Pages

Wednesday, October 8, 2025

கவிஞர் பிறைசூடன் வரிகளில் இசைஞானி இளையராஜாவின் ராமராஜன் திரையிசை முத்துகள்

“சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி

சொல்லிச் சொல்லிப் பாடும் இந்தக் கிளி"

https://www.youtube.com/watch?v=Z47FM1pdHtw&list=RDZ47FM1pdHtw&start_radio=1

அந்தக் காலத்தில் சென்னை வானொலி நிலையம் எத்தனை தடவை ஒலிபரப்பியிருக்குமோ அத்தனை தடவை யாழ்ப்பாணத்தில் இருந்து கேட்டிருப்பேன். அவ்வளவுக்கு நேசித்த பாடலது.

(கி)ராமராஜனின் “என்னப் பெத்த ராசா” படத்தின் முத்திரைப் பாடலே இதுதான்.

சந்திரசேகரன் என்ற பிறப்புப் பெயர் கொண்டவர், ஈசன் மீது அளவற்ற நேசம் கொண்டு “பிறைசூடன்” ஆனார்.

கவிஞர் பிறைசூடன் தன் ஈசனை மறவாமல் இந்தப் பாடலிலும் கொண்டு வருவார் இப்படி

“ஈசன் அருள் உனக்கே இருந்தது..

ஏந்திழையின் மனமும் இணைந்தது..

நம்மை அன்பு தானே இணைத்தது..”

காதல் பாடலிலும் தெய்வீகத்தையும் கலந்து கொடுப்பது கவிஞர் பிறைசூடன் பாணி.

“மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா” பாடலை எழுத உந்தியது மதுரை மீனாட்சியம்மன் என்பார்.

“என்ன பெத்த ராசா” படத்தின் தயாரிப்பாளர் ராஜ்கிரண் பின்னாளில் நாயகனாக்கப்பட்ட “என் ராசாவின் மனசிலே” படத்தில் ஏனோ பிறைசூடனை எழுத வைக்க விரும்பவில்லையாம். கவிஞர் வாலி போன்றோர் தேவைப்பட்ட போது, இசைஞானி இளையராஜா இசைந்து கொடுக்காததால் தான்

“சோலைப் பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கொடியே” என்ற காலத்தால் அழியாப் பாடல் பிறைசூடன் வழி நமக்குக் கிடைத்தது.

ராமராஜன் தொடர்ச்சியாக நடித்த ஒவ்வொரு படங்களிலும் பிறைசூடன் இருந்தார் இப்படி.

“ஊருக்குள்ளே வந்த ஒரு சோளக்கொல்லை பொம்மை” என்று “எங்க ஊரு மாப்பிள்ளை” படத்துக்காகவும், 

“பொங்கி வரும் காவேரி” படத்தில் இரட்டைப் பாடல்களில் ஒன்றாக “இந்த ராசாவை நம்பி வந்த யாரும்” மற்றும் பி.சுசீலாவோடு இசைஞானி பாடும் 

“மன்னவன் பாடும் தமிழ் பிறந்த தென்பாண்டி முத்தே முத்தே”

https://www.youtube.com/watch?v=-mCAbMlbHJE&list=RD-mCAbMlbHJE&start_radio=1

“ஆட்டமா தேரோட்டமா” காலத்துக்கு முன்பே “எங்க ஊரு காவக்காரன்” படத்தில் ஒரு மாறுவேஷத் துள்ளிசைப் பாடல்.

ஆனால் அதில் கையாண்ட வரிகளைப் பாருங்கள்

“சிறுவாணி தண்ணி குடிச்சு

நான் பவானியில் குளிச்சி வளந்தவ…”

https://www.youtube.com/watch?v=NTzpXGvVGaE&list=RDNTzpXGvVGaE&start_radio=1

மாமூல் வரிகளை விலத்தி தமிழகத்து நீரோட்டத்தில் வித்தியாசமான எல்லையில் களம் புகுந்திருப்பார். 

அப்படியே போய்

“தண்ணியிலே பேதமில்லை

அதுக்கு நிறம் ஏதுமில்லை

சேருகின்ற நிலத்தைப் போல

மாறும் அந்த நிறமும் இங்கே

எவ்வளவு தண்ணியத்தான்

அள்ளி அள்ளி குடிச்சு பார்த்தும்

அந்த குணம் வரவுமில்லை

ஆண்டவனும் கொடுக்கவில்லை”

என்று சமத்துவம் பகிர்வார் கவிஞர்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சங்கிலி முருகன் கூட வேறு பாடலாசிரியர் தான் தேடினாராம்.

பிறைசூடனுக்குக் கிடைத்த சூழ்நிலைப் பாடல்களில் உன்னதமானது

“ஒரு கூட்டின் கிளிகள் தான் எங்கெங்கோ”

https://www.youtube.com/watch?v=MZ2R-PVC3RI&list=RDMZ2R-PVC3RI&start_radio=1

ராமராஜனின் “அன்புக் கட்டளை” படத்துக்காக உருவானது அந்தப் பாட்டு. இசைஞானி இளையராஜாவின் தத்துவ முத்துகளில் தவிர்க்க முடியா ஒன்றாகிவிட்டது.

“பாரதத்தின் பிள்ளை கர்ணன்

தாயைக் கண்ட போதிலும் 

பேரை சொல்ல தந்தை தன்னை

அறியவில்லை அன்றுதான்” 


என்று இதிகாசத்தைத் துணைக்கழைத்து வந்து 

“அன்றும் என்ன இன்றும் என்ன

பாரதம் என்றும் உண்டு

ஏற்றால் என்ன மறுத்தால் என்ன

இன்பம் துன்பம் உண்டு

நீயேதான் வாடாதே..வாடாதே....”

என்று ஆற்றுப்படுத்துவார்

மக்கள் நாயகன் ராமராஜன் பிறந்த தினமின்று.

இன்று தன் பாடல்களால் வாழும் கவிஞர் பிறைசூடன் நம்மை விட்டு மறைந்து நான்காண்டுகள்.

எங்கே சென்றாலும் அன்பே மாறாது

நெஞ்சம் கொண்டாடும் பாசம் மாறாது....

ஒரு கூட்டின் கிளிகள் தான் எங்கெங்கோ

உறவாடும் நெஞ்சங்கள் எங்கெங்கோ


கானா பிரபா

08.10.2025

0 comments: