Pages

Monday, February 2, 2015

பாடல் தந்த சுகம் : ஜிங்கிடி ஜிங்கிடி ஒனக்கு

முன்பெல்லாம் சினிமா விவசாயியே தன் பயிரை அறுவடை செய்து சந்தைப்படுத்தக்கூடிய சூழல் இருந்தது.  இன்று அந்த நிலை இல்லை என்ற கசப்பான நிதர்சனத்தை அண்மையில் கமல்ஹாசன் தன் குமுதம் கேள்வி பதில் பகுதியில் சொல்லியிருந்தார்.

அப்படியானதொரு காலகட்டம் எண்பதுகளின் தமிழ் சினிமா. எந்தவொரு துறையின் சரிவோ அல்லது அழிவோ அதன் உச்சத்தை நீண்ட வருடங்கள் எட்டிவிட்டுத் தான் சராலென்று விழுந்து விடும். அப்படியானதொரு காலகட்டம் தமிழ்சினிமாவின் எண்பதுகள்.

குரு சிஷ்யன் படத்தை ரஜினிகாந்த் இன் கால்ஷீட் நெருக்கடியில் அவரிடம் கொடுத்த உறுதிமொழியின் பிரகாரம் வெறும் 28 நாட்களே எடுத்து இயக்கி முடித்த படம் என்று குறிப்பிட்டிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். நினைத்துப் பார்க்க முடியுமா இப்படியொரு சாதனையை? 
அதுவும் ரஜினிகாந்த், பிரபு ஆகிய உச்ச நட்சத்திரங்களை வைத்து அவரவர் ரசிகர்களையும் திருப்திப்படுத்துவது என்பது இலேசுப்பட்ட காரியமல்ல.
இவ்வாறான தன் சுவாரஸ்யமான பட அனுபவங்களை ஏவிஎம் தந்த எஸ்பிஎம் என்ற நூலில் பதிந்து வைத்திருக்கிறார் எஸ்.பி.முத்துராமன். இந்த நூலாசிரியர் ராணி மைந்தனுடன் நான் எடுத்த பேட்டியை இங்கு கேட்கலாம்.

28 நாட்களில் எடுத்த படம் 175 நாட்கள் ஓடிய வெற்றிச் சித்திரமானது.

குரு சிஷ்யன் படத்தின் வரவால் இன்னும் சில கவனிக்கத்தக்க நிகழ்வுகளும் தமிழ் சினிமாவில் அமைந்தன.
தெலுங்கு சினிமாவில் இருந்து தமிழுக்கு "கெளதமி" என்ற நவ நாகரிக மங்கை கிட்டினார். மேற்கத்தேய நடை உடையிலும் கிராமியத்தனமான பாவாடைத் தாவணியிலும் கலக்கிய மிகச்சில நாயகிகளில் கெளதமி தவிர்க்க முடியாதவர். உதாரணமாக இதே படத்தில் சீதாவின் நாகரிகத் தோற்றம் எடுபடாமல் இருக்கும். குரு சிஷ்யன் படத்தில் கெளதமியின் நடிப்பு தமிழுக்கு அந்நியமில்லாத பாங்கில் இருக்கும்.

ஒரு பக்கம் ரஜினி, கமல் என்று ஜோடி கட்டி ஸ்டைலான பாத்திரப் படைப்புகளும் இன்னொரு பக்கம் ராமராஜனுடன் கிராமியத் தனமான பாத்திரங்களிலும் கலக்கியவர். ஆனாலும் கெளதமியை முதலில் அதிகம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவை 
ராமராஜனுடன் அவர் நடித்த படங்களே.

பாடகி ஸ்வர்ணலதா முந்திய ஆண்டு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் "சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா" என்ற பாரதியார் பாடலை கே.ஜே.ஜேசுதாசுடன் பாடித் தமிழுக்கு முதல் வரவு வைத்தார்.
தொடர்ந்து 1988 இல் குரு சிஷ்யன் படத்தில் இடம்பிடித்த "உத்தம புத்திரி நானு" என்ற பாடல் மூலம் இளையராஜாவின் இசை சாம்ராஜ்யத்தில் அவர் கொடுத்த வெற்றி முத்திரைகளைச் சொல்லவா வேண்டும்?  

குரு சிஷ்யன் படத்தின் ஏனைய பாடல்களை வாலி எழுத "ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு" பாடலை மட்டும் இளையராஜா எழுதியிருந்தார். தயாரிப்பாளர் பிரபல பாடலாசிரியர் பஞ்சு அருணாசலமாக இருந்தும் அவர் பாட்டெழுதாதது புதுமை.

இரண்டு ஜோடிப்பாடல்களில் ஒன்றான
"வா வா வஞ்சி இள மானே"
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா 
குரல்களில் இன்னொரு "இரு விழியின் வழியே நீயா வந்து போனது" ரக துள்ளிசைக் காதல் பாடல்.

இந்தப் படத்தின் பாடல்களில் வந்த புதுசில் பள்ளிக்காலத்துக் காதல்களைச் சீண்டிப் பார்க்க "கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்" பாடல் கை கொடுத்ததைப் பலர் இப்போது ஞாபகப்படுத்த முடியும் :-)
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தனித்துவமான சிரிப்புடன் கூடிய பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஏதோ பழக்கப்பட்ட பாடலைப் பாடிக் கொள்வது போல இவரின் பாணி இருக்கும்.



""ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு இங்கு என்னடி உன் மனக்கணக்கு"  பாடலை 
வாலியோ அல்லது கங்கை அமரனோ இல்லாது போனால் பஞ்சு அருணாசலமோ கூட எழுதியிருக்கலாம் என்று தான் பலர் நினைக்குமளவுக்கு பாடலின் மெட்டுடன் போட்டி போடும் ஜாலியான ஊடல் பொருந்திய வரிகள். ஆச்சரியமாக இந்தப் பாடலை இளையராஜா தேர்ந்தெடுத்து ஏன் எழுதினார் என்பது கண்டுபிடித்துத் திருப்தி காண வேண்டிய இசை ரகசியம்.

எண்பதுகளில் கலக்கிய மனோ, சித்ரா ஜோடிக் குரல்களின் இன்னொரு சூப்பர் ஹிட் பாடல். 

இந்தப் பாடலின் இரண்டாம் சரணத்துக்கு முந்திய இடையிசையில் 2.44 நிமிடத்தில் தொடங்கும் வயலினும் தொடர்ந்து வாசிக்கும் புல்லாங்குழலும் கூட இந்தக் காதலர்களின் ஊடலின் பிரதிபலிப்பாக இருக்குமாற் போலத் தென்படும் அற்புதமான இசைக் கோவை.

"கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்" பாடலும் "ஜிங்கிடி ஜிங்கிடி ஒனக்கு" பாடலும் கிட்டத்தட்ட ஒரே தொனியில் இருக்குமாற் போல வரும் உணர்வு எனக்கு மட்டும் தானா?

"இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்ல(து) அவர் அளிக்கு மாறு" -  திருக்குறள் 1321

அதாவது காதலரிடத்துத் தவறெதுவும் இல்லையெனினும் ஊடல் மூலமாக அவர் மீதான காதல் இன்னும் பெருக வல்லது என்ற விளக்கத்தைக் கொண்டது மேற்சொன்ன குறள்.
இனி இந்தப் பாடல் காட்சியைக் குறித்த குறளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். கச்சிதமான பொருள் விளக்கம் மனக்கண்ணில் விரியும்.

http://www.youtube.com/watch?v=wpTK2RLR9cM&sns=em


0 comments: