் ஒரு கச்சிதமான அரங்க அமைப்பை உருவாக்கிப் பாடலைப் பதிவாக்க வேண்டும் என்ற முறைமையை டி.ராஜேந்தர் கொண்டு வந்தார். அதற்கு மிக முக்கிய காரணம் படத்தைத் தயாரித்த பிலிம்கோ நிறுவனத்தில் அப்போது இயங்கிய தயாரிப்பு நிர்வாகி எம்.கபார் இந்த வேண்டுகோளை அவரிடம் வைத்ததாக சாய் வித் சித்ராவில் குறிப்பிட்டிருப்பார். 

ஆனால் அதை வைத்துக் கொண்டு பின்னாளில் அரங்க அமைப்பிலும் ராஜேந்தர் புதுமை காட்டியது அவரின் பன்முகத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டு.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அலையிலோ அல்லது இசைஞானி இளையராஜாவின் அலையிலோ சிக்காது தனக்கென ஒரு இசை அலையை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ராஜேந்தர். 45 வருடங்களுக்கு முன்னர் எழுந்த அந்த அலை இன்றும் கூலி வரை தேவையாக இருக்கிறது. அதுதான் T.ராஜேந்தர் மகத்துவம்.

ரதி என்பேன் மதி என்பேன்

கிளி என்பேன் நீ வா

உடல் என்பேன் உயிர் என்பேன்

உறவென்பேன் நீ வா

இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி

கனவினில் வந்தாளோ

https://www.youtube.com/watch?v=IKwv5pL0oo4

கானா பிரபா

22.04.2025


Friday, April 11, 2025

என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழிப் பார்வையிலே….


என்ன என்ன வார்த்தைகளோ

சின்ன விழிப் பார்வையிலே….

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி கூட்டணியில் “வெண்ணிற ஆடை” படத்தில் உருவான அந்தப் பாடலை பியானோவில் வாசித்துக் காட்டுகிறார் ராஜா.

அடேயப்பா பியானோ வாசிப்புக்குண்டான அத்தனை இலக்கணங்களையும் இந்தப் பாடல் சொல்லிக் காட்டுகிறதே என்று ஆச்சரியப்பட்டுப் போனாராம் தன்ராஜ் மாஸ்டர்.

அதுவரை தன்ராஜ் மாஸ்டரின் இசைப் பட்டறையில் சினிமாப் பாடலை எடுத்துப் பயிற்சி எடுப்பது வழக்கம் இல்லை என்பதால் சக இசை மாணவர்களும் ஆச்சரியப்பட்டுப் போனார்களாம்.

மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் போலவே, நாடகச் சூழல் அனுபவத்தால் இசையை வளர்த்துக் கொண்டவர் ராஜா. தன் முன்னோர்கள் தன்னுடைய இசை வளர்ச்சிக்கு எவ்வளவு தூரம் கட்டை விரல் கேட்காத துரோணாச்சாரியார்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இதுவோர் உதாரணம்.

ஓய்வு இடைவேளைகளில் தன்னோடு சினிமாவில் வாசித்த சக கலைஞர்களிடம் Trinity College தேர்வுக்காக ஒவ்வொரு notes ஐயிம் வாசிக்கக் கேட்டுப் பயிற்சி எடுத்துக் கொண்ட தேடல் எல்லாம் தான் பின்னாளில் அசுர விளைச்சலாகி இருக்கிறது.

என் பால்ய வயதில் யாழோசை கண்ணன் என்ற இசை விற்பன்னர் கீபோர்ட் வாசிப்புப் பயிற்சிக்கு இசைஞானியின் நிலவு தூங்கும் நேரம் பாடலையே பால பாடமாக வைத்ததைச் சொல்லி இருந்தேன். இதெல்லாம் தொட்டுத் தொடரும் பந்தம்.

“நீங்க கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டது அறுபதுகளுக்குப் பின்னால் தானே?”

என்று புதிய தலைமுறை வழி சமஸ் கேட்ட கேள்விக்கு,

“இன்னும் கத்துக்கிட்டுத்தான் இருக்கேன்”

என்கிறார் இந்த 82 வயதுப் பையன் 😊😍❤️

கானா பிரபா

மலையோரம் வீசும் காத்து

மலையோரம் வீசும் காத்து

மனசோடு படும் பாட்டு 

கேக்குதா….கேக்குதா….❤️

சோகப் பாடல் என்றாலும் தலைமுறை தாண்டி சாகாவரம் பெற்ற பாட்டு. அதனால் தான் ஈராயிர யுக இசை மேடைகளிலும் தவிர்க்க முடியாமல் வீற்றிருக்கின்றது.

இந்தப் பாடல் படமானதே சுவாரஸ்யமான விடயம் தான். அடுத்த நாள் பாடல் காட்சியைப் படமாக்க வேண்டும். ஆனால் இன்னும் கைவசம் பாடல் இல்லையே என்று “பாடு நிலாவே” இயக்குநர் கே.ரங்கராஜ் வேண்டியழைக்க, பாடல் காட்சி படமாக்கும் இடத்துக்கே இரவோடிரவாக இந்தப் பாடல் வந்து சேர்ந்ததாம். 

இசைஞானியின் அசுர வேகம் சொல்லத் தேவை இல்லை. கூடவே சூழலை உணர்ந்து ஒரே டேக்கில் பாடிக் கொடுத்து விடும் சூப்பர் சொனிக் வேகம் பாடும் நிலாவிடம்.

கூடவே வாலியும் இருக்கிறாரே. இப்படியாக ஆச்சரியப் பட எதுவும் இல்லாத அசுரர்களின் விளைச்சல் இது என்றாலும் ஆச்சரியப்பட்டுப் போனது தான் கதை.

அதாவது பாடல் வந்து சேர்ந்து ஐந்து மணி நேரத்திலேயே ஒரே மூச்சில் படமாக்கி விட்டாராம் இயக்குநர். 

இப்போது போய் பாடல் காட்சியைப் பாருங்கள். ஏதோ வருஷக் கணக்காகப் புழங்கிய பாடல் போல மோகனின் வாயசைப்பு அச்சொட்டாக அந்த எஸ்பிபியே தான்.

https://youtu.be/BgbafEuP8RE?si=nBh7N_G0EuByzCwL

தொழில் நுட்பம் இன்று போல் வளராத காலத்தில் இப்பேர்ப்பட்ட ஆச்சரியங்கள் எல்லாம் விளைந்து விட்டது.

இந்தப் பாடலை முதலில் மனோ பாட இருந்தாராம்.

மலையோரம் வீசும் காத்து என்று விட்டு கடலோரம் ஏன் படமாக்கி இருக்கிறார்கள் என்று படம் வந்த போது யாரும் கேட்கவில்லை. ஆனால் அப்படியொரு உரையாடல் பாடல் காட்சியைப் பார்த்த போது எழுந்ததாம்.

மலையோரம் வீசும் காத்து

மனசோடு பாடும் பாட்டு

கேக்குதா... கேக்குதா...❤️

✍️ கானா பிரபா


Friday, April 4, 2025

இளையராஜாவின் அம்மா


"போட்டோ எடுத்த அந்த நொடியில் இருந்தது அந்தம்மா தானே?

அப்ப அந்த நொடி உண்மைன்னா 

அந்த போட்டோ உண்மை தானே? 

போட்டோ அம்மா தானே?"

தந்தி தொலைக்காட்சிப் பேட்டியில் இசைஞானி இளையராஜா இந்தக் கருத்தைப் பகிர்ந்த போது நெக்குருகி விட்டேன்.

 நாம் எத்தனை வயசு கடந்தாலும் அம்மாவுக்குச் செல்லப் பிள்ளை தான். அந்தப் பிரியமும், செல்லமும் என்றென்றைக்கும் மாறாதாது.

தன் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் போது தங்களுக்கு டாட்டா காட்டி விட்டுப் போவதைப் பார்த்த இளையராஜா அம்மா தனக்கு டாட்டா இல்லையா என்று கேட்டாராம்.

"அம்மா நான் உங்களுக்குச் சொல்றேன்" என்றுவிட்டு அன்று முதல் தான் ஒலிப்பதிவு கூடம் கிளம்பும் போது தன் தாயாருக்கு டாட்டா காட்டி விட்டுத்தான் போவாராம் ராஜா.

1989 இல் தன் தாயார் இவ்வுலகை விட்டு நீங்கிய போதும் இன்று வரை தன் அம்மா படத்துக்கு டாட்டா காட்டி விட்டுத்தான் போவாராம் ராஜா.

ராஜாவின் குழந்தை உள்ளத்துக்கு ஒரு வாழ்வியல் எடுத்துக்காட்டு.

எங்கள் அப்பா எங்களை விட்டுப் பிரிந்து ஆறு ஆண்டுகள் நெருங்கினாலும் இன்னமும் அவர் ஊரில் இருப்பதாகவே நினைத்துக் கொள்வேன்.

"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் 

நற்றவ வானிலும் நனி சிறந்தனவே" 

என்று அப்பா தொலைபேசும் போது அடிக்கடி சொல்வது இன்னமும் என் காதிலும், நெஞ்சிலும் பத்திரமாக இருக்கிறது.

தாய் போல யார் வந்தாலுமே

உன் தாயைப் போலே அது ஆகாது ❤️


Sunday, March 2, 2025

மெல்லிசை இளவரசன் வித்யாசாகர்

இசையமைப்பாளர் வித்யாசாகரைப் பொறுத்தவரை ஒரு திரையிசை வாத்தியக்காரராக அவரின் பயணத்தை ஆரம்பித்து இது ஐம்பதாவது ஆண்டு.

ஆம், 1975 ஆம் வருஷம் தன்னுடைய 12 வது வயதிலேயே வாத்தியக்காரராகத் திரையிசைப்பாடல் உலகுக்கு வந்தவர்.

அந்தக் காலத்தைச் சொல்லும் போது, பள்ளிச் சீருடையோடு பாடல் ஒலிப்பதிவுக் கூடத்துக்குப் போவேன் என்று பூரிப்பார்.

தேவராஜன் மாஸ்டர் தொடங்கி, சலீல் செளத்ரி, ராகவன் மாஸ்டர், இளையராஜா உள்ளிட்ட திரையிசை ஆளுமைகளுக்காக இயங்கிய பாக்கியம் பெற்றவர். 15 வயதுப் பையனாக கிழக்கே போகும் ரயில் படத்துக்கு வாசித்திருக்கிறார்.

பாலைவனச் சோலை படத்தின் பாடல் பதிவில் அந்தச் சிறுவன் வித்யாசாகர் மேல் ஈர்ப்புக் கொண்ட ராபர்ட் – ராஜசேகரன் இரட்டை இயக்குநர்கள் தம் “சின்னப்பூவே மெல்லப் பேசு” படத்தில் எஸ்.ஏ.ராஜ்குமாரின் பாடல்கள் சக இசைக்கு ஒரு கட்டுக்கோப்பான இசை நடத்துநராகப் பணித்ததோடு, அந்தப் படம் தொட்டுத் தம் படங்களின் பின்னணி இசையையும் வித்யாசாகரிடமே ஒப்படைக்கின்றார்கள். அந்தக் காலகட்டத்தில் வித்யாசாகர், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் சேர்ந்து இசை படைத்த படைப்புகள் அவை.

ராபர்ட் – ராஜசேகரன் இரட்டையர்கள் பிரிந்த வேளை ராஜசேகரன் இயக்கி, நாயகனாக நடித்த “பூமனம்” வித்யாசாகரை ஒரு முழுமையான இசையமைப்பாளர் நாற்காலியில் இருத்தி அழகு பார்க்கின்றது.

இங்கே தான் ஒரு முக்கியமான விடயத்துக்கு வர வேண்டும். வித்யாசாகரின் ஆரம்பம் தொட்டு இன்றைய இயக்கம் வரை அவர் பெரும் பாடகர்களை மட்டும் முன்னுறுத்திய இசையோட்டத்தில் இருந்திருக்கவில்லை. “பூமனம்” படத்தில் எண்பதுகளில் வெற்றிக் கோலோச்சிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் இல்லாத அறிமுகம் என்பது அதிசயம். அதே படத்தில் பழம்பெரும் பாடகர் P.B.ஶ்ரீனிவாஸ், மலேசியா வாசுதேவன் பாடியிருந்தாலும் கூட.

இந்தச் சூழலில் தமிழில் வித்யாசாகருக்கான அடையாளம் நிறுவப்படாத சூழலில் தெலுங்கு தேசம் போனவர் அங்கே கொடுத்த ஹிட் படங்களில் எஸ்பிபி தவிர்க்க முடியாத அங்கம் ஆனார்.

தெலுங்கில் தன் ஆரம்பத்தில் கொடுத்த “தர்ம தேஜா” படத்தில் எஸ்பிபிக்கு மட்டும் ஐந்து பாட்டுகள், ஏன் அனைத்துமே எஸ்பிபி தான் என்றே சொல்லிக் கொள்ள வேண்டும்.

இங்கே தர்ம தேஜா படத்தை இன்னொரு ஒப்புவமைக்குக் கொண்டு வர வேண்டும்.

எப்படித் தன் 15 வயதில் இசைஞானி இளையராஜாவிடம் வாத்தியக்காரராக இயங்கினாரோ அதே வித்யாசாகர் தமிழில் பெரு வெற்றியடைந்த இளையராஜாவின் படங்கள் தெலுங்குக்கு வந்த போது அவற்றின் இசையமைப்பாளராக அமைந்தது தன் காலம் போட்ட அழகான கோலம். அவ்விதம் “பூந்தோட்டக் காவல்காரன்” படம் “தர்மதேஜா” ஆன போதும், “கிழக்கு வாசல்” தெலுங்கில் “சிலகபச்ச கப்பூரம்” ஆகியதும், “மல்லு வேட்டி மைனர்” தெலுங்கில் “மைனர் ராஜா” ஆன போதும், “மாமா பாகுன்னவா” தெலுங்கான “வனஜா கிரிஜா” ஆகிய போதும் வித்யாசாகரே இசை.

அங்கே தன் அடையாளத்தை நிறுவிய வித்யாசாகருக்கு வருடங்கள் கடந்து நந்தி விருதோடு, இந்தியத் தேசிய விருது கொடுத்து அழகு பார்த்தது கே.விஸ்வநாத்தின்  “ஸ்வராபிஷேகம்”. இசையை மையப்படுத்திய படத்தின் நாயகக் குரலாய் அப்படத்தில் விளங்கியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள்.

கே.விஸ்வநாத் இயக்கிய படங்களின் வழியாக திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன், இசைஞானி இளையராஜாவைத் தொடர்ந்து வித்யாசாகருக்கும் தேசிய விருது என்ற அங்கீகாரம் கிடைத்தது எவ்வளவு பெருமை.

“ஜெய் ஹிந்த்” படம் வழியாக அர்ஜீன் மீண்டும் அழைத்து வருகிறார் வித்யாசாகரை. இம்முறை அவரை விட்டுவிடத் தயாரில்லை. மாபெரும் ஹிட் படம் என்ற அங்கீகாரத்தோடு தமிழ்த் திரையுலகம் வித்யாசாகருக்குத் தொண்ணூறுகளில் சாமரம் வீசுகின்றது.

அது மட்டுமல்ல கீரவாணி (மரகதமணி) போன்றே வித்யாசாகருக்கும் தன் படங்களில் தொடர்ச்சியான வாய்ப்புக் கொடுத்துத் தமிழில் ஒரு பிடிப்பை இறுக்கியவர் அர்ஜீன். அதில் தன்னுடைய நேரடி இயக்கம் மட்டுமல்ல ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட இன்னொருவர் இயக்கிய படங்களிலும் வித்யாசாகர் இருப்பதை உறுதிச் செய்து கொள்ளுமாற்போல அந்தச் சூழல் அமைந்தது.பதிவு கானாபிரபா

வித்யாசாகருக்குத் தெலுங்குத் திரையுலகம் தீனி போட்டது அதிசயமல்ல, திரையிசையிலும் சீர் ஒழுக்கம் பார்க்கும் கேரளத்து ரசிகர்களை அவர் ஈர்த்தது தான் அதிசயம். இம்மட்டுக்கும் நான் ஒன்றும் நூற்றுக்கணக்கில் அங்கே இசையமைக்கவில்லை, கொடுத்ததில் ஏராளம் ஹிட் அடித்து விட்டது என்கிறார் தன்னடக்கமாக வித்யாசாகர்.

மலையாளத்தில் அவரின் “அழகிய ராவணன்” அறிமுகமே முதன் முதலாக வித்யாசாகருக்குக் கிட்டிய மாநில விருது என்ற அங்கீகாரம்.

புதையல் படத்தில் மம்மூட்டி நடித்த போது அந்தப் படத்தின் பாடல்களில் மயங்கி அழகிய ராவணன் படத்தின் இசையமைப்பாளராக அழைத்து வந்த பின்னணியே பின்னாளில் கேரளத்தின் முடிசூடா மன்னனாக வித்யாசாகரை இருத்தி வைத்தது.

இங்கே மலையாளத்தை இழுத்து வரக் காரணம் செங்கோட்டை படத்தில் எஸ்பிபி & எஸ்.ஜானகி பாடிய “பூமியே பூமியே” பாடல் பின்னாளில் மலையாள ரசிகர்கள் வித்யாசாகரைக் கோயில் கட்டிக் கும்பிடாத குறையாகக் கொண்டாடிய “சம்மர் இன் பெதலஹம்” படத்தில் “எத்ரையோ ஜென்மமாய்” (ஶ்ரீனிவாஸ் & சுஜாதா) என்று மறுபிறப்பெடுத்தது. புத்தம் புதுசு போல அப்போதிருந்து இன்னும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள் கடவுள் தேசத்தவர்.

“அழகூரில் பூத்தவளே....

 என்னை அடியோடு சாய்த்தவளே....”

அந்தப் பெருமூச்சு எஸ்பிபி குரல் அறிவுமதி அவர்களின் வரிகளுக்கு உயிர் மூச்சாய் வெளிப்பட்ட போது, வித்யாசாகர் என்ற இசையமைப்பாளர் கால மாறுதல்களுக்கு ஏற்பப் புதுப்புதுக் குரல்களைக் கொண்டு வந்தாலும் எஸ்பிபி அதற்கெல்லாம் விதிவிலக்கு என்று நிறுவியது.

“ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும்” கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்துக்காக இந்தப் பாடலை வடிவமைத்தபோது வித்யாசாகரோ, விஜய்யோ நினைத்துப் பார்த்திருப்பார்களா மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைத்த “கில்லி” வழியாகச் சொல்லி அடிப்போம் என்று. வித்யாசாகர் – விஜய் ஒரு தனிக்கூட்டணி.

"மலரே மெளனமா" பாடல் எத்திசையில் ஒலித்தாலும் அந்தப் பாட்டுக்குள் போய் அங்கேயே தங்கி விட்டுத் தான் திரும்பும் மனது.

இன்றைக்கு இசைப் போட்டிகளில் அடுத்த தலைமுறைப் பாடகராக வருபவர்களுக்கு அரசு அங்கீகரிக்காத பாடம் இந்தப் பாட்டு. இந்தப் பாட்டின் நுட்பம் தெரிந்து அதைப் பாதிக் கிணறு கடப்பவரே கரை சேர்ந்து விடுவார்கள்.

"மெளனமா" என்ற சொல்லை மட்டும் வைத்துப் கேட்டாலே பாடலில் இது ஒலிக்கும் போதெல்லாம் வேறுபடும் சாதாக வெளிப்பாடே ஒரு உதாரணம்.

பாடலின் வரிகளை நோகாமல் கொண்டு சேர்க்கும் திறன் எல்லாம் படைப்பின் உன்னதத்தை மிகாமல் காப்பாற்றுகின்றன.பதிவு கானாபிரபா

இந்தப் பாடலில் இருக்கும் உணர்வோட்டமே பாட்டு முடிந்த பின்னும் நாதம் போல உள்ளுக்குள் அடித்துக் கொண்டிருக்கும்.

அளவு கடந்த நேசத்தை எப்படி நோகாமல் வெளிப்படுத்த முடியும் இவர்களின் குரல்கள் அனுபவித்து அதைக் கடத்துகின்றது?

தெலுங்கில் முன்பே இசைத்த பாட்டு ஆனால் அங்கே அதைச் சரிவரப் பயன்படுத்தாததால் “ஜெய் ஹிந்த்” படத்தின் பாடல் பதிவு செய்யும் போது அர்ஜீனிடம் இந்தப் பாட்டின் மெட்டைப் பரிந்துரைத்தாராம் வித்யாசாகர். இந்தப் படத்தில் வேண்டாம் அடுத்த படத்தில் வைத்துக் கொள்வோம் என்றாராம் அர்ஜீன். அது போலவே மறக்காமல் கர்ணா படத்தின் பாடல் பதிவில் இந்தப் பாடலை வேண்டிப் பெற்றுக் கொண்டாராம். கர்ணா கொடுத்த புகழால் இதே பாட்டு தெலுங்கில் மீளவும் போனது இம்முறை வெகு பிரபலம் என்ற அடையாளத்தோடு, (தெலுங்கில் மனோ)

பின்னாளில் கன்னடத்தில் இதே எஸ்பிபி & எஸ்.ஜானகி கன்னடத்தின் முன்னணி நாயகன் சிவராஜ்குமாரின் “கங்கா ஜமுனாவிலும்” பாடினார்கள் அச்சொட்டாக.

“காற்றின் மொழி ஒலியா இசையா” கேட்டாலே நெகிழ்ந்து உருக வைத்துக் கரைத்து விடும் பண்பு கொண்டது. ராதாமோகன் போன்றவர்கள் வித்யாசாகரின் மெல்லிசைக் கதவுகளை அகலத் திறந்தவர்களில் ஒருவர் என்றால் தரணி தன் ஆக்ரோஷமான படங்களில் அந்த மெலடிக்கு ஒரு சரியாசனம் கொடுப்பார்.

“புல்வெளி ஆகிறேன் இப்பொழுது....” என்று ஆசை ஆசை பாடல் நினைவில் மிதந்து வரும் இதை நினைக்கும் போது.

வித்யாசாகர் ஒரு ஃபீனிக்ஸ் பறவை போல, தமிழில் திடீரென்று வந்து போவார். அல்லாதவிடத்து மலையாளத்திலோ தெலுங்கிலோ இந்த ஃபீனிக்ஸ் பறவை மையம் கொண்டிருக்கும்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இன்னிசை இளவரசன் வித்யாசாகர்

கானா பிரபா

02.03.2025


Thursday, February 27, 2025

இளையராஜா அறிமுகப்படுத்திய இன்னொரு பாடகர் தினேஷ்


கடந்த Zee TV சரிகமப வில் ஒரு ஆச்சரியமான நிகழ்வு அரங்கேறியது.

Track Singer எனப்படும் ஆதாரப் பாடகர் தினேஷ் அந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


1984 ஆம் வருஷம்

தான் ஒரு ஒலிக் கலைஞராக (Sound Engineer) வர வேண்டி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் ஐ சந்தித்ததாகவும், அவரின் தரங்கிணி ஒலிக்கூடத்துக்கு வந்த போது போட்டி நிறைந்த உலகில் என்ன செய்யப் போகிறோம் என்ற நிலையில் இசைஞானி இளையராஜாவிடமே Sound Engineer ஆக வாய்ப்பு கிடைக்கிறது.


ஒரு நாள் திடீரென்று இளையராஜாவின் அழைப்பு. எஸ்பிபிக்காக track பாட வேண்டுமென்று.

“பாட்டுத்தலைவன் பாடினால் பாட்டுத்தான்” 


என்ற இதயக்கோயில் பாடலைப் பாடியவருக்கு, நான் பாடும் மெளன ராகம், பனி விழும் இரவு என்று அடுக்கடுக்காக track பாடல்கள் கிடைக்கின்றன.

“நீ நல்லாத்தானே பாடுறே ஏன் அவர் மாதிரி (கே.ஜே.ஜேசுதாஸ்) மாதிரிப் பாடுறே” 

என்று இளையராஜா சொன்னாராம்.


ஶ்ரீராகவேந்திரர் படத்தில் “அழைக்கிறான் மாதவன்” 


https://youtu.be/nvvlDVjigio?si=kSB5mnlN4F24OS5J


பாடலுக்கும் அவ்விதமே பாடிச் சென்றார். அதைப் பாட வந்த ஜேசுதாஸ் 


குருவே சரணம்! குருவே சரணம்!

ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா…


என்ற அடிகளைத் தானே பாடுவது பாடலின் மூலக் குரலுக்கு முரணாக இருக்குமே முதலில் பாடியது ராகவேந்திரர் ஸ்வாமிக்கு அல்லவா? சிஷ்யன் பாடும் அடுத்த அடிகளை அப்படியே அவர் குரலில் வச்சிடுங்க, எனவும்

தினேஷ் பாடிய அந்தப் பகுதி அப்படியே பயன்பட்டு அதுவே தினேஷின் முதல் பாடலாகவும் அமைந்து விடுகிறது. பதிவை எழுதியவர் கானாபிரபா


பாடகர் தினேஷ் நேரப் பாடல்களாக இளையராஜாவிடம் இன்னும் பாடியிருக்கலாம். கானாபிரபா

தனிப் பாடல்கள் மற்றும் மலையாளத் திரையுலகம் அவரைப் பயன்படுத்திக் கொண்டது.


இளையராஜா இசையில் தெலுங்கில் வெளியான தர்ம ஷேத்திரம் படம் தமிழில் போர்க்களம் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்ட போது

பாலகிருஷ்ணாவே விரும்பி வாங்கிக் கொண்ட ஜேசுதாஸ், ஸ்வர்ணலதா பாடிய “மாசி மாசம் ஆளான பொண்ணு” எஸ்பிபி , சித்ரா  குரலில் 

என்னோ ராத்லு” 


https://youtu.be/tLZmK8pJHHY?si=YH5PexQMyUBgvyF_


என்று ஹிட் அடிக்க அதை தினேஷ்

“ஆடை மூடும்” என்ற பாடலாக


https://youtu.be/l55W9NTUeyo?si=FaUf-ajAtLGR0iHB


 ஸ்வர்ணலதா குழுவினருடனும்,


https://youtu.be/l55W9NTUeyo?si=FaUf-ajAtLGR0iHB


“மொத்தமாய் சிங்கார மேனி தொட்டு” ஆகிய பாடல்களையும் பாடியிருக்கிறார்.


எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில்

சின்னப்பூவே மெல்லப்பேசு படத்தில்

கண்ணே வா


https://www.youtube.com/watch?v=d1x6oGbhu0w


பறவைகள் பலவிதம் படத்தில்

மனம் பாடிட நினைக்கிறதே 


https://www.youtube.com/watch?v=Hrh-8MSXN8o


Welcome 1990 என்ற இசைத்தொகுப்பு அவுசப்பச்சன் மெட்டமைக்க, ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசை கொடுக்க வெளியானது. பின்னர் அதை Fantacy (அந்திமாலை) என்று தன் அனுமதியில்லாமல் ரஹ்மான் தமிழில் மீள வெளியிட்டதாகவும் அவுசப்பச்சன் சர்ச்சையை எழுப்பியிருந்தார். அதில் 

இனிய கல்லூரி 

https://www.youtube.com/watch?v=rw6Nosr_qO8


என்ற பாடலையும் தினேஷ் பாடியுள்ளார்.

பதிவை எழுதியவர் கானாபிரபா


வித்யாசாகர் இசையில் “பூமனம்” படத்தில் இவர் பாடிய 

“என் அன்பே”

https://www.youtube.com/watch?v=4QEAtji8N-4


பாடல் பின்னாளில் பார்த்திபன் கனவு படத்தில் “பக் பக் பக் மாடப்புறா” வாக உரு மாறியது.


லஷ்மிகாந்த் பியாரியால் இசையில் நீராடி வா தென்றலே
https://www.youtube.com/watch?v=2RM_IR-0HLk
அவரின் குரலில் தான் ஒலித்தது.


பாடகர் தினேஷ் இளையராஜா இசையில் நிறையப் பாடியிருக்கலாம் என்று எண்ண வைக்கிறது அவரின் இந்த மேடைப் பாடல்


https://youtube.com/shorts/39JxR2Ybhxs?si=QKjEYWIAE9P6TETA


கானா பிரபா

26.02.2025

Thursday, February 20, 2025

மனதோடு மலேசியா வாசுதேவன் ❤️



“காத்து பட்டாலே 

 கரையாதோ கற்பூரம்

கரையுது எம்மனசு உன்னால,


பட்டுவண்ண ரோசாவாம்

பார்த்த கண்ணு மூடாதாம்…


https://youtu.be/3BIXEACx3eY?si=GbjwucB26G4Rs9u4


“கன்னிப் பருவத்திலே” படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடல் இலங்கை வானொலி வழியாக கடைக்கோடி வரை வழிந்தோடிய கதையெல்லாம் வரலாறு.


ஒரு பக்கம் எஸ்பிபி 

“உச்சி வகுந்தெடுத்து” 

இன்னொரு பக்கம் மலேசியா அண்ணன்

“பட்டுவண்ண ரோசாவாம்”

என்று உணர்வின் பரிமாணத்தைச் சரி சமனாகக் கொடுத்த காலமது.


“பொன்மான தேடி

நானும் பூவோடு வந்தேன்

நான் வந்த நேரம்

அந்த மான் அங்கு இல்லை”


AA ராஜ் இசையில் தணியாத தாகம் படத்தில் இடம்பிடித்த எஸ்.ஜானகியோடு மலேசியா அண்ணன் பாடும் அந்தப் பாடலும் இலங்கை வானொலிப் பிரபலங்களில் ஒன்று

அதுதான்


பூவே நீ யார் சொல்லி

யாருக்காக மலர்கின்றாய்..


https://youtu.be/dbnFVkXHc9s?si=XSRC491zzon2OCEm


மலேசியா வாசுதேவனின் ஆத்மார்த்த தோழர் கங்கை அமரன் இசையமைப்பாளராக அண்ணனுக்கு அள்ளிக் கொடுத்தவை பல. அப்படியொன்று தான் அதுவும்.

“பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேளாயோ” பாடலின் நகலாகப் பிறந்தது “பொன்மானைத் தேடி” என்று கங்கை அமரனே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

“எங்க ஊரு ராசாத்தி” படத்தில் அமைந்த அந்தப் பாடல் மலேசியா வின் குரலால் மேன்மை பெற்றது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை”


“காதல் வைபோகமே 

  காணும் நன் நாளிதே…”


இயக்குநராக கே.பாக்யராஜ் “சுவரில்லாத சித்திரங்கள்” வழி அறிமுகமான போதும் மலேசியா வாசுதேவன் அந்த வெற்றியில் பங்கெடுத்துக் கொண்டார்.


ஒரு பார்த்திபனுக்கு ஒரு அருண்மொழி குரல் போல, அந்தக் காலத்தில் ஒரு  பாக்யராஜுக்கு ஒரு மலேசியா வாசுதேவன் என்ற நியதியை உருவாக்கியது இசைஞானியின் “வான் மேகங்களே….”

அதன் நீட்சியாக தம்பி கங்கை அமரனாரும் தான் இசையமைக்கும் கே.பாக்யராஜ் படங்களில் மலேசியா வாசுதேவன் என்ற தொடர்ச்சியை நிறுவினார். கானா பிரபா 

அந்த வகையில் 

“மெளன கீதங்கள்” படத்திலும் மலேசியா வாசுதேவனை முதன்மைப்படுத்தினார்.


“அப்பாக்கள் சில பேரு

செய்கின்ற தப்பைத்தான்

அடியேனும் முன்னாளில்

செய்தேனப்பா…”


படக் கதையை ஈரடியில் நிறுவியது “டாடி டாடி ஓ மை டாடி” கூடவே “மாசமோ மார்கழி மாசம்” என்ற விரகதாபப் பாடலையும் அள்ளிக் கொடுத்தார் தன் நண்பனுக்காக கங்கை அமரன்.


மெல்லிசை மன்னரும் தன் பங்குக்கு கே.பாக்யராஜுக்காக மலேசியா வாசுதேவன் என்ற கணக்கில் “எண்ணி இருந்தது ஈடேற” (அந்த ஏழு நாட்கள்), “கதவைத் தொறடி பாமா” (பாமா ருக்மணி) என்று பகிர்ந்தளித்தார்.


“பூங்காத்தே….

 அந்தப் பொண்ணுகிட்ட

ஒண்ணு சொல்லி வா” 


https://youtu.be/5mlQTSy0r74?si=VjIpHWQosV5tSujC


ராமராஜன் இயக்குநராக அவதாரமெடுத்த “மண்ணுக்கேத்த பொண்ணு” இசை கங்கை அமரன், இங்கேயும் அற்புதமானதொரு சோகராகத்தை சுசீலாம்மாவுடன் பாட் வைத்தார்.


எஸ்பிபி & மலேசியா ஜோடிப் பாடல்கள் என்றால் சட்டென்று ஞாபகம் வருபவற்றில் 

கங்கை அமரன் “சட்டம்” படத்துக்காக 

இசை கொடுத்த 

“நண்பனே எனது உயிர் நண்பனே”


இன்னொன்று சங்கர் - கணேஷ் இரட்டையர்கள் தந்த

“நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம்”

என்ற நெல்லிக் கனி பாடல்.


அப்படியே அதிகம் கேட்காத கங்கை அமரன் கொடுத்த  “மாமன் பொண்ணுக்கு” சின்னதம்பி பெரிய தம்பி பாடலையும் சேர்க்கலாம். கானா பிரபா


இயக்குநர் ஆர்.சுந்தரராஜன் இளையராஜா தவிர்ந்து இன்னும் பல இசையாளுமைகளோடு இயங்கிய சமயம், மெல்லிசை மன்னரோடு கை கோர்த்த “சரணாலயம்” படத்தில்

“எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை”


https://youtu.be/WuyFYbuK3mI?si=bbsj8McFxQVa4qFr


இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்


https://youtu.be/fm7cC8CW3k4?si=XwLRtYYwU7C_


ஆகிய அற்புதங்களை மறந்து விடாதீர்கள்.


“ஆடி வெள்ளம் நின்னாலும்

  ஆசை வெள்ளம் நிக்காது”


கே.வி.மகாதேவன் இசையில் ஆர்.சுந்தரராஜன் இயக்கிய “தூங்காத கண்ணின்று ஒன்று” படத்திலும் மலேசியா வாசுதேவனுக்கு இடம் கிடைத்தது”


காக்கிச் சட்டை போட்ட மச்சான் 

களவு செய்ய கன்னம் வச்சான்


https://youtu.be/eQ8ORVVV3G4?si=PG4நுன்ர்0ச0ஊ2ல்


சந்திரபோஸ் இசையில் சங்கர் குருவுக்காகப் பட்டையைக் கிளப்பிய பாட்டு. இப்போது கேட்டாலும் அற்புதமான ஒலித்தரத்தில் ஸ்பீக்கர் பீறிடும்.


அப்படியே ஒரு எட்டுப் போய்

“தென்பாண்டிச் சீமையிலே”

தொகையறாவோடு 

ராசா மனசுலதான் லேசா


https://youtu.be/V81ZhIChgws?si=BeJEaiSvuHhPngSS


கேட்டுப் பாருங்கள். அறிமுக இசையமைப்பாளர் ராஜேஷ் கண்ணா “நான் வளர்த்த பூவே” படத்தில் மலேசியா அண்ணனுக்குக் கொடுத்தது அன்றைய ரெக்கார்டிங் சென்டர் ஹிட்.


கிளியே இளக் கிளியே

இந்த சபையில் வந்தாலென்ன


https://youtu.be/dVezmRDtH2s?si=xX5NSZiEXQkgcOLv


மனோஜ் கியான் கூட்டணி மலேசியா வாசுதேவன் அண்ணனையும் தம் கூட்டணியில் நிறுவிய பாட்டு. கானாபிரபா

அப்படியே உழவன் மகனில் கேப்டனுக்காக

“பொன் நெல் ஏரிக் கரையோரம்”


https://youtu.be/IEba-CrpeNU?si=qP3D4VNcrAM7UpSm


என்று மகுடப் பாடலிலும் ஏற்றிக் கெளரவித்தார்கள்.


இசைஞானியார் தவிர்ந்து இன்னும் பல இசை ஆளுமைகளோடும் மலேசியா வாசுதேவன் மிளிர்ந்தார் என்பதற்காக எழுந்த ஒரு சிறு துளி இந்தப் பதிவு.


வெண்மேகமாக 

விடிவெள்ளியாக

வானத்தில் பொறந்திருப்பேன்


என்னை அடையாளம் கண்டு

நீ தேடி வந்தா 

அப்போது 

நான் சிரிப்பேன்


https://youtu.be/h3mAnv1aA5w?si=sImqAsroUddf68mP


மலேசியா வாசுதேவன் அண்ணன் நினைவில்


கானா பிரபா

20.02.2025

Tuesday, February 4, 2025

வாணி ஜெயராம் நினைவில் ஈராண்டு



யாரது
சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது

யாரது…..
சொல்லாமல் 
நெஞ்சள்ளிப் 
போவது….

அந்த இரு முறை வாசிப்பிலே 
தான் காண்பிக்கும்  சங்கதியால் பாடலினுள்ளே இழுத்து வைக்கும் ஒரு உணர்வோட்டம் நிரம்பிய குரல்
வாணியம்மாவினுடையது.

“மேகமே….மேகமே…
பால் நிலா தேயுதே…”
பாடலிலே

“தூரிகை எரிகின்ற போது
இந்த தாள்களில் 
ஏதும் எழுதாது…”

சோக ராகத்தை அவர் சுரம் பிடிக்கும் போது வயலின் வாத்தியத்துக்கும் அவரின் வாய்ப் பாட்டுக்கும் வித்தியாசம் ஏதும் இருக்காது.

இங்கேயும் பாருங்கள் இருமுறை வாசிப்பார் இப்படி,

“எனக்கொரு மலர்மாலை 
நீ வாங்க வேண்டும்

“எனக்கொரு மலர்மாலை
நீ
வாங்க 
வேண்டும்”

அந்த இரண்டாவதில் கொடுக்கும் ஆலாபனையே அடுத்து வரும் இனம்புரியா அவலத்தைக் கோடிட்டு விடும்.

இந்திய சினிமாவின் பெருமை மிகு இயக்குநர்களில் ஒருவரான 
ரிஷிகேஷ் முகர்ஜியின் குட்டி (Guddi) என்ற ஹிந்திப் படத்தில் வசந்த் தேசாய் இசையில் மூன்று பாடல்களைப் பாடும் வாய்ப்பு வாணி ஜெயராமுக்குக் கிடைக்கிறது.

வாணி ஜெயராம் அவர்களை நான் பேட்டி கண்ட போது,
தான் ஹிந்திப் பாடல்களைப் பாடவேண்டும் என்ற இலட்சியத்துக்குக் காரணமாக அமைந்த தன் இளம் பிராயத்தில் றேடியோ சிலோன் இல் புதன் கிழமைகள் தோறும் ஒலிபரப்பான ஹிந்திப் பாடல்கள் பினாகா கீத் மாலா நிகழ்ச்சி, பதிவு கானா பிரபா
அந்த நிகழ்ச்சியில் பின்னர் தன் ஹிந்திப் பாடலான “போலே ரே பப்பிஹரா” பாடல் 16 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து ஒலிபரப்பானதும் கனவு பலித்ததும், தமிழ்ப் பாடல்களை றேடியோ சிலோன் கவி நயத்தோடு தொகுத்து அளித்ததை நெகிழ்வோடு பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Guddi படம் பின்னர் சினிமாப் பைத்தியம் என்ற பெயரில் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளியாகிறது.
ஹிந்திப் பதிப்பில் தர்மேந்திரா என்ற சினிமா நட்சத்திரம் மீது தீரா மோகம் கொண்ட பெண்ணாக ஜெயா பச்ச்ண் நடித்த போது, 
தமிழில் அதையே ஜெய்சங்கர் என்ற நட்சத்திரம் மீது மோகம் கொண்டவராக ஜெயச்சித்திரா நடித்திருப்பார்.
கமல்ஹாசன் துணைப் பாத்திரங்களில் நடித்த காலமது, இங்கேயும் அப்படியே.

ஹிந்தியில் வசந்த் தேசாய் கொடுத்த
“போலே ரே பப்பிஹரா”

https://youtu.be/56AUdC9mn4E?si=zlJn_Bm0hm-oRmKV

தமிழில் வாணி ஜெயராம் அவர்களே பாடியளிக்க, சங்கர் - கணேஷ் இசையில்
“என் உள்ளம் அழகான வெள்ளித்திரை”

https://youtu.be/72bmcsBGrwM?si=3aICu_xfxtACvcAW

ஆனது.
இசையமைப்பாளர்கள் சங்கர் - கணேஷ்  இசையில் பின்னாளில் “மேகமே மேகமே” பாடுவதற்கும் அடித்தளம் ஆனது. “மேகமே” பாடல் ஜகித் சிங் பாடிய கஸல் இசையின் தாக்கத்தில் விளைந்தது.

தேகமே.. தேயினும்
தேன் ஒளி வீசுதே..,

மேகமே.. மேகமே….
பால்நிலா தேயுதே….

வாணியம்மா நினைவில் ஈராண்டு

கானா பிரபா
04.02.2025

Saturday, January 25, 2025

இசைஞானி இளையராஜா வின் ❤️❤️❤️ Symphony No. 1 ❤️❤️❤️

 இசைஞானி இளையராஜா வின்     

❤️❤️❤️

Symphony No. 1 

❤️❤️❤️



“நாங்கள் இன்னும் இன்னும் 

சேர்ந்து வேலை செய்யப் போகிறோம்,

எனக்கு வயது 82 என்பதையும் 

சொல்லி வைக்கிறேன்”

அரங்கத்தில் தன் சிம்பொனிப் படைப்பை வாத்தியங்களால் மொழி பெயர்த்த வாத்தியக்காரர்கள் முன்னே பூரிப்போடு சொல்லி நிமிர்ந்து நிற்கின்றார்

நம் காலத்து ராஜாதி ராஜன் இந்த இளையராஜா.

“இளையராஜாவின் புதுவிதமான  நெறிப்படுத்தலில்  வாத்தியங்களைக் கையாண்டது நமக்கெல்லாம் புதிய அனுபவம்,

இம்மட்டுக்கும் இங்கே இசை படைத்த வாத்தியக்காரர்கள் எல்லோருமே நிரம்பிய அனுபவசாலிகள் என்பதையும் சொல்லி வைக்கிறேன்”

என்ற பிரமிப்பை வெளிப்படுத்தி நிற்கின்றார் இசை இயக்குநர் (conductor) Mikel Toms.

ஒவ்வொரு வாத்தியங்களைத் திரையிசைப் பாடல் உருவாக்கத்தின்போது கையாளும் போது,

“இதில் இருந்து  இப்படி வரலாமே?”

“ஏன் இந்த இசைக் கருவியில் இருந்து 

நான் நினைத்த மாதிரி எடுக்க முடியாதுள்ளது?

இன்னும் முயன்று நான் எது கேட்டேனோ அதை இது வழியாகத் தர வேண்டும்”

என்ற ஒரு கறார்த்தனம் மிகுந்த இளையராஜா என்ற இசையமைப்பாளரிடம் ஆண்டாண்டு காலம் அனுபவபட்ட நம் வாத்தியக் கலைஞர்கள் எல்லாம் சொல்லக் கேட்டதால் இதெல்லாம் ஆச்சரியமில்லாமல் நமக்குள் ஒரு குறுஞ் சிரிப்பையும், பெருமையையும் கொண்டு வருகிறது. நம்மாள் அருமை இன்னொரு தேசத்தவருக்கும் போய்ச் சேர்ந்திருக்கிறதே என்ற பெருமையின் வெளிப்பாடு அது.


Symphony No. 1 இசை உருவாகத்தின் பின்னணிப் படத்தைப் பார்க்கும் போது இன்னொன்றை அவதானித்திருப்பீர்கள்.

தான் எதை எழுதினாரோ அதை அச்சொட்டாக வாங்கி விடும் ஆளுமைத் திறன். 

Mikel Toms இடம் திரும்பத் திரும்பச் சொல்லி இப்படி வர வேண்டும் என்கிறார். வாத்தியக்காரர்களிடம் இது சேர்ந்திசை எல்லோரும் அணிவகுங்கள் என்று கட்டளை பிறப்பிக்கிறார்.

“கேமரா கோணம் Mikel Toms இடமிருந்து தான் மெல்ல மெல்ல மெல்ல என்னிடம் வர வேண்டும்”

இளையராஜா என்ற கலைஞனிடமிருக்கும் ஒளிப்படக்காரனும் குறும்போடு எட்டிப்பார்க்கிறார் இப்படி.

இந்தப் பத்து நிமிடத்துக்கும் குறைவான காணொளியில் இளையராஜாவின் முகத்தில் இருக்கும் அந்த இறுக்கம் தான் தொழில் பக்தி, தன் தொழிலுக்குக் கொடுக்கும் நேர்மை, தான் கற்ற வித்தை ஒரு முடிவற்றது என்ற ஆரம்ப வகுப்பு மாணவனுக்கு உரிய பயபக்தி எல்லாமே அங்கே ஒட்டியிருக்கிறது.

தன் செல்வமகள் பவதாரணியின் முதலாம் ஆண்டு நினைவில் இன்னொரு குழந்தையை ஈன்ற செய்தியைச் சொல்கிறார் 

இளையராஜா எனுமோர் முடிவிலி ❤️

https://youtu.be/Tw0zz6SRVJk?si=W1DCIARoSmUBfw85

கானா பிரபா

25.01.2025

Friday, January 17, 2025

பாடகர் ஜெயச்சந்திரன் பாடலுக்குக் காத்திருந்த விருது ❤️


1978 ஆம் வருஷம் பாரதிராஜா இயக்கத்தில் கிழக்கே போகும் ரயில் வெளிவருகிறது.

அந்தப் படத்தில் பாடகர் ஜெயச்சந்திரன் பாடிய மாஞ்சோலைக் கிளிதானோ பாடல் அவருக்கு புகழ் மாலை கொடுத்தது அனைவரும் அறிந்ததே.

அந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம். தன்னுடைய பாடல் பிறந்த கதையில் இதுதான் இளையராஜாவுக்கு அதிகார பூர்வமாக எழுதிய பாடல் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு முன் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் உதவியாளராக இளையராஜா இருந்த சமயம் இளையராஜாவின் மெட்டுக்கு தஞ்சாவூரு சீமையிலே பாடல் எழுதியதையும் முத்துலிங்கம் குறிப்பிட்டது அறிந்ததே.

இங்கேயும் மெட்டுக்குப் பாட்டு என்று அவருக்கு சூழல் கொடுக்கப்பட்டு பல்லவி எழுதுகிறார். ஆனால் அது அதீத கவித்துவமாக இருக்கிறது என்று கங்கை அமரன் சொல்லவும் இரண்டாவதாக எழுதிக் கொடுத்தது அனைவருக்கும் பிடித்துப் போகிறது.  

அந்தப் பாடலில் கரும்பு வயலே குறும்பு மொழியே என்ற வரிகளைப் பிரேரித்தது அப்போது உதவி இயக்கு நராக இருந்த பாக்யராஜ்.

அதென்ன மாஞ்சோலை? மாந்தோப்பு என்று தானே சொல்ல வேண்டும் என்று இந்தப் பாடலுக்கு அப்போது இலக்கியச் சர்ச்சையும் கிளம்பியதாம்.

கிழக்கே போகும் ரயில் நூறாவது நாள் விழாவில் மாஞ்சோலைக் கிளிதானோ பாடலை நடிகர் திலகம் சிவாஜிகணேசன்  பாடிக்காட்டி இதே போல் எங்கள் படங்களுக்கும் பாடல் போடக்கூடாதா என்று இளையராஜாவிடம் கேட்டாராம்.

அந்த ஆண்டின் சிறந்த பாடலாசிரியர் விருது தமிழக அரசிடமிருந்து கவிஞர் முத்துலிங்கத்துக்குக் கிடைக்கிறது.

ஆனால் ஜெயச்சந்திரனுக்கோ தேசிய விருதே கொடுத்திருக்கலாம் அவ்வளவுக்கு அற்புதமான பாட்டு அது.


ஆனால் காலம் ஒரு கணக்கு வைத்திருக்கிறது இல்லையா?

15 வருடங்களுக்குப் பிறகு கிழக்குச் சீமையிலே படம் உருவாகிறது.

இம்முறை பாரதிராஜா இசைப்புயல் ரஹ்மான் கூட்டணி, இங்கே வைரமுத்து பாடலாசிரியர்.

ரஹ்மானின் இசையில் ஜெயச்சந்திரன் ஜோடி சேர்கிறார்.

எஸ்.ஜானகியோடு ஜெயச்சந்திரன் பாடிய 

“கத்தாழம் காட்டு வழி” பாடலை இன்னொரு முறை உன்னிப்பாக அவதானித்துப் பாருங்கள் வழக்கமான ஜெயச்சந்திரன் தொனியில் இருந்து மாறுபட்டு வேலை வாங்கியிருப்பார் ரஹ்மான்.

தமிழ் நாடு அரசின் சிறந்த பாடகர் விருது அறிவிக்கப்படுகிறது. 

இதோ சிறந்த பாடகராக அறிவிக்கப்படுகிறார் பாடகர் பி.ஜெயச்சந்திரன்.

ஒலி வடிவில்

https://www.youtube.com/watch?v=tpsmP4KKq_0


கானா பிரபா

17.01.2025

Friday, January 10, 2025

மஞ்ஞூலும் ராத்ரி மாஞ்ஞு யாத்ரா மொழியோடே... ஆற்றோரம் சூர்ய நெத்தி அக்னி விளக்கோடே....❤️

மஞ்ஞூலும் ராத்ரி மாஞ்ஞு 

யாத்ரா மொழியோடே...

ஆற்றோரம் சூர்யன் எத்தி

அக்னி விளக்கோடே....❤️

பாடகர் ஜெயச்சந்திரனுக்கு அவர் தம் தாய்மொழியாம் மலையாளத்தில் இசைஞானி இளையராஜா கொடுத்த ஆகச் சிறந்த பொக்கிஷப் பாடலாக இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் என் மனது மெச்சும்.

ஜெயேட்டனோடு இசைஞானி இளையராஜா கூட்டுச் சேர்ந்த வருஷம் 1977. "மஞ்ஞூலும்" பாடல் பிறந்தது 1997 இல்.

இளையராஜாவின் இசையில் ஜெயச்சந்திரனின் இசைப் பயணத்தின் முடிவிடத்தின் பாடல்களில் ஒன்று இது.

வேறொன்றும் வேண்டாம், படத்தின் கதையே தெரியாமல் இந்தப் பாடலை மட்டும் கேட்டுப் பாருங்கள்.

ஒரு பாசத்தின் தேடலை, அன்பின் பயணத்தை உருக்கும் குரலில் பாடியே நம்மை நெகிழ வைத்து விடுவார் ஜெயச்சந்திரன்.

தண்டவாளத்தில் தன் விழி வைத்துப் பயணிக்கும் ரயிலின் தேடலோடு தொடங்கி, அந்த ஏமாற்ற விழிகளோடு மீண்டும் கிளம்பும்  "யாத்ரா மொழி"யின் முகவரிப் பாட்டு இது.

இப்போது இந்தப் பாடலின் சந்தத்துக்கு இசைஞானி கொடுத்த இன்னொரு ரயிலோசையைக் காது கொடுத்துக் கேட்டுப் பாருங்கள். பேரிரைச்சல் இல்லாத ஏகாந்தத் தொனியோடு பாடலில் கூட வரும் பின்னணி இசையாக, அங்கே தளர்வான நடை எழும்.

கதாசிரியரோ, இயக்குநரோ சொன்ன கதையைத் தனக்குள் உருவேற்றி, அதற்கு ஒரு உணர்வு ரீதியானதொரு இசையைக் கொடுக்கும் பிரம்மாவாக இசைஞானி பிரமிப்பைக் கொடுக்கும் இன்னொரு படைப்பாகவே இதையும் எடுத்துக் கொள்வேன்.

மலையாள சங்கீதத்தில் இசைஞானியோடு நீண்ட பயணம் பயணப்பட்ட கிரிஷ் புத்தன்சேரியின் மலையாள வரிகளை மொழிபெயர்த்துப் பார்த்தேன். ஆகச்சிறந்ததொரு திரை இலக்கியமாகப் பாடல் வரிகள் தேங்கி நிற்கின்றன.

இன்று அவரும் இல்லை, பாடிய ஜெயேட்டனும் இல்லை. ஆனால் அவர்கள் கொடுத்த உணர்வு அப்படியே தேயாமல் இருக்கிறது.

பதகளிப்பு அல்லது தவிப்பினை மொழி பெயத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் இதுவும். 

https://www.youtube.com/watch?v=VjMA4aKScqI


கானா பிரபா

மலையாளத்தின் மகோன்னதங்கள் தாஸேட்டன் & ஜெயேட்டன்

வருஷம் 1958,

State School Arts கேரளாவின் மாநில இளையோர் இசை நிகழ்வில் இரண்டு இளையோர் மேடைக் கச்சேரியை அலங்கரிக்கிறார்கள். 

ஒருவர் 18 வயசு நிரம்பியவர், Palluruthy பள்ளியில் இருந்து

கே.ஜே.ஜேசுதாஸ் பாடகராகவும்,

இன்னொருவர் இரிஞ்சாலக்குடா தேசியப் பள்ளியில் இருந்து, 14 வயது நிரம்பிய P.ஜெயச்சந்திரன் மிருதங்க வாத்தியக் கலைஞராகவும் அந்தக் கச்சேரி அமைகின்றது.

மலையாள சினிமாவின் அடுத்த யுகத்தின் முன்னணி இசை நட்சத்திரங்களாக ஒளிவீசுவார்கள் என்று அப்போது நினைத்திருப்பார்களோ தெரியவில்லை. ஆனால் காலம் அப்போது கணக்கு வைத்துக் கொண்டது.

பாடகராக வருவதற்கு முன்பே ஜெயசந்திரன் சகோதரர் அமரர் சுதாகரனின் நண்பராக விளங்கியவர் கே.ஜே.ஜேசுதாஸ். பதிவு:கானாபிரபா ஜெயச்சந்திரனின் இளைய சகோதரர் கிருஷ்ணகுமாருக்கு ஹிந்திப் பாடகர்களில் கிஷோர் குமார் என்றால் இஷ்டம், ஜேசுதாஸுக்கோ மொஹமெட் ரஃபி என்றால் கொள்ளைப் பிரியம். இருவரும் சேர்ந்து பாடி மகிழ்வார்களாம்.

ஜெயசந்திரனை மலையாளத்தின் மகோன்னத இசைமைப்பாளர் 

தேவராஜன் மாஸ்டரிடம் அறிமுகம் செய்து வைத்தவர் கே.ஜே.ஜேசுதாஸ் தான். பதிவு:கானாபிரபா

காட்டுப்பூக்கள் படத்துக்காக தேவராஜன் மாஆடர் இசையில் ஜேசுதாஸ் பாடிய 

மாணிக்க வீணையுமாய்

https://www.youtube.com/watch?v=Li18fB13CPQ

பாடலைப் பாடிக் காட்டுகிறார் ஜெயச்சந்திரன்.

களித்தோழன் (1966) என்ற படத்துக்காக, கே.ஜே.ஜேசுதாஸுக்காக ட்ராக் பாட வேண்டும் என்று அழைக்கப்படுகிறார்.

முதலாவது, இரண்டாவது என்று மீளப் பாடுகிறார், தேவராஜன் மாஸ்டருக்குத் திருப்தியே இல்லை. மூன்றாவதாகப் பிராவகம் எடுக்கிறது பாடல்.

அதுதான்

மஞ்ஞலையில் முங்கிதோர்த்தி

https://www.youtube.com/watch?v=FtjykWLrC8w

எந்தவித முடிவும் சொல்லாமல் பாடலுக்கான ஊதியத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று 50 ரூபா இயக்கு நர் கிருஷ்ணன் நாயரால் ஜெயசந்திரனிடம் கொடுக்கப்படுகிறது.

ஜேசுதாஸுக்கான ட்ராக் பாடல் தானே என்ற ஒரு குழப்ப நிலையில் இருந்த ஜெயச்சந்திரன்,

பாடல் ஓகேயா?

என்று தயங்கிக் கேட்க,

“ஆமாம் நீங்கள் பாடிய பாடல் தான் அப்படியே இருக்கப் போகிறது”

பலமாகச் சிரித்தவாறே கிருஷ்ணன் நாயர் சொன்னாராம்.

அப்போது தான் தேவராஜன் மாஸ்டர் குறும்புத்தனமாக ஏமாற்றியது புரிந்தது அந்த 21 வயசு வாலிபன் ஜெயச்சந்திரனுக்கு.

அதன் பின் மலையாளம், தமிழ் என்று சங்கீதச் சிற்றரசனாகக் கோலோச்சினார் என்பது வரலாறு.

தேவராஜன் மாஸ்டரிடம் உதவி இசையமைப்பாளராக அப்போது இருந்த ஆர்.கே.சேகரின் மகன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கூடப் பாடி விடுங்கள் என்று எழுதி வைத்ததும் காலதேவன் கணக்கு.

ஜெயச்சந்திரன் நம்மை விட்டுப் பிரிந்த ஜனவரி 9 ஆம் திகதி பின்னிரவோடு,

இன்று ஜனவரி கே.ஜே.ஜேசுதாஸ் பிறந்த தினமாக அமைந்திருக்கிறது.

கானா பிரபா


Thursday, January 9, 2025

ஜோஷ்வா ஶ்ரீதரின் அனுபவம் வழியே ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கையில் இருந்து


"இசையமைப்பாளர்களிடம் கீபோர்ட் வாசிப்பதால் வரும் வருமானம் ரொம்பக் குறைவான சூழல் அப்போது.

புதுப் புது வாத்தியக் கருவிகளை நாமளே பணம் கொடுத்து வாங்கி வைத்துக் கொண்டு போய்த் தான் வாசிக்கணும், அப்படி வாங்க முடியாமல் கூட ரொம்பக் கஷ்டப்பட்டேன். 

அப்போது ஏ.ஆர்.ரஹ்மானைச் சந்தித்த முதல் நாளில் நான் இசையமைத்த பாடல் இசைத்தட்டுடன், என்னென்ன வாத்தியம் வைத்திருக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன்.

அப்போது ரஹ்மான், 

"இங்கே பாருங்கள் நீங்கள் சொன்ன வாத்தியங்கள் 

எல்லாம் நானே வாங்கி வைத்திருக்கிறேன்,

நீங்க எதுவும் எடுத்து வர வேண்டாம்" என்றார்.

இப்படி சாய் வித் சித்ராவில் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஶ்ரீதர் குறிப்பிட்ட போது இரண்டு நிகழ்வுகள் ஞாபகத்துக்கு வந்தன.

"எனக்கு ஒன்பது வயதாக இருந்தபோது அப்பா இறந்துவிட்டார். 

என் தந்தை இறந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, என் அம்மா வீட்டை நடத்துவதற்காக அவரது இசைக்கருவிகளை வாடகைக்கு விடுவார், அதன் பிறகு உபகரணங்களை விற்று வட்டியுடன் வாழ அறிவுறுத்தப்பட்டார், ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

"இல்லை, எனக்கு என் மகன் இருக்கிறான். 

அவன் கவனித்துக் கொள்வான் என்றாராம்.

என் அம்மாவுக்கு இசை சார்ந்த உணர்வோட்டம் இருந்திருக்கிறது. ஆன்மீக ரீதியாக என் அம்மா சிந்திக்கும் விதத்திலும் முடிவுகளை எடுக்கும் விதத்திலும் என்னை விட மிக உயர்ந்தவர். 

உதாரணமாக, என்னை இசையை எடுக்க வைத்தது அம்மாவினுடைய முடிவு. அவர் என்னை பதினொன்றாம் வகுப்பில் பள்ளியை விட்டு வெளியேறி இசையை எடுக்க வைத்தார், இசைதான் எனக்கு ஏற்ற வழி என்பது

என் அம்மாவுடைய நம்பிக்கை"

என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பேட்டியில் (2017) ஏ.ஆர்.ரஹ்மான் தன் தாயைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பால்ய கால வளர்ப்புச் சூழலே இவ்விதம் ஒவ்வொரு வாத்தியக் கருவிகளைத் தானே வாங்கி வைத்துக் கொள்ளும் பண்பு வளர்ந்திருக்கலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இன்னொரு பேட்டியில் ரஹ்மான் வேடிக்கையாகக் கூடச் சொன்னார் இப்படி

"என்னை கோடி கோடியாக வாங்கும் இசையமைப்பாளர் என்றெல்லாம் சொல்வார்கள், ஆனால் அதில் பெரும்பங்கு வாத்தியக் கருவிகளுக்கும், ஒலி உபகரணங்களுக்குமே போய் விடுகிறது" என்றார்.

அப்படியாக வாழும் கலைஞனுக்கு இதெல்லாம் வாழ்வின் கூறு. 

அப்படியாக வாழ்ந்ததால் தான், இன்னோர் கலைஞனுக்குத் தன் வாத்தியச் சொத்தைப் பகிர முடிந்தது.

ஊருக்காக ஆடும் கலைஞன் 

தன்னை மறப்பான்!

தன் கண்ணீரை மூடிக்கொண்டு

இன்பம் கொடுப்பான்!

கானா பிரபா


Wednesday, January 8, 2025

ஒலி அழகன் 💛💛💛 ஹாரிஸ் ஜெயராஜ் 💚❤️💚

“இப்போதெல்லாம் ஒலியை (sound) எப்படிக் கையாள்வது என்பதே இசையமைப்பு” என்று சமீபத்தில் இளம் இசையமைப்பாளர் ஒருவர் தன் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

துல்லியமான இசையின் அருமையைப் பெற மும்பை தேடிப் போய் ஒலியமைத்த இசைஞானியின் ஆனந்தக்கும்மி, தளபதி ஆகச்சிறந்த உதாரணங்கள் என்பதோடு சரி. எத்தனையோ அற்புதமான பாடல்களின் வாத்தியக் கோப்புகள் தேய்ந்த ஒலித்தரத்தால் வெளிச்சம் தராமல் மங்கி விட்டன.

அமரன் (1992) படப் பாடல்கள் வெளி வந்த போது, அந்தப் பாடல்களின் மெட்டமைப்பை விட அதிகம் ஆகரிஷித்தது அதன் ஒலித்தரம்.

அப்போது வாக்மேனில் இந்தப் படப் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் இலவம் பஞ்சின் மினுமினுப்பும், மெது மெதுப்பும் கலந்தது போல.

டைட்டஸ் இயற்பெயர் கொண்ட ஆதித்யன் அடிப்படையில் ஒரு ஒலிக் கலைஞர் (sound engineer) ஆகவே ஒரு சொட்டும் சிந்தாமல் சிதறாமல் கொடுத்திருந்தார்.

ரஹ்மானுக்கு முன்பே ஆதித்யன் கொடுத்த இசை அனுபவம்  நமக்குப் புதுமையாக இருந்தது.

பின்னாளில் கங்கை அமரன் ஒரு பாட்டுப் போட்டியில்,

“ஆதித்யன் இசையமைத்த 

அமரன் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கீபோர் வாத்தியக்காரர்,

சீவலப்பேரி பாண்டிக்கு ஹாரிஸ் ஜெயராஜ் கீர்போர்ட் வாத்தியக்காரர்”

என்று சொன்னார்.

1992 க்குப் பின்னான இசை யுகத்தின் திறவுகோலாகப் பின்னர் ஏ.ரஹ்மான் புதியதொரு பரிமாணம் படைத்தார்.

அவர் தொட்ட எல்லைகள் பற்பலது.

இன்னொரு புறம் ஹாரிஸ் ஜெயராஜின் வரவு நிகழ்கிறது.

ஒலியை நம் அருகாமையில் கொண்டு போகும் தொழில் நுட்பம் இன்னும் இன்னும் கிட்ட வரவும், அதற்குத் தோதாய் மிகச் சிறந்த ஒலி நயம்

மிகுந்த பாடல்கள் கிளம்பினது.

அவற்றில் மிகுந்த கர்ம சிரத்தையோடு பேணி வருபவர் ஹாரிஸ்.

அதனால் தான் அவர் இசையமைத்த படங்களின் முகவரி தேடாமல் உடனேயே கேட்டு விடுவது.

ஒரே மாதிரி ட்யூன் என்ற குற்றச்சாட்டை எல்லாம் அவரின் ஒலி நயம் நீர்த்துப் போக வைத்து விடும்.

ஒரே மெட்டுடன் ஓகே ஆக்கி விடுவார் என்று கெளதம் வாசுதேவன் ஹாரிசுக்குப் புகழாரம் சூட்டுவது ஒருபக்கம், இன்னொரு பக்கம்

அந்தக் கூட்டணியில் மிளிர்ந்த பாடல்களின் ஓசை நயத்தை மட்டும் எடுத்தாலே போதும். இதை எழுதும் போது அடி மனசு 

“உன் சிரிப்பினில்” 

https://youtu.be/7GlJSYi-IvQ?si=hSlWpMA06fj6gVki

பாடுகிறது.

இன்றைக்கும் கூட மனசுக்கு இதமாக ஒரு பாட்டுக் கூட்டு (playlist)  தயாரிக்க மனம் விழைந்தால் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களை அள்ள நினைக்கும்.

சாலைகள் மாறும்

பாதங்கள் மாறும்

வழித்துணை நிலவு மாறாதே

மனமெல்லாம் சிறகே

உலகெல்லாம் உறவே

https://youtu.be/q8MW_YcbcVM?si=jm0j19T-um1OukJQ

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 

ஒலி அழகன் ஹாரிஸ் ஜெயராஜ் ❤️

கானா பிரபா


Tuesday, January 7, 2025

மெல்லிசை மன்னரும் திரைக்கதை மன்னரும் ❤️❤️❤️

மெல்லிசை மன்னரின் எண்பதுகளும் இன்னும் அதிகமாகக் கொண்டாடப்பட வேண்டியவை. அதுவும் அந்த ஆர்மோனியக்காரின் காதல் கதைக்குப் பொருத்தமான பண் அமைத்துப் பாடல்களில் கூட அந்த நிறத்தைக் கலவையாக்கிக் கொடுத்த அழகுணர்ச்சியைச் சிலாகித்துக் கொண்டே அந்த ஏழு நாட்கள் பாடல்களைக் கேட்க வேண்டும்.

பாலக்காட்டு மாதவன் என்ற பாக்யராஜ் மெட்டமைக்கும் தோற்றப்பாட்டிலேயே மெல்லிசை மன்னரை ஞாபகப்படுத்துவார். 

“கவிதை அரங்கேறும் நேரம் 

மலர்க்கணைகள் பரிமாறும் தேகம்” பாடலிலும் சரி, 

“தென்றலது உன்னிடத்தில் 

சொல்லி வைத்த சேதி என்னவோ” பாடலும் கூட ஆரம்பத்தில் கொடுக்கும் ஸ்வர ஆலாபனையில் அந்த இசையமைப்பாளனின் காதல் ஒட்டியிருக்கும்.

“ஸ்வர ராக” பாடலில் மலையாளமும், தமிழும் காதல் கொள்ளும் பாட்டு,இதுவும் தென்றலது பாடலும் கண்ணதாசன் கை வண்ணம். அது போல் குருவிக்கரம்பை சண்முகம் “கவிதை அரங்கேறும் நேரம் பாடலை எழுதியிருக்கிறார்.

“எண்ணி இருந்தது ஈடேற” பாடல் வைரமுத்துவை வைத்துப் படத்தின் வணிக சமரங்களுக்காகக் கொடுத்த குத்து வகையறாவோ என்று எண்ணிக் கொண்டே ரசித்தாலும் அதிலும் தன் முத்திரையைக் காட்டியிருப்பார் எம்.எஸ்.வி.

எண்பதுகளில் சங்கீதத் திலகம் கே.வி.மகாதேவனைக் கொண்டாட ஒரு சங்கராபரணத்தையும், இசைஞானி இளையராஜாவுக்கு சிந்து பைரவியுமாக அமைய, 

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அந்த 7 நாட்கள் ஐ எழுதி வைக்கலாம் போல. அதுவும் ஜெயச்சந்திரனுக்கு வைதேகி காத்திருந்தாளுக்கு முன் வந்த ஒரு பொக்கிஷம் இது.

பின் வரும் வரிகளில் தபேலாவை வழித்து தாள லயம் கொண்டும் மெல்லிசை மன்னரின் முத்திரை 

தென்றலது உன்னிடத்தில்

சொல்லி வைத்த சேதி என்னவோ

தென்றலது உன்னிடத்தில்

சொல்லி வைத்த சேதி என்னவோ

பெண்மையின் சொர்கமே பார்வையில் வந்ததோ

காவியம் தந்ததோ

https://www.youtube.com/watch?v=eavNXIrVddI

இயக்குநர் கே.பாக்யராஜ் & இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் 

கூட்டணியின் ஆரம்பப் படமாக அமைந்தது “பாமா ருக்மணி”.

அந்தப் படத்தின் பெயரை உச்சரிக்கும் போதே

“நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்

எழில் உருவானவள்”

https://www.youtube.com/watch?v=HjmStSr_zpY

என்று எஸ்பிபி அடிமனசில் பாடத் தொடங்கி விடுவார்.

பாக்யராஜின் முதல் மனைவி பிரவீணாவும் படத்தில் ஒரு நாயகியாக இணைந்த படமிது.

கே.பாக்யராஜின் ஆஸ்தான பாடலாசிரியர்களில் ஒருவரான புலவர் சிதம்பரநாதன் வரிகளில் “நீ ஒரு கோடி மலர் கூடி” பாடலோடு 

Take Somebody 

https://www.youtube.com/watch?v=PrdPUXhiCOs

என்ற துள்ளிசைப் பாடலும் உருவானது இப்படத்துக்காக.

எல்.ஆர்.ஈஸ்வரியோடு அந்தப் பாடலை இணைந்து பாடியவர் மெல்லிசை மன்னரின் உதவி இசையமைப்பாளர் ஜோசப் கிருஷ்ணா.

கூக்காட்டும் அந்த ஆண்குரலாக மெல்லிசை மன்னரின் பல படங்களில் அடையாளப்பட்டிருப்பார் இங்கும் அப்படியே.

“கோகுலக் கண்ணன் நீயென்று 

இந்தக் கோதைக்குத் தெரியும்”

வாணி ஜெயராம் குரலில் ஒரு பாடலும்,

“கதவைத் தெறடி பாமா

என் காலு வலிக்கலாமா”

என்ற பாடலை பாக்யராஜின் ஆஸ்தான குரலாளர் மலேசியா வாசுதேவன் பாடவும் இன்னொரு பாடலுமாக

கவிஞர் முத்துலிங்கம் பாடல்களை எழுதினார்.

கே.பாக்யராஜின் திரைப்பயணத்தில் இன்னொரு சிகரம் “ஒரு கை ஓசை” வாய் பேச முடியாதவராக, அழுத்தமான நடிப்பினால் நாயக பிம்பத்தை உடைத்துப் பரவலான வெகுஜன அபிமானம் பெற்றவர் கே.பாக்யராஜ்.

இங்கும் மெல்லிசை மன்னர் கூட்டோடு 

“முத்துத்தாரகை வான வீதி வர

தங்கத்தேரென பூவை தேடி வர

ஊர்கோல நேரமிது”

https://www.youtube.com/watch?v=Con3PS60Jvg

என்ற அற்புதமான பாடலை எஸ்பிபியுடன், சுசீலா பாடியிருப்பார்.

அந்தப் பாடலை எழுதியவர் பின்னாளில் பிரபல வில்லனாகத் திகழ்ந்த ஆர்.பி.விஸ்வம்.

வழக்கம் போலத் தன் கூட்டணிப் பாடலாசியர்கள் புலவர் சிதம்பரநாதன், கவிஞர் முத்துலிங்கத்துக்கும் பாடல்களைக் கொடுத்ததோடு இன்னொரு புதுமை படைத்திருப்பார் பாக்யராஜ்.

அது என்னவெனில் பைரவி என்ற பாடலாசிரியரை வைத்து விடுகதைப் பாணியிலேயே சொல்லும் பாடலொன்றை எழுதி அந்த விடுகதையைப் பாடிப் பின் விடையையும் பகிரும் குரலாக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனையே பாட வைத்து, படத்தின் எழுத்தோட்டப் பாடலாக்கி விட்டார். 

அந்தப் பாடல் தான்

“சேலை இல்லே ரவிக்கை இல்லே புள்ளே”

https://www.youtube.com/watch?v=BXUcsLN5_qk

கேட்டுப் பாருங்கள், புதுமையாக ரசிக்க வைக்கும்.

கே.பாக்யராஜின் பலமே இன்னார் தான் இசை, இன்னார் தான் பாட்டு எழுத வேண்டும் என்ற ஒரு வரையறைக்குள் சிக்காமல் எம்.எஸ்.விஸ்வநாதன் முதற்கொண்டு இளையராஜா, சங்கர் - கணேஷ், கங்கை அமரன் ஈறாகவும் அப்படியே தானும் இசையமைத்துத் தீபக் இடமும் கை மாற்றிய பாங்கில் அவரது திரைப்பயணம் அமைந்திருந்தது.

அண்மையில் இயக்குநர் மு.களஞ்சியம் பேட்டியில் “தனக்கு இளையராஜா இசை தான் வேண்டும்” என்று கவிதாலயாவுக்குப் படம் பண்ண ஒப்பந்தமான போது, 

“உனக்கு உன் மேல் நம்பிக்கை இல்லையா?” 

என்று கே.பாலசந்தர் சொன்னதை அப்படியே கே.பாக்யராஜிடம் பொருத்திக் கொண்டேன்.

அற்புதமான கதை சொல்லியிடம் எல்லாமே வயப்படும். அதே நேரம் கதையில் தொய்வு இருந்தால் இசை இளையராஜாவாகவே இருந்தாலும் தூக்கி நிறுத்த முடியாது என்பதற்கு கே.பாக்யராஜின் இசைக் கூட்டணிகளே சான்று பகரும்.

கானா பிரபா

07.01.2025