Pages

Monday, May 16, 2022

விஜய் மில்டன் தந்தை மகனுக்கு ஆற்றிய உதவி



30 வருடங்களாகத் தேடி அலைந்த பாட்டு, 

30 வருடங்களுக்குப் பின் கேட்கிறேன் இப்படி ஒரு தலைப்போடு கடந்த மார்ச் 2021 இல் ஒரு பாடலைப் பகிர்ந்திருந்தேன்.

சிறு வயசில் ஒரு கலியாண வீட்டில் கேட்ட இந்தப் பாட்டின் ஆரம்ப வரிகள், மற்றும் மெட்டு மட்டுமே நினைவில் இருந்தது.

ஆனால் இந்தப் பாடல் இடம் பெற்ற படத்தின் பெயர் முதற் கொண்டு, யார் இசை என்றே தெரியாத சூழலில் தேடிக் கொண்டே இருந்தேன்.

வேடிக்கை என்னவென்றால் இந்தப் பாடலுக்கு இசையமைத்த வி.எஸ்.நரசிம்மனைக் கூட இடைப்பட்ட காலத்தில் பேட்டியும் எடுத்திருந்தேன்.

இணையத்தில் “தங்க நிலவு” என்று தேடினால் ரிக்‌ஷா மாமாவின் தங்க நிலவுக்குள் கொண்டு போய்ச் சேர்த்தது. இத்தனை ஆண்டுகளாகத் தேடித் தேடி ஈற்றில் சில வருடங்களுக்கு முன் நட்பாகிய கொழும்பில் இருக்கும் நண்பர் சக இசைக் களஞ்சிய நிர்வாகி ஶ்ரீநிவாசன் அவர்களின் காதில் ஒப்புவித்தேன்.  அவருக்கு உடனே ஞாபகத்துக்கு வரவில்லை. நேற்று மீண்டும் நினைப்பூட்டினேன். ஏதோ நினைவில் மெட்டைப் பாடிக் காட்டினார். 

அதே தான் என்று குதித்தேன் 🙂

உடனே சுடச் சுட அனுப்பி வைத்தார் தன் பெட்டகத்தில் தேடி.

பாடலை வி.எஸ்.நரசிம்மனின் ஆஸ்தானப் பாடகி பி.சுசீலாம்மாவும், எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களும் பாடுகிறார்கள். படத்தை இயக்கிய பூவரசு தான் பாடல் வரிகள். 

என் வாழ்நாள் தவம் ஒன்று பலித்தது.😍😍😍

இப்படியாக எழுதிப் பகிர்ந்திருந்தேன்.


கடந்த சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்  பேட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு இன்ப அதிர்ச்சி. மேற் குறிப்பிட்ட “சித்திரம் பேசுதடி” படத்தை இயக்கியவர் சாட்சாத் அவரின் தந்தையே தான். அந்தப் “பூவரசு" என்ற புனைபெயரில் ஒளிந்திருக்கும் விஜய்ராஜ்.

விஜய் மில்டனின் தந்தை நாடகங்களை எழுதி இயக்கியவர் என்றும் அவரின் “காக்கை குயிலானது” நாடகம் தான் “சித்திரம் பேசுதடி” படமாக எடுக்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டதாகவும் சொன்னார்.

இதற்கு முன்னர் விஜய் மில்டனின் தந்தை இயக்கிய “இதயம் தேடும் உதயம்” என்ற படம் அண்மையில் மறைந்த அன்புக்குரிய சக்ரவர்த்தி நாயகனாக நடித்து வெளிவராமலேயே போய் விட்டது. அந்தப் படத்தின் இசை சங்கர் கணேஷ் இரட்டையர்கள்.

“இதயம் தேடும் உதயம்” படத்திலும் அற்புதமான பாடல்கள் உண்டு

https://mio.to/album/Shankar-Ganesh/Idhayam+Thedum+Udhayam+%281984%29

அது சரி விஜய் மில்டனின் தந்தை தன் மகனுக்கு ஆற்றிய உதவிதான் என்ன?

விஜய் மில்டனுக்கோ திரைப்படக் கல்லூரியில் படிக்க ஆசை, அதுவும் இயக்குநராகும் துறை சார்ந்த படிப்பு வேண்டும். ஆனால் அந்த நேரம் டிகிரி முடித்தால் தான் அந்தத் துறையில் படிக்க வேண்டும். அப்போது விஜய் மில்டனோ பட்டப்படிப்பை முடித்திருக்கவில்லை.

அப்போது விஜய் மில்டனின் அப்பா சொன்னாராம்,

“நான் இரண்டு படங்களை இயக்கிய போதும் மீதி எல்லாத் துறையையும் இலகுவாகக் கவனிக்க முடிந்தது ஆனால் இந்த ஒளிப்பதிவாளர் வேலை மட்டும் பிடிபடவில்லை, நீ அதையே படித்து அதன் வழியா பின்னாடி இயக்குநராக வர வாய்ப்பிருக்கும்”

என்று அறிவுரை கொடுத்தாராம். அப்பேர்ப்பட்ட அறிவுரை தான் இன்று வெற்றிகரமான விஜய் மில்டன் என்ற ஒளிப்பதிவாளரைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. அது மட்டுமா தன் தந்தையின் கனவும், தன் கனவுமான இயக்கத்தை வேறு செய்து காட்டியும் விட்டார் விஜய் மில்டன். எப்பேர்ப்பட்டதொரு உன்னதமானதொரு வழிகாட்டல் அது பாருங்கள்.

30 ஆண்டுகளுக்குப் பின்னர் நான் கேட்ட அந்தப் பாடல், இப்போது அடுத்த ஆண்டிலேயே இன்னொரு சுவையான வரலாற்றையும் கொடுத்து விட்டது. 

ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனின் தந்தை பூவரசு என்ற பெயரில் எழுதி, நரசிம்மன் இசையில் சுசீலாம்மாவுடன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய, 30 வருடங்களாகத் தேடிய பாட்டு இதுதான்,

“தங்க நிலவு தரையில் இறங்கி

 நடந்து போகுது

அதைத் தங்கச் சொல்லி 

கெஞ்சிப் போகுது”

https://www.youtube.com/watch?v=j8Y-uGa6qWQ

கானா பிரபா


0 comments: