Pages

Friday, April 30, 2021

ஹரிணி மேகம் போலே வானில் வந்தவரே


“நெஞ்சினிலே நெஞ்சினிலே” (உயிரே) பாட்டின் ஹிந்தி வடிவத்தை முதலில் உங்களை வைத்துத் தானே பாட வச்சார் ரஹ்மான்?” – நான்

“அட அது எப்பிடி உங்களுக்குத் தெரியும்” என்று ஆச்சரியத்தோடு கேட்டார் பாடகி ஹரிணி. இது நடந்தது 1999 இல் 

ஆஸ்திரேலியாவில் இன்னிசை மழை பொழிய வந்த ஹரிணியை வானொலிப் பேட்டி வழியே ஒரு நேயராக இந்தக் கேள்வியை அப்போது கேட்டேன். அந்த வேளை மெல்பர்னில் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிந்தேன். ஹரிணி குழுவினர் மெல்பர்னுக்கு வந்த போது எழுத்தாளர் முருகபூபதி அவர்களின் வீட்டில் தங்கியிருந்தார்.

“தான் பாடும் எந்தப் பாட்டையும் மனப்பாடம் செய்து பாட்டுப் புத்தகம் பார்க்காமல் படிக்குது இந்தச் சிறுமி” என்று ஹரிணியைப் பார்த்து அப்போது வியந்தார் முருகபூபதி அவர்கள்.

பாடகி ஹரிணியின் துணையாக வந்த அவரின் தந்தையிடம் ஒரு அபூர்வமான திறமை இருந்ததையும் கண்டு கொண்டோம். அது என்னவெனில் முழுப்பாடலையும் சீழ்க்கை ஒலியாகக் (விசில்) கொடுப்பதில் வல்லவர். இந்தத் திறமையை எல்லாம் நேரே கண்டோம்.

இன்னொரு சுவாரஸ்யமான விடயம் ஹரிணி வாழ்க்கையில் மிக முக்கியமானது. சக பாடகராக அதே இசை நிகழ்வுக்குப் பாட வந்த திப்பு அவர்களுக்கும் ஹரிணிக்கும் காதல் அரும்பி  

“மெல்பர்ன் மலர் போல் மெல்லிய மகளா” என்று திப்பு மனசுக்குள் பாட வைத்ததும் இதே காலத்தில் தான்.

அப்படியாக ஹரிணி குறித்த பின்னணியில் ஒரு நனவிடை தோய்தல். இசையமைப்பாளர் ரஹ்மான் கையால் பாட்டுப் போட்டிக்குப் பரிசை வாங்கியவர் கூடவே படப் பாடல் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டார்.

குழந்தைப் பாடகியாக ரஹ்மான் அடையாளப்படுத்திய “நிலாக் காய்கிறது” (இந்திரா) தான் ஹரிணியின் முத்திரை என்பதால் “டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா” பாடலில் ஏனோ ஹரிஹரனோடு ஒத்திசைத்த குரலை ஏற்க முடியவில்லை எனக்கு. ஒரு பிஞ்சுக் குரல் தான் அதில் வெளிக்காட்டுமாற்போலொரு உணர்வு. ஆனால் ஹரிணிக்காகவே உருவான, ஹரிணியைத் தவிர்த்து வேறாரையும் சிந்திக்காத ஒரு தொகைப் பாடல்கள் பின்னாளில் தோற்றம் பெற்றன.

அவற்றில் 


“என்ன தவம் செய்தனை யசோதா


“ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ 

யாவுமிசை ஆகுமடா கண்ணா.....”


https://www.youtube.com/watch?v=rogSE4_XtQY


உச்சம் என்பேன். அப்படியே இயக்குநர் கரு பழனியப்பன், இசையமைப்பாளர் வித்யாசாகர், பாடலாசிரியர் கபிலன் ஆகியோர்

“ஆலங்குயிலோடு” தொடர்ந்து “மெதுவா மெதுவா” https://www.youtube.com/watch?v=UfhBP3p3Iuo என்றொரு இன்னிசையையும் கார்த்திக் இணைக் குரலோடு ஹரிணிக்குக் கொடுத்ததும் சிறப்பு.

ஆனால் வித்யாசாகர் ஹரிணிக்குக் கொடுத்த ஜோடிப் பாடல்களில் உச்சமாக அமைந்தது, அறிவுமதி அண்ணன் வரிகளில் மதுபாலகிருஷ்ணனோடு மெல்லிசைத்த


விழியும் விழியும் நெருங்கும் பொழுது 

வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது 

வசதியாக வசதியாக வளைந்து கொடு


https://www.youtube.com/watch?v=HceBo7VaDrg



காதலினால் காதல் தொட்டு விடு

ஆதலினால் நாணம் விட்டு விடு.....

சதுரங்கம் படம் வெளிவர ஒரு யுகம் தாண்டினாலும், இந்தப் படப் பாடல்களில் குறிப்பாக இந்தப் பாடலில் பித்துப் பிடித்தாற் போலக் கிடந்தது ஒரு காலம், இப்போது கேட்டாலும் அதே முற்காலத்து உணர்வில் உறைந்து விடுவேன்.


“காதல் என்ற ஒற்றை நூல்தான்

கனவுகள் கொடுக்கின்றது

அது காலத்தை கட்டுகின்றது

என் மனம் என்னும் கோப்பையில் இன்று

உன் உயிர் நிறைகின்றது”


காதல் வயப்பட்டவர் மன நிலையை நாடி பிடித்து மெட்டுப் போட்டால் எப்படி இருக்கும் அப்படியொரு பாட்டு இது. உயிர் கொண்டு திளைத்தல் என்ற சொலவாடைக்குப் பொருத்தம் தேடினால் இப்படியான பாடல் தான் கிட்டும். கேட்கும் போதெல்லாம் முறுவல் எங்கொருந்தோ வந்து ஒற்றைக் காலை நீட்டிப் பூவில் பதிக்கும் வண்டாய் ஒட்டிக் கொள்ளும்.


“அவள்” என்ற ஏகத் தொனியில் அழைக்கும் உரிமையை எடுக்கும் வரை “அவ” என்ற மரியாதை கலந்த பயமும், காதலும் ஒட்டியிருக்கும். அவள் ஆக அது மாறும் போது இவள் எனக்கானவள் என்ற ஏக உரிமையை அப்படியே எடுத்துக் கொள்கிறான். அந்தக் காதலில் பெருமிதமும் கர்வமும் இருக்கும்.

அது போலவே அவனாக வரட்டும் என்றதொரு தயக்கமும், ஏக்கமும் ஒட்டியிருக்கும் மனநிலையை அவளின் கண்கள் காட்டிக் கொடுத்து விடும்.


இங்கேயும் அதுதான் நடக்கிறது.


ஒரு பஸ் பயணத்தில் பார்வைப் பரிமாறல்கள், பரிமாணமாகிக் காதலாய் முளைக்கும் தருணம், அந்தக் காதலுக்கு இடையே ஒரு வில்லன், அதுவே ஒரு தவறான கற்பிதத்தைக் காதலன் மனதில் எழுப்பிக் குழம்பும் சூழல், இதைச் சொல்லிப் புரிய வைக்க முடியாத மனோ நிலையில் காதலி. குழப்பங்கள் அந்த பஸ்சிலேயே முடிவு கட்டப்பட்டு ஒன்று சேர்கிறார்கள். இப்படியானதொரு அழகான சிறுகதை பாடலில் பொதிந்திருக்கிறது.

ஒரு பஸ் தன் தரிப்பிடத்தில் வந்து நிற்கும் போது முன்னே உதைத்துப் பின் பின்னே நகர்ந்து ஆசுவாசப்படுத்தும் ஒரு சிறு கணத்தில் மீண்டும் அவர்களுக்கான பார்வைப் பரிமாறல்களுக்கு வசதியாகி விடுகின்றது.


அது போலவே நிறைந்த பஸ்ஸில் ஏறிய குழப்பங்கள் தீர்ந்து விடுகின்றன வெறுமையான பஸ் போல. இந்த உருவகங்களை அழகாகக் காட்சிப்படுத்துகின்றது இப்பாட்டு.

உன்னி கிருஷ்ணன், ஹரிணி ஜோடியே ஏதோ ஆத்மார்த்தமான காதலர்களின் பரிபாஷை போலவே ஒத்திசைக்கின்றது. அந்தக் குரல்கள் வரிகளைச் சுரம் பிரித்துப் பாடும் போது ஒரு அழகான சாஸ்திரிய சங்கீதத்தின் நிரவலைப் பூசி மெழுகுமாற் போல இருக்கும். அப்படியொரு வெட்கப் புன்னகையோடே பாடியிருப்பாரோ ஹரிணி....


மீசை மழிக்காத பணக்காரக் களை ஒட்டிய வாலிபன் பிரசாந்த், அழகிய லைலா, உன்னி கிருஷ்ணன், ஹரிணி பாடல்கள் அந்த அழகிய காலகட்டத்தில் உறைந்து விடாதா உலகம் என்று எண்ண வைக்கும்.


பரத்வாஜ் - சரண் - வைரமுத்து கூட்டணியின் வெற்றிக்காலத்தை இது மெய்ப்பிக்கும், உயிர்ப்பிக்கும்.

வாத்திய இசைக் கோப்பில் பரத்வாஜ் எப்போதுமே தன்னை அடையாளப்படுத்தி நிற்பவர். இங்கே வாத்தியங்களை ஓட விடுகிறார் அவை உள்ளுணர்வின் ஓசையாகக் குதூகலித்தும், ஆர்ப்பரித்தும் இவர்களின் காதலை மொழி பெயர்க்கின்றது. இரண்டாவது சரணத்தில் மிதக்கும் அந்த வயலின் இழுவையின் நளினத்தோடு கூடிய இசையைத் திரும்பத் திரும்பக் கேட்பேன் நான்.


வார்த்தை என்னைக்

கைவிடும் போது

மௌனம் பேசுகிறேன்

என் கண்ணீர் வீசுகிறேன்

எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும்

உனக்கேன் புரியவில்லை......


https://www.youtube.com/watch?v=12-eNGaBqqM



சில பாடகர்கள் ஆண், பெண் நகல் போல் தென்படுவார்கள், அது போலவே உன்னி கிருஷ்ணனும், ஹரிணியும். அதனால் தான்

“மனம் விரும்புதே உன்னை” 

https://www.youtube.com/watch?v=s518u0X6gNg 

(நேருக்கு நேர்) இரு குரல்களின் தனிப்பாடல்களையும் சரி சமமாக ரசிக்க வைத்தது.


“அடிக்கிற கை அணைக்குமா” https://www.youtube.com/watch?v=E31hJ1NTDi8

ஹரிணி பாடிய வித்தியாசமான பாட்டுச் சூழல் என்று அப்போதெல்லாம் விரும்பிக் கேட்பேன் இதை.



கொஞ்சும் மஞ்சள் பூக்கள் (உல்லாசம்) கார்த்திக் ராஜாவின் உல்லாசத்தின் உச்சமான பாடல்களில் ஒன்றாகப் பூத்துக் குலுங்கியது.

சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்

தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்

நிலாவும் மெல்ல கண் மூடும் ஹோ


https://www.youtube.com/watch?v=bIcvw_BTyrA 



தொண்ணூறுகளில் உன்னிகிருஷ்ணன் போலே, ஹரிணிக்குக் கிடைத்தவை முத்து முத்தான வாய்ப்புக்கள் பல்வேறு இசையமைப்பாளர்கள் என்று பரிணமித்தார்கள்.



“இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக” (மின்னலே) ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், தன் அறிமுகப் படத்தில் மட்டும் போதாதென்று மீண்டும் உள்ளம் கேட்குமே யில் அதே ஜோடியை பாட வைத்து அழகு பார்த்த “மழை மழை”, “பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்” என்று எஸ்.ஏ.ராஜ்குமாருக்காக ஆனந்தத்திலும், “திரும்பத் திரும்பப் பார்த்துப் பார்த்து” (பார்வை ஒன்றே போதுமே) இசையமைப்பாளர் பரணிக்கும், “சுடும் நிலவு” (தம்பி) வித்யாசாகர் இசை மழையிலும், “ஏப்ரல் மாதத்தில் (வாலி) தேனிசைத் தென்றல் தேவாவுக்காகவும், தங்களை அறிமுகப்படுத்திய ரஹ்மானிடமே வந்து சேர்ந்த காதல் வைரஸ் ஆக “சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனசு” என்று இணைந்து பாடியதுமாக இந்த ஜோடிக்குரல்களை இந்த நூற்றாண்டிலும் மாறக்காமல் ஞாபகம் வைத்து இணை சேர்த்துப் பாட வைத்தார் டி.இமான் தேசிங்கு ராஜாவில்

“நிலா வட்டம் நெத்தியிலே”


https://www.youtube.com/watch?v=kSrCbRN9eZg


என்ற இனிய பாடலில்.


ஜோதிகாவுக்கு அச்சொட்டாகப் பொருந்துமோ என்று “மேகம் கருக்குது” பாடலில் எல்லாம் அனுமானிக்க வைத்தவர் ஹரிணி. அவரின் தனிப்பாடலே ஒரு தொகை தேறும்.



எப்படி ஒரு காலத்தில் ஹரிஹரனுக்குப் பொருந்தாத மழலைக் குரல் என்று மனம் மறுதலித்ததோ அதை மறுபரிசீலனை செய்ய வைத்தது இதே ஹரிஹரனோடு ஹரிணி பாடிய 


"வெள்ளைக் கனவொன்று உள்ளே நுழைந்தது கண்கள் இருளுதடி"


ஒரு பாடல் சட்டென்று மனதுக்குப் பிடித்துப் போவது அவ்வளவு இயல்பானதன்று. முதன் முறை கேட்டேன், கேட்டுக் கொண்டே இருந்தேன் இந்தப் பாடலை வெளிவந்த நாளி.


"வெள்ளைக்கனவொன்று" என்று எடுத்த எடுப்பிலேயே பயன்படுத்தப்பட்ட சொல்லாடல் தான் இந்தப் பாடலின் ஈர்ப்பு சக்தி. யாரோ ஒரு புதுப் பாடலாசிரியராக இருக்க வேண்டும், தன் முதன் முயற்சியை வெகு கவனமாக வார்த்தை அடி எடுத்து வைத்திருக்கிறார் என்று பார்த்தால் சரிதான் அது படத்தின் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி.

“கனவுக்கு நிறமில்லை அதனால் தான் வெள்ளைக்கனவு” என்று விளக்கம் தந்தார் என் நட்புப் பட்டியலில் இருக்கும் ரஞ்சித் ஜெயக்கொடி.


இம்மாதிரியான தொனியில் ஹரிஹரன் பாடியெல்லாம் கேட்டதாக எனக்கு ஞாபகமில்லை. ஒரு இளம் பாடகருக்குண்டான பயபக்தி.

ஹரிஹரன், சித்ரா பாடிய அட்டகாஷ் பாட்டு "உடையாத வெண்ணிலா உறங்காத பூவனம்" பாடல் கூட இந்தப் பாடலோடு ஒப்பிடும் போது வேகப் பாய்ச்சலாய்த் தோன்றும். 


மீண்டும் ஹரிணி வந்திருக்கிறார். இந்த ஜோடியின் குரலில் பாடலைக் கேட்கும் போது தொண்ணூறுகளின் அந்த இறுதி யுகத்தின் இனிமை நாட்களின் நந்தவன மேடையில் மனது.

பாடலை இசையமைக்கும் போதே 90களின் வாசனை பட வேண்டும் என்று இயக்குநரோ இசையமைப்பாளரோ முடிவெடுத்திருக்கக் கூடும் என்று எண்ணத் தோன்றுகிறது.

பாடலின் முடிவில் கொடுக்கும் ஆலாபனையில் தான் ஹரிஹரன் முத்திரை. 

"அடி பெண்ணே பெண்ணே" "அடி கண்ணே கண்ணே" என்று கூட்டுக் குரல்கள் எழுப்பும் ஒலி காதலரைக் கண்டதும் துடிக்கும் இதயத்தின் இசை வடிவமாய்.

மெல்லிசை படத்தின் இசையமைப்பாளர் சாம்.C.S இற்கும் இந்த இசை யுகம் பங்கு போட்டுக் கொடுத்து விடவேண்டும். ஆண்டு அனுபவிக்கட்டும் நாமும் குளிர் காய்வோம்.

இந்தப் பாடலை படக்குழுவினர் ஏன் பிரபலப்படுத்த முனையவில்லை என்று தெரியவில்லை.


"கண் முன்னே தேவதை உயிரெங்கும் பெரும் வதை"

பூவொன்று தன் இதழ் விரிக்கும் தரிசனம் கிட்டாது விடினும் அதே மாதிரியான அனுபவத்தை நுகரலாம் இம்மாதிரியான புதுப் பாடலைக் கேட்கும் தருணம். முதல் நாளில் இந்தப் பாடலைக் கேட்ட அந்தக் காலையும் எனக்கு ஆசீர்வதிக்கப்பட்டது.


https://www.youtube.com/watch?v=zh3NPxlb-Hc


சருகென

உதிர்கிறேன்

தனிமையிலே

மௌனமாய்

எரிகிறேன்

காதலிலே


உண்மையிலேயே பழுத்து விழும் சருகு ஒன்று காற்றில் அலைக்கழிந்து போகும் நிலையில் தான் கிடப்பேன் இந்தப் பாடலைக் கேட்டதும்.


எந்தவொரு பாடலையும் முதலில் உள்ளிழுப்பது அதன் இசை தான், ஆனால் அது உயிர் கொண்டு திளைப்பது கவிதைக் கை, கால் முளைத்த வரிகளால், அப்படியொன்று தான் தான் இந்தப் பாட்டும்.

இந்தப் பாடலைப் பிரசவிக்கவென்றே பிறப்பெடுத்திருப்பார்களோ என்று எண்ணுவதுண்டு ;


“பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ

மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ”


என்று வைரமுத்துவின் வரிகளை வித்யாசாகர் இசையூட்டிய போதும்,


“அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்

உன்னைக் கேட்கும் எப்படிச் சொல்வேன்

உதிர்ந்துபோன மலரின் மௌனமா”


என்று நா.முத்துக்குமாரின் வரிகளில் யுவனின் உயிரிசை ஓடிய போதும்.


அது போலவே இதனையும் பார்க்கிறேன். அருமைக்குரிய பழநிபாரதி அவர்கள் கொடுத்த திரையிசை முத்துகளில் ஒன்று கார்த்திக் ராஜாவின் இசைக்கென்றே பிறப்பெடுத்ததொன்று.

தனயனுக்கு “வீசும் காற்றுக்குப் பூவைத் தெரியாதா” என்று கொடுத்தவர் தான்,


“உலகத்தில் ஏதும் தனிச்சு இல்லையே

குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல....”

என்று தந்தைக்கும் “இளங்காத்து வீசுதே” என்று அன்பின் பரிமாணத்தை இன்னும் சொல்லியிருக்கிறார்.

பழநி பாரதி அவர்களின் “திரையிசை இயல்” தீர ஆராயப்பட வேண்டியதொன்று.

“யாரவள் யாரவள் யாரவள்”

என்று அசரீரியாகப் பின்னணியில் கலக்கும் அந்த சேர்ந்திசைக் குரல்கள் காதலியைக் காணுமிடத்து வேகமெடுத்து எழும் இதயத் துள்ளலின் மொழி பெயர்ப்பு அது.


“உல்லாசம்” படத்தின் காதல் மொழி பகிர்வதற்காகத் தோன்றும் காட்சிகளில் எல்லாம் கார்த்திக் ராஜா இந்தப் பின்னணி இசைக் குரல்களை வழிய விட்டிருப்பார்.


சேர்ந்திசைக் குரல்கள் எனும் இந்த கோரஸ் குரல்கள் வெறும் ஆர்ப்பரிப்பாக பயன்படும்? இல்லை அந்த முதல் சரணத்தை வைத்து மட்டும் முடிவுக்கு வந்து விடக் கூடாது.

“லேலேலோ லேலேலோ

லேலோ லேலோ லேலேலோ

லேலேலோ லேலேலோ

லேலோ லேலோ லேலேலோ”

தரும் உணர்ச்சிப் பிரவாகம் தான் பின்னால் வரும்,

“மேகம் போலே என் வானில் வந்தவளே

யாரோ அவளுக்கு நீதான் என்னவளே”

எனும் காதல் மொழியை உணர்வு கூட்ட முன்னாலேயே தயார்படுத்தி அனுப்புகிறது. இந்த இடத்தில் வரும் கோரஸ் ஒலியைத் தன் காதலின் திசையறியாது தனித்து விடப்பட்டவன் அழுவான். இதுதான் உணர்வை ஊட்டும் இசை.

அதுவும் அந்த ஹரிணி பாடும்


“வீசும் காற்றுக்குப் பூவைத் தெரியாதா” 


https://www.youtube.com/watch?v=8JdSNpGjEZI


பகுதியைக் காதலிக்குக் கொடுக்காமல் சேர்ந்து பாடும் பாடகிக்குக் கொடுத்தாரே அந்த் இயக்குநருள்ளும் ஒளிந்திருக்கிறார் ஒரு கவிஞன்.

கண்ணீர்ப் பூக்கள், நடந்த நாடகங்கள், ஊர்வலம், திருவிழாவில் ஒரு தெருப்பாடகன், நந்தவன நாட்கள் என்றெல்லாம் மு.மேத்தாவின் கவிதைப் புத்தகங்களப் பரப்பி அங்கே தென்படும் காதல் வரிகளை நறுக்கியெடுத்துப் பாடல்களின் முகவுரையாகக் “காதலர் கீதங்கள்” என்று படைத்திருக்கிறேன்.

இங்கே “வீசும் காற்றுக்குப் பூவைத் தெரியாதா” பாடலுக்கு முகவுரை எனக்குத் தேவைப்பட்டிருக்கவில்லை. காரணம் இந்தப் பாடல் வரிகளுக்குள்ளேயே புதுக்கவிதை பூத்திருக்கிறது.


மேகம் போலே என் வானில் வந்தவளே

யாரோ அவளுக்கு நீதான் என்னவளே

மேக மேக மேக கூட்டம் நெஞ்சில் கூடுதே

உந்தன் பேரை சொல்லி சொல்லி மின்னல் ஓடுதே


இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தொண்ணூறுகள் தொட்டு இன்னிசை மேக மூட்டமாய் உலவும் பாடகி ஹரிணிக்கு.


கானா பிரபா


0 comments: