Pages

Tuesday, April 25, 2017

வைரவிழாப் பாடகி எஸ்.ஜானகி எனும் பாட்டுப் பல்கலைக் கழகம் 💚🎤💐




தன்னுடைய இசை வாழ்வில் அறுபதாண்டைத் தொட்டு நிற்கும், திரையிசை கண்ட உன்னதமான ஆளுமைகளில் எஸ்.ஜானகி ஒரு பாட்டுப் பல்கலைக் கழகம். "எஸ்.ஜானகி அளவுக்கு பாடல் தாங்கியிருக்கும் உணர்வை வெளிப்படுத்த இந்தியாவிலேயே யாரும் இல்லை" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் குறிப்பிடுவது வெறும் புகழ்ச்சி மாலை அல்ல என்பதை எம் போன்ற கடைக் கோடி ரசிகனும் உணர்ந்து நிற்பான்.
பாடகி சித்ராவின் ஆரம்ப காலத்தில் ஜானகி அம்மாவின் பாட்டைக் கேளு அவங்க ஒரு பாடலை எவ்வளவு தூரம் நியாயம் செய்து பாடியிருக்காங்க என்று இளையராஜா கை காட்டிய போது அங்கே நடமாடும் பாட்டுப் பல்கலைக் கழகமாகத் திகழ்ந்து காட்டுகிறார்.

திரையிசைப் பாடல் என்பது வெறுமனே சங்கீத சாகித்தியத்தின் திரட்டு அல்ல அது பாத்திரத்தின் பண்பை, காட்சிச் சூழலின் அனுபவத்தைக் இசைக் கூட்டில் குரல் வழியே கடத்துவது. அங்கே ஒட்டுமொத்த பாடலுமல்ல ஒவ்வொரு வரிகளுக்குமே உணர்வு பேதம் கற்பித்துக் கொண்டு வர வேண்டும் என்ற நுட்பத்தைப் போதித்தவர்கள் திரையிசையில் ஒரு சிலரே. அங்கு எஸ்.ஜானகி அம்மாவின் பங்கு அளப்பரியது.

ஒரு சாதாரண அல்லது அமைதியாகப் போகும் பாட்டின் உணர்ச்சியை நம்முள் அசுரத்தனமாக ஊடுருவி இறக்கி விடுகிறது எஸ்.ஜானகியின் குரல்.
"ராசாவே ஒன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க" ஒலிக்கையில் தனிமையின் குரலாகவும் "சின்னச் சின்ன வண்ணக் குயில்" பாடும் போது குதூகத்தின் வெளிப்பாடாகவும் மனது மொழி பெயர்க்கும் போது எஸ்.ஜானகி ஒரு பெண்ணின் உணர்வாக மட்டும் அடையாளம் இல்லாது ஆணின் மனோபாவங்களின் மொழியாகவும் அடையாளப்படுத்தப்படுகிறார்.
அதனால் தான் அந்தந்த மன நிலைகளுக்குத் தோதாகச் சவாரி செய்யப் பாட்டு வாகனம் தேடும் போது அது எஸ்.ஜானகி ஓட்டும் குதிரையிலும் சுகமாகச் சவாரி செய்கிறது.

ஒரு பாடலுக்குக் கொடுக்கும் உச்ச பட்ச நேர்த்தியையும், உருவாக்கத்தையும் வைத்து
எப்படி இசைஞானி இளையராஜாவை ஒரு இசையமைப்பாளர் என்ற எல்லை கடந்து இயக்குநர் என்ற நிலையில் வைத்துப் பார்க்க முடிகிறதோ அது போல எஸ்.ஜானகி ஒவ்வொரு பாடலையும் கையாளும் விதத்தில் இசையமைப்பாளராகவே மிளிர்கிறார்.
மெல்லிசை மன்னர் காலத்தில் T.M.செளந்தரராஜன், P.சுசீலா என்று அமைந்ததோ அது போல் இசைஞானி இளையராஜா காலத்தில் எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்று பரிணமித்தது.
இவர்கள் காலத்தில் நாமெல்லாம் இருப்பது பெருமை என்ற நினைப்பு வரும் போது கண்டிப்பாக இவர்களும் இருப்பர்.

"மம்மி பேரு மாரி" https://youtu.be/pwbekjLgZWg (நெஞ்சத்தைக் கிள்ளாதே) என்று விடலைப் பையனாகவும், "கண்ணா நீ எங்கே" https://youtu.be/HFDzZBCT0OI (ருசி கண்ட பூனை) என்று குழந்தையாகவும், "போடா போடா பொக்கை" https://youtu.be/BpaHQVXD62g (உதிரிப் பூக்கள்) என்று கிழவியாகவும் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை கற்றவர்.

"லல்லி லலிலலோ" என்ற ஆலாபனையோடு மச்சானைப் பார்த்தீங்களா பாடலை நினைத்தாலேயே உச்சந்தலை உறைந்து போனதொரு உணர்வு கிட்டும் எனக்கு.

எந்த ஒரு துறையிலும் இறங்கியவர்கள் அப்படியே மாற்றமின்றி அதன் போக்கில் வாழ்ந்தவர்கள் அப்படியேதானிருக்கிறார்கள், அதையும் தாண்டிக் கடந்து சிந்தனையைச் செயல்படுத்தியவர்கள் சாதனையாளர்களாக மாறுகிறார்கள். எஸ்.ஜானகியின் இந்த அறுபதாண்டு இசை வாழ்வு அவரைச் சாதனையாளராக முன்னுறுத்துகிறது. தனக்கு வாய்ந்த அழகிய குரல் என்பது அதன் இனிமையைச் சுவைக்க அல்ல அனுபவிக்கவென்று குரல் பேதங்களில் வெளிப்படுத்தும் உணர்வின் வழி நிரூபித்துக் காட்டியவர்.

எமக்கெல்லாம் இசையரசி பி.சுசீலா அம்மாவின் பாட்டு அன்னையின் குரல் என்றால் பாட்டுக் குயில் எஸ்.ஜானகியின் ஓசை தோழியின் குரலாக நிற்கின்றது.

எஸ்.ஜானகியின் தனிப் பாடல்கள் குறித்து நான் எழுதியதில் சில

பாடல் சிலாகிப்புகள்

காற்றில் எந்தன் கீதம்
https://www.facebook.com/kana.praba/posts/10206112214709720

கண்ணா நீ எங்கே
http://www.radiospathy.com/2016/06/blog-post.html

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
http://www.radiospathy.com/2014/11/blog-post.html

ராதா அழைக்கிறாள்
https://www.facebook.com/kana.praba/posts/10208646658469230

புத்தம் புதுக் காலை
http://www.radiospathy.com/2014/11/blog-post_11.html

வசந்த காலக் கோலங்கள்
https://www.facebook.com/kana.praba/posts/10210837822606964

எஸ்.ஜானகி தனிப்பாடல் திரட்டு 78
http://www.radiospathy.com/2016/04/blog-post_23.html
tag

1 comments:

Anonymous said...

அற்புதம்