Pages

Thursday, March 14, 2019

பாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕

“சுசீலாம்மாவுடன் பாடும் போது கூடப் பாடுபவரின் குரல் மங்கிப் போய் விடும். நாங்க கஷ்டப்பட்டு ஒரு பாடலின் expression ஐக் கொடுக்கும் போது அவர் அதை இரு மடங்காகக் கொடுத்து விடுவார். நமக்கு வாய் வலிக்கும்.
இசையமைப்பாளர் சரத் சொல்லுவார் ‘ஜெயேட்டா! சுசீலாம்மா சங்கதிகளை அவர் பாடுவதில்லை
அது அவருக்குள் இருக்கிறது”
இவ்வாறு இசையரசி P.சுசீலா அவர்களது சாகித்தியத்தைப் பய பக்தியோடு மெச்சுவார் பாடகர் ஜெயச்சந்திரன். ஜெயச்சந்திரன் 75 தொடரில் P.சுசீலா அம்மாவும் ஜெயச்சந்திரன் அவர்களும் இணைந்து பாடிய பல பாடல்கள் வரவிருக்கின்றன என்றாலும் இன்றைய பதிவுக்காக நான் தேர்ந்தெடுதது ஜி.கே.வெங்கடேஷ் இசையில் “காஷ்மீர் காதலி” திரைப்படப் பாடலான “சங்கீதமே என் தெய்வீகமே”
“தேன் சிந்துதே வானம்…
எனை உனைத் தாலாட்டுதே”
என்றொரு இளையராஜாத் தனமான பாட்டினால் தமிழ் இசை ரசிகர்கள் மனதில் இன்று வரை “யார் இந்த இசையமைப்பாளர்?” என்று தேடி நிலைத்தவர் ஜி.கே.வெங்கடேஷ். ஆனால் பல்லாண்டுகளுக்கு முன்பே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் நட்பால் ஆதி தொட்டு இசையமைத்து வந்தவர் கன்னடப் பட உலகில் தனிக் காட்டு ராஜாவாகத் திகழ்ந்தார். அந்தக் காலத்தில் தமிழில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், தெலுங்கு கே.வி.மகாதேவன், கன்னடத்துக்கு ஜி.கே.வெங்கடேஷ் என்று எழுதப்படாத எல்லைகள் போட்டு இசை ராஜாங்கம் நடத்தினர். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மட்டும் மொத்தம் 51 பாடல்களை ஜி.கே வெங்கடேஷ் இசையில் பாடிச் சாதனை படைத்தார் என்று விக்கிப்பீடியா புகழாரம் சூட்டுகிறது.
இசைஞானி இளையராஜாவின் இன்னொரு குரு, நீண்ட காலம் அவருடைய உதவியாளர். அதற்கும் மேலாக “பொண்ணுக்குத் தங்க மனசு” படத்தில் வரும் “தஞ்சாவூரு சீமையிலே” பாட்டுதான் என்னுடைய வரிகளில் ராஜா இசையமைத்த முதல் பாட்டு என்று கவிஞர் முத்துலிங்கம் வேறு பெருமையடித்துக் கொள்கிறார். இது இவ்வாறிருக்க
“காஷ்மீர் காதலி” படம் வெளியாகிறது. பாடல்களைக் கேட்டால் அதியற்புதமான இசைக் கோவை, இளையராஜாவின் வித்து எங்கிருந்து வளர்க்கப்பட்டது என்று நிரூபிக்க ஒரு படமாக அந்தப் படப் பாடல்கள் வந்தன. எல்லாப் பாடல்களுமே அப்போது சூப்பர் ஹிட். (அதில் ஏ.ஈ.மனோகரின் ஹிக்கிரி பலன பாடல் கூட உண்டு).
“காஷ்மீர் காதலி” படத்தைக் கதை, வசனம் எழுதி இயக்கிய மதி ஒளி சண்முகம் தன்னுடைய “நெஞ்சில் ஒரு முள்” படத்திற்கும் ஜி.கே.வெங்கடேஷ் ஐத் தான் இசையமைப்பாளராக்கியவர்.
நடிகை லதாவின் தம்பி, ஶ்ரீப்ரியாவின் கணவர் ராஜ்குமார் தான் காஷ்மீர் காதலி பட நாயகன்.
“அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன்” என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிக்கு ஒரு இசைப் பரிசென்றால் இன்னொரு பக்கம் P.சுசீலா & ஜெயச்சந்திரபை வைத்து “சங்கீதமே என் தெய்வீகமே” பாடல்.
இத்தனைக்கும் முன்பே ஜெயசச்சந்திரன் அவர்கள் ஜி.கே.வெங்கடேஷ் இசையில் “அழகு” படத்துக்காக (எஸ்.ஜானகியுடன்) “மெளனமல்ல மயக்கம்”
“பெண்ணின் வாழ்க்கை” படத்தில்
“மாசி மாதம்” ( P.சுசீலாவோடு)
பாடியதை றேடியோ சிலோன் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். ஆனால் காஷ்மீர் காதலி படத்தில் இடம்பெற்ற “சங்கீதமே என் தெய்வீகமே” பாடல் முன்னைய பாடல்களில் இருந்து முற்றிலும் விலகிய ஒரு நவீனத்துவம் கொண்டது. ஜெயச்சந்திரனும் சரி சுசீலாவும் சரி அதிக நெகிழ்வுத் தன்மையோடு சாஸ்திரிய சங்கீதம் இல்லாது ஒரு இறுகிய குரலோடு
பாடலைக் கையாண்டிருப்பார்கள். உதாரணத்துக்கு பாடலின் ஆரம்ப வரிகளான “சங்கீதமே என் தெய்வீகமே” ஐ ஒருமுறை இரை மீட்டிப் பாருங்கள். இதை இன்னும் நெகிழ்வுத் தன்மையோடும் பாடிக் காட்ட முடியும். ஆனால் முழுப் பாடலிலும் இசை ஆவர்த்தனங்களின் கோட்பாட்டோடு பயணிக்கும் பாங்கில் இந்தக் குரல்களும் இருக்கும். பாடலில் கோவையாக்கிய இசையில் நவ நாலரிகம் நேர்த்தியோடு மிளிரும். இந்தப் பாடலையெல்லாம் இசை மேடைகளில் பாடினால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்?
“காஷ்மீர் காதலி” பாடல்கள் ஜி.கே.வெங்கடேஷ் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துக் காட்டியது. அதில் இந்த “சங்கீதமே என் தெய்வீகமே” பாடல் ஜெயச்சந்திரனின் இசை வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு மைல்கல்.
சங்கீதமே….என் தெய்வீகமே
நான் தேடும் என் காதல் ராஜாங்கமே
என் ராஜாங்கமே…..
வானோரும் காணாத பேரின்பமே….
பேரின்பமே…..
பாடலை நல்ல ஒலித்தரத்தில் கேட்க
கானா பிரபா
ஜெயச்சந்திரன் இன்னும் வருவார்

1 comments:

ரசிகன் said...

ஜெயசந்திரன் அவர்கள் பாடியுள்ள அனைத்து பாடல்களும் சிறந்த பாடல்கள்