Pages

Friday, February 6, 2015

SHamitabh - ஷமிதாப் - shAMITABH

சினிமாவை ஆத்மார்த்தமாக நேசிப்பவனின் இலட்சிய இருப்பு,  தன்  அடையாளத்தைத் தொலைத்தவரின் ஆதங்கம் இதை அடித்தளமாக வைத்து Shamitabh படத்தின் மூலக்கரு அமைந்திருக்கின்றது. 

இந்தப் பதிவில் தலைப்பில் இருக்கும் SHamitabh VS shAMITABH தான் காட்சிகளை நகர்த்தும் பகடைக் காய்களாய். ஆனால் வழக்கம் போல கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் நடக்கும் ஈகோ யுத்தம், நாலு சண்டை என்ற ரீதியில் அமைந்த மாமூல் மசாலாவும் அல்ல.  இயன்றவரை இயல்பாகவே திரைக்கதையோட்டத்தை அமைத்திருப்பதால் முழுமையான வணிக சினிமாவாக இந்தப் படத்தைச் சொல்ல முடியாது.

அமிதாப் பச்சான் என்ற மிகப் பெரும் நடிகருக்கெல்லாம் இந்த மாதிரிக் கதாபாத்திரம் ஊதித்தள்ளக்கூடியது. ஆனால் இந்தப் படமும் இவர் ஏற்று நடித்த பாத்திரமும் அமிதாப் இன் திரையுலக வாழ்வில் தவிர்க்க முடியாத அளவுக்கு படம் முழுக்க நிரம்பியிருக்கிறார். அமிதாப் ஐ விட்டு எந்த நடிகரையும் பொருத்திப் பார்க்க முடியாத அளவுக்குச் சிறப்புச் சேர்த்திருக்கிறார். கிட்டத்தட்ட அவரின் நிஜ வாழ்க்கையின் ஒரு பகுதிதான் படமாகியிருக்கிறது.

 தனுஷ் இற்கு ஷமிதாப் இன்னொரு மிகச்சிறந்த வாய்ப்பு, சிறுவயதில் இருந்தே சினிமா சினிமா என்று அலைந்து, ஏங்கி அந்த வாய்ப்பைப் பற்றிப் பிடிக்க எத்தனிப்பதிலும், புகழின் உச்சியில் இருக்கும் போது தன் சினிமா வாழ்க்கை தொலையப் போகின்றதே என்று துடிக்கும் போதும் சரி, மிகை நடிப்பில்லாது வாழ்ந்து காட்டியிருக்கிறார். படம் முழுக்க இவரின் அங்க அசைவுகள் தான் பிரதானம். 

தமிழ் சினிமா நாயகர்களில் கமல்ஹாசன் உயர்ந்தவர்கள் படத்தில் வாய் பேச முடியாத பாத்திரத்தில் முழுமையாக நடித்திருந்தார். கே.பாக்யராஜ் கூட ஒரு கை ஓசை படத்தின் இறுதிக்காட்சி வரை வாய் பேச முடியாதவராக நடித்திருப்பார்.  தனுஷிற்கு இந்தப் படம் வாயிலாக இப்படியானதொரு வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. இந்த ஆண்டின் சிறந்த நடிகர் போட்டியில் அமிதாப் அல்லது தனுஷ் இந்தப் படத்தில் வந்தது போலவே போட்டி போடப் போகும் கூத்தும் நடக்கப் போகுதோ என்னமோ என்று சொல்லுமளவுக்கு அமைந்திருக்கிறது.

தனுஷ் இன் உடல் மொழிக்கு அமிதாப் இன் குரலைப் பொருத்தும் முதல் காட்சியில் அமையும் நடிப்புப் பயிற்சி கல கல கலக்கல்.
ஆரம்பத்தில் தனுஷ் இன் உருவத்தோடு அமிதாப் குரலைப் பொருத்திக் கேட்கும் போது ஏற்படும் நெருடலை அமிதாப் வழியாகவே கிண்டலாக "உன்னுடைய உடம்பின் எடையை விட என் குரலின் எடை அதிகம்" என்று பகிர்ந்து சமரசம் கொள்ள வைக்கிறார் இயக்குநர்.

களத்தூர் கண்ணம்மா கமலின் அக்கா மாதிரியே அக்க்ஷரா, உதவி இயக்குநராக  இது நாள் வரை இருந்தவர் இப்போது நாயகி ஆன முதல் வாய்ப்பிலேயே உதவி இயக்குநர் பாத்திரத்தில் நடித்திருப்பதும் புதுமை. 

 பொம்மலாட்டம் புகழ் ருக்மணி ஒரு சில காட்சிகளில் வரும் போது இழுத்து வாருங்கள் தமிழ் சினிமாவுக்கு என்று சொல்லுமளவுக்கு அழகுப் பதுமையாக இருக்கிறார்.
நாடோடிகள் அபிநயா ஒரு காட்சியில் எட்டிப் பார்க்கிறார்.

ஆரம்பத்தில் படத்தின் எழுத்தோட்டத்தோடு தாவும் மேற்கத்தேய இசை ஒரு பெரும் இசைக்கச்சேரியைக் கேட்கும் ஆவலோடு எம்மைத் தயார்படுத்துகின்றது.
தனுஷ் இன் சிறுவயதுக் காட்சியில் கிராமத்தில் நடித்துக் காட்டும் போது இயங்கும் ஒற்றை வயலின் அப்படியே ஒரு கூட்டம் வயலின் ஆவர்த்தனத்தைத் துணைக்கழைத்துப் பெருக்கெடுக்கும் போது மீண்டும் இளையராஜாவே வந்து இந்திய சினிமாவுக்குப் பின்னணி இசையின் தாற்பர்யத்தைப் பாடமெடுக்கும் காட்சியாகவே அமைந்து சிறப்பு சேர்க்கிறது.
அது போல் தனுஷ் வாய்ப்புத் தேடும் போதும் அமையும் பின்னணி இசையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது.


படத்தின் மிகப் பெரிய ஏமாற்றம் வழக்கம் போல இசைஞானி இளையராஜாவின் இசையில் கிடைத்த ஆறு முத்தான பாடல்களில் இரண்டை மட்டுமே பயன்படுத்திவிட்டு மீதியைக் கடாசிய போது வந்த எரிச்சல் இன்னமும் அடங்கவில்லை. 

Ishq E Fillum நம்மூர் "ஜாதி மத பேதமின்றி (சினிமா சினிமா) மாதிரியான பாடல் முழுமையாக இருக்கிறது. பிட்லி பாடலும் இடையில் சிறு பொத்தல் போட்டுத் தொடர்கிறது. ஸ்டீரியோஃபோனிக் பாடல் அரை நிமிடமே படமாக்கப்பட்டு மண்ணை வாரி வீச வைக்கிறது. "தப்பட்" பாடல் ஒரு நிமிடம் ஒலித்து போங்காட்டம் ஆடுகிறது.
தெரியாமல் தான் கேட்கிறேன். சினிமாவை முழுமையாகக் களமாக அமைத்த படத்தில் இந்த மாதிரி லட்டு மாதிரி ஆறு பாடல்கள் கிட்டியிருக்கிறதே அவற்றை மோசம் செய்யாமல் பயன்படுத்த வேண்டும் என்ற மானசீக எண்ணம் கூட இல்லாமல் என்னத்தைப் படம் எடுக்கிறது? 
இனி டிவிடிக்காகக் காத்திருந்து அதிலாவது வெட்டுப்படாத முழுப்படமும் கொடுக்கிறார்களா என்று தேடவேண்டும். அதுவே இடைவேளைக்குப் பின் படத்தை ஒன்றிப் பார்க்க முடியாமல் செய்துவிடுகின்றது.

ராஜாவின் பாடல்களை மோசம் செய்த பெரும் குறையோடு அமிதாப், தனுஷ் ஆகியோரின் உழைப்புக்காக ஷமிதாப் படத்தைப் பாத்து விடுங்கள்.





4 comments:

தனிமரம் said...

படம் பார்க்கும் ஆர்வத்தைத்தூண்டும் பகிர்வு.

தனிமரம் said...

பாடலை கொலை செய்துவிட்டார்கள் என்று அறியும் போது படத்தினை பார்க்கும் ஆவல் குறைகின்றது.

சிவா said...

படத்துல பாட்டு இல்லையா. ம்ம்ம். எல்லா பாட்டையும் விசுவலா பாக்கலாம்னு நேனைசெனே. போச்சா.. அப்புறம் எதுக்கு ராஜாக்கிட்ட வரணும்.. ம்ம்ம்..

கோபிநாத் said...

தல விமர்சனம் தூள்...இந்த வாரம் பார்க்கனும் ;))

தல அடுத்து வர போகும் தாரை தப்பட்டையில 12 பாடல்கள் போட்டுயிருக்கிறார்...அதில் எத்தனை வருமோ..;))