Pages

Wednesday, February 25, 2015

பாடல் தந்த சுகம் : ஒரு மைனா மைனாக்குருவி


இந்தமாதிரிப் பாட்டெல்லாம் ரஜினிகாந்துக்கு உரியது என்று படத்தைப் பற்றிய ஜாதகம் தெரியாதவர்களே சொல்லிவிடக் கூடிய அளவு பொருத்தம் நிறைந்த பாட்டு. பாடலைக் கேட்கும் போது ரஜினிகாந்த் இன் நளினமான அசைவுடன் கூடிய நடனமே துணைக்கு வந்து கொள்ளும். எனக்கெல்லாம் இந்தப் பாட்டெல்லாம் ஒரு உற்சாக பானம் போல.

நடிகர் ரஜினிகாந்த் இற்கு ஆரம்பகாலத்தில் மலேசியா வாசுதேவன், தொடர்ந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பின்னர் மனோ என்று குரல் கொடுத்த போது மூவருமே பங்கமில்லாமல் அச்சொட்டாக ரஜினிகாந்த் ஆக மாற வேண்டிய உழைப்பு இருந்தது. ரஜினிக்கேயான குரலின் நளினங்களைக் காட்டி அதை மெய்ப்பிக்க வேண்டியிருந்தது. ரஜினிகாந்த் இற்கு முன்னால் இருந்த எம்.ஜி.ஆர் யுகத்தில் கூட டி.எம்.செளந்தரராஜனைத் தாண்டி யாரும் உச்ச குரலாக மாறமுடியவில்லை.
நல்ல பாடகர்கள் என்பது எக்காலத்திலும் இருந்தார்கள் என்பது தனியான விஷயம்.

"ஒரு மைனா மைனாக்குருவி" பாடலைப் பாடுவதற்காக ஒலிப்பதிவுக்கூடத்துக்குள் பாடல் பதிவாகும் போதுதான் இது ரஜினிகாந்த் இன் உழைப்பாளி படத்துக்காக எடுக்கிறோம் என்று சொன்னார்கள் என்று ஒருமுறை குறிப்பிட்டார் பாடகி சித்ரா. அப்போதே ட்ராக் சிஸ்டம் எனப்படும் பாடகர் தனித்தனியாகப் பாடிப் பின்னர் ஒட்டும் தொழில்நுட்பம் வந்து விட்டாலும் இந்தப் பாடல் மனோ, சித்ரா சம காலத்தில் பாடி ஒலிப்பதிவு செய்தது.

கவிஞர் வாலி படத்தின் முழுப் பாடல்களையும் எழுதியிருக்கிறார். ஏனோ இரண்டு பறவைகளை ஒரே படத்தில் இழுத்து விட்டிருக்கிறார். ஒன்று "ஒரு கோலக்கிளி ஜோடி தன்னை" இன்னொன்று இந்த "மைனா மைனாக்குருவி" . காலையில் வேலைக்கு வரும் போது திரும்பத் திரும்ப இதையே கேட்டுக் கொண்டு வந்து பொச்சம் தீராமல் அலுவலகத்துக்கு வெளியில் நின்றும் ஒரு முறை கேட்டுவிட்டு வேலைக்குப் போனேன். வேலை நேரத்தில் பாடல் கேட்பதில்லை. எப்பவாவது அரிதாகத் தான் அது நடக்கும்.

"ஒரு மைனா மைனாக்குருவி" பாடலுக்கு ஒன்று விட்ட சித்தி மகளாக "வெண்ணிலவு கொதிப்பதென்ன" (சின்ன மாப்ளே) http://youtu.be/e_jSgAfrYuA படப்பாட்டைச் சொல்லலாம். அந்தப் பாட்டு மனோ, சொர்ணலதா பாடியது. முன்னர் ஒருமுறை சொன்னது போல ஒவ்வொரு பருவத்திலும் ராஜா இம்மாதிரி ஒத்த வடிவங்களில் அமையும் பாடல்களைக் கொடுப்பது வழக்கம்.

"ஒரு மைனா மைனாக்குருவி" பாடலெல்லாம் மெல்லிசை மேடைக் கச்சேரி வைப்பவர்களுக்கே தாரை வார்த்தது மாதிரி இசைக்கட்டோடு இருக்கும்.  மிக இலகுவாக மேடைக்கச்சேரியில் வாசிக்கக் கூடிய பாட்டு. மனோ (மேனாட்டுப் பெண்களிடம்) , சித்ரா (ஏதேதோ எண்ணம் கொண்டு) பாடும் போது இரட்டைப்படையாக அவர்களின் குரல் ஒலிக்கும் உத்தி முன்னர் ராஜாதி ராஜா படத்தில் வரும் "வா வா மஞ்சள் மலரே" பாடலிலும் பயன்பட்டுச் சிறப்பாக அமைந்திருக்கும்.

இப்போதெல்லாம் ஒவ்வொரு படம் வரும் போதெல்லாம் புதுசு புதுசா தினுசு தினுசா சண்டை, வழக்கு, போராட்டம் எல்லாம் இல்லாத காலம் அப்போது இதற்கெல்லாம் ஆதியும் அந்தமுமாக ரஜினிகாந்த் இற்கும் விநியோகஸ்தர் சங்கத்துக்கும் இடையில் புட்டுக் கொள்ளவே  விஜயா வாஹினி பல்லாண்டுகளுக்குப் பின்னர் எடுக்க வந்தபோது உழைப்பாளியின் பூஜையில் இருந்து படம் வெளிவரும் வரை உண்மையான பிரசவ வேதனை தான். அப்போது விநியோகஸ்தர் சங்கத் தலைவராக இருந்த சிந்தாமணி முருகேசன் பரவலாகத் தன் பெயரைத் தக்கவைத்ததோடு சரி. படம் வெளி வந்து ரஜினிகாந்த் - பி.வாசு கூட்டணியில் வசூலை அள்ளிய இன்னொரு படமாக அமைந்தது.

நடிகை ரூபிணி மேரி அதாலத் என்ற ஹிந்திப் படத்தில் நடித்த காலத்திலேயே ரஜினிகாந்த் உடன் நடித்த பெருமை. ஆனால் அந்தப் படத்தில் அவர் ஜோடி இல்லை. பின்னாளில் மனிதன் படத்தில் ஜோடி சேர்ந்து கொண்டார். ரூபிணிக்குப் பட வாய்ப்புகள் ஓய்ந்து காணாமல் போன நிலையில் உழைப்பாளி படத்தில் "ஒரு மைனா மைனாக்குருவி" பாடலில் மூன்றில் ஒரு குமரியாக ஆடினார். போனவாரம் 80ஸ் நட்சத்திரங்களின் சந்திப்பு நிகழ்ச்சியில் பார்த்த போது அதே ரூபிணி அப்படியே இருக்கிறார் என்பதோடு நிறுத்திக் கொண்டு "ஒரு மைனா மைனாக்குருவி மனசாரப் பாடுது" பாடலைக் கேட்போம் 😄😄😄

3 comments:

முரளிகண்ணன் said...

நல்ல கட்டுரை.

விநியோகஸ்தர் சங்க தலைவர் சிந்தாமணி முருகேசன்.

கானா பிரபா said...

நன்றி பாஸ், முருகேசன் டைப் அடிக்கும் போது முருகன் ஆகிவிட்டார். திருத்தியாச்சு ;)

Unknown said...

அருமையான பாடல் அண்ணா என்ன சொல்லுவது இது மையை வகை பாடலென்றாலும் பாடலின் அடிவாரம் மெலோடி வகை.... அதுவும் வாலி வாலிபர் ஆக எழுதிய வரிகள்.... கச்சிதம்.