பாசத்துக்குரிய பாரதிராஜாவின்
பாட்டுக்கார மலேசியா வாசுதேவன் ❤️
ஜூன் மாதம் 15 ஆம் திகதி பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்களின் பிறந்த தினம்.
இம்முறை பல வருஷங்களுக்குப் பிறகு பாரதிராஜாவும், மலேசியா வாசுதேவனும் விண்ணில் இருந்து பேசிக் கொண்டிருப்பார்கள் இல்லையா?
“16 வயதினிலே” எத்தனை பேருக்கு வாழ்வு கொடுத்தது பாருங்கள்.
இயக்குநராக பாரதிராஜாவுக்கும், உதவி இயக்குநராக கே.பாக்யராஜுக்கும்,
அறிமுகப் பாடலாசிரியராக கங்கை அமரனுக்கும், இன்னும்
“இந்தப் படத்தில் தான் எனக்குப் பின்னணி இசையமைக்கக் களம் (space) கொடுத்திருக்கிறாய்” என்று இளையராஜா மனம் விட்டுச் சொல்லவும்,
இவர்களை எல்லாம் தாண்டி மலேசியா வாசுதேவன் என்ற அற்புதமான மண்ணின் குரலுக்கு வாழ்வு கொடுத்ததுமாக அமைந்து விட்டது.
மலேசியா வாசுதேவன் பாடிய முதற் திரையிசை “பாலு விக்கிற பத்மா” பாடல் வி.குமார் இசையில் டெல்லி to மெட்ராஸ் (1972) , அதைத் தொடர்ந்து எம்.எஸ்.விஸ்வநாதன் இசையிலும் பாடியவர், ஏன் இளையராஜா இசையிலேயே “உறவாடும் நெஞ்சம்” படத்தில் “Dear Uncle” பாடலைப் பாடுவதற்காக இளையராஜாவே தன் காரில் அழைத்துக் கொண்டு தன் குருநாதரின் ஆசியைப் பெற வைத்து, பாட வைத்ததாக மலேசியா வாசுதேவன் குறிப்பிட்டிருப்பார்.
உறவாடும் நெஞ்சம் பாடும் போது என் மகன் தாய் வயிற்றில் ஆறு மாசம், யுகேந்திரன் பிறந்ததும்16 வயதினிலே பாட்டு என்பார்.
மலேசியா வாசுதேவன் என்ற முழுமையான பாடகனைப் பிறக்க வைத்ததும் இந்தப் படமானது.
16 வயதினிலே படப் பூஜைப் பாடல்
பெரும் திருப்புமுனையாக “செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்காவாய்ப்பு இசைஞானி இளையராஜா இசையில் கிடைத்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் குரல் கெட்டுப் போனதால் பூஜைக்குப் பாடிய பாடலே இவரின் தலையெழுத்தை மாற்றியது.
இதில் ஒரு புதுமை என்னவென்றால் SPB தெலுங்கு, தமிழ், கன்னடம் என்று அறிமுகமான போது அவரோடு முதன் முதலில் ஜோடி கட்டிய குரல் P.சுசீலா.
எனக்கு ராசியான குரல் சுசீலாம்மா என்பார் SPB.
இங்கே மலேசியா வாசுதேவனின் தலையெழுத்தை மாற்றிய பாடலிலும் ஜோடி அவரே.
உண்மையில் 16 வயதினிலே படத்தில் மலேசியா வாசுதேவனுக்கு முழுப் பரிமாணத்தை அளித்தது “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு” பாடல்.
அதுவே பின்னாளில் அவருக்கான முப்பரிமாணப் பாடல்களுக்கும் வித்திட்டது.
சப்பாணிக்கு ஒரு பாட்டு என்று கங்கை அமரன் சொன்ன ஆட்டுக்குட்டி முட்டை என்ற எடுத்தாளலை உள்வாங்கி கண்ணதாசன் கடகடவென்று எழுதித் தள்ளியதாக ஆச்சரியப்பட்டிருப்பார் கங்கை அமரன்.
இந்தப் பாடலில் இவ்விதம் இரண்டு ஆச்சரியங்கள்.
“தென்றலே ஆசை கொண்டு
தோகையைக் கலைந்ததம்மா”
அவர் இந்த இடத்தில் வரும் போது எழும் உணர்வூட்டத்தைப் பாருங்கள்.
அதுதான் மலேசியா வாசுதேவன் எனும் மந்திரக் குரலின் ஜாலம்.
“புதிய வார்ப்புகள்” அறிமுக நாயகன் பாக்யராஜின் குரலாக வந்தவர் பின்னாளில் பாக்யராஜின் குரலாளனாக எத்தனை எத்தனை முத்துகளைக் கொடுத்தார்.
“என் மனது தாமரைப்பூ
உன் மனது முல்லை மொட்டு
காலம் வருமே நீ கூட பெண்ணாக,
கோவில் மணி ஓசை கேட்டதாரோ…”
இங்கே அறிமுக நாயகன் சுதாகருக்கு மலேசியா வாசுதேவன் குரலைப் பொருத்துகிறார் பாரதிராஜா.
அதே படத்தில் வராத மாமணிப் பாட்டு “மலர்களே நாதஸ்வரங்கள்” எப்படித்தான் மறப்போமோ?
பூமியில் மேகங்கள்..
ஓடியாடும் யோகமே…
மலையின் மீது
ரதி உலாவும் நேரமே…
சாயாத குன்றும்
தாளாத நெஞ்சும்
தாலாட்டு பாடாமல்
தாயாகுமோ…
ஆயிரம் மலர்களே
மலருங்கள்..
உதவி இயக்குநராக இருந்த விஜயனை அரிதாரம் பூச வைத்து நாயகனாக்கிய நிறம் மாறாத பூக்களில் கூட மலேசியா வாசுதேவனே கதாநாயகன்.
“தோப்பிலொரு நாடகம் நடக்குது” கல்லுக்குள் ஈரம் பாடலின் தொடக்கத்தில் இளையராஜாவின் குரல் அறிமுக நாயகன் பாரதிராஜாவுக்கும், மலேசியா வாசுதேவன் குரல் சுதாகருக்குமாக அமைந்து விடுகிறது.
மலேசியா வாசுதேவனை “கொலுசு” திரைப்படம் வழியாக கே.எஸ்.மாதங்கன் நடிகராக அறிமுகப்படுத்தினார்.
“நடிக்க ஆரம்பிச்சாச்சா?” என்று
பாடகராக ஒரு திருப்பு முனை கொடுத்த அதே பாரதிராஜாவே ஒரு கைதியின் டைரி வழியாக மலேசியா வாசுதேவன் என்ற நடிகர் தொடர்ந்து புகழ்பூத்த நடிகராக விளங்கத் திருப்புமுனை கொடுத்தார்.
“தோட்டத்திலே பல பூக்கள் உண்டு
நீதானே என் சிகப்பு ரோஜா,
இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது”
இரண்டே இரண்டு கண்ணே கண்ணு என்று விளங்கிய பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் பாட்டுகள் இரண்டில் ஒன்று மலேசியாவுக்கே.
“ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையில்”,
“அரிசி குத்தும் அக்கா மகளே” “அட மூக்கியரெ மூக்கம்மா” என்று முத்தான மூன்றை “மண்வாசனை” பாண்டியனுக்கு மலேசியா வாசுதேவனைப் பாட வைத்து அழகு பார்த்தார்கள்.
“அழகே உன்னை”, “டக்கர் டக்கர் பேபி” என்று இன்னும் இரண்டு, பாரதிராஜாவின் திரையோட்டத்தின் கரும்புள்ளி “வாலிபமே வா வா” விலும் கூட மலேசியா வந்தார்.
“ஓ…. ஒரு தென்றல் புயலாகி வருமே” வேட்கையோடு எழும் “புதுமைப் பெண்” ணுக்காக ஆதரவுக் குரலாக அங்கும்.
கடலோரக் கவிதைகளில் எல்லோரும் பாடினாலும் என்ன
“அடி ஆத்தாடி” என்று சோக ராகத்துக்கு மலேசியாவை அழைத்து வந்து விடுவார்கள்.
அது போலவே தேவேந்திரனோடு சேர்ந்த போதும் பாரதிராஜாவின் ஜோடிக் குரல்
“மாட்டு வண்டிச் சாலையிலே” வேதம் புதிதில்
பாடியது.
ஹம்சலேகாவுடன்” கொடி பறக்குது” இசையிலும் “தொண்டைக்குள்ளே” பாட்டுக் கொடுத்தார் பாரதிராஜா.
அந்த வரிசையில் “பசும்பொன்” வித்யாசாகர் இசைக் கூட்டணியிலும் “ஏலே ஏலே” பாட்டுக் கிட்டியது இவருக்கு.தேவாவும் தன் பங்குக்கு கடல் பூக்களில் ஒரு பாட்டளித்தார்.
“ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா” பாடல் பதிவாகி விட்டது. அப்போதுதான் மலேசியா வாசுதேவனை அழைத்துக் கொண்டு வருகிறார் பாரதிராஜா. இவரின் குரலையும் சேர்த்து ஒலிப்பதிவு செய்யுங்கள் என்ற வேண்டுகோளில் அது பரிபூரணம் ஆனது.
அந்த என்னுயிர்த் தோழனில்
“குயிலுக் குப்பம் குயிலுக்குப்பம் கோபுரம் ஆனதென்ன…”
மலேசியாவைத் தாண்டி யாரை நினைக்க முடியும்?
“ஏலமலைக் காட்டுக்குள்ளே”
அந்த நாடோடிப் பாட்டுக்காரன் குரல் கேட்கவில்லையோ நாடோடித் தென்றல் வழியே…
“தென்கிழக்கு சீமையில
செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட சாதிக்கொரு
ஈரமிருக்கு…”
“கிழக்கு சீமையிலே” இன் அடிநாதம் இவர் தானே?
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக
“காடு பொட்டல் காடு”
பாரதிராஜா & மலேசியா வாசுதேவன் கூட்டணியை முதன் முதலில் ஜோடி போட வைத்து அழகு பார்த்தார் “கருத்தம்மா”வில் ரஹ்மான்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இன்மையில் “முதல் மரியாதை” ஐ நினைக்காத உள்ளங்கள் ஏது?
அங்கே சிவாஜி கணேசன் என்ற நடிப்பரசனின் பாட்டு அரசனாகி நிற்கிறார் மலேசியா வாசுதேவன்.
“ஏ குருவி”, “ஏறாத மலை மேலே” வகையறாக்களோடு நெஞ்சை அள்ளும் இரண்டு பாட்டுகள்.
“வெட்டி வேரு வாசம் வெடலப் புள்ள நேசம்”
“பூங்காற்று திரும்புமா?”
பாரதிராஜாவின் பொற்காலத்தைப் பேசும் போது இளையராஜாவோடு மலேசியா வாசுதேவனும் கூட வருவார்.
இனி “பூங்காற்று திரும்புமா” பாடலை ஏக்கத் தொனியோடு கேட்கும் போது மலேசியா வாசுதேவனுடன் பாரதிராஜாவும் கூட வருவார்.
கானா பிரபா


0 comments:
Post a Comment