Pages

Tuesday, April 27, 2021

ப்ரீத்தி உத்தம்சிங் ♥️ இசைஞானியின் புதுப் பூம்புனல் ♥️




ஷ்ரேயா கோசல் காலத்துக்கு முன்பே இளங்கன்றின் குரலாய் ஒலித்தவர் ப்ரீத்தி உத்தம் சிங். தமிழுக்கு வட நாட்டிலிருந்து பாட வந்த பெரும் பாடகிகள் லதா மங்கேஸ்கர், ஆஷா போஸ்லே போன்றோரின் புகழடையாளம் ஒன்றே போதுமாயிருந்தது. மற்றப்படி தமிழ் ரசிக உலகு வட நாட்டுச் சகோதரிகள் பாடும் பாங்கில் எழும் மொழிச் சிதைவைச் சகித்துக் குரலினிமையே போதும் என்று கடந்து போய் விட்டது. ஷ்ரேயா கோசல் ஒருவர் தான் ஆற்றொழுக்கான தமிழைத் தன் வாய்க்குள் போட்டுக் கொண்ட முதல்வர் என்று ஷ்ரேயா கோசல் புராணத்திலும் குறிப்பிட்டிருந்தேன். 


ப்ரீத்தி உத்தம் சிங் பாலிவூட்டில் அடையாளப்பட்ட பாடகி. அவரின் தந்தை 

இசையமைப்பாளர் (Dil To Pagal Ha படம் உட்பட)  சக வயலின் வாத்திய விற்பன்னர் உத்தம் சிங் இசைஞானி இளையராஜாவின் மகோன்னத இசையைப் போற்றி வாழ்பவர். அவரளவில் இந்தியாவின் பரிபூரணமான இசை ஆளுமை ராஜா தான்.

ராஜாவோடு இணைந்தும் பணியாற்றியிருக்கின்றார். ராஜாவின் முரட்டு பக்தர்களிடமிருந்து அவரைக் காப்பாற்ற் ராஜாவின் மெய்க்காப்பாளனாகவும் பணியாற்றியிருக்கிறேன் என்பார் உத்தம் சிங் வேடிக்கையாக.


இந்த நிலையில் ப்ரீத்தி உத்தம்சிங் இன் குரலையும் அவ்விதமே ஷ்ரேயா கோசலுக்கு அடுத்த நிலையில் வைத்து ரசிக்க முடியும். 


ஓஓஓஓ ஓஓ ஓஓஓஓஓ


ஆலாபனையிலேயே பாரசூட்டில் மிதந்து வருமாற் போல ப்ரீத்தி அப்படியாக 

“காதல் வானிலே ஓஓஓ” இயங்க ஆரம்பிக்கும்.

அதே ஓ என்ற ஒற்றை எழுத்துத்தான் ஆனால் ஆரம்ப ஆலாபனையில் மிதந்து வரும் “ஓ” அதுவே 


காதல் வானிலே 

காதல் வானிலே...


என்று வரும் போது ஒட்டும் “ஓ” ஒரு சிறு குலுக்கலோடு அபிநயம் காட்டும்.


கூடவே தட் தட். ட்ரில் மாஸ்டரின் கட்டளை போல் இசையின் ரீங்காரம் அப்படியே சரணத்துக்குப் போகும் போது தாய்லாந்து கோயில்களை நோக்கிப் பயணிக்கும் விமானமாய்.


https://youtu.be/n3W_-QlP8Is


கூடப் பாடுவது எஸ்பிபி என்ற மேதை, அவர் தன் பங்கிற்கு நோகாமல் சங்கதிகளைக் கொடுத்துக் கொண்டு போக, 

ஆடியும் துதி பாடியும் ஒளி ஏற்றுங்கள் ஏற்றுங்கள்

ஹோ..ஓ..


தன் இடத்தை அடையாளப்படுத்தும் ப்ரீத்திக்கு இப்படியான சங்கதி நுணுக்கத்தால் பதியம் போட்டு விடுவார். ஒவ்வொரு வார்த்தைப் பிரயோகத்திலும் மிகக் கவனமாக அறுத்து உறுத்தி உச்சரிக்க வேண்டும் என்ற முனைப்பைக் காட்டிக் கொடுத்து விடுவார்.


எஸ்பிபியும் விடுவாரா என்ன? இப்படி எத்தனை பேரைப் பார்த்திருக்கிறேன் என்னுமாற் போல ப் ரீத்திக்கு வழி விட்டு விட்டு முதல் சரணம் முடியும் தறுவாயில்


பாடும் தேனிலா

பாடும்

தேனிலா


என்று சொடுக்கெடுத்து விடுவார்.


ஓம் ஷாந்தி 

ஓம் ஷாந்தி 

ஓம் ஷாந்தி


கை கூப்பித் தொழாத குறை தான்.


திங்கள் சூடிடும் தேவன் கோயிலில்

எங்கள் காதலைப் பாடுங்கள்.


ப்ரீத்திக்குக் கிடைத்த இன்னொரு பாட்டும் எதேச்சையாக ஒரு தெய்வீகம் கலந்த பாட்டுத் தான். இங்கே அருண்மொழியின் ஆலாபனையில்

“ஓ” புது வடிவம் பிறக்கும். 


அல்லா உன் ஆணைப்படி 

எல்லாம் நடக்கும் 

ஹோ எல்லாம் நடக்கும்


https://youtu.be/NMK8P0utgLQ


“காதலுக்கு உண்டு கல்யாண ராசி

சேர்த்து வைக்கும் நம்மை அல்லாவின் ஆசி..


“வாடுவதோ எந்தன் மும்தாஜின் தேகம்

ஓடி வந்தேன் இனி நீதான் என் வேதம்“


உன்னிகிருஷ்ணனின் இணைக் குரலாய் ப்ரீத்தி உத்தம் சிங். இருவரது கூட்டும் சம வயதுத் தோழர் போலப் பொருந்தியும்.


இருவரும் போட்டி போட்டுக் கொண்டு உணர்ச்சிப் பிரவாகம் சொரிவார்கள்.


நீ.... நீங்கி இருந்தால்

சோலைவனம் பாலை ஆகும் எனக்கு.....


ப்ரீத்தியின் வாயிலிருந்து பிறக்கும் “நீ” ஒரு நீட்சியிலும்,


நீ கூட நடந்தால்

வேறு ஒரு சொர்க்கம் இங்கே எதற்கு.....


அதே “நீ” தான் ஆனால் சற்றே அவசரப்படுத்தி அழைப்பார் உன்னிகிருஷ்ணன்.


“காதல் வானிலே” பாடலில் பரமசிவனை அழைத்தும், அல்லாவின் ஆணையை வேண்டி அடுத்த பாட்டிலுமாக இரண்டுமே வாலியின் கை வண்ணங்கள்.


பாலு மகேந்திராவின் முதல் படமான கோகிலா (கன்னடம்) ஹிந்தியில் Aur Ek Prem Kahani என்று தயாரான போது முன்பு தனது ஓளங்கள் (மலையாளம்) படத்தில் பயன்பட்டுப் புகழ் பூத்த “தும்பி வா” பாடல் மெட்டில் கொஞ்சம் நகாசு பண்ணி இங்கும் ஒரு பாடலை ராஜாவிடம் வாங்கினார்.  “Monday Tho utkar” என்ற அந்தப் பாடலிலும் மனோவுடன் ப்ரீத்தியின் பங்களிப்பு உண்டு


https://youtu.be/CayXUhErirI


இந்த தும்பி வா பாடல் மட்டும் பாலுமகேந்திராவின் நிரீக்‌ஷனா (தெலுங்கு), கண்ணே கலைமானே ( நிரீக்‌ஷணாவின் தமிழ்) என்று மொத்தம் 4 படைப்புகளில் மூன்று மொழிகளில் கையாளப்பட்டிருக்கிறது. சங்கத்தில் பாடாத கவிதை தனிக் கதை.


மேலும் அசோக்குமார் இயக்கிய காமாக்னி படத்தில் 

சுரேஷ் வட்கார், ஆஷா போஸ்லேயுடன் ப்ரீத்தி பாடும் Aa Gaya Sapna Koi


https://youtu.be/2t-T-c4xHtg


பாடலும் ராஜாவின் இசையோடு தான்.


ப்ரீத்தி இன்னும் பாடியிருக்கலாமோ என்று மனசு ஏங்கியது இன்றைய காலை ரயில் பயணத்தில் காதல் வானிலே இல் கட்டுண்டு கிடந்த போது.


அப்பர் சுந்தரர் அய்யன் காலத்தில் ஆண்டாள் கொண்டது காதல் தான்


காதல் வேறல்ல தெய்வம் வேறல்ல, 

எங்கள் தெய்வமும் காதல் தான்


ஓம் சாந்தி..ஓம் சாந்தி….

ஓம் சாந்தி….ஓம் சாந்தி…. ஓம்


கானா பிரபா

1 comments:

joel pagal said...

நான் தற்செயலாக கேட்க நேரிட்டது , அந்த காதல் வானிலே பாடல் பல வருடங்களுக்கு பிருகு , அந்த பெண் குரல் அவ்வளவு அழகு கொஞ்சம் விதத்தில் நான் மொத்தமாய் ரசிகனை போனேன் , இதர பாடல்கள் தேடி போக சோகமாய் தமிழில் இரெண்டே பாடல்கள் தான் என்று அறிந்து திக்கமுற்றேன்,
நீங்கள் ப்ரீத்தி யின் பாடல்கள் விவரித்த விதம் மிகவும் பிடித்தது . நன்றி.