Pages

Wednesday, February 11, 2015

"வீசும் தென்றல் காற்றினைப் போல்" - மலர்ந்தும் மலராதது

வீசும் தென்றல் காற்றினைப் போல் என் இதயத்தில் நீ நுழைந்தாய் - ஏ.ஆர்.ரஹ்மானின் மலர்ந்தும் மலராத பாடல்

நேற்று YouTube இல் 90 களின் இறுதியில் வந்த பாடல்களை ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டு வந்தேன். அப்போது உல்லாசம் படத்தில் வந்த "வீசும் காற்றுக்குப் பூவைத் தெரியாதா" பாடலைக் கேட்டு முடித்ததும் YouTube தானாகவே ஒரு பாடலைப் பரிந்துரைத்தது. அந்தப் பாடல் தான் "வீசும் தென்றல் காற்றினைப் போல்". இந்தப் பாடலை எங்கோ கேட்ட மாதிரி இருக்கே என்று மனசைக் கேட்கும் அளவு சுத்தமாக மறந்து விட்ட பாட்டு, கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் கேட்கிறேன். 

தொண்ணூறுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் அலை 
அடித்துக் கொண்டிருந்த போது அடுத்து இவர் எதைக் கொடுப்பார் என்று கன்னம் வைத்துக் கொண்டிருந்த நேரம். மலையாளத்தில் இருந்து வந்த அசோகா, தெலுங்கில் இருந்து வந்த சூப்பர் போலீஸ், மனிதா என்று தமிழ் மாற்றுப்பட்ட பாடல்களையும் விட்டு வைக்கவில்லை. அப்போது தான் "மோனலிசா" என்ற படப் பாடல்கள் வந்திருந்தன. ரஹ்மான் படமும் மோனலிசா ஓவியமும் பொதிந்த விபரங்கள் தவிர வேறு எதுவும் அப்போது மட்டுமல்ல இப்போதும் தெரியாத ரகசியமாக வந்த பாடல் பொதி இது.
சம காலத்தில் ரஹ்மான் இசையில் வந்த  doli saja ke rakhna (காதலுக்கு மரியாதை ஹிந்திப் பதிப்பு) பாடல்கள் "ஊஞ்சல்" என்ற இசைத் தொகுப்பாக வந்திருந்தது. அதுவும் பெயரளவில் மட்டுமே வந்த  திரைப்படமாக்கப்படாத தமிழாக்கப் பாடல்கள். பின்னர் இது ஜோடி திரைப்படத்துக்காக வேறு பாடகர்கள் பாடித் திரை வடிவம் கண்டது.
Daud ஹிந்திப் படமும் ஓட்டம் என்ற பெயரில் தமிழில் பாடல்களாக ஒரு வருட இடைவெளியில் வந்தது.

மோனலிசா படத்தின் பாடல்கள் 1998 காலப்பகுதியில் வெளியானது. இந்தப் பாடல்கள் அனைத்துமே பழநி பாரதி அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது. எனக்கு இந்த "வீசும் தென்றல் காற்றினைப் போல்" பாடலைப் பரிந்துரைத்த YouTube இல் அப்போது கேட்டுக் கொண்டிருந்த "வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா" பாடலும் பழநி பாரதியால் எழுதப்பட்டது ஆச்சரியமான இன்னொரு ஒற்றுமை. இந்தப் பாடலை அப்போது வகை தொகையில்லாமல் கேட்டிருக்கிறேன். இப்போது திருவிழாவில் தொலைந்த குழந்தை மீசை முளைத்த விடலைப்பையனாக அடையாளம் காணமுடியாத அளவுக்கு  என் முன்னால் நிற்பது போல பிரமை :-)
உன்னி கிருஷ்ணன், ஸ்வர்ணலதா பாடிய அட்டகாசமான பாடல் இது.

இந்தப் பாடலின் நதிமூலத்தை ஆராய்ந்தால் முதலில் ஹிந்தியில் வெளியான "Kabi Naa Kabi" படத்திற்காகத் தான் இந்தப் பாடல்கள் முதலில் பதிவாகித் திரை வடிவம் கண்டன. குறிப்பாக இந்த "வீசும் தென்றல் காற்றினைப் போல்" பாடலின் மூலப் பாடலான "Tu Hi Tu" பாடலை சித்ராவும் மலையாளப் பாடகர் ஶ்ரீகுமாரும் பாடியிருப்பார்கள். இதுவரை கேட்காதவர்கள் கேட்டுப் பாருங்கள். https://m.youtube.com/watch?v=6Y_8-Wg0qIA 
பாடகர்கள் ஏதோ வீராணம் குழாய்க்குள் இருந்து பாடுவது போல அமுங்கிப் போய் இருக்கும் ஹிந்தி வடிவம். வழக்கமாக பாடல்களின் மூல வடிவத்தைக் கேட்கும் போது இனிமையாக சுகமாகவும் இருக்கும். அதை மொழி மாற்றும் போது பாடகர் தேர்வில் சறுக்கல் இருக்கும். குறிப்பாக அக்னி நட்சத்திரம் பாடல்களை தெலுங்கில் வாணி ஜெயராம் பாடியதைக் கேட்டால் தெரியும். 
இங்கோ தலைகீழ் ஹிந்தியில் எடுபடாதது போல இருக்கும் பாட்டு தமிழில் உன்னிகிருஷ்ணன், ஸ்வர்ணலதா பாடும் போது ஏதோ தமிழுக்காகவே
தாரை வார்க்கப்பட்ட மெட்டுப் போல பாடல் வரிகளும், பாடும் திறனும் வெளிப்படுகின்றது. கிட்டத்தட்ட இதே பாணியில் ஏ.ஆர். ரஹ்மான் பல்லாண்டுகளுப்பின் கொடுத்த இன்னொரு பாட்டு "அழகிய தமிழ்மகன்" படத்தில் வரும் "கேளாமல் கையிலே வந்தாயே காதலே" பாடல் இருக்கும்.

"வீசும் தென்றல் காற்றினைப் போல்" பாடலை இன்னொரு பாடலில் கண்டுகொண்டோமே என்று முடியைப் பிய்த்துக் கொள்ளாதீர். வழக்கம் போல தேனிசைத்தென்றல் தேவாவின் பெருங்கருணையால்  " நெஞ்சினிலே" படத்தில் வரும் "மனசே மனசே கலக்கமென்ன" https://m.youtube.com/watch?v=YVqvSMDXsFk பாடலின் ரிதம் ஒரே காலேஜ்ல ஒண்ணாப் படிச்சவங்க என்று சொல்லும். அண்ண்ணன்ன் அண்ண்ணன்ன் 😄




1 comments:

Kasthuri Rengan said...

தம+

நல்லதோர் ஆய்வு.. நிறைய விசயங்கள் நானும் ரசித்தேன் ஓடு என்கிற இந்திப்படம் பாடல்கள அருமையாக இருக்கும் ...