Pages

Monday, August 31, 2026

சிரித்திடும் வாவிக் கரையோரம் ❤️ யுவன் ஷங்கர் ராஜா & கவிஞர் தாமரை

சிரித்திடும் வாவிக் கரையோரம்,

காத்து நான் கிடந்தனன்,

பதுங்கி மெல்ல வந்தவன்,

பகடி பகடி என்ன....போங்கடி!

யுவன் ஷங்கர் ராஜாவின் கூட்டணியில் அமைந்த பாடலாசிரியர்களில், கவிஞர் தாமரைக்குக் கிடைத்த அற்புதமான களம் இந்தப் பாடல்.

ஈழத்தமிழர் என்று வரும் போது யாழ்ப்பாணத்துக்குள் சுருங்கிப் போகும் திரைப் பாடல்களைத் தாண்டி, மீன் பாடும் தேனாடாம் மட்டக்களப்பு வாவியை நினைப்பூட்டும் பாடல்.

காசி ஆனந்தன் கொடுத்த 

"மீன் மகள் பாடுகிறாள் 

 வாவி மகள் ஆடுகிறாள்

மட்டு நகர் அழகான மேடையம்மா

இங்கே எட்டுத்திசையும்

கலையின் வாடையம்மா"

என்று நம் ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் வரிகளில், தேனிசை செல்லப்பா கொடுத்த பாடலை வானொலியில் அடிக்கடி அரங்கேற்றுவேன்.

முதன்முறையாக கடந்த பயணமொன்றில் "மீன்பாடும்" மட்டக்களப்பு வாவியைத் தரிசித்த போது இந்த இரண்டு பாடல்களும் மனதில் அலை மோதின.

நமது உறவெல்லாம் நம் நாட்டில்தான்

என்றும் நினைத்தோம் 

தவறாகதான்,

இங்கும் உறவு உள்ளது...

தமிழர் மனது பெரியது.....

தம் பெரியம்மா தேசம் மீதான ஈழத்தவரின் நன்றியுணர்ச்சியை மெய்த்தன்மையோடு பறையும், "நந்தா" படத்தில் கவிஞர் தாமரை கொடுத்த வரிகள்.

ஓ...நல்லூரின் விதியெங்கும்

திரிந்தோமடி

தேரின் பின்னே 

அலைந்தோமடி....

கிழக்கில் இருந்து வடக்கு நோக்கிப் பயணிக்கும் பாட்டு.

இந்த இரண்டு தமிழர் பிரதேசங்களையும் இணைக்கும் பாட்டு.

நன்றியுணர்ச்சியோடு எம் பெரியன்னை தேசம் தமிழகத்துக்கும் கடல் பிரித்தாலும், நம் தமிழும் , உணர்வும் இணைக்கும் என்று காட்ட வந்த பாட்டு.

யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ஒரு பிறந்த நாள் பதிவு போடுவோமென்று கடந்த 2 மணி நேரமாக ஒரு நீண்ட பதிவைத் தயாரித்து வைத்து விட்டு அதை அடுத்த வருடம் யுவனிசம் 30 க்குக் கொடுக்கலாம் என்று சேமிப்பில் போட்டு விட்டுத் திரும்பினால், இந்தப் பாடல் தான் கிண்ணென்று காதுக்குள் நிற்கிறது.

முழு நிலவு காயும்

நிலவில் மீன்கள் பாடும் தேன் நாடு

அங்கே இருந்து இங்கே

வாழ வந்த பெண்ணே 

நீ பாடு ❤️


இந்தப் பதிவுக்குப் பாடலாசிரியர் தாமரை பகிர்ந்த அனுபவப் பகிர்வு

மிக்க நன்றி கானா பிரபா Kana Praba ❤️

இந்தப்பாடல் நான் எழுதியதையே தனிக்கதையாக எழுத வேண்டும் ! 😊.

ஈழத்தமிழ் எழுதத் தெரிந்த பாடலாசிரியர் வேண்டும் என்று அவர்கள் தேடியதில் எனக்குக் கிடைத்த வாய்ப்பு இது 😀. (இஞ்சாருங்கோ எழுதியவர் யாரென்று தேடி என்னைப் பிடித்தார்கள் 😀).

பாலா கதை சொல்லி (அவர் எங்கே சொன்னார் !!!!?!!! 😂, அதுவே தனிகதை 😂), லைலா ஈழத்துப்பெண், அவர் திருமணம் நிச்சயமானதால் வரும் பாடல் இது, ஈழத்து வட்டார வழக்கில் பாடல் வேண்டும் என்றார்.... " எந்த வட்டார வழக்கு வேண்டும் ? யாழ்ப்பாணமா, மட்டக்களப்பா, கொழும்பா ? என்று கேட்டேன் 🤭... ஆடிப்போய் விட்டார்... ஓஹோ அப்படியொன்று இருக்கிறதா ? நான் அப்படி லைலாவைக் குறிப்பாகக் காட்டவில்லையே என்று சொன்னார்... நான் வட்டாரங்களுக்கிடையேயான சில வேறுபாடுகளைக் குறிப்பிட்டதும் யோசித்தார். 'இஞ்சாருங்கோ யாழ்ப்பாணத்து வழக்கு' என்று நான் சொன்னதும், 'சரி இதை மட்டக்களப்பு என்று வைத்துக் கொள்ளுங்கள்' என்றார்... 😊... ஈழத்தமிழர்பால் கொண்டிருந்த பற்றும் ஈழ அரசியல் குறித்த முழுமையான புரிதலும் இருந்ததால் எங்கள் இருவருக்கும் உடனடியாக ஓர் இணக்கம் தோன்றியது... எனக்கு முழுச்சுதந்திரம் கொடுத்தார். யாழ்ப்பாணத்தை விட்டுவிட மனமில்லையாதலால் சரணத்தில் நல்லூர் விதயங்களையும் சேர்த்து விட்டேன் 😄. பாடல் பதிவான போது கூடத்தில் அனைவரும் உணர்ச்சி வசப்பட்டோம் 😌... கடல் பிரித்தாலும் நாமெல்லாம் ஒன்றுதான் என்றபோது கண்ணீர் தெறித்தது 😭...

எனக்குக் கிடைத்த மிக அற்புதமான வாய்ப்பு இது...

இதற்குப் பிறகு லைலாவுக்குப் பின்னணி பேச (சவிதா பேசினார்) மொழியுதவி செய்ய முகாமிலிருந்து ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து, முழு பின்னணிக்குரலுக்கும் உடனிருந்து உதவி செய்து கொடுத்தேன்.

பாடல்கள் முடிந்து ஒலிப்பேழை வெளியானபிறகு, பின்னணி இசைக்கோர்ப்பின் போது சேர்க்கப்பட்ட பாடல் 'ஏ மனிதர்மீது மனிதர் கொள்ளும்' - அகதிகளை கடல்திட்டிலிருந்து அழைத்துவர இராஜ்கிரண் செல்லும்போது ஒலிக்கும் பாடல்... அதையும் என்னையே எழுதச் சொன்னார்... அதுவும் அற்புதமான பாடல் (ஒலிப்பேழையில் இடம்பெறவில்லை)... என் அரசியல் கருத்துகளை எழுதிக்கொள்ளக் கிடைத்த பொன்னான வாய்ப்பு இந்தப்படம் ! 🙏.

இங்கே எழுதிப் பதிவு செய்து கொள்ள வாய்ப்பளித்த உங்களுக்கும் நன்றி 🙏❤️

0 comments: