Pages

Sunday, May 26, 2024

இளையராஜா இசையில் பாடகி மனோரமா ❤️

இளையராஜா இசையில் 

பாடகி மனோரமா ❤️



தமிழ்த் திரையுலகில் நடிப்பின் பலபரிமாணங்களைக் காட்டிய, ஆச்சி மனோரமாவின் பிறந்த தினம் மே மாதம் 26 ஆம் திகதி ஆகும்.

அவர் நகைச்சுவைப் பாத்திரங்கள் மட்டுமன்றி குணச்சித்திரப் பாத்திரங்களிலும் கோலோச்சி இருக்கிறார்.

அதுமட்டுமன்றி பல்வேறு இசையமைப்பாளர் இசையில் வெவ்வேறு ரகமாகப் பாடியும் சிறப்புச் சேர்த்துள்ள ஒரு முழுமையான கலைஞர் அவர்.

அவருடைய பிறந்த தினத்தில், இசைஞானி இளையராஜா இசையில் மனோரமா பாடிய பாடல்களைப் பார்ப்போம். 

ஆரம்ப காலத்தில் மனோரமா கூடச் சேர்ந்த நகைச்சுவை நடிகர்களோடு சேர்ந்து பாடும் பாடல் போல அமைந்த பாடல்களாக அமைந்த பாட்டுக்கள் இருக்கின்றன.

குறிப்பாக அச்சாணி படத்துக்காக சுருளிராஜனுக்காக மலேசியா வாசுதேவன் குரல் கொடுக்க, மனோரமா பாடி நடித்த

“அது மாத்திரம் இப்ப கூடாது” https://www.youtube.com/watch?v=1ewaucD5-bk என்ற பாடல் இருக்கிறது.

அப்படியே போனால் தேங்காய்ச் சீனிவாசனுடன் இணைந்து நடித்த, ஆனால் மனோரமா மட்டும் பாடும் “கானாங்குருவிக்கு கல்யாணமாம்” https://www.youtube.com/watch?v=WiPgv2Sh9Qw வாழ நினைத்தால் வாழலாம் படத்துக்காக இருக்கிறது.

இந்தப் பாடலில் இன்னொரு புதுமை இருக்கிறது. இதே பாடலை இன்னொரு வடிவில் வாய் பேசாதவர் பாடுமாற்போலவும் 

https://www.youtube.com/watch?v=zlpS350zRyM

மனோரமா பாடியிருக்கிறார்.

அதுபோல கவுண்டமணியோடு இணைந்து நடித்த மரகதவீணை படத்திலும் தனித்துப் பாடிய “சீச்சி போங்க"  https://www.youtube.com/watch?v=qy4k6Rh_9Uw இருக்கிறது.

இப்படி நகைச்சுவைப் பாடல்கள் என்று சொல்லும் போது இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும்.

எண்பதுகளின் இறுதியில் தமிழ் சினிமாவில் ஒரு அலை கிளம்பியது. அதாவது பல பாடல்களை டம்மி ஆக்கிய கலவைப் பாடல்.

இந்தப் பாணியில் வள்ளி திருமணத்தை மனோரமா எஸ்.எஸ்.சந்திரன் குழுவினர் நடிக்கும் போது இளையராஜா “ஆதி அந்தம் இல்லாதவனே” https://www.youtube.com/watch?v=Bp7X3YwlzNo பாடலை, கலவையாக எல்லாப் பாடல்களையும் இணைத்துக் கொடுத்தார்.  இங்கே மனோரமாவுக்குக் குரல் கொடுத்தவர் பி.சுசீலா. எஸ்.எஸ்.சந்திரனுக்கு இளையராஜா, மற்றும் கிருஷ்ணமூர்த்தியும் இணைந்து பாடியிருக்கிறார்.

இந்த இடத்தில் கூட்டுப் பாடலில் மனோரமாவின் பங்களிப்பில் “தாய் மூகாம்பிகை” படத்தில் இசையரசி என்னாளும் பாடலில் மனோரமாவுக்கு எஸ்.ராஜேஸ்வரி, கே.ஆர்.விஜயாவுக்காக சுசீலா, சரிதாவுக்காக ஜானகி என்று ஒரு அற்புதமான இசை வெள்ளத்தை நிகழ்த்திக் காட்டியிருப்பார்கள்.K.P அதையெல்லாம் தனித்துப் பார்க்க வேண்டும். 

மனோரமா கூட்டுப் பாடகியாக பாடிய பாடல்களில்

நடிகர் விஜய் இன் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய அவள் ஒரு பச்சைக்குழந்தை படத்தில் ஷோபா சந்திரசேகரோடு “பொண்ணு பார்க்க வந்தாரு” https://www.youtube.com/watch?v=n3dz6sCC3cw

“பார்த்தாலே தெரியாதோ” https://www.youtube.com/watch?v=qterlTLCYLo பாடலை ஶ்ரீராகவேந்தர் படத்துக்காக வாணி ஜெயராம்,  கெளசல்யாவுடன் இணைந்து பாடியிருப்பார்.

“வீரத்தாலாட்டு” படத்தில் படிக்கட்டுமா https://youtu.be/6eZg_035rJE?si=calIfe-R-br8fLgu பாடலை எஸ்.ஜானகி பாட, நிறைவில் மனோரமா வருவார்.அடுத்ததாக மனோரமா உரையாடல் பாணியில் குரல் கொடுத்த பாட்டுகளில் மறக்க முடியுமா

இந்த ராஜா கைய வச்சா பாட்டு? https://www.youtube.com/watch?v=Bkjlplvdq_c

அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடலோடு, அப்படியே

அப்படியே சத்யராஜுடன், கற்புள்ள காளையை https://www.youtube.com/watch?v=l-Wg4uMQT-4 பாடலை மகுடம் படத்தில் எஸ்பிபியோடு சேர்ந்திருப்பார்.

இப்படி இளையராஜா இசையில் மனோரமா பாடிய பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகும் போது, 

எனக்கு ஆத்மார்த்தமாகப் பிடிச்ச பாட்டு, முத்துக்காளை படத்தில் மனோரமா ஒரு தொகையறாவாக

“வாழையிலை பரப்பி வச்சு” https://www.youtube.com/watch?v=HFVQpchkNBc கொடுக்க, கூடவே 

ஏர் எடுத்து ஏர் எடுத்து பாடுபடு பாடு என்று எஸ்பிபி இணையும் அற்புதமான பாட்டு.

இதே மாதிரி மனோரமா தொகையறாவாக

மூடி வச்ச முளைப்பயிரா வெளஞ்சு நின்னான் செவலப்புள்ள 

என்று “உன்னை நான் சேர்ந்திருக்க” https://www.youtube.com/watch?v=9DJe0RJPLuo பாடலை, எஸ்பிபி சித்ரா குழுவினரோடும்  ஆர்.வி.உதயகுமார் இணை நாயகனாக நடித்து இயக்கிய சின்ன ராமசாமி பெரிய ராமசாமி படத்துக்காகப் பாடியிருக்கிறார். ஆனால் படம் வெளிவரவில்லை.

ஒரு பாடல் எப்படி அமைய வேண்டும் என்று சந்தம் போட்டு மனோரமா இணையும் நாட்டுப்புற பாட்டு ஒண்ணு https://www.youtube.com/watch?v=JAV_mrBz1F0 பாடல் நாட்டுப்புறப் பாட்டு படத்தில் இருக்கிறது, சித்ரா, அருண்மொழி கூட இணைந்த அருமையான பாடலது.

இளையராஜா இசையில் மனோரமா ஒரு கொண்டாட்டமாகப் பாடி முடித்து விட்டார் போல என்று எண்ணுமாற்போல இளையராஜா, ஸ்வர்ணலதா, எஸ்.என்.சுரேந்தர், அருண்மொழி கூட்டணியோடு

“இனி நாளும் திரு நாள் தான்” https://www.youtube.com/watch?v=xgm-wAyRji0&t=236s பாடலை திருநெல்வேலி படத்துக்காகப் பாடியதையும் சொல்லி வைக்க வேண்டும்.

இந்தப் பகிர்வை எழுத எனக்கு உதவியாக இருந்த இளையராஜா பாடல் திரட்டு வழங்கிய அண்ணன் அன்புவுக்கும் மிக்க நன்றி.

கானா பிரபா

26.05.2024

பதிவை எழுதிய என் பெயரை அழித்துவிட்டு வாட்சாப் மற்றும் தளங்களில் பகிர வேண்டாம்.

0 comments: