Pages

Thursday, May 5, 2022

அரிதாரம் பூசிய (சங்கர்) கணேஷ்


“நடிகனின் காதலி நாடகம் ஏனடி

ஆடலில் பாடலில் வல்லவன் நானடி....”

என்று பாடலுக்கு மட்டுமா இசைமைத்தார்? ஆடினார், பாடினார், படம் கூட இயக்கினார் (சங்கர்) கணேஷ் அவர்கள்.

“ஏ உன்னத்தான்

எங்க பாக்குறே..

உன்னத்தான்...அட...உன்னத்தான்

செப்புக்குடம் தூக்கிப் போற

செல்லம்மா.....நான்

விக்கிப் போறேன் தாகத்துலே

நில்லேம்மா...”

https://www.youtube.com/watch?v=21D3MH26j78

இலங்கை வானொலி பூத்துக் குலுங்கிய காலத்தில் மறக்கவெண்ணாப் பாடல்களில் ஒன்றாக இதையும் கொண்டாடுவார்கள் அந்தக் காலத்து 60s, 70s kids.

ஒரு காலத்தில் நாயகனே பாடி நடித்த காலம் போய், பின்னர் எல்லாமும் அவரே ஆன டி.ராஜேந்தர் காலம் வரை கண்டு இன்று ஜி.வி.பிரகாஷ்குமார் காலத்தில் மிதந்து கொண்டிருக்கிறோம்.

ஏன் இளையராஜாவுக்குக் கூட இந்த கதாநாயக ஆசை விடவில்லை என்று முந்திய பதிவில் பகிர்ந்திருக்கிறேன். 

https://www.facebook.com/1393380529/posts/10219189976645595/?d=n

“புதிய வார்ப்புகள்” கங்கை அமரனின் குரலை மட்டும் வாங்கிக் கொண்டு பாக்யராஜுக்கு ஒட்டி வைத்தது.

ஆனால் இந்த விஷயத்தில் சமகாலத்தில் இயங்கிய (சங்கர்) கணேஷ் அவர்களுக்கும் இந்த அரிதார ஆசை விட்டு வைக்கவில்லை.

தன்னுடைய இசைக் கூட்டாளி சங்கரோடு இணைந்து இயக்குநர் ஆசையையும் “ஜகதலப் பிரதாபன்” 

https://www.facebook.com/1393380529/posts/10228182685497696/?d=n

வழியாகத் தீர்த்துக் கொண்டவர் இளையராஜா இசையில் “பங்குனிக்குப்புறம் சித்திரையே”  https://www.youtube.com/watch?v=YYCFRsCPqIk

பாடலையும் பாடி வைத்து விட்டார் இந்த இசையமைப்பாளர் ஆகிய கணேஷ் அவர்கள்.

சரி இனி அவரின் அரிதார முகத்தைப் பார்ப்போம்.

இளையராஜா ரசிகர்களுக்குத் தீனி போட்ட சாதனை, எச்சில் இரவுகள், ஆளப்பிறந்தவன், ஆயிரம் நிலவே வா போன்ற படங்களோடு எழுபதுகளில் “பட்டாம்பூச்சி” படத்தையும் இயக்கிய பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் அவர்களே இந்த (சங்கர்) கணேஷ் மனதில் நாயக ஆசையை உண்டு பண்ணி “ஒத்தையடிப் பாதையிலே” படத்தையும் இயக்கினார். அந்தப் படத்தில் கணேஷ் நடித்ததே மறந்து போன யுகத்தில் இன்றும் நினைவில் தங்கியிருப்பது அந்த “செப்புக்குடம் தூக்கிப் போற செல்லம்மா” பாடல் தான். அதே படத்தில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய அந்தப் பாடல் மட்டுமல்ல மலேசியா வாசுதேவன் பாடிய “வெள்ளரிக்கா காட்டுக்குள்ளே” பாடலும் சேர்ந்து சங்கர் கணேஷ் இசையில் நாயகன் (சங்கர்) கணேஷ் இற்காகக் குரல் கொடுத்தார்கள்.

அடுத்தது தான் (சங்கர்) கணேஷ் இற்கு இன்னொரு மகுடமாக அமைந்தது. ஒரே படத்திலேயே T.M.செளந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன் ஆகிய மூவருமே (சங்கர்) கணேஷ் அவர்களுக்காகப் பாடிய படமும் வாய்த்தது, அது 

சங்கர் கணேஷ் கூட்டணியின் புகழ் பூத்த பாடலான “நான் உன்னெ நெனச்சேன்” என்ற தலைப்பிலேயே அமைந்தும் விட்டது.

“உன்னைத் தொட்டா தோஷமில்லை” மற்றும் சில்க் ஸ்மிதாவோடும் ஆடிப் பாடும் யோகத்தோடு அமைந்த “நீ பார்த்த பார்வை புரியாத நேரம்” ஆகிய அற்புதமான பாடல்கள் எஸ்பிபி குரலில் இந்தப் படத்துக்காக சங்கர் கணேஷ் இரட்டையர் இசையில் நாயகன் (சங்கர்) கணேஷிற்காக வாய்த்தது.

அத்தோடு அரசியலிலும் பகைக்காமல் எம்.ஜி.ஆரையும், கருணாநிதியையும் போற்றித் துதித்து செளந்தரராஜன் பாடிய “அந்த மூன்று பேருக்கும்” பாடலோடு “அடி மருதாணிப் பூவே” பாடலுமாக இந்தப் படத்தில் அமைந்தது.

“நான் உன்னெ நெனச்சேன்” பாடல்களைக் கேட்க

https://gaana.com/album/naan-unna-nenachen

“நான் உன்னெ நெனச்சேன்” படத்துக்குப் பின்னால் சில சுவாரஸ்யங்களும் உண்டு.

ஒருவாறு முட்டி மோதி ஜி.கே.வெங்கடேஷ் அறிமுகத்தோடு “வாராய் என் தோழி வாராயோ” பாடலோடு தான் விஸ்வநாதன் & ராமமூர்த்தி இரட்டையர்களிடம் வாய்ப்பைப் பெற்றவர் இந்த (சங்கர்) கணேஷ்.

பாலும் பழமும், பாகப்பிரிவினை, பாதகாணிக்கை, படகோட்டி, குடியிருந்த கோயில் என்று மாபெரும் வெற்றிப்படங்களைத் தயாரித்த புகழ்பூத்த தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி.

ஜி.என்.வேலுமணியின் மகன் ஜி.வி.சரவணன் அவர்களது நட்பு (சங்கர்) கணேஷுக்குக் கிடைக்கவே அந்த நட்பில், சரவணனின் சகோதரியிடம் காதலாகி “உன்னை நான் பார்த்தது வெண்ணிலா மேடையில்” ரேஞ்சில் காதல் கவிபாடி, அந்த நேரம் அந்தப் பெரிய தயாரிப்பாளர் மகளை இந்தப் பையனுக்குக் கொடுப்பதா என்று ரசபாசமாகி ஒருவாறு ஜி.என்.வேலுமணி குடும்பத்து மாப்பிள்ளை ஆனார் (சங்கர்) கணேஷ்.




“நான் உன்னெ நெனச்சேன்” படத்துக்கு இப்போது மீண்டும் வருவோம். அந்தப் படத்தை ஶ்ரீ வேலுமணி பிலிம்ஸ் என்று குடும்பத் தயாரிப்பாக்கி, படத்தின் எழுத்தோட்டத்தில் ஜி.என்.வேலுமணி தயாரித்த படங்களின் பாடல்கள், படத் தயாரிப்பில் எடுத்த புகைப்படங்களையும் காட்சிப்படுத்தி, அந்தப் படத்தை இயக்கியது வேறு யாருமல்ல, (சங்கர்) கணேஷின் நண்பனும், மனைவி வழி மைத்துனனும் ஆன ஜி.வி.சரவணன் தான்.

அந்தப் படத்தில் சிறுவேடமும் நடித்தார் சரவணன், 

“இளவயதிலேயே நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்” என்ற அஞ்சலிக் குறிப்போடு தான் “நான் உன்னெ நெனச்சேன்” படமும் தொடங்கும்.

ஆம், படம் வெளியான போது (சங்கர்) கணேஷுக்கு திருமண வாழ்வின் சொந்தமாக இருந்த சரவணன் மறைந்து விட்டார்.

கானா பிரபா


0 comments: