Pages

Monday, June 13, 2022

“வானத்தில் இருந்து குதிச்சு வந்தேனா” பாடலாசிரியர் வாசன் ♥️

தான் படைத்ததற்கு ஆயுளைக் கூட்டுவதாலோ என்னமோ சில படைப்பாளிகள் நம்மை விட்டுச் சீக்கிரமாகவே மறைந்து விடுகிறார்கள் என்று எண்ணத் தோன்றும். 

அப்படியாகச் சமீப வருடங்களுக்கு முன் வலியை இறக்கி விட்டுப் போனவர் நா.முத்துக்குமார். 

அவரின் இலக்கியக்கார அண்ணன் வாசனும் தன் தம்பிக்கு வழிகாட்டி விட்டுப் போனாரோ, அல்லது தம் இலக்கியப் பாட்டன் பட்டுக்கோட்டையாரின் வழியிலேயே போனார்களோ என்றும் நினைப்பதுண்டு.

வானத்தில் இருந்து குதிச்சு வந்தேனா

பூமிக்குள் இருந்து வெடிச்சு வந்தேனா.....

https://www.youtube.com/watch?v=oAYbcubUg_A

தன்னையும் நினைத்துப் பார்க்க வைத்த வரிகளைச் சமைத்தவர்,

எம் பிரியத்துக்குரிய பாடலாசிரியர் வாசன் அவர்களுக்கு இன்று அகவை 52 பிறக்கிறது. 

பால்ய காலத்த்தில் நம் உணர்வோடும், ரசனையோடும் உறவாடிய படைப்பாளிகள் நம் குடும்பத்தில் ஒருவராகி விட்டது போன்று வாழ்ந்து விடுவார்கள். அப்படி ஒருவர் தான் பாடலாசிரியர் வாசன் அவர்களும். தொண்ணூறுகளின் அவரின் வருகையும் தொடர்ச்சியாக அவர் திரையிசையில் வழங்கிய செழுமையான பங்களிப்பையும் கண்டு அதிசயித்துக் கொண்டே அவர் பாட்டை ரசித்தோம்.

தொண்ணூறுகளில் அடுத்த தலைமுறைப் பாடலாசிரியர்களில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக உதித்தவர் நம் பாடலாசிரியர் வாசன் அவர்கள். ஆனால் பட்டுக்கோட்டை கல்யாணம் சுந்தரம் போன்றே பாட்டுக் கோட்டை கட்டிய வாசன் அவர்களைக் கலையுலகம் வெகு சீக்கிரமாகவே இழந்தது இன்னமும் பேரதிர்ச்சியோடு திரையிசை ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது. அதற்குக் காரணம் பாடல்கள் தோறும் அவர் கட்டிக் கோர்த்த வரிகளின் செழுமை, எனவே தான் அவர் பாடல்களை அடையாளம் கண்டு கேட்கும் போதெல்லாம் அந்த இழப்பின் வலி உணரப்படும். 

மலராய்ச் சிரிப்பாள் மனதைப் பறிப்பாள்

கனவில் தினமும் வந்து கண்ணடிப்பாள்

வானத்துத் தாரகையோ

யாரவள் தேவதையோ

வார்த்தைகளும் மயங்கிடும்

கலைவாணியின் மகளோ

https://www.youtube.com/watch?v=C8N4t4ByTKA

இசைஞானி இளையராஜாவின் தொண்ணூறுகளின் பிரியத்துக்குரியவை என்று ஒரு பட்டியல் போட்டால் தவிர்க்க முடியாத 

“வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே”

https://www.youtube.com/watch?v=JUTlA6jvpjA

“தென்றலைக் கண்டு கொள்ள மானே”

https://www.youtube.com/watch?v=f-7ZRDiW6pE

பாடல்களின் கரு முட்டையாக இருப்பார் கவிஞர் வாசன். 

ஒரு நாள் உனை விழிகள் பார்க்க

இது யார் என இமைகள் கேட்க

இவள் தான் உன் இதயம் என்றது 

காதல் 

https://www.youtube.com/watch?v=2A_Jijz58ik

ஹரிஹரன் பாடும் தொனியில் மனதின் அடியாழத்தில் இருந்து எழும் ஏக்க வெளிப்பாடாகத் தொனிக்கும். பரிபூரணமாகத் தன் மனசை ஒப்படைத்த காதலனின் மன ஓசை அது.

மிகப் புதுமையாக மெட்டமைக்கப்பட்ட இந்தப் பாடல் தொல்லி பிரேமா என்ற தெலுங்குப் மொழி மாற்றுப் படத்துக்கான பாடலுக்கே (ஆனந்த மழை) வாசன் அவர்கள் நிரப்பிய வரிகள் என்றெண்ணும் போது அகல விரியும் ஆச்சரியம்.

“கொல்லாமல் கொல்லும் காதல் 

பொல்லாதது......

ஜில் என்ற தீயில் ஜீவன் நனைகின்றது

எங்கே 

           எங்கே 

                      எங்கே

ஒரு நாள் உனை விழிகள் பார்க்க

இது யார் என இமைகள் கேட்க

இவள் தான் உன் இதயம் என்றது 

காதல்

உயிரை திறந்து விடு புரியும்

உனக்குள் இருப்பது யார் தெரியும்

மனதில் எனதுருவம் விரியும் 

காதல்

கொல்லாமல் கொல்லும் காதல் 

பொல்லாதது

இப்படியாக நேரடித் தமிழ்ப் படங்களிலும், மொழி மாற்றிலும் கூடத் தன் சாகித்தியத்தைக் கொட்டிய திரையிசைக் கவிஞர் அவர்.

“முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே

எனை மறந்து எந்தன் நிழல் போகுதே

என்னில் இன்று நானே இல்லை

காதல் போல ஏதும் இல்லை

எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா”

https://www.youtube.com/watch?v=gkbRLhDN48g

தஞ்சை வாசன் என்ற பாட்டுக்காரரின் திரையிசைத் திறவுகோல் தேனிசைத் தென்றல் தேவாவால் கொடுக்கப்பட்டதோடு தொடர்ந்து அவரை தன்னிசையில் பாடல்கள் சமைக்க வழி சமைத்தார்.

“காஞ்சிப் பட்டு சேல கட்டி

கால் கொலுசில் தாளம் தட்டும்

கன்னிப் பொண்ணே நின்னு கேளம்மா

என் மனைவி வந்த பின்னால்

என்னவெல்லாம் செய்வேனென்று

சேர்த்து வைத்த ஆசை சொல்லவா”

https://www.youtube.com/watch?v=Q1dz_h4UD_I

97 ஆம் வருஷம் வெளிவந்த “ரெட்டை ஜடை வயசு” படத்தில் ஐந்து பாடல்களைக் கொடுத்து அழகு பார்த்தவர் தேனிசைத் தென்றல் தேவா.

கானா பிரபா

பாடலாசியர் வாசனின் சகோதரி திருமதி கற்பகவள்ளி துரைராஜ் 

தன் அண்ணன் வாசன் அவர்களது படைப்புலக முயற்சிகளைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருபவர் அவர்.

தன் சகோதரிக்காகவே அண்ணன் எழுதி வைத்து விட்டுப் போனதாக அமையும்

இரு கண்கள் போதாது

ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க

என் இமையும் மூடாது

கல்யாணத் தேரில் உன்னைப் பார்க்க

ஆனந்தத்தால் விழி நீரிலே

பாடுகின்றேன் ஒரு பாடலே

வாழ்த்துச் சொல்லி பாடும் குயில் நான்

https://www.youtube.com/watch?v=g7Xm3W72HhQ

சகோதரி கற்பகவள்ளி துரைராஜ் வழியாக அவரின் வாசனின் கலை, இலக்கியப் பயணத்தைப் பேச ஒரு வாய்ப்புக் கிடைத்தது.  அவரிடம் நான் வாசனோடு பேசுவதாக நினைத்துக் கேட்டவை இவை.

முதலில் உங்கள் சகோதரர் வாசன் பாடலாசிரியராக அறியப்படுவதற்கு முன்னால் அவரது வாழ்வியல் இயக்கத்தின் ஆரம்பம் பற்றிச் சொல்லுங்களேன்?

திரையுலகில் பாடலாசிரியராக வருவது என்பது ஒப்பீட்டளவில் மற்றைய திரையிசைப் பணிகளை விடச் சவால் நிறைந்தது. இந்த நிலையில் இப்படியானதொரு பாதையை அவர் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?

அதில் எப்படி வெற்றி கண்டார்?

கவிஞர்களைப் பொறுத்தவரை அவர்களின் பாடல்களில் தம்முடைய வளர்ப்பு, வாழ்வியல் பின்னணி என்பது பிரதிபலிக்கும் அப்படி வாசன் அவர்களின் பாடல்களில் நீங்கள் கண்டு கொண்ட பாடல்களை ஒரு உடன் பிறப்பாக உதாரணங்களுடன் காட்ட முடியுமா?

இயக்குநர் சேரனது ஆரம்ப கால இயக்கத்தில் கவிஞர் வாசன் அவர்கள் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறார் என்பதை அவரின் இழப்பின் போது சேரன் கொண்ட துயர் வெளிப்படுத்தியது. அதைப் பற்றி?

இசைஞானி இளையராஜாவின் கோட்டைக்குள் பல மூத்த பாடலாசிரியர்களுக்குத் தொடந்து வாய்ப்பு வழங்கப்பட்ட சூழலில் வாசன் எப்படி அவர் மனதில் நீங்கா இடம் பிடித்துக் கொண்டார்?

ஒரு குறுகிய காலப்பகுதியிலேயே வாசன் அவர்கள் நூறு பாடல்களைத் திரையிசைக்காகப் பிரசவித்ததும், இப்போது அதனை நினைவுகூர்ந்து 2 ஆண்டுகளுக்கு முன்னர் அவை திரையிசைப் பாடல் திரட்டாகவும் வெளிவந்தது. அது பற்றிச் சொல்லுங்களேன்?

திரையிசைப் பாடலாசிரியர் தாண்டி அவர் கவிஞராக வெளிப்பட்ட போது வெளியான நூல்கள்?

வாசன் அவர்களைச் சக கவிஞர்கள் எப்படி நோக்கினார்கள்?

தன்னுடைய திரையிசைப் பாடல் அனுபவங்கள் குறித்தெல்லாம் வாசன் பேசியிருக்கிறாரா? அவற்றில் நினைவுபடுத்தக் கூடிய சுவையான நிகழ்வுகள்?

ஒரு பாடலாசிரியரின் ஒரு பாடலே அவரின் தன்மையை அடையாளப்படுத்தி விடும் அப்படி ஒரு பாட்டாக “வானத்தில் இருந்து குதிச்சு வந்தனா” பாடலை இன்று அவர் இல்லாத சூழலில் வாசனோடு பொருத்திப் பார்க்கிறேன். குறிப்பாக இந்தப் பாடலோ அல்லது வேறு ஏதாவது ஒரு பாடலோ உங்களுக்கும் அப்படியானதொரு தாக்கத்தை எழுப்பியிருக்கிறதா?

இந்த உரையாடலில் நான் கேட்ட கேள்விகளும் அவர் தந்த பதில்களுமாக வீடியோஸ்பதி காணொளித் தளத்தில் 

இந்தப் பகிர்வைக் காணொளியில் பார்க்க

https://www.youtube.com/watch?v=3vLIozYGzPw&t=451s

தன் அண்ணன் வாசனின் அரிய புகைப்படங்களையும் பகிர்ந்தளித்தார் சகோதரி.

கவிஞர்கள் காலத்தின் கண்ணாடிகள், சமூகத்தின் அறைகூவல்கள். அதனால் தான் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தம் அக வெளிப்பாட்டைப் படைப்பில் கொட்டித் தீர்த்து விடுவார்கள்.

தேசிய கீதத்தில் இரண்டு விதமான சமூகப் பார்வைக்குக் களம் அமைக்கப்படுகிறது கவிஞர் வாசனுக்கு

அதில் ஒன்று, தான் கனவு தேசம் குறித்த தேடலாக 

“என் கனவினைக் கேள் நண்பா

உனக்குப் புரியும்”

https://www.youtube.com/watch?v=YVGaKkfQSbs

98 இல் அவர் கண்ட கனவு

“பாட்டி பால் விற்ற

கணக்கை கம்பியூட்டர்

பதிய வேண்டும்

நாற்று நடுகின்ற பெண்ணும்

செல்போனில் பேச வேண்டும்”

கண்டு விட்டோம் இன்று.

 இன்னொன்று தான் காணும் தேசத்தைக் கண்டு மனம் வெதும்பிப் பாடும்

“நண்பா நண்பா 

நாடிருக்கும் நிலையைப் பாரடா...

https://www.youtube.com/watch?v=EX273SjoN68

1998-ம் ஆண்டு டிசம்பர் 11

வாசன் அண்ணனின் பிரிவுச் செய்தியை எடுத்து வந்த நா.முத்துக்குமார் ரிலே பந்தயத்தின் ஆட்டக்காரன் போல அவரின் பேனாவை எடுத்துக் கொண்டு, அடுத்த ஆண்டு 99 இலிருந்தே அடுத்த தசாப்தம் திரையிசை உலகை ஆண்டது வரலாறு.

கவிஞர் வாசனுக்குப் பிறப்பு உண்டு 

ஆனால் மரணமில்லை. 

இன்று அவரின் பிறந்த நாளில் ஏதோவொரு வானொலி ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அவரின் பெயரைக் கூறாது விடினும் அவரின் பாடலைக் காற்றலையில் தவழ விடும். 

அப்போது முகில் கூட்டங்களின் நடுவில் இருந்து 

மெல்லிய புன்னகையைத் தவழ விடுவார் எங்கள் வாசன்.

நொடிக்கொரு தரம் உன்னை 

நினைக்க வைத்தாய்

அடிக்கடி என்னுடல் 

சிலிர்க்க வைத்தாய் ♥️

கவிஞர், பாடலாசிரியர் தஞ்சை வாசனுக்குப் புகழ் வணக்கங்கள்.

கானா பிரபா

13.06.2022



0 comments: