இன்னோர் வகையினர் என்னதான் உச்ச இசையமைப்பாளருடன் இணைந்து பணி புரிந்தாலும் அவர்களின் ராசியோ என்னமோ பாடல்கள் அதிகம் கவனிக்கப்படாது கடந்து விடும். அந்த வகையில் இயக்குநர் விசுவின் படங்களில் பெரும்பாலானவை சங்கர் - கணேஷ் இரட்டையர்களின் இசையில் கவனிக்கத்தக்க பாடல்களோடு அமைந்திருந்தாலும், இளையராஜாவோடு இயக்குநர் விசு இணைந்த கெட்டி மேளம் படம் வந்த சுவடே பலருக்குத் தெரிந்திருக்காது.
அதே வரிசையில் இயக்குநர் வி.சேகர் அவர்களையும் சேர்த்து விடலாம். கிட்டத்தட்ட விசுவின் அடுத்த சுற்றாக இவருடைய படங்களைப் பொருத்திப் பார்க்கும் அளவுக்கு ஏராளமான குடும்பச் சித்திரங்களை உருவாக்கியவர் வி.சேகர்.
"நீங்களும் ஹீரோ தான்" என்ற மாறுபட்ட கதையோடு களம் இறங்கியவருக்கு அடுத்து இயக்கிய "நான் புடிச்ச மாப்பிள்ளை" படத்தின் வெற்றி கை கொடுத்தது. சந்திரபோஸ் இசையில் அந்தப் படத்தில் வந்த "தீபாவளி தீபாவளி தான்" கவனிக்கத்தக்க பாடலாக அனைந்திருந்தது.
இயக்குநர் வி.சேகருக்கு பாடல்களை விட நகைச்சுவை தான் பட ஓட்டத்துக்குக் கை கொடுத்தது. ஆரம்பத்தில் ஜனகராஜ் பின்னர் கவுண்டமணி என்று தொடர்ந்து வடிவேலு, விவேக் என்று நகைச்சுவை நாயகர்களை குணச்சித்திர பாத்திரங்களில் நடிக்க வைத்து வெற்றி பெற்றார். "பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்" வி.சேகரின் இயக்குநர் வாழ்க்கையில் பெரு வெற்றியைக் கொடுத்த படம்.
இயக்குநர் வி.சேகர் இசைஞானி இளையராஜாவோடு இணைந்த மூன்று படங்களில் "ஒண்ணா இருக்க கத்துக்கணும்", "பொறந்த வீடா புகுந்த வீடா" இரண்டும் இவரின் தனித்துவமான குடும்பப்படங்கள். இவற்றிலிருந்து மாறுபட்டு முழுமையான காதல் கதையாக இவர் இயக்கிய "பார்வதி என்னைப் பாரடி" தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கவனிக்கத்தக்க நாயகனாக வலம் வந்த சரவணன் நடிப்பில் வெளிவந்தது.
"பார்வதி என்னைப் பாரடி" படத்தில் அனைத்துப் பாடல்களும் அட்டகாசம் ரகம். அப்போது சென்னை வானொலியின் வழியாக எனக்கு அறிமுகமான பாடல்கள் வரிசையில் இந்தப் படத்தின் பாடல்களும் சேர்ந்து கொண்டன.
குறிப்பாக "சின்னப் பூங்கொடி சிந்தும் பைங்கிளி" பாடல்
அப்போது வயசுக்கோளாறுக்கு உரு ஏத்திய பாடல். அப்போது மின்சாரம் இல்லாத காலத்தில் நண்பர்களோடு பங்கு போட்டு 300 ரூபாவுக்கு மண்ணெண்ணை வாங்கி தண்ணீர் இறைக்கும் ஊசிலி மெஷினை ஜெனரேட்டர் ஆக்கிப் பார்த்த படங்களில் இந்தப் படத்தைப் பார்த்து நொந்த நினைவு மறக்க முடியாது.
"மச்சான் அருமையான காதல் கதையடா"என்று கதையளந்து படத்தைப் போட மற்றவர்களையும் சம்மதிக்க வைத்து, பின்னர் படம் ஓடும் போது ஒவ்வொருத்தர் கண்ணும் விஜயகாந்தின் கொவ்வைப் பழக் கண் ஆகாதது தான் மிச்சம் :-)
எங்களுக்கே இப்படியென்றால் படம் எடுத்த வி.சேகருக்கு எப்படியிருக்கும்? அதன் பிறகு அவர் முழு நீளக் காதல் கதைகளைத் தொடவே இல்லை.
பார்வதி என்னைப் பாரடி படத்துக்கு முன்னர் வி.சேகர் & இளையராஜா கூட்டணியில் வெளிவந்த படம் தான் "பொறந்த வீடா புகுந்த வீடா".
அப்போதைய தனது ஆஸ்தான நாயகி பானுப்பிரியா மற்றும் சிவக்குமார் நடித்திருந்தனர்.
அந்தப் படத்தின் பாடல்களில் எனக்குப் பெரு விருப்பமான பாடலாக அமைந்தது "சந்திரிகையும் சந்திரனும் வேறு வேறு தானடி". அப்போது கொழும்பில் இயங்கிய எஃப் எம் 99 என்ற பண்பலை வானொலி தான் இந்தப் பாடலை ஊரெல்லாம் கேட்க வைத்துப் பிரபல்யம் அடைய வைத்தது.
கவிஞர் வாலியின் வரிகளுக்கு மனோ மூன்று விதமாகத் தன் குரல்களை மாற்றிச் சேஷ்டை பண்ணினாலும் (!) கூட இணைந்த சித்ரா, குழுவினரும் பாடலின் இசையும் மெய்மறக்கச் செய்து இசையில் கலக்க வைக்கும்.
0 comments:
Post a Comment