Pages

Monday, April 12, 2021

சின்னதம்பி வெளியாகி 30 ஆண்டுகள்


தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் போர் உச்சம் பெற்ற காலத்தில் சவர்க்காரத்தில் இருந்து எரிபொருள் எல்லாம் இலங்கை அரசால் தமிழர் வாழும் வடக்குப் பகுதியில் தடை செய்யப்பட்டிருந்த நேரம், மின்சாரமும் இல்லாத மூன்றாண்டுகள். இந்தப் பொருளாதாரத் தடையால் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 250 ரூபாவாக விற்றுக் கொண்டிருந்தது. அந்த 250 ரூபா இப்போது இரண்டாயிரம் ரூபாவுக்குச் சமன். 

அந்த விலையிலும் கொள்ளையில போன பொழுது போக்கை விட்டோமா என்ன? சைக்கிள் டைனமோவை வலித்து சென்னை வானொலி நேயர் விருப்பம், திருச்சி வானொலியின் திரை கானம், சண் றெக்கோர்டிங் பாரில் பாட்டு பதிவு பண்ணிக் கேட்பது என்று ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இந்த 250 ரூபா மண்ணெண்ணெய் வாங்கி ஜெனரேற்றரில் படம் பார்ப்பது ஒரு உலக மகா பொழுது போக்கு. அந்த நேரம் தான் சின்னத்தம்பி படப் பாடல்கள் வந்து ஒரு உலுப்பு உலுப்பியது. கலியாண வீடு, பூசை வீடு லவுட்ஸ்பீக்கரில் இருந்து கோயில் மேள, நாதஸ்வரம் வரை “போவோமா ஊர் கோலம்” என்று ஒரு நாளிலேயே மூச்சுக்கு முன்னூறு தரம் பாடிக் கொண்டிருந்தன. 

நண்பர் வட்டத்தில் நான் தான் கே.டி.குஞ்சுமோன். அதாவது எந்தப் படத்தை ஓட்டினால் போட்ட முதலீடு திரும்பி வரும் என்று கணக்குப் போடுவேன்.

மண்ணெண்ணை அப்போது. ஆளுக்கு ஐம்பது ரூபா போட்டு சேர்த்த பணத்தில் ஒரு வீடியோக் கடைக்காரரிடம் ஜெனறேட்டரை வாடகைக்கு வாங்கி, சின்னத்தம்பி படத்தைப் பார்க்கவேண்டும் என்று முடிவு கட்டினோம். சின்னத்தம்பி பட வீடியோ கசற்றுக்கும் அப்போது ஏக கிராக்கி. ஆமிக்காரனைத் தாண்டிக்குளத்தில் தாண்டி ஒரு சில பிரதிகள் தான் வந்திருந்தன.

எங்கள் சகபாடி சுதா துப்பறிந்ததில் சாவகச்சேரியில் ஒரு வீடியோக்கடைக்காரரிடம் சின்னத்தம்பி படம் இருப்பதாகத் தெரிய வந்தது. முதலில் ஜெனறேட்டருக்கான வாடகைப் பணத்தைக் கொடுத்து ஒப்பந்தம் செய்துவிட்டு இணுவிலிலிருந்து சாவகச்சேரி நோக்கி சைக்கிள் வலித்தோம். ஒரு மாதிரி வீடியோக்கடைக்காரரின் வீடும் கண்டுபிடித்தாயிற்று. ஆனால் மனுஷனோ ஏகத்துக்குப் பிகு பண்ணினார். 

"தம்பியவை ! நான் அயலட்டையில் இருக்கிற சனத்துக்குத் தான் வாடகைக்கு கசற் குடுக்கிறது, உங்களை நம்பி எப்பிடித் தருவது " என்று அவர் சொல்லவும் 

சினிமா சான்ஸ் இழந்த புதுமுகத்தின் மனநிலையில் நான். கூடவந்த சகபாடி ஒருவனோ, 

" அண்ணை நம்பிக்கை இல்லையெண்டால், இந்தாங்கோ என்ரை Watch ஐ வச்சிருங்கோ" 

என்று (உணர்ச்சிவசப்பட்டு ) தன் கைக்கடிகாரத்தைக் கழற்ற வெளிக்கிடவும்,வந்தவர்களில் யாரிடமாவது அடையாள அட்டை இருந்தால் அதைக் கொடுத்துவிட்டு நாளை திரும்ப படக்கசற்றுடன் வரும் போது பெற்றுக்கொள்ளலாம் என்று வீடியோக்கடைக்காரர் கொஞ்சம் இறங்கிவந்தார். மணிக்கூடு கழற்றின நண்பனே தன் அடையாள அட்டையைப் பொறுப்பாகக் கொடுத்துவிட்டு பெரிய சாதனை ஒன்றை சாதித்த திருப்தியில் சின்னத்தம்பியுடன் சாவகச்சேரியில் இருந்து இணுவில் நோக்கிய பயணம்.

ஜெனேறேற்றர் குடிக்க இரண்டு போத்தல் மண்ணெண்ணை நானூறு ரூபாய் கொடுத்து வழியில் வாங்கி வந்தோம். அண்டை அயல் சனங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டு படம் போட சுதா வீட்டில் ஒரு மணி நேரம் முன்பே டோரா போட்டிருந்தது. இப்படித்தான் சின்னத்தம்பி படம் பார்த்தோம். 


1991 ஆம் ஆண்டு சித்திரை வருடப் பிறப்பை ஒட்டி 

ஏப்ரல் 12 சின்னத்தம்பி

ஏப்ரல் 13 என் ராசாவின் மனசிலே

ஏப்ரல் 14 கேப்டன் பிரபாகரன்

என்று நான்கு மாபெரும் படைப்புகள் இசைஞானி இளையராஜா இன்னிசையில்

கொஞ்சம் தள்ளி ஏப்ரல் 19 கற்பூர முல்லை இளையராஜாவே தயாரித்து வெளியிட்ட படம்.

இப்போது பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். எப்பேர்ப்பட்ட இசைச்சாதனை அது. எல்லாப் படங்களும் பாடல்களால் கோலோச்சியவை. ஒன்று மிச்சம் விடாமல் ரசிகர்களால் இன்னும் கேட்கப்படுபவை.

சின்னத்தம்பியில் இசைஞானியின் இசைப் பங்களிப்பை பி.வாசு மெச்சும் காணொளி

https://www.youtube.com/watch?v=bBDlGILmQUA


சின்னதம்பியில் எட்டு பாடல்கள் (3 ஒரே மெட்டு) எல்லாவற்றையும் 35 நிமிடத்தில் மெட்டுப் போட்டுக் காட்டி ஒன்றரை நாளில் பாடல்களையும் பதிவு செய்து விட்டாராம் ராஜா. பி.வாசுவே சொல்கிறார்.

https://www.youtube.com/watch?v=I19swYP6D8E


இசையில் இந்த அசுர சாதனை இன்னமும் 30 ஆண்டுகளாக நிரப்பப்படாத வெற்றிடமே.

சின்னதம்பி படப் பாடல்கள்

https://www.youtube.com/watch?v=q6NEko5SEAY&t=3s



கானா பிரபா


0 comments: