Pages

Monday, December 8, 2025

பாடகர் கங்கை அமரன்

பண்பாடும் தாமரையே 

வா வா

இசையில் விளையும் 

தேமாங்கனி.....

இன்று பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் இன்றைய தேதியில் வாழும் தமிழ்த் திரையிசைத் தகவல் பொக்கிஷமாக விளங்கும் கங்கை அமரன்.

பாடலாசிரியராக, இசையமைப்பாளராக, இயக்குநராக, தயாரிப்பாளராக அவரின் பன்முகப் பரிமாணத்தில் தவிர்க்க முடியாத இன்னொரு அங்கம் பாடகர் கங்கை அமரன்.

இசைஞானி இளையராஜாவின் பிஞ்சுக் குரல் போல அப்படியே இன்றுவரை தொனிக்கும் அமரனது குரல்.

அடிப்படையில் அவரே ஒரு இசையமைப்பாளராக இருப்பதால் ரொம்பவே கஷ்டப்பட்டு வார்த்தைகளை வளைக்காமல், வலிக்காமல் பாடிக் கொடுப்பார். 

தனக்குப் பிடித்த பாடகக் குரலாக கார்த்திக் ராஜா அடையாளப்படுத்தியது கங்கை அமரனைத்தான்.

“ஓட்டுக் கேட்டு வருவாங்கண்ணே” போன்ற பாடல்களில் இளையராஜா சகோதரர்கள் கூடப் பாடியதோடு,

"அண்ணன்மாரே தம்பிமாரே" (ஆனந்தக் கும்மி), உட்டாலக்கடி (மை டியர் மார்த்தாண்டன்) பாடல்களில் எஸ்பிபி குழுவினரோடு அதகளப்படுத்தியதோடு,

வாடி என் கப்பக்கிழங்கே போன்ற ஏராளமான குழுப்பாடல் வகையறாவிலும், 

வாடி என் பொண்டாட்டி நீதானே (வெள்ளை ரோஜா), மச்சான வச்சுக்கடி (நான் பாடும் பாடல்) போன்ற துள்ளிசையிலும், குரலை மாற்றிப் பரிமளித்த “குத்தாலத்தில் தண்ணி இல்லைன்னா” ( புதுப்பாட்டு),

ஏன் அவரே இசையமைத்த பிள்ளைக்காக படப்பாடலான “மழலையின் மொழியினில் அழகிய தமிழ் படித்தேன்” பாடல்கள் தோறும்  பரிமளித்தவர். பாடல் தொகுப்பு கானா பிரபா

கங்கை அமரனுக்குப் போய் சேரக் கூடாது என்று நினைத்த பாட்டு “தர்மம் வெல்லும்” படத்துக்காக எஸ்பிபி & சித்ரா ஆகியோர் பாடிய “தேவி தேவி நீ என் தேவி” ஐ படத்தில் ஏனோ மீளவும் கங்கை அமரனை வைத்துப் பாட வைத்தது ஏனோவென்று புரியவில்லை.

கங்கை அமரன் பாடிய காதல் பாடல்கள் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம்.

“சோலைப் புஷ்பங்களே” போன்ற புகழ்பூத்த பாடல்கள் கங்கை அமரன் பெயர் சொல்லும் என்றாலும்,

“பண்பாடும் தாமரையே”, மற்றும் “விழியே நலமா” போன்றவை அவரின் உன்னதங்கள் என்பேன்.

“மன்னன் கூறைச்சேலை” பாடலின் இடைக் குரலாக வந்து மயக்குற வைப்பார்.

அந்த வகையில் இங்கே நான் பகிர்ந்திருக்கும் இசைஞானி இளையராஜா இசையில் கங்கை அமரன் பாடிய ஜோடிப் பாடல்கள் சொல்லும்

அவரின் பாட்டுத்திறன் குறித்து

1. சோலைப் புஷ்பங்களே – இங்கேயும் ஒரு கங்கை

https://www.youtube.com/watch?v=01EzymmWxtU

2. இரு பாதம் பார்த்தேன் – மனித ஜாதி

https://www.youtube.com/watch?v=olgPSEWbJdw

3. புதுசு புதுசு – மனித ஜாதி

https://www.youtube.com/watch?v=p3EB8KlessI

4. தெற்குத்தெரு மச்சானே – இங்கேயும் ஒரு கங்கை

https://www.youtube.com/watch?v=9mARPaSy5Ak

5. பூஜைக்கேத்த பூவிது – நீதானா அந்தக் குயில்

https://www.youtube.com/watch?v=sA22pnpNQoI

6. பண்பாடும் தாமரையே வா – நீ தொடும் போது

https://www.youtube.com/watch?v=czhBDXYhsPk

7. மன்னன் கூறைச் சேலை – சிறைச்சாலை

https://www.youtube.com/watch?v=MOG7TxoEXyA

8. விழியே நலமா உனை நான் கேட்கிறேன் – தூரத்துப் பச்சை

https://www.youtube.com/watch?v=f6B1yva1RU0

9. சாமியை வேண்டிக்கிட்டு – கவிதை பாடும் அலைகள்

https://www.youtube.com/watch?v=c-9d3iUCou4

10. சொல்லிக் கொடு சொல்லிக்கொடு – கேள்வியும் நானே பதிலும் 

நானே

https://www.youtube.com/watch?v=JLqfdTq3a48


அடி குயில்கள் வாழும் நாள் வந்தால்

அடி குலவைச்சத்தம் கேட்காதா

உன் தவிக்கும் துயரம் தீர்க்கத்தான்

அவன் காலடிச்சத்தம் கேட்காதா…


இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 

கங்கை அமரன் அவர்களுக்கு !


கானா பிரபா

08.12.2025

Sunday, December 7, 2025

வா சகி வாசகி வள்ளுவன் வாசுகி

ஒரு பாடகரே பாடலாசிரியராகி இன்னொரு பாடகரின் பாட்டுப் பயணத்தின் திறவுகோலான புதுமையையும் தமிழ் சினிமா கண்டிருந்தது. 

வா சகி வாசகி

வள்ளுவன் வாசுகி


பாடலை எழுதியவர் புல்லாங்குழல் வாத்திய விற்பன்னர் சக பாடகர் நெப்போலியன் என்ற அருண்மொழி.

பாடலைப் பாடியளித்துத் தன் பாட்டுப் பயணத்தைத் தொடங்கியவர்

இன்றைய பிறந்த நாள் நாயகர்

ஹரிஷ் ராகவேந்திரா.


“சிறகே இல்லாத பூங்குருவி 

 ஒன்று வானத்தில் பாரக்கிறது”

சோகம் பொழியும் இந்தப் பாடல்தான் ஹரிஷுக்கு முதல் வாய்ப்பு.

தாலி புதுசு படத்திக்காக தெலுங்கின் புகழ்பூத்த இசையமைப்பாளர் சோமன் ராஜூ இசையளித்தது.

இந்த மாதிரி ஒரு அபசகுனமாக எழும் பாடல் வாய்ப்பு எஸ்.ஜானகிக்கும் வாய்த்தது “விதியின் விளையாட்டு” படத்தில் “என் ஆசை பாழானது ஏனோ” என்று தான் தொடங்கினார். 

அந்தப் படம் வெளிவரவில்லை.


அது போலவே ஒரு நல்ல முகவரியை அளித்து, தாலி புதுசு படத்துக்கு முன்பே வித்யாசாகர் இசையில் அற்புதமான அந்த “வா சகி” பாடல் அரசியல் படத்துக்காகப் பாடி முந்தி வெளியீடு கண்டது.


ஹரிஷ் ராகவேந்திராவோடு கூடப் பாடிய உமா ரமணன் ராசிக் கணக்கும் அப்படி.

“பூங்கதவே தாழ் திறவாய்” பாடல் தான் தாமதமாக வந்து தீபன் சக்ரவர்த்திக்குப் புகழ் அளித்தது போலவே இங்கும் நடந்தது. இன்னும் சொல்லப் போனால்

விஜய் என்ற பெயரில் வந்த உன்னிமேனனோடு உமாரணன் ஜோடி சேர்ந்த “பொன்மானே கோபம் ஏனோ” கூடச் சேர்த்தி.


இந்த ஜோடி சில வருடங்களுக்குப் பின் 

“கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு” பாடலிலும் இணைந்து வசீகரித்தார்கள்.


வா சகி

வாசகி

வள்ளுவன் வாசுகி


என்று எடுத்த எடுப்பிலேயே சினிமா இலக்கணத்தில் குழைத்து வார்த்தை விளையாட்டுக் காட்டியவர்


இந்த குளமெங்கும் 

பொங்கும் அலை இங்கு 

“கல்லை எறிந்தவன் நீ”


“ஒரு கள்ளம் புரிந்தவள் நீ”


என்று பாட்டு நெடுக வார்த்தை ஜாலம் காட்டுவார் பாடலாசிரியர் அருண்மொழி.


ஒரு புதுப் பாடலை எடுத்து அதிகபட்சமாக அழகுபடுத்தித் தருவார் ஹரிஷ். கூடப் பாடியவர் உச்ச ஸ்தாயியில் நின்று சிக்சர் அடிக்கும் போது கவனமாக வாங்கி தாழ் பரப்பில் நின்று விளையாடுவார்.

அதனால் தான் முப்பது வருடங்களைத் தொடப் போகும் தன் பாட்டுப் பயணத்திலும் 


தென்றல் நிலவோடு சேர்ந்து 

கருவான இளைய மகரந்தமாய்

விளங்குகிறார் எங்கள் ஹரிஷ் ராகவேந்திரா.


கானா பிரபா

06.12.2025

Thursday, December 4, 2025

ஏவிஎம் சரவணன்

ஒரு தயாரிப்பாளருக்கும், முதலீட்டாளருக்கும் நிறைய வேற்றுமை உண்டு என்பதை அரை நூற்றாண்டுக்கும் மேலாக நிறுவியது AVM நிறுவனம். 

அதன் ஆரம்ப காலத்தில் திருப்தி தராத முழு நீளக் காட்சிகளையே தூக்கி விட்டு மீண்டும் படப்பிடிப்பை நடத்துவாராம் ஏவி மெய்யப்பச் செட்டியார்.

நாயகனையே மாற்றி எடுத்த வரலாறும் உண்டு. அந்த நாள் படத்தில் முதலில் ஒப்பந்தமானவர் கல்கத்தா விஸ்வநாதன்.

எடுத்தவரைக்கும் அப்படியே தூக்கிப் போட்டு விட்டு சிவாஜி கணேசனை நாயகனாக்கி மீள எடுத்தாராம் மெய்யப்பச் செட்டியார்.

அவர் வழியில் வந்ததாலே என்னவோ தந்தையின் சர்வ லட்சணங்களும் கொண்டதால் தான் ஏவிஎம் சரணவன் முரட்டுக் காளைக்குப் பின் அடித்து ஆட முடிந்தது.

ஏற்கனவே எடுக்கப்பட்டு ஓடாத “உறவுக்குக் கை கொடுப்போம்” படத்தின் கதையை விசு கொண்டு வரவும், அதில் மனோரமா பாத்திரத்தை உருவாக்க வைத்து “சம்சாரம் அது மின்சாரம்” படத்தை வெற்றிப்படமாக்கியது அவரின் ஆளுமைத் திறன்.

மதுவின் தீமையை மையப்படுத்தி சிவசங்கரி எழுதிய “ஒரு மனிதனின் கதை” நாவலை தொலைக்காட்சித் தொடராக்கி பின்னர் தியாகு என்று படமாக்கியதும் அவரின் தொழில் விற்பன்னம்.

பாராட்டுவதில் கஞ்சத்தனமே பார்க்க மாட்டார். ஏவிஎம் 60 சினிமா என்ற தனது நூலின் கடைசிப் பாகத்தில் அந்த நிறுவனத்தில் வேலை செய்தவரிடம் கற்றுக் கொண்ட அனுபவப் பாடத்தோடு முடித்திருப்பார்.

“மாநகர காவல்” படப்பிடிப்பில் இரண்டு நாட்கள் இரவு, பகலாக தொடர்ச்சியாக கேப்டன் நடித்துக் கொடுத்ததை எத்தனை முறை சொல்லி இருப்பார்.

இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தரின் ஆத்ம நண்பராக, அவர் உயர்வில் அழகு பார்த்தவர் ஏவிஎம் சரவணன்.

தன்னோடு கூடவே இருக்க வேண்டும் என்று படம் இயக்காத காலத்திலும் எஸ்.பி,முத்துராமனுக்கு ஒரு அறை ஒதுக்கினார். அவருக்குத் தனிமை வரக்கூடாது என்று ஏற்பாடு செய்தவர் இயக்குநர் வி.சி.குகநாதன்.

ஜெமினி படத்தின் பெரு வெற்றிக்கு சரவணன் போட்ட கணக்குத்தான் “ஓ போடு” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார் இயக்குநர் சரண்.

சூப்பர் ஸ்டாருக்கு எந்த இசையமைப்பாளரும் போதுமென்று நிறுவியவர். சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா பாடல் சந்திரபோஸ் இசையில் அழியா அடையாளமாகி விட்டது. 

இன்று உலகம் முழுக்க சாய் வித் சித்ரா பேட்டிகளைப் பேசிக் கொண்டிருக்கிறோம்.  அதன் தொடக்க நிகழ்ச்சியில் பேட்டிக்கு வந்த ஏவிஎம் சரவணன் ராசி நல்ல ராசி. 

ஏவிஎம் குமரன் இசைஞானம் மிக்கவர். அவரின் அனுபவங்களைக் கேட்டறிந்திருக்கிறோம். ஆனால் ஏவிஎம் சரவணனும் இலேசுப்பட்டவர் இல்லை. 

ஏவிஎம் தயாரிப்பில் “அம்மா” திரைப்படம் இயக்குநர் ராஜசேகரின் இயக்கத்தில், சங்கர் - கணேஷ் இசையமைப்பில், இசையரசி சுசீலா பாட, வைரமுத்து வரிகளில் 

“பூ முகம் சிவக்க

 சோகம் என்ன நானிருக்க”

https://m.youtube.com/watch?v=GM7Z3q8N9dc

என்ற பாடல் பதிவாகிறது.

ஒலிப்பதிவை இடை நிறுத்துகிறார் சரவணன்.  எல்லோருக்கும் இனம் புரியாத ஐயம். அப்போது அவர் சொன்னாராம்

சரணத்தில் வரும்

“இந்த இரவு விடிந்து விட வேண்டும்

இல்லை பருவம் கரைந்து விட வேண்டும்”

என்ற வரிகள் எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டும் எனவே அதற்கு இசை கொடுக்காமல் ஒலிப்பதிவு செய்யுங்கள் என்றாராம்.

https://m.youtube.com/watch?v=yaBC_hsOLjc

ஏவிஎம் சரவணனின் இசையறிவுக்கும், தன் தயாரிப்பில் இருக்கும் ஒவ்வொரு அசைவுக்கும் இருக்க வேண்டிய நுணுக்கத்துக்கும் இதுவொரு எடுத்துக்காட்டு.

“முயற்சி திருவினையாக்கும்”

இது ஏவிஎம் இன் தாரக மந்திரம்

“தந்தை சொல் மிக்க மந்திரமில்லை”

அது ஏவிஎம் சரவணன் தலைமேற்கொண்ட மந்திரம்

ஏவிஎம் இன் காலம் என்று உண்டு 

அதில் ஏவிஎம் 2.0 என்றால் ஏவிஎம் சரவணன் தான். 


டிசெம்பர் 3 அவரின் பிறந்த நாள்

டிசெம்பர் 4 அவரின் பிரிந்த நாள்


எழுத்தாக்கம் : கானா பிரபா

04.12.2025

Wednesday, November 19, 2025

சலீல்தா ❤️100❤️❤️❤️


இனிக்கும் வாழ்விலே
என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும்
என் தெய்வம் நீ
சலீல் செளத்ரி என்னுமொரு இசை மேதையை அவர் பெயர் உச்சரிக்காமலேயே காலம் தோறும்
கொண்டாடிக் கொண்டிருக்கிறது

“பூ வண்ணம் போல நெஞ்சம்”
https://youtu.be/CzPca6-I6iQ?si=9LY3ufZs_TtG_MlS

அழியாத கோலங்கள் அந்தக் காலத்தில் எழுப்பிய தாக்கம் எவ்வளவுக்கெவ்வளவு அதிகம் என்பதை அதன் அதிர்வலை போலப் பிறப்பிக்கும் இந்தப் பாடல்.

இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் இனம் புரியாதவொரு வலி என்னுள் எழும். சந்தோஷம் மிகுந்தவொரு பாடலில் கூட இப்படியானதொரு கலவையான உணர்வு எழுவதற்கான காரணத்தைத் தேடிக் கொண்டே போகலாம்.

ஆனால் ஒன்று மட்டும் பொதுவானதொரு காரணமாக இருக்கும், அதுதான் கழிந்து போன அந்த அழகிய பால்ய வாழ்க்கை. பசுமை பூத்த அந்த நினைவுகளைக் கிளப்பிவிடுவது கூட ஒரு காரணியாக இருக்கலாம். போருக்கு முந்தி இருந்த நம் தேசத்தின் வாழ்வியலில் கொண்டாடித் தீர்த்த நினைவுகள் எல்லாம் கிளர்ந்தெழும். பள்ளி வாழ்க்கையில் கடந்து போன டீச்சர் ஒருவரைக் கூட ஞாபகப்படுத்தும். ஏன் அந்த மூன்று பையன்களில் ஒருவனைக் கூட நம்மில் பொருத்திப் பார்க்கலாம். ஆற்றில் மூழ்கிச் செத்த இவர்களின் நண்பன் போல நம் சகபாடியும் ஒருவன் இருந்து இறந்து போயிருக்கலாம்.

“நெஞ்சில் இட்ட கோலம்
எல்லாம் அழிவதில்லை
என்றும் அது கலைவதில்லை
எண்ணங்களும் மறைவதில்லை” என்று இதே படத்தில் ஒரு பாட்டு வருமே அது போலவே. சொல்லப் போனால் இந்தப் படத்தின் இந்த இரண்டு பாடல்களுமே உணர்வு ரீதியாக ஒரே மாதிரியான எண்ண அலைகளைக் கிளப்பவல்லவை.

“பூவண்ணம் போல நெஞ்சம்” கேட்கும் போது நஷனல் கசற் றெக்கோர்டரில் றேடியோ சிலோன் கொண்டு வந்த பொங்கும் பூம்புனலில் இந்தப் பாடல் அடிக்கடி சுகம் பரப்பிப் போன காலமும் நினைவுக்கு வரும்.

இன்னமும் “அவள் அப்படித்தான்” படத்தில் வரும் உறவுகள் தொடர்கதை பாடலை ஜெயச்சந்திரன் தான் பாடியது என்று குழப்பிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். இந்தப் பாடலைப் பாடிய ஜேசுதாஸ் “பூவண்ணம் போல நெஞ்சம்” பாடலின் மலையாள வடிவத்தைத் தனியே பாடியிருக்கிறார். அதுவும் இன்னொரு வித்தியாசமான சூழலுக்காக. “பூமானம்”
https://www.youtube.com/watch?v=4kpnuJZWttU

என்று தொடங்கும் அந்தப் பாடல் “ஏதோ ஒரு ஸ்வப்னம்” படத்திற்காக இடம் பெற்றது. பாடலின் பின்னணி இசையில் சிறிதே மாற்றக் செய்து கொடுத்திருப்பார் இசையமைப்பாளர் சலீல் சவுத்ரி.
“பூவண்ணம் போல நெஞ்சம்” பாடலில் ஜெயச்சந்திரன், P.சுசீலாவின் ஒத்த அலைவரிசையும் பெரிதும் துணை புரிந்திருக்கிறது. பாடல் காட்சிக்கு வாயசைக்குமாற் போல அல்லாது நாயகன், நாயகியை அவர்கள் போக்கில் பயணிக்க விட்டுப் படமாக்கும் பாணி பாலுமகேந்திராவுக்குத் தனித்துவமானது. இந்தப் பாடலிலும் அந்த அழகியலை அனுபவிக்கலாம்.
https://www.youtube.com/watch?v=DwlkE0SijEg

“கோகிலா” கன்னடப் படம் அதனைத் தொடர்ந்து அழியாத கோலங்கள் இரண்டுக்கும் சலீல் சவுத்ரியே பாலுமகேந்திராவோடு கூடப் பயணித்த இசையமைப்பாளர். அழியாத கோலங்கள் படத்தில் இளையராஜா இல்லாத குறைக்கு பாடல்கள் கங்கை அமரன். பதிவு கானா பிரபா
சந்தியா ராகம் படத்திற்கு எல்.வைத்தியநாதன் இசை. மீதியெல்லாம் இளையராஜாவின் இசையோடு பயணப்பட்டவை. அழியாத கோலங்கள் இல் கிட்டிய பாடல்கள் இந்தப் படத்தில் சலீல் சவுத்ரியே ஏக பொருத்தம் என்று காட்டிக் கொள்கின்றன.

செம்மீன் படத்தின் இயக்குநர் ராமு காரியத் “கரும்பு" என்ற மலையாளப் படத்துக்காக சலீல் செளத்ரியோடு கூட்டுச் சேர்ந்த போது இளங்கோவடிகளின் சிலப்பதிகாரப் பாடலான “திங்கள் மாலை வெண்குடையான்" ஐப் பயன்படுத்தினார்கள்.
கே.ஜே.யேசுதாஸ் குரலில்
https://www.youtube.com/watch?v=eayNB4fDH6Y

பி.சுசீலா குரலில்
https://www.youtube.com/watch?v=ZtwYjL1gbuI



பால்ய காலத்தில் மனதில் ஊன்றிப் பதியம் போட்ட இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் இதை அள்ளி வழங்கிய இலங்கை வானொலிக் காலத்தின் பொற்”காலை” நினைவுகள் தானாக எழுந்து பெருமூச்சைக் கொடுக்கும்.
25 வருட வானொலி வாழ்வுக்கு உரம் போட்டவை இந்தப் பாடல்களை வழங்கியவர்கள் அன்றைய வானொலிக்காரத் துரோணாச்சாரியர்கள். அவர்களால் தான் இசையமைப்பாளர் பேதமின்றி எல்லோரையும் ரசிக்க முடிந்தது
“மாடப் புறாவே வா” இதன் இனிமையைக் கரைத்து விடும் அவலம் நிரம்பிய கதையோட்டம் கொண்டது “மதனோற்சவம்" மலையாளச் சித்திரம். அப்படியே “பருவ மழை” என்று தமிழில் வந்து அந்தக் காலத்து யாழ்ப்பாணத் திரையரங்கையும் தட்டிய ஞாபகம்.
கமலைத் தங்கள் தேசத்தவர் என்று இன்றும் உரிமையெடுக்கும் கேரளத்தவர் மண்ணில் அவர் புடமிடப்பட்ட காலத்தில் வந்த படங்களில் ஒன்று.
மலையாளிகளின் இரசனையே விநோதமானது என்பதற்கு இதுவுமொரு சான்று. இல்லையா பின்னே?
இந்தியாவின் ஒரு அந்தத்தில் இருக்கும் மேற்கு வங்கம் தந்த சலீல் சவுத்ரியை இன்னொரு அந்தத்தில் இருக்கும் தம் மண்ணில் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்று இன்று வரை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது சூப்பர் சிங்கர்களில் சலீல் சவுத்ரி இல்லாத வருஷங்கள் இல்லை எனலாம். அவ்வளவுக்கு உச்சத்தில் வைத்திருக்கிறார்கள்.

“மாடப் புறாவே வா ஒரு கூடு கூட்டான் வா”
https://www.youtube.com/watch?v=S3xNcBXDiQE

மலையாள அசலைக் கேட்டாலேயே ஏதோ தமிழ்ப்பாட்டுக் கேட்குமாற்போல இருக்கும். ஓ.என்.வி குரூப்பின் பாடலை கூகுளில் மொழி பெயர்த்தாற் போல அன்றி, ஒரு நிலைக்கண்ணாடியை வைத்துத் தமிழாக்கியது போல கவியரசு கண்ணதாசன் கண்ணதாசன் தமிழாக்கியிருப்பார்.
இந்தப் படம் ஹிந்திக்குப் போன போதும் அங்கேயும் கான கந்தர்வன் கே.ஜே.ஜேசுதாஸ் தான் குரலாகியிருப்பார்.
அங்கு சென்றும்
https://www.youtube.com/watch?v=MMFAKOUFQV8

அதே ஜீவனைக் கொடுப்பார்.
இசையமைப்பாளர் சலீல் செளத்ரியின் இசைக் கோப்பில் சிக்கல் இராது. சலசலப்பில்லாத தெளிந்த நீரோடை போல இருக்கும்.

மத்திமமான ஸ்தாயியில் பயணிக்கும் அதற்குள் ஏராளம் உணர்வலைகளைப் புதைத்து வைத்திருக்கும்.

“மாடப் புறாவே வா” பாடலைக் கேட்கும் போதெல்லாம் குடும்பமாக இருந்து வானொலி கேட்டு மகிழ்ந்த, அந்த அழகிய காலம் மிதந்து வந்து மனதில் இலேசானதொரு வலியைக் கிளப்பி விட்டுப் போகும்.
நீர் வயல் பூக்கள் போல் நாம் பிரிந்தாலும்
நேர் வழியில் கண்ணே நீ கூட அரும்பு...
பாட விரும்பு...
மடியும் வரை எனது புறாவே..
தேன் வசந்த காலம்
கை நீட்டி, கை நீட்டி
வரவேற்பதால் நீ வா...
மாடப்புறாவே வா...
ஒரு கூடு கொள்வோம் வா..❤️


“கடலினக்கரே போனோரே” , “மானச மயிலே வரூ”
என்று செம்மீன் படத்தின் பிரபல பாடல்களை வழங்கிய சலீல் செளத்ரி தான் இதற்கு இசை. உதவி இசையை ஷியாம் வழங்கியிருந்தார்.

பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர் பாடும்
“வலை ஏந்திக் கொள்வோம்”
https://www.youtube.com/watch?v=y4MAh-S8KZk



“உள்ளம் எல்லாம் தள்ளாடுதே”

https://www.youtube.com/watch?v=7pxZqzajmsk

என்று கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி பாடல், ஜேசுதாஸ் குரலில்

“மணி விளக்கா அம்மா”, “செவ்வள்ளிப் பூவே”
என்ற எஸ்.ஜானகி பாடல்,
இவற்றோடு “There is
Rainbow in the distant sky” என்ற பாடலின் ஆங்கில வரிகளை இசையமைப்பாளர் சலீல் செளத்ரியே எழுதி
அவரின் மனைவி, ஜெயச்சந்திரன், ஷெரின் மற்றும் Dr ரவி குழுவினர் பாடியுள்ளனர்.
விஜயகாந்த் முதன்மைக் கதாநாயகனாக நடித்த தூரத்து இடி முழக்கம் திரைப்பட விழா சென்ற கெளரவமும் அவருக்குக் கிட்டியது

பிறக்கும் ஜென்மங்கள்
பிணைக்கும் பந்தங்கள்
என்றென்றும் நீ
https://youtu.be/CzPca6-I6iQ?si=SbhME3Tr8K_2qtBA

பிறந்த நாள் நூற்றாண்டில் (19 November 1925) சலீல்தா எனும் சலீல் செளத்ரி என்ற இசை மகோன்னதனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ❤️
✍🏻 கானா பிரபா
19.11.2025

Thursday, November 13, 2025

இசையரசி சுசீலா 90 ❤️❤️❤️



எங்கே நீயோ
நானும் அங்கே
உன்னோடு….

சுசீலாம்மாவின் பிறந்த நாளை மனசு நினைப்பூட்டியதும் அதுவாக இந்தப் பாடலைத் தான் பாடத் தொடங்கியது.
பாடகருக்கும் நமக்குமான பந்தம் கூட அந்தப் பாட்டு வரிகள் தான்.

ஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப்படித் தான் ஆரம்பித்தது அன்றைய நாளும். பியானோ இசைக்கிறது, மெல்ல மெல்ல அந்தப் பியானோ இசை தன் ஓட்டத்தை நிறுத்த முயலும் போது ஊடறுத்து வருகின்றது "உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்னைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்" இசைக்குயிலின் குரலைக் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்த தோரணையில் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் ஆர்ப்பரிப்போடு பியானோ இசை சேர, இந்த முறை சாக்ஸபோனும், கூடவே மெல்லிசை மன்னரின் தனித்துவமான வாத்திய அணிகளான கொங்கோ தாள வாத்தியம் அமைக்க, மற்ற இசைக்கருவிகளும் அணி சேர்க்கின்றன.
உன்னை ஒன்று கேட்பேன் என்று சுசீலா வரிகளுக்கு இலக்கணம் அமைக்கையில் உற்றுக் கேட்டுப் பாருங்கள் கூடவே ஒரு வயலின் அதை ஆமோதிப்பதைப் போல மேலிழுத்துச் செல்லும்.
"தனிமையில் வானம்" "சபையிலே மெளனம்" என்று ஒவ்வொரு ஹைக்கூ வரிகளுக்கும் இடையில் கொங்கோ வாத்தியம் இட்டு நிரவியிருக்கும் அந்த இடைவெளியை.
இந்தப் பாடல் ஒன்றே போதும் மெல்லிசை மன்னர் சக்கரவர்த்தி என்பதை நிரூபித்துக் காட்ட

https://youtu.be/ONHG8_zF9K0?si=ifqIl-p9gznP5D8r

இருள் சூழந்ததும் கொல்லையில் சிறுநீர் கழிக்கச் செல்லும் போது கூடவே அண்ணனோ, அம்மாவோ துணைக்கு வரவேண்டிய சிறு பருவம் அது. அந்த நேரத்தில் நிகழ்ந்து நினைவில் ஒட்டாத நினைவுகள் ஏராளம். ஆனால் தசாப்தங்கள் பல கழிந்தும் இன்னும் மனதில் தார் போல ஒட்டிக் கொண்டிருக்கும் நினைவுகளில் அடிக்கடி மீண்டும் மழைக்குப் பூக்கும் காளான் போலத் துளிர்த்துப் போவது " அத்தா.....ன் என்னத்தான் அவர் என்னைத் தான் எப்படி சொல்வேனடி" இலங்கை வானொலியின் இரவின் மடியில் நிகழ்ச்சியில் சுசீலா கிசுகிசுக்கிறார்.

https://youtu.be/4hHz6ap7ViE?si=yZwkhWvdq2yLNYK2

அப்படியே வெட்கம் குழைத்த குரல் அதில் தொக்கி நிற்கும் சேதிகள் ஆயிரம் சொல்லாமல் சொல்லும். இங்கேயும் இசைக்குயில் சுசீலாவுக்கு மாற்றீடைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. "கிறுக்கா", "லூசுப்பையா" என்றெல்லாம் ஏகபோக உரிமை எடுத்துப் பாடும் இந்த நாள் அதிரடிப்பாடலுக்கு முழு நேர்மறை இலக்கணங்களோடு நாணம் கலந்து குழைத்த மெட்டு. குறிப்பா முதல் அடிகளைச் சுசீலா பாடிய ஒரு நிமிடம் கழித்து வரும் இடையிசையைக் கேளுங்கள் அப்படியே குறும்பு கொப்பளிக்குமாற்போலச் சீண்டிப்பார்க்கும் இசை. "அத்தான் என்னத்தான்" மாலை நேரத்து வீட்டு முற்றத்தில் ஈரும் பேனும் எடுக்கையில் நம்மூர்ப்பெண்கள் முணுமுணுத்துப் பாடியதை அரைக்காற்சட்டை காலத்தில் கேட்ட நினைவுகள் மங்கலாக.

பாடல்கள் மீது நான் கொண்ட நேசத்தை மட்டும் புரிந்து கொண்டவர்கள் தமது உறவினர்களின் வீட்டுத் திருமணங்களுக்கு அணி சேர்க்க என்னிடம் திருமணப்பாடல்களைச் சேகரித்துத் தருமாறு கேட்பார்கள். அப்போது நான் ஏதோ ஒரு இயக்குனர் இசையமைப்பாளர் ஒருவரிடம் சிச்சுவேஷன் சாங் போடுங்க என்று கேட்ட தோரணையில் அதீத ஆர்வம் மேலிடப் பாடல்கள் ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்துக் கொடுப்பேன். ஆனால் "இதெல்லாம் சரிவராது, நல்ல குத்துப்பாட்டு ரெக்கார்ட் பண்ணித் தாருங்கள்" என்று என் தொகுப்பை நிராகரிக்கும் போது அங்கீகரிக்கப்படாத புது இசையமைப்பாளரின் உணர்வோடு மனதைத் தொங்கப் போடுவேன். ஆனால் சிலபாடல்கள் நான் ரசிக்க மட்டுமே என்று கேட்டுக் கேட்டு அனுபவிப்பதுண்டு. அந்த ரகமான பாடல் தான் இது.
"வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி" என்று நிதானித்து ஆரம்பிக்கும் இந்தப் பாடலைக் கேட்க ஆரம்பியுங்கள். அப்படியே பிரமாண்டமானதொரு மனம் ஒருமித்த கல்யாண வீட்டை உங்கள் மனம் மெல்ல மெல்லக் கட்டத் தொடங்கும். ஒவ்வொரு வரிகளும் அந்தக் காட்சிப்புலத்தை உணர்ந்து பாடும் வரிகளாக அழுத்தமாகப் பதித்திருப்பார் இசையரசி பி.சுசீலா.
இங்கும் வழக்கமான எம்.எஸ்.வியின் ஆவர்த்தனங்கள் தான், ஆனால் மணமேடையின் காட்சிப்புலத்துக்கு இயைவாக ஒலிக்கும் நாதஸ்வர மேள தாளங்கள் பொருந்திப் போகும் இசைக் கூட்டணி.

https://www.youtube.com/watch?v=e2Fod2T0ZDQ

"காத்திருந்த மல்லி மல்லி பூத்திருக்கு சொல்லிச் சொல்லி " மல்லுவேட்டி மைனர் படத்துக்காக இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல் என்றாலும் நீங்கள் அதிகம் கேட்டிராத பாடல் வகையறா இது என்பது எனக்குத் தெரியும், அதைப் போல நான் அடிக்கடி கேட்கும் அரிய பாடல்களில் இதுவும் ஒன்று என்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். இந்தப் பாடலை அதிகம் கேட்டு நான் வளரக்காரணம் சென்னை வானொலியில் பதினேழு ஆண்டுகளுக்கு முன்னால் ஞாயிறு தோறும் நான்கு மணி வாக்கில் வந்து போன "நேயர் விருப்பம்" நிகழ்ச்சி. ஷெனாய் வாத்தியத்தை சோகத்துக்குத் தான் சங்கதி சேர்த்து திரையில் கொடுப்பார்கள். விதிவிலக்காக பாவை விளக்கு படத்தில் வரும் "காவியமா நெஞ்சின் ஓவியமா" என்ற சந்தோஷப் பாட்டுக்குப் பயன்படுத்தினார்கள். அதே வரிசையில் காதல் பூத்த யுவதியின் சந்தோஷக் கணங்களாய் வரும் "காத்திருந்த மல்லி மல்லி" என்ற பாடலில் அடியெடுத்துக் கொடுப்பதும் இந்தக் ஷெனாய் இசைதான்.பதிவை எழுதியவர் கானா பிரபா
ஒரு பதினாறு வயதுப் பெண்ணுக்குப் பொருந்தக் கூடிய தோரணையில் தன் குரலினிமையை இந்தப் பாடலில் காட்டிச் செல்லும் சுசீலா இந்தப் பாடலைப் பாடும் போது அவருக்கு 55 வயது என்று சொன்னால் தான் நம்புவீர்களா? (அவர் பிறந்த ஆண்டு 1935, இந்தப் பாடல் வெளிவந்த ஆண்டு 1990)
இந்தப் பாட்டின் இசையில் இப்படி ஒரு வரிகள் வரும்
"ராசா நீங்க வரம் கொடுத்தா படிப்பேன் ஆராரோ" (1.35 நிமிடத்தில்) அந்தக் கணம் பின்னால் முறுக்கிக் கொண்டு தபேலா இசையைக் கேட்டுப்பாருங்கள், இசைஞானி இந்த வாத்தியத்தை ஓடிக்கொண்டிருக்கும் இசையில் பெண் குரல் ஒலிக்கும் போது மட்டும் வித்தியாசப்படுத்திப் பயன்படுத்திய இலாவகம் புரிந்து நீங்களும் ரசிப்பீர்கள் மீண்டும் மீண்டும்.

https://youtu.be/cnvfl_TUFMY?si=6mNkgFq6GyzF2cWI

இந்த நான்கு முத்தான பாடல்களுமே போதும் நான்கு பரிமாணங்களில் பி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும் என்று.

இனி எனக்குப் பிடித்த சில பாடல் தொகுப்புகள்
இவை மட்டும்தான் என்றில்லை ஆனால் முந்திக் கொண்டு என் பட்டியலில் வருபவை இவை

திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில்
1. மன்னவன் வந்தானடி – திருவருட் செல்வர்
2. பூந்தேனில் கலந்து – ஏணிப்படிகள்
3. ஆயிரம் நிலவே வா – அடிமைப்பெண்
4. மயக்கம் என்ன – வசந்த மாளிகை
5. மறைந்திருந்து பார்க்கும் – தில்லானா மோகனாம்பாள்
6. மாறியது நெஞ்சம் – பணமா பாசமா
7. மனம் படைத்தேன் – கந்தன் கருணை
8. உன்னைக் காணாத கண்ணும் – இதய கமலம்
9. மலர்கள் நனைந்தன – இதய கமலம்
10. மடி மீது – அன்னை இல்லம்
11. மானல்லவோ கண்கள் தந்தது – நீதிக்குப் பின் பாசம்
12. இதயவீணை – இருவர் உள்ளம்
13. காவியமா – பாவை விளக்கு
14. தேவன் வந்தாண்டி – உத்தமன்
15. கல்யாணக் கோவிலில் – சத்யம்
16. நதி எங்கே போகிறது – இருவர் உள்ளம்
17. சொல்லச் சொல்ல இனிக்குதடா – கந்தன் கருணை
18. ஒருத்தி ஒருவனை – சாரதா
19. கண்மலர் சிரிப்பிலே – குலமகள் ராதை
20. கங்கைக்கரைத் தோட்டம் – வானம்பாடி

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி கூட்டில்
1. கண்கள் இரண்டும் – மன்னாதி மன்னன்
2. அத்தான் என் அத்தான் – பாவ மன்னிப்பு
3. மலர்ந்தும் மலராத – பாசமலர்
4. மயங்குகிறாள் ஒரு மாது – பாசமலர்
5. உன்னை ஒன்று கேட்பேன் – புதிய பறவை
6. என்னை யார் என்று பாலும் பழமும்
7. காதல் சிறகை – பாலும் பழமும்
8. நான் பேச நினைப்பதெல்லாம் – பாலும் பழமும்
9. மாலைப் பொழுதின் – பாக்யலட்சுமி
10. கொடி அசைந்ததும் – பார்த்தால் பசி தீரும்
11. சொன்னது நீதானா – நெஞ்சில் ஓர் ஆலயம்
12. தண்ணிலவு – படித்தால் மட்டும் போதுமா
13. நீரோடும் வைகையிலே – பார் மகளே பார்
14. கண்கள் எங்கே – கர்ணன்
15. ஆலயமணியின் – பாலும் பழமும்
16. முத்தான முத்தல்லவோ – நெஞ்சில் ஓர் ஆலயம்
17. ஆயிரம் இரவுகள் வருவதுண்டு – கற்பகம்
18. நான் உன்னைச் சேர்ந்த செல்வம் – கலைக்கோயில்
19. தங்கரதம் வந்தது – கலைக்கோயில்
20. நெஞ்சம் மறப்பதில்லை – நெஞ்சம் மறப்பதில்லை

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கொடுத்ததில்
1. எங்கே நீயோ நானும் – நெஞ்சிருக்கும் வரை
2. என்னை மறந்ததேன் – கலங்கரை விளக்கம்
3. காலமிது காலமிது – சித்தி
4. தேடினேன் வந்தது – ஊட்டி வரை உறவு
5. வசந்தத்தில் ஓர் நாள் – மூன்று தெய்வங்கள்
6. மதனமாளிகையில் – ராஜபார்ட் ரங்கதுரை
7. சந்த்ரோதயம் ஒரு பெண் ஆனதோ – சந்திரோதயம்
8. நாளை இந்த வேளை – உயர்ந்த மனிதன்
9. இயற்கை என்னும் – சாந்தி நிலையம்
10. இறைவன் வருவான் – சாந்தி நிலையம்

சங்கர் கணேஷ் இரட்டையர் தந்தவை
1. ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் – சிவப்பு மல்லி
2. பொன் அந்தி மாலைப் பொழுது – இதய வீணை
3. நான் கட்டில் மேலே – நீயா
4. உனை எத்தனை முறை பார்த்தாலும் – நீயா
5. தேவியின் திருமுகம் – வெள்ளிக்கிழமை விரதம்
6. உனது விழியில் – நான் ஏன் பிறந்தேன்
7. வடிவேலன் மனசு வச்சான் – தாயில்லாமல் நானில்லை
8. பூ முகம் – அம்மா
9. அழகிய அண்ணி – சம்சாரம் அது மின்சாரம்
10. நேரம் வந்தாச்சு – தாய் மீது சத்தியம்

இன்னும் பல இசையமைப்பாளர்கள் கொடுத்தவை

1. ஆயிரம் பூக்கள் மலரட்டும் – வி.எஸ்.நரசிம்மன் – ஆயிரம் பூக்கள் மலரட்டும்
2. மனசுக்குள் உட்கார்ந்து – வி.எஸ்.நரசிம்மன் -கல்யாண அகதிகள்
3. ஆவாரம்பூவு – வி.எஸ்.நரசிம்மன் – அச்சமில்லை அச்சமில்லை
4. தானே பாடுதே – வி.எஸ். நரசிம்மன் – கண் சிமிட்டும் நேரம்
5. கண்ணுக்கு மை அழகு – ஏ.ஆர்.ரஹ்மான் – புதிய முகம்
6. மாம்பூவே – சந்திரபோஸ் – மச்சானைப் பார்த்தீங்களா
7. செவ்வந்திப் பூவெடுத்தேன் – சிற்பி – கோகுலம்
8. கூண்டை விட்டு ஒரு பறவை – தேவா – கட்டபொம்மன்
9. கருணை மழையே – ஜி.தேவராஜன் – அன்னை வேளாங்கன்னி
10. வரவேண்டும் மகராஜன் – சக்ரவர்த்தி – பகடை பன்னிரண்டு
11. அந்த சிவகாமி மகனிடம் – கோவர்த்தனம் - பட்டணத்தில் பூதம்
12. இன்பம் பொங்கும் வெண்ணிலா – ஜி.ராமநாதன் - வீரபாண்டிய கட்டபொம்மன்
13. விண்ணுக்கு மேலாடை – நாணல் - வி.குமார்
14. ஒரு நாள் யாரோ – மேஜர் சந்திரகாந்த் – வி.குமார்
15. தாமரைக் கன்னங்கள் – எதிர் நீச்சல் – வி.குமார்
16. உன்னைத் தொட்ட காற்று – நவக்கிரகம் – வி.குமார்
17. அம்மா என்றொரு – பத்தாம் பசலி – வி.குமார்
18. நான் உன்னை வாழ்த்தி – நூற்றுக்கு நூறு – வி.குமார்
19. ஆண்டவனின் தோட்டத்திலே – அரங்கேற்றம் - வி.குமார்
20. தேவன் வேதமும் – ராஜ நாகம் – வி.குமார்

இசைஞானி இளையராஜா இசையில் தனித்துப் பாடியவை
1. கற்பூர பொம்மை ஒன்று (கேளடி கண்மணி)
2. ஏலே இளங்கிளியே ( நினைவுச் சின்னம்)
3. ஆராரோ பாட வந்தேனே ( பொறுத்தது போதும்)
4. சொந்தமில்லை பந்தமில்லை (அன்னக்கிளி)
5. காத்திருந்த மல்லி மல்லி (மல்லுவேட்டி மைனர்)
6. தேனில் ஆடும் ரோஜா (அவர் எனக்கே சொந்தம்)
7. எந்தன் பொன் வண்ணமே (நான் வாழ வைப்பேன்)
8. ராஜா சின்ன ராஜா (பூந்தளிர்)
9. தேர் கொண்டு சென்றவன் ( எனக்குள் ஒருவன்)
10. என்ன சொல்லி நான் எழுத (ராணி தேனி)
11. ஹே தென்றலே ( நெஞ்சத்தைக் கிள்ளாதே)
12. டார்லிங் டார்லிங் (ப்ரியா)
13. கேளாயோ கண்ணா ( நானே ராஜா நானே மந்திரி)
14. காலைத் தென்றல் (உயர்ந்த உள்ளம்)
15. தோப்போரம் தொட்டில் கட்டி (எங்க ஊரு காவக்காரன்)
16. ஆசையிலே (தனித்து) – எங்க ஊரு காவக்காரன்)
17. பூப்பூக்கும் மாசம் (வருஷம் 16)
18. மனதில் ஒரேயொரு (என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்)
19. கானலுக்குள் மீன் பிடித்தேன் (காதல் பரிசு)
20. பூங்காவியம் (கற்பூரமுல்லை)

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல ...
உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத
நெஞ்சம் நெஞ்சல்ல…

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இசையரசி ❤️❤️❤️

கானா பிரபா
13.11.2025

ஒளிப்படம் நன்றி : இசையரசி சுசீலா தளம் (மேம்படுத்தப்பட்டது)

Thursday, October 23, 2025

விடைபெற்ற இசையமைப்பாளர் சபேஷ்


தம்பி(கள்) உடையான் படைக்கஞ்சான்

என்பது தேனிசைத் தென்றல் தேவா வழி நாம் கண்ட நிதர்சனம்.

இசை தேவா என்றால் இணை இசை சபேஷ் - முரளி என்றும் பாடமாகி இருக்கும் தொண்ணூறுகளின் நினைவலைகள்.

இசையமைப்பாளர் சந்திரபோஸ், இளையராஜா போன்றோரிடம் வாத்தியக்காரராக இருந்தவர் தேவாவின் பின்னணி இசையாக மாறி அணி செய்தார்.

“பைனாப்பிள் வண்ணத்தோடு” (சமுத்திரம்),

“நான் ஒரு கனாக் கண்டேன்” (பாறை) பாடல்களில் இருந்து தவமாய்த் தவமிருந்து உணர்வோட்டத்திலும் சபேஷ் - முரளி கூட்டு தனியே ரசிக்க வைத்தது.

நான் ஒரு கனாக்கண்டேன் ஐ அப்போது பண்பலைகள் வெறி கொண்டு ஒலிபரப்பின.

“அழகான சின்ன தேவதை” பிறந்த நாள் வாழ்த்துப் பாடல்களில் ஒன்றானது.

“கொத்தவால் சாவடி லேடி”, “உதயம் தியேட்டரிலே” என்று கானாப் பாடல்களிலும் சபேசன் முத்திரை பதித்தார்.

கந்தன் இருக்கும் இடம் கந்தகோட்டம் சென்று விட்டாரோ….

ஆழ்ந்த இரங்கல்கள் சபேஷ்

கானா பிரபா

Wednesday, October 8, 2025

கவிஞர் பிறைசூடன் வரிகளில் இசைஞானி இளையராஜாவின் ராமராஜன் திரையிசை முத்துகள்

“சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி

சொல்லிச் சொல்லிப் பாடும் இந்தக் கிளி"

https://www.youtube.com/watch?v=Z47FM1pdHtw&list=RDZ47FM1pdHtw&start_radio=1

அந்தக் காலத்தில் சென்னை வானொலி நிலையம் எத்தனை தடவை ஒலிபரப்பியிருக்குமோ அத்தனை தடவை யாழ்ப்பாணத்தில் இருந்து கேட்டிருப்பேன். அவ்வளவுக்கு நேசித்த பாடலது.

(கி)ராமராஜனின் “என்னப் பெத்த ராசா” படத்தின் முத்திரைப் பாடலே இதுதான்.

சந்திரசேகரன் என்ற பிறப்புப் பெயர் கொண்டவர், ஈசன் மீது அளவற்ற நேசம் கொண்டு “பிறைசூடன்” ஆனார்.

கவிஞர் பிறைசூடன் தன் ஈசனை மறவாமல் இந்தப் பாடலிலும் கொண்டு வருவார் இப்படி

“ஈசன் அருள் உனக்கே இருந்தது..

ஏந்திழையின் மனமும் இணைந்தது..

நம்மை அன்பு தானே இணைத்தது..”

காதல் பாடலிலும் தெய்வீகத்தையும் கலந்து கொடுப்பது கவிஞர் பிறைசூடன் பாணி.

“மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா” பாடலை எழுத உந்தியது மதுரை மீனாட்சியம்மன் என்பார்.

“என்ன பெத்த ராசா” படத்தின் தயாரிப்பாளர் ராஜ்கிரண் பின்னாளில் நாயகனாக்கப்பட்ட “என் ராசாவின் மனசிலே” படத்தில் ஏனோ பிறைசூடனை எழுத வைக்க விரும்பவில்லையாம். கவிஞர் வாலி போன்றோர் தேவைப்பட்ட போது, இசைஞானி இளையராஜா இசைந்து கொடுக்காததால் தான்

“சோலைப் பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கொடியே” என்ற காலத்தால் அழியாப் பாடல் பிறைசூடன் வழி நமக்குக் கிடைத்தது.

ராமராஜன் தொடர்ச்சியாக நடித்த ஒவ்வொரு படங்களிலும் பிறைசூடன் இருந்தார் இப்படி.

“ஊருக்குள்ளே வந்த ஒரு சோளக்கொல்லை பொம்மை” என்று “எங்க ஊரு மாப்பிள்ளை” படத்துக்காகவும், 

“பொங்கி வரும் காவேரி” படத்தில் இரட்டைப் பாடல்களில் ஒன்றாக “இந்த ராசாவை நம்பி வந்த யாரும்” மற்றும் பி.சுசீலாவோடு இசைஞானி பாடும் 

“மன்னவன் பாடும் தமிழ் பிறந்த தென்பாண்டி முத்தே முத்தே”

https://www.youtube.com/watch?v=-mCAbMlbHJE&list=RD-mCAbMlbHJE&start_radio=1

“ஆட்டமா தேரோட்டமா” காலத்துக்கு முன்பே “எங்க ஊரு காவக்காரன்” படத்தில் ஒரு மாறுவேஷத் துள்ளிசைப் பாடல்.

ஆனால் அதில் கையாண்ட வரிகளைப் பாருங்கள்

“சிறுவாணி தண்ணி குடிச்சு

நான் பவானியில் குளிச்சி வளந்தவ…”

https://www.youtube.com/watch?v=NTzpXGvVGaE&list=RDNTzpXGvVGaE&start_radio=1

மாமூல் வரிகளை விலத்தி தமிழகத்து நீரோட்டத்தில் வித்தியாசமான எல்லையில் களம் புகுந்திருப்பார். 

அப்படியே போய்

“தண்ணியிலே பேதமில்லை

அதுக்கு நிறம் ஏதுமில்லை

சேருகின்ற நிலத்தைப் போல

மாறும் அந்த நிறமும் இங்கே

எவ்வளவு தண்ணியத்தான்

அள்ளி அள்ளி குடிச்சு பார்த்தும்

அந்த குணம் வரவுமில்லை

ஆண்டவனும் கொடுக்கவில்லை”

என்று சமத்துவம் பகிர்வார் கவிஞர்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சங்கிலி முருகன் கூட வேறு பாடலாசிரியர் தான் தேடினாராம்.

பிறைசூடனுக்குக் கிடைத்த சூழ்நிலைப் பாடல்களில் உன்னதமானது

“ஒரு கூட்டின் கிளிகள் தான் எங்கெங்கோ”

https://www.youtube.com/watch?v=MZ2R-PVC3RI&list=RDMZ2R-PVC3RI&start_radio=1

ராமராஜனின் “அன்புக் கட்டளை” படத்துக்காக உருவானது அந்தப் பாட்டு. இசைஞானி இளையராஜாவின் தத்துவ முத்துகளில் தவிர்க்க முடியா ஒன்றாகிவிட்டது.

“பாரதத்தின் பிள்ளை கர்ணன்

தாயைக் கண்ட போதிலும் 

பேரை சொல்ல தந்தை தன்னை

அறியவில்லை அன்றுதான்” 


என்று இதிகாசத்தைத் துணைக்கழைத்து வந்து 

“அன்றும் என்ன இன்றும் என்ன

பாரதம் என்றும் உண்டு

ஏற்றால் என்ன மறுத்தால் என்ன

இன்பம் துன்பம் உண்டு

நீயேதான் வாடாதே..வாடாதே....”

என்று ஆற்றுப்படுத்துவார்

மக்கள் நாயகன் ராமராஜன் பிறந்த தினமின்று.

இன்று தன் பாடல்களால் வாழும் கவிஞர் பிறைசூடன் நம்மை விட்டு மறைந்து நான்காண்டுகள்.

எங்கே சென்றாலும் அன்பே மாறாது

நெஞ்சம் கொண்டாடும் பாசம் மாறாது....

ஒரு கூட்டின் கிளிகள் தான் எங்கெங்கோ

உறவாடும் நெஞ்சங்கள் எங்கெங்கோ


கானா பிரபா

08.10.2025

Friday, August 29, 2025

இசைஞானி இளையராஜா இசை வழங்க ♥️ ♥️ நாயகன் நாகார்ஜூனா ♥️


கீதாஞ்சலி, இயக்குனர் மணிரத்னம், இசைஞானி இளையராஜா, நாகார்ஜீனா என இந்தப் படத்தில் பணியாற்றிய முக்கிய கலைஞர்களுக்குப் பெரும் பேர் வாங்கிக் கொடுத்த படம் மட்டுமல்ல 36 வருஷங்களுக்குப் பின்னர் இன்றும் அதே புத்துணர்வைப் படம் பார்க்கும் இரண்டு மணி நேரம் கொடுக்கும் வல்லமை நிறைந்த காதல் காவியம். 

ஆரம்பத்தில் சற்றுத் தட்டு தடுமாறிப் பின்னர் மெளனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம் என்று தமிழில் தொடர்ச்சியான வெற்றிகளைக் குவித்த மணிரத்னம், மெல்ல ஆந்திராவை முற்றுகையிட்டு அப்போது வளர்ந்து வந்த வாரிசு நடிகர் நாகர்ஜீனாவை வளைத்துப் போட்டு கீதாஞ்சலி என்ற காவியத்தைக் கொடுத்தார். தந்தை நாகேஸ்வரராவ் தேவதாஸ் படத்தில் பின்னி எடுத்தவராயிற்றே, மகன் நாகார்ஜீனா விடுவாரா என்ன.

கூடவே ஜோடி கட்டிய கிரிஜா அப்போது புதுமுகம், அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார். கீதாஞ்சலி படத்தைத் தொடந்து மலையாளத்தில் பிரிதர்ஷன் இயக்கி மோகன்லால் நடித்த வந்தனம் படத்திலும் தலைகாட்டினார். 

அன்றைய காலகட்டத்தில் நடிகை அமலா மோகம் எங்கும் வியாபித்திருந்ததால் சற்றேறக்குறைய அதே முகவெட்டுடன் கிரிஜாவை மணிரத்னம் காட்டியிருப்பார். கீதாஞ்சலி படத்தின் வெற்றியில் கிரிஜாவின் அடக்கமான அதே சமயம் நாசூக்காகப் பண்ணும் குறும்பு நடிப்பும் பங்கு போட்டிருக்கும். அத்தோடு அந்நிய சாயல் இல்லாது அந்நியோன்யமாக ரோகிணி அவர்களின் பின்னணிக் குரல் வேறு.

நுறு நாட்களுக்கு மேல் ஓடிய கீதாஞ்சலி வெற்றிச் சித்திரம் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கதை, கலை இயக்கம் உட்பட ஆந்திர அரசின் ஏழு நந்தி விருதுகளையும், தேசிய அளவில் சிறந்த பொழுதுபோக்குச் சித்திரமாகவும் விருதுகளை அள்ளியது. பாரதிராஜாக்கள் காலத்துக்குப் பின் தமிழ் சினிமாவில் இன்னொரு பரிமாணத்தை ஆரம்பித்த மணிரத்னத்தின் ஓவ்வொரு வெற்றிப்படமும் வித்தியாசமான களங்களை அன்று கொண்டிருந்தது. அந்த வகையில் முழுமையாக காதலை மையப்படுத்தியிருந்தது இப்படம். மணிரத்னம் என்ற கலைஞனின் உயிர் நாடியாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராமும் , இசைஞானி இளையராஜாவும் படமுழுதும் செயற்பட்டிருப்பது தெரிகின்றது.

எண்பதுகளில் தனிக்காட்டு ராஜாவாக இருந்த இசைஞானிக்கு கீதம், காதல், கிராமம் என்றிருந்தால் மனுஷர் அடிபின்னி விடுவார். அதைத் தான் இங்கேய்யும் காட்டியிருக்கின்றார். 

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் முன்னர் பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் முரளியை வைத்து ஒரு படம் தயாரித்த போது அந்தப் படத்துக்கு கீதாஞ்சலி என்று பெயர் சூட்டியவர் இளையராஜா. சில வருஷங்களுக்குப் பின் அதே தலைப்பு தெலுங்குக்குப் போய் இன்னொரு கதையோடு வரும் போது அங்கேயும் தான் இசையமைப்பேன்னு எண்ணியிருப்பாரா என்ன? இன்னொரு விஷயம் இளையராஜாவின் பக்தி இசைத் தொகுப்பு ஒன்றுக்கும் பெயர் "கீதாஞ்சலி".

இதயத்தை திருடாதே ஆகிய அந்தப் படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் என்றால் தெலுங்கில் ஆண் குரலாக எஸ்பிபியும், தமிழில் மனோவுமாக அமைய, எஸ்.ஜானகி ஓம் நமஹ பாடலோடு மீதியை சித்ராவுக்குப் பகிர்ந்தார்.

இந்தப் படத்தின் பாடல்கள் குறித்துத் தனித் தனிப் பதிவுகளே எழுதுமளவுக்கு இன்றும் ஒன்றையொன்று போட்டி போட்டு ரசிக்க வைக்கும்.

ஒரே ஆண்டில், ஐந்து மாத இடைவெளியில் ஒரு முழுமையான ஆர்ப்பாட்டமில்லாத காதல் படத்தைக் கொடுத்து விட்டு இன்னொரு பரிமாணத்தில் ஒரு முழு நீள அதிரடித்திரைப்படத்தைக் கொடுத்துத் தன் சினிமா பயணத்தை ராக்கெட் வேகத்தில் உயர்த்திய பெருமை நாகார்ஜூனாவுக்கு வாய்த்தது. முன் சொன்ன காதல் படம் கீதாஞ்சலி (இதயத்தைத் திருடாதே) , பின்னது முழு நீள அதிரடித் திரைப்படமாக வந்த ஷிவா என்ற தெலுங்குப்படம் தமிழில் "உதயம்" என்ற பெயரில் வெளியானது. 1989 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்தப் புதுமைக்குப் பின் இளையராஜா, நாகார்ஜூனா ஆகிய அதே கூட்டணியோடு ஷிவா (உதயம்) படத்தில் இயக்குநர் ராம்கோபால் வர்மா, நாயகி அமலா, ஒளிப்பதிவாளர் கோபால் ரெட்டி இவர்களோடு பலரும் அறிந்திராத செய்தி இப்படத்தின் கதை உருவாக்கத்தில் ராம்கோபால்வர்மாவோடு இணைந்து பணியாற்றியவர் தெலுங்குப்படவுலகின் குணச்சித்ர நடிகர் தனிகலபரணி.

ராம்கோபால்வர்மா என்ற இயக்குநருக்குக் கிடைத்த அமர்க்களமான வெற்றியாக ஷிவா படத்தின் வெற்றி கணிக்கப்பட்டது, இந்த முதல்ப்பட வெற்றியே இவரைப் பின்னாளில், சில வருஷங்களுக்குப் பின் தெலுங்குத் திரையுலகில் இருந்து பெயர்த்து பாலிவூட் என்ற ஹிந்தித் திரையுலகில் வெற்றியோ தோல்வியோ ஆட்டம் காணாமல் இன்றுவரை தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கக் கூடிய தெம்பைக் கொடுத்திருக்கும். கல்லூரியில் நிலவும் தாதாயிசம், அதைச் சுற்றிப் பின்னப்பட்ட வன்முறை நோக்கிய பயணமாக "ஷிவா" படத்தின் கதையை ஒற்றை வரியில் எழுதி முடித்து விடலாம். ஆனால் 35 வருஷங்களுக்குப் பின்னர் அந்தப் படத்தை இன்றும் பார்க்கும் போதும் துரத்திக் கொண்டு பறக்கும் ஒளிப்பதிவு, ஆரம்பத்தில் இருந்து தேர்ந்தெடுத்த கறுப்பினத் தடகள வீரனைப் போல விர்ரென்று பயணிக்கும் அதிரடி இசை, அலட்டல் இல்லாத காட்சியமைப்புக்கள் என்று விறுவிறுப்பு ரகம் தான்.

ஷிவா வை மீண்டும் 2006 ஆம் ஆண்டில் ஷிவா என மீண்டும் ஹிந்தியில் புத்தம்புதுக் கலைஞர்களைப் போட்டு எடுத்திருந்தாலும் அசலுக்குப் பக்கம் நெருங்கவே முடியவில்லை என்னதான் புதிய தொழில்நுட்பம் கலந்திருந்தாலும்.

ஒரு வன்முறைப்பின்னணி சார்ந்த இந்தப் படத்தின் காட்சியமைப்புக்களில் கொலை, மற்றும் சித்திரவதைக்காட்சிகளைப் பார்த்தால் ஒரு துளிகூட மிகைப்படுத்தல் இல்லாத தணிக்கைக்கு வேலை வைக்காத உறுத்தாத காட்சிகள். ஒரு சில கொலை நடக்கும் காட்சிகள் அப்படியே பார்வையாளன் முடிவுக்கே விட்டுவைக்கும் அளவுக்கு மெளனமாய் முற்றுப்புள்ளி வைத்து அடுத்த காட்சிக்குப் பயணித்து விடும்.

நாகார்ஜூனா, அமலா நிஜ வாழ்விலும் கைப்பிடிக்கும் வகையில் கட்டியம் கூறும் குறும்பான காட்சிகள், தவிர ஒரு சில கிளுகிளுப்பாடல்கள் தான் வேகத்தடை. தவிர, சுபலேகா சுதாகர் வகையறா நண்பர் கூட்டத்தோடு யதார்த்தமாய்ப் பயணிக்கும் கல்லூரிக் காட்சியமைப்புக்கள், கல்லூரி தாதாவாக வந்து நடித்துச் செல்லும் சக்ரவர்த்தி, பவானி என்ற பெரும் வில்லனாக அதே சமயம் வெற்றுச் சவாடல் வசனங்கள் இல்லாத அடக்கமாய் இருந்து தன் "காரியத்தை" முடிக்கும் ரகுவரன் ஆகிய கலைஞர்கள் தேர்விலும் இந்தப் படத்தின் வெற்றி தங்கியிருக்கின்றன.

ஷிவா என்ற தெலுங்குப் படம் அதே ஆண்டில் தமிழில் "உதயம்" என்று மொழிமாற்றப்பட்டுத் தமிழகத்திலும் பேராதரவைச் சந்தித்தது. சைக்கிள் செயினைக் கழற்றிச் சுழற்றி அடிக்கும் ஸ்டைல் பலரைக் கவர்ந்த ஒன்று. தெலுங்கில் 155 நாட்கள் ஓடிய இந்தப் படம் தேவி என்ற தியேட்டரில் 3 காட்சிகள் ஹவுஸ்புல்லாக 62 நாட்கள் ஓடியது இன்றுவரை சாதனையாகக் கொள்ளப்படுகின்றது. (மேலதிக தகவல் உதவி: நாகார்ஜீனா ரசிகர்கள் தளம், விக்கிபீடியா).

ஒரு பரபரப்பான படத்துக்குத் தேவையான முழுமையான உழைப்பை அள்ளிக் கொட்டியிருக்கின்றார் இசைஞானி இளையராஜா. படத்தின் ஆரம்பத்தில் இருந்து படம் முடிந்து இறுதியில் ஓடும் எழுத்தோட்டம் வரை பயணிக்கும் பின்னணி இசையில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே மெல்லிசை ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதைத் தவிர மற்றைய அனைத்துக் காட்சிகளுக்கான இசையுமே அதிரடி தான்.

தெலுங்குப் பதிப்பை “உதயம்" என்ற பெயரில் தமிழாக்கியபோது வசனம் எழுதியவர் அமலாவின் மேனேஜராக இயங்கியவரும் நடிகருமான சுரேஷ் சக்ரவர்த்தி.

இதயத்தை திருடாதே போன்று உதயம் படத்தின் அனைத்துப் பாடல்களும் கவிஞர் வாலியின் கைவண்ணம்.

முன்னதற்கு எதிர்மாறாக ஐந்து பாடல்களுமே ஆர்ப்பாட்டப் பட்டாசு.

“பாட்டனி பாடமுண்டு" பாடல் முன்னாளில் வந்த இளையராஜாவின் “வெண்ணிலா ஓடுது" பாடலை நினைப்பூட்ட, பின்னாளில் தேவாவும் தன் பங்குக்குக் கை வைத்து “கொண்டையில் தாழம்பூ” ஆக்கினார்.



மணிரத்ன மோகம் ஆட்டிப்படைத்ததாலோ என்னமோ மலையாளத்தில் இருந்து இயக்குநர்கள் பாஸில் மற்றும் பிரியதர்ஷனும் நாகார்ஜீனாவுக்குத் தலா இரண்டு படங்களைக் கொடுத்தார்கள்.பதிவை எழுதியவர் கானா பிரபா.

அந்த வகையில் நாகார்ஜூனா & அமலா ஜோடியாக “நிர்ணயம்" படத்தினை பிரியதர்ஷன் இயக்கினார்.

காதல் நாயகனில் இருந்து அதிரடி நாயகனாக மாறிவிட்ட நாகார்ஜீனாவுக்கு இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் தீனி போட்டன.

“சம்பவம்" என்ற பெயரில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டது,

கீதாஞ்சலி, சிவா ஆகிய படங்கள் அளவுக்குத் தமிழில் அதிக தாக்கத்தை எழுப்பாவிட்டாலும் அந்தக் காலத்து ஆல் இந்தியா ரேடியோ நேயர் விருப்பத்தில் “சம்பவம்" படத்தின் 

“மெல்ல மெல்ல மலர்ந்தது காதல்"

https://www.youtube.com/watch?v=NX2Qgp7HJzM&list=RDNX2Qgp7HJzM&start_radio=1

“இதோ ஒரு ப்ரேமை கொண்டு" 

https://www.youtube.com/watch?v=tgy0TLsxaYs

மற்றும் “ஓ பேபியோ” ஆகிய பாடல்கள் ஏக பிரபலம்.

தொடர்ந்து பாஸில் இயக்கிய Killer திரைப்படத்தில் நாகார்ஜீனாவும், நக்மாவும் ஜோடி கட்டினார்கள். தமிழில் ஈஸ்வர் என்ற பெயரில் மொழி மாற்றம் கட்டது.

ப்ரியா ப்ரியத்தின் பேர் நீதானோ

https://www.youtube.com/watch?v=evIKDi3cbh0

பாடலைக் கேட்டால் இந்தப் படம் பலரின் நினைவுக்குள் வரும்.

மேற் சொன்ன படங்கள் அளவுக்குத் தமிழில் மொழி மாற்றி அதிகம் பேசப்படாத படங்கள் இரண்டு இளையராஜா இசை வழங்க நாகார்ஜீனா நடித்தவை.

அவற்றில் ஒன்று இந்தப் படங்களுக்கெல்லாம் முற்பட்ட நாகார்ஜூனா நாயகனாக நடித்த ஆரம்ப காலப் படங்களில் ஒன்றான

சங்கீர்த்தனா, இதனை இயக்கியவர் கீத கிருஷ்ணா. ரம்யா கிருஷ்ணன் நாயகியாக இணைந்த படம். தமிழில் “என் பாடல் உனக்காக” என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து வந்த சுவடே இல்லாமல் போன படம். இரு மொழிகளிலும் தோல்வியைத் தழுவிய படமாக அமைந்து விட்டது.

சுளையாக 11 பாடல்கள். 

கேட்டுப் பாருங்கள் தேனமுது தான்

https://www.youtube.com/watch?v=rIWaVjoAeZg&t=1s






நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் இயக்கத்தில் நாகார்ஜூனா நடிக்கும் வாய்ப்பு எழுந்த போது அங்கும் இசைஞானி இளையராஜாவின் தேவை எழுந்தது. பதிவை எழுதியவர் கானா பிரபா. அவ்வகையில் நாகார்ஜூனா & கெளதமி ஜோடியாக நடித்த படம் “சைதன்யா” இது தமிழில் “மெட்ராஸ் டூ கோவா” என்ற பெயரில் வந்தது. சென்னை வானொலியில் இந்தப் படப் பாடல்களையும் விட்டு வைக்காமல் ஒலிபரப்பினாலும் பெரிய அளவில் போய்ச் சேராமல் அமைந்த இன்னொரு படம்.

தெலுங்கில்

https://www.youtube.com/watch?v=UKbR_B2tFsE&start_radio=1

தமிழில் கேட்க

https://www.youtube.com/watch?v=sd8cKMZ4-TM

எஸ்.பி.பாலசுப்ரமணியமும், லதா மங்கேஷ்கரும் தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் ஜோடி கட்டிப் பாடியிருக்கிறார்கள் என்ற சிறப்பைக் கொடுத்தது Aakhari Poratam . தெல்ல சீரக்கு பாடலை ஓடிப் போய் கேட்டுவிட்டு வாருங்கள்.

https://www.youtube.com/watch?v=FFgc3Gb5kBU

இப்படத்தின் ஏனைய பாடல்கள்

https://www.youtube.com/watch?v=qeo6NGq4X6g&list=RDqeo6NGq4X6g&start_radio=1

இசைஞானி இளையராஜாவின் அறுசுவைப் பாடல்களோடு, தெலுங்கில் மெகா இயக்குநர் கே.ராகவேந்திரராவ் இயக்க, நாகார்ஜூனா, ஶ்ரீதேவி, சுஹாசினி நடித்தபடமது.

படமும் மிகப் பெரிய வெற்றி.

இவ்விதம் தமிழில் மட்டுமல்ல தெலுங்கின் எண்பதுகளின் உச்ச நட்சத்திரங்களின் முக்கிய திருப்புமுனை வெற்றிகளுக்கு இசைஞானி இளையராஜாவின் பங்கு பெரும்பங்களித்திருக்கிறது.

இன்று அமலா புருஷ் நாகார்ஜீனாவின் பிறந்த தினம்.


கானா பிரபா

29.08.2025

Wednesday, July 30, 2025

ஏவிஎம் இல் இசையமைப்பாளர் & இயக்குநராக கங்கை அமரன்

“இசை : இளையராஜா

பாடல்கள் : கங்கை அமரன்

இந்த அமைப்பில் தான் முந்தானை முடிச்சு படம் வெளிவர வேண்டியது”

இப்படியாக Zee தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் கங்கை அமரன் சொல்லி இருந்தார். ஆனல் அந்தப் படத்தில் புலவர் புலமைப்பித்தன் “நான் பிடிக்கும் மாப்பிள்ளை தான்”, கவிஞர் முத்துலிங்கம் “சின்னஞ்சிறு கிளியே”, நா.காமராசன் “விளக்கு வச்ச நேரத்திலே” பாடல்களை ஏலவே எழுதினார்களே என்று நினைத்திக்

கொண்டிருக்கும் போது தான்,

மறுவாரமே Chat with Chithra வில் விட்டதை முடித்தார் கங்கை அமரன், 

“ புலவருக்கு ஒரு பாட்டு கொடுக்கணும் என்று பாக்யராஜ் ஆரம்பிச்சு 

 அப்படியே மற்றவர்களும் எழுதினார்கள்”

என்றார்.  இப்படி இரண்டு வெவ்வேறு நிகழ்ச்சிகளை இணைத்தால் தான் பல கேள்விகளுக்குப் பதில் வரும் 😊

ஏவிஎம்மின் “முந்தானை முடிச்சு” படத்தில் பாக்யராஜ் ஒப்பந்தமாகும் போது கங்கை அமரன் தான் இசையமைப்பாளர் ஆனால் வர்த்த ரீதியான கவனிப்புக்காக இளையராஜாவுக்கு மாறும் தீர்மானத்தை ஏவிஎம் சரவணன் எடுத்த போது பாடல்கள் முழுக்க கங்கை அமரன் என்று தீர்மானித்தார்களாம்.

ஏவிஎம்மில் கங்கை அமரன் இசையமைப்பாளராக முடியாத குறையை பின்னாளில் ஏவிஎம் குமரன் தயாரித்த “நாம் இருவர்” படம் தீர்த்துக் கொண்டது. இந்தப் படத்தில் இடம்பெற்ற திருவிழா திருவிழா 

https://youtu.be/eYcdmN2JN-Q?si=n0SrlD7jYR9TQhdI

என் அபிமான 80s இல் ஒன்று.

அந்தக் காலத்தில் Recording centre இல் ஒலிநாடாவில் பாடல் பதிவு முடிந்த மீதமுள்ள இடத்தில் இந்தப் பாடலின் வாத்திய இசையைப் பதிவார்கள்.

ஏவிஎம் குமரனுக்குப் பிடித்த இயக்குநர் கங்கை அமரன். அவரை வைத்து விஜயகாந்த் நடிப்பில்  “வெள்ளை புறா ஒன்று” படத்தையும் தன் தயாரிப்பில் இயக்க வைத்தார். ஆனால் இரண்டு படமுமே எடுபடவில்லை.

கே.பாக்யராஜ் படங்களில் மிக அரிதாகவே முழுப்பாடல்களையும் ஒருவரே எழுதுவார். அப்படியான வாய்ப்பு கவிஞர் வாலிக்கு அதிகம் வாய்த்திருக்கிறது. ஒருமுறை வாலியே வேடிக்கையாக பொது மேடை ஒன்றில்

“இந்த பாக்யராஜிடம் எவ்வளவோ தடவை சொல்லிட்டேன் அனுபவமில்லாத பாடலாசியர்களுக்குப் பாடல் கொடுக்காதீங்கன்னு ஏன்னா அதைச் செம்மைப்படுத்த என்னிடம் வருவார்” என்று சொல்லி இருப்பார்.

பலரிடம் பாடல் வாங்குவது மட்டுமல்ல ஒருவரிடமே கறாராக சரியான பல்லவி வரும் வரை விட மாட்டார் பாக்யராஜ். அதை முன்பு இளையராஜாவும், சமீபத்தில் கங்கை அமரனும் சொல்லியிருப்பார்கள். தன் ஆரம்ப கால கிழக்கே போகும் ரயில் காலத்திலேயே பாடல் வரிகளில் உள்ளீடு செய்யுமளவுக்கு ஞானஸ்தர் அவர்.

பாக்யராஜின் இந்தப் பண்பைப் பற்றி எழுதும் போதுதான் ஒரு பாட்டு நினைவுக்கு வருகிறது.

“வீட்ல விசேஷங்க” படத்தில் மீதி அனைத்தும் வாலி ஒரு பாடல் தவிர, அந்த ஒரு பாடலை எழுதியவர் புலவர் புலமைப்பித்தன் அதுதான்,

பூங்குயில் ரெண்டு ஒண்ணுல 

ஒண்ணாக் கூடுச்சாம்

காதலைச் சொல்லி 

மெட்டுக்கள் கட்டிப் பாடிச்சாம் 

அடடா காத்துல எங்கும்

அதுதான் கேக்குது இன்னும்

கண்ணே எந்தன் கண்ணே கேளு

❤️

https://youtu.be/xarzK5v03is?si=OEArIBopOvNWL8zD

கானா பிரபா

30.07.2025


Wednesday, July 2, 2025

ஒரு பெண் புறா கன்னடத்தில் SPB பாடிய கதை


"இப்ப தான் ஒரு முழுமையா உணர்கிறேன்"

என்று மனம் விட்டுச் சொன்னார் SPB.

"அண்ணாமலை" படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது பாடல்கள் ரகளையாக ஊரெல்லாம் கலக்க, அவருக்கோ ஒரு மனக்குறை "ஒரு பெண்புறா" பாடலையும் தானே பாடியிக்கலாமே என்று.

அந்த உள்ளக் கிடக்கையை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடமும், இசையமைப்பாளர் தேவாவிடமும் சொல்லிக் கலாய்ப்பாராம் எஸ்பிபி.

"ஏன் நாம மெலடி பாட மாட்டோமா" என்று.

ரஜினி படங்களில் ஜேசுதாஸ் பாடல் என்பது ஒரு உளவியல் ரீதியாக அந்தக் கதாபாத்திரத்தின் நொந்த தன்மையைப் பிரதிபலிக்கும்.

இதே பாங்கிலேயே " நல்லவனுக்கு நல்லவன்" படத்தில் "சிட்டுக்குச் செல்லச் சிட்டு" பாடலும் ஜேசுதாஸ் குரலில் அமைந்திருந்தது.

இந்த மாதிரி எஸ்பிபி ஆசைப்பட்டதன் காரணம் பிறரின் வாய்ப்பைத் தட்டிப்பறிப்பதற்கல்ல, இந்த மாதிரியான நல்ல வாய்ப்புகள் நல் வரம் என்ற அவரின் மனோவுணர்வு தான்.

இதே போலவே சுரேஷ் கிருஷ்ணாவின் குரு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் "ருத்ர வீணா" படத்தில்

ஜேசுதாஸ் பாடிய 

"லலித ப்ரிய கமலம்"

https://www.youtube.com/watch?v=-s3cdlJFhes&list=RD-s3cdlJFhes&start_radio=1

பாடலும் கூடத் தானே பாடவேண்டும் என்று ஆசைப்பட அது "உன்னால் முடியும் தம்பி"யில் நிகழ்ந்ததாக எஸ்பிபி மகன் சரண் குறிப்பிட்டிருக்கிறார்.

அதுவே "இதழில் கதை எழுதும்" ஆனது

"அண்ணாமலை" படம் வெளியாகி 12 ஆண்டுகள் கழித்து சுரேஷ் கிருஷ்ணா கன்னடத்தில் பெரும் நடிகர் விஷ்ணுவர்த்தனை வைத்து "கடம்பா" படம் தயாராகிறது. அதற்கும் இசை தேவா தான்.

அப்போது விஷ்ணுவர்த்தன் ஆசைப்பட்ட "ஒரு பெண் பிறா" பாடலை இப்படத்தில் வைக்கத் தீர்மானிக்கும் போது கூடவே எஸ்பிபியை இருவரும் நினைக்கிறார்கள்.

எஸ்பிபியின் ஆசை காத்திருந்து நிறைவேறுகிறது.

அதுதான்

https://www.youtube.com/watch?v=vc0ma2yHXJA

ஆனது.

பெரும் திருப்தியும் மகிழ்ச்சியுமாக எஸ்பிபி சொன்னாராம்

"இப்ப தான் ஒரு முழுமையா உணர்கிறேன்"

அண்மையில் Touring Talkies தொடரிலும் சுரேஷ்  கிருஷ்ணா இத்தகவலை மீள் நினைந்தார்.

இந்தத் தகவலை SPB பாடகன் சங்கதி நூலிலும் குறிப்பிட்டுள்ளேன்.

கானா பிரபா

02.07.2025


Tuesday, July 1, 2025

நிலவும் மலரும் பாடுது ❤️


சிரித்து சிரித்து உறவு வந்தால்

நிலைத்து வாழுமா..

மனம் துடித்து துடித்து

சேர்ந்த பின்னே

தோல்வி காணுமா..

காதலர் தாம் சந்திக்கும் போது எழும் ஐயப்பாடுகளைப் பாடலில் கொண்டு வரும் உத்தியை அறுபது ஆண்டுகளுக்கு முன்பே கவியரசர் கண்ணதாசன் கொண்டு வந்திருப்பதை மெய்ப்பிக்க இன்னொரு பாட்டு.

வழக்கம் போல காதலியை ஆற்றுப்படுத்தி ஆறுதல் அளிக்கிறான் இந்தக் காதலன். 

இப்படியாகப் பாடலின் கவி நயத்தை வியக்க ஒரு தடவை, இன்னொரு தடவை இசைக்காக என்று கேட்டு வைக்கும் பாட்டு இது.

அள்ளி இறைத்தாலும் ஆயிரம் கொள்கலன் போதாத ஏரியின் மீதேறிப் படகில் மிதக்கும் போது ஒரு சொட்டு நீர்த்திவாலை அந்த் தண்ணீர்த் தொட்டியின் பெறுமானத்தைக் காட்டும். அது போலவே பாடல் தொடங்கும் போது எழும் அந்தச் சிறு ஒலி கூடக் காணாத காட்சியைக் கற்பனையிலே வரிக்க முகவரி எழுதும்.

கதகதப்பான குளிர் வாசம் அந்த ஆண் குரலோன் ராஜாவிடம். 

இசையரசி சுசீலாம்மாவைப் பற்றித் தனியாகப் பேசவும் வேண்டுமோ? எந்த ஆண் கூட்டில் சேர்ந்தாலும் இசைந்து போகும் அரசி அல்லவா?

பாடலூடே ஊடுருவும் அந்தப் புல்லாங்குழல் ஏரியைச் சுழித்து ஓடும் படகின் ஊடாடல் போல நிகழ்த்தும் ஆலாபனை.

அந்தப் பாடலின் ஆரம்பத்தில் விழும் ஒலிக்கீற்றின் ஜாலதரங்கம் அப்படியே காட்சியாகப் படகில் பயணிக்கும் காதலர்களின் சூழலுக்குப் பொருதிப் போகும். எப்படி இவர் காட்சியை உய்த்துணர்ந்து இசை கொடுத்தாரோ என்று எண்ண வைக்கும் மிக நுணுக்கமான சங்கதி அது.

“மனதினிலே பிரிவுமில்லை மாற்றுவாரில்லை

நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்”

எவ்வளவு அழகாகச் சுற்றி வந்து மூலஸ்தானத்தில் பாடலை மையம் கொள்ள வைப்பார் இந்தத் தேர்ந்த இசையமைப்பாளர் சக பாடகர் ஏ.எம்.ராஜா.

தெலுங்கு தேசம் இரண்டு பாடக இசையமைப்பாளர்களைச் சம காலத்தில் பிரசவித்துள்ளது.

ஒருவர் கண்டசாலா இன்னொருவர் ஏ.எம்.ராஜா.

இனிய பிறந்த நாள் நினைவுகளோடு “எம்.ராஜாவுக்கு”

நிலை மயங்கி மயங்கி காதலினால்

ஜாடை பேசுது....

நிலவும் மலரும் பாடுது

என் நினைவில் தென்றல் வீசுது ❤️

https://www.youtube.com/watch?v=IiaquGWSJHI&list=RDIiaquGWSJHI&start_radio=1

கானா பிரபா

01.07.2025