Pages

Tuesday, June 28, 2022

“வாராயோ வான்மதி” பாடலோடு திரையிசையிலிருந்து விலகிய பாடகி உஷா ஶ்ரீனிவாசன் 🎧❤️


இரு வாரம் முன்  “வாராயோ வான்மதி தாராயோ நிம்மதி” பாடலை முன்வைத்து அந்தப் பாடலில் இடம்பெற்ற ஆண் குரல் மாதவம்பட்டி ரமேஷ் குறித்து ஒரு பகிர்வை இட்டிருந்தேன்.

அப்போது இந்த “வாராயோ வான்மதி” பாடலில் இடம் பிடித்த பெண் குரல் உஷா ஶ்ரீனிவாசன் அவர்கள் குறித்த தகவலைப் பகிருமாறு ஒரு கோரிக்கை வந்தது.

உஷா ஶ்ரீனிவாசன் அவர்கள் தற்போது அமெரிக்காவில் இருப்பதை அறிந்து அவருக்குத் தகவல் அனுப்பினேன். உடனே அழைக்குமாறு சொன்னார். அவரிடம் சிட்னியில் இருந்து தொலைபேசினேன்.

“வாராயோ வான்மதி” https://www.youtube.com/watch?v=lL7Pe2D98u4 பாடலுக்கு அவர் அழைத்து வரப்பட்ட வரலாற்றையும் மகிழ்ச்சியோடு கூறினார்.

உஷா ஶ்ரீனிவாசன் அவர்கள் சாஸ்திரிய இசையில் துறை போனவர். அவரின் நட்பு வட்டத்தில் ஒருமுறை குடும்ப நிகழ்வில் இவர் பாடியதை அங்கு வந்த விஜயரமணி என்ற டி.எஸ்.ராகவேந்தர் அவர்கள் கண்டு கொண்டார். உஷா ஶ்ரீனிவாசனின் குரல் அவருக்குப் பிடித்துப் போய் விட்டது.

விஜயரமணி வேறு யாருமல்ல இந்தக் காலத்து 2கே கிட்ஸுக்குப் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் விஜய் சூப்பர் சிங்கர் நடுவராக வரும் பாடகி கல்பனாவின் அப்பா.

வைதேகி காத்திருந்தாள், சிந்து பைரவி போன்ற படங்களில் குணச்சித்திரமாக மிளிர்ந்தவர். மெல்லிசை இசைக்குழுவை எண்பதுகளிலும் தொடர்ந்தவர், இசையமைப்பாளர், பாடகர் என்பது அவரின் முதற் தகுதி. இளையராஜாவோடு ஆரம்ப நாட்கள் தொட்டு நட்பாக இருந்து வந்த விஜயரமணி உடனே உஷா ஶ்ரீனிவாசனிடம்

“ஏன் நீங்கள் இளையராஜா சாரைப் பார்க்கக் கூடாது?” 

என்று அன்பு வேண்டுகோளை முன்வைக்கிறார்.

உஷா ஶ்ரீனிவாசனும் இளையராஜாவைச் சந்திக்கவும், ராஜா இவரை ஒரு கீர்த்தனை பாடச் சொல்லிக் கேட்கிறார். பாடி முடித்த பின்னர் 

“பாடும் போது அருமையாகச் சஞ்சாரம் செய்கிறீர்கள்” என்ற பாராட்டை ராஜாவிடம் வாங்கிக் கொண்டவர் பதிலுக்குப் பரிசாகப் பெற்றது “பகல் நிலவு” படத்துக்காக “வாராயோ வான்மதி” பாடல்.

“வாராயோ வான்மதி பாடலை நான் முதலில் பாடும் போது கொஞ்சம் சோகம் அப்பியது போலப் பாடவும்”, ராஜா சார் 

“அப்படி இல்லைம்மா அந்தப் பாடலில் நீங்க பாடும் போது அந்தத் தொனி வரக்கூடாது” என்று சொல்லி வைத்தாராம். 

தனக்கு இந்தப் பாடலுக்குப் பயிற்சி கொடுத்த, ஆர்மோனியமும் கையுமாக இருந்த ராஜாவின் உதவியாளர் சுந்தரராஜன் சார் ரொம்பத் தங்கமான மனுஷன்” என்றும் இந்தப் பாடல் அனுபவத்தைச் சொன்னார் உஷா ஶ்ரீனிவாசன்.

“கேளாயோ கண்ணா

 நான் பாடும் கீதம்” (நானே ராஜா நானே மந்திரி)

https://www.youtube.com/watch?v=d6XuRWXEcYk

என்ற பாடலில் பி.சுசீலாவுடன் நீங்களும் சேர்ந்து பாடுவதாக ரெக்கார்ட் இல் எல்லாம் இருக்கே ஆனா அந்தப் பாட்டில் சுசீலாம்மா தனித்துப் பாடுவது தானே இருக்கு?

கானா பிரபா இன்னொரு கேள்வியைக் கேட்டேன்,

“வாராயோ வான்மதி” பாடல் அந்த நேரம் ஹிட் ஆனதும் நம்ம குடும்பத்துக்குச் சினிமாப் பாட்டு ஒத்து வராதுன்னு தடை போட்டு விட்டார்கள். அதே சமயத்தில் இந்தப் பாடல் பாடும் வாய்ப்பு வந்தும் நான் பாடவில்லை” என்று தெளிவுபடுத்தினார் உஷா ஶ்ரீனிவாசன்.

ஏழு வயதில் சங்கீதம் பயின்று தன் 14 வது வயதில் அரங்கேற்றியவர், ஈஸ்வராலயா http://www.eswaralaya.com/home.html என்ற இசைப் பள்ளியை இன்று வரை நடத்திப் பல இசைச் செல்வங்களை உருவாக்கிய திருமதி. உஷா ஶ்ரீனிவாசன் “சங்கீத ரத்னா” என்ற விருதை சென்னை மியூசிக் அக்கடமி வழி பெற்றதோடு இன்னும் பல விருதுகளைத் தான் கொண்ட சங்கீத உலகத்துக்காகப் பெற்றிருக்கிறார்.

உஷா ஶ்ரீனிவாசன் வரவுக்கு முன்னர் சாஸ்திரிய இசைப் பாடகி எஸ்.ராஜேஸ்வரி அவர்களுக்காக இளையராஜா கொடுத்த வாய்ப்பு “இசையரசி என்னாளும் நானே” என்று தாய் மூகாம்பிகை படத்தில் பி.சுசீலா & எஸ்.ஜானகி ஆகிய இமயங்களுடனும், எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற சிகரத்தோடு “ஒரு ஓடை நதியாகிறது படத்தில் இடம் பிடித்த

“தலையைக் குனியும் தாமரையே” பாடல்கள். ஆனால் இணையம் இந்தப் பாடலை மழலைக் குரல் புகழ் எம்.எஸ்.ராஜேஸ்வரி கணக்கில் எழுதி வைத்திருக்கின்றது.

கானா பிரபா

28.06.2022


1 comments:

Anonymous said...

அருமை.சிறப்பு