Pages

Thursday, March 14, 2019

பாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள் கனவென்னும் முடி சூடிக் கன்னம் சிவந்தாள் 💕

இப்போதெல்லாம் சூப்பர் சிங்கர் மேடைக்கென்றே எழுதி வைத்த பாடல்கள் என்ற பட்டியலில் தவிர்க்க முடியாதது “நந்தா என் நிலா நிலா நிலா” என்ற பாடல். அதுவும் எஸ்.பி.பிக்கு முன்னால் பாட வேண்டிய சூழல் வரும் போது போட்டியாளர் தன்னிடமிருந்து அத்தனை திறமைகளையும் கொட்டித் தீர்க்க முற்படுவார். ஆனால் இந்தப் பாடல் இடம் பெற்ற “நந்தா என் நிலா” திரைப்படத்தில் இன்னொரு அரிய முத்து “ஒரு காதல் சாம்ராஜ்ஜியம் கண்ணில் வரைந்தாள்” பாடல் இருப்பதை ஏனோ இசை மேடைகள் மறந்து விட்டன.
“நந்தா என் நிலா” படத்தின் மூலக்கதை புஷ்பா தங்கதுரை, தினமணி கதிரில் தொடராக வெளிவந்து பின் ஏ.ஜெகன்னாதன் இயக்கத்தின் படமான போதும் புஷ்பா தங்கதுரையே கதை, வசனத்தைக் கையாண்டிருக்கிறார். விஜயகுமார், படாபட் ஜெயலட்சுமி, சுமித்ரா நடித்தது.
தொண்ணூறுகளின் இறுதியில் பிரபலமாக இருந்த சன் டிவி “சப்தஸ்வரங்கள்” பாடற் போட்டி நிகழ்ச்சியின் வழியாகத் தான் V.தட்சணாமூர்த்தி என்ற இசையமைப்பாளரை அறிந்து கொண்டேன். அதற்கு முன்னர் அவரின் இசையில் வெளிவந்த ஓரிரு தமிழ்ப்படங்களில் குறிப்பாக “நந்தா என் நிலா” என்ற பாடலை இலங்கை வானொலி மூச்சு விடாமல் முன்னூறு தடவைக்கு மேல் அலுக்க அலுக்கப் போட்ட போதெல்லாம் கூட இந்த இசையமைப்பாளர் குறித்த தேடல் இருந்திருக்கவில்லை. எழுபதுகளின் இறுதியிலே வி.குமார், விஜயபாஸ்கர், ஷியாம் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் வந்த பல நல்ல பாடல்களை சங்கர் கணேஷ், எம்.எஸ்.விஸ்வநாதன் கொடுத்தவையாக இருக்கும் என்று அதிகம் மெனக்கடவில்லை. அந்த வகையில் வி.தட்சணாமூர்த்தி அவர்களை சுவாமிகள் என்று விளித்து அவரின் பெருமைகளை சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரமணன் சிலாகித்தபோதுதான் அவர் மேல் வெளிச்சம் பட்டது எனக்கு. தமிழ்த்திரையுலகில் இரண்டு தட்சணாமூர்த்திகள் இருந்திருக்கிறார்கள், ஒருவர் எஸ்.தட்சணாமூர்த்தி இவர் அலிபாபாவும் 40 திருடர்களும்” போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர், பின்னவர் தான் வி.தட்சணாமூர்த்தி சுவாமிகள். கொஞ்சக்காலம் எல்லாவற்றையும் உதறவிட்டு காசிக்குப் போய் சாமியாராக இருந்ததாக செய்திகளின் வாயிலாக அறிந்தேன்.
“நந்தா என் நிலா” படத்தில் வந்த பாடலான எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய “நந்தா என் நிலா பாடலை விடவும் என்னை அதிகம் கவர்ந்ததென்னவோ ஜெயச்சந்திரன், டி.கே. கலா பாடியிருந்த “ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தேன்” என்ற பாடல் தான். அன்றைய சனிக்கிழமை இரவுப்பொழுதில் அதிகாலை ஒரு மணியைத் தொடும் போது வானொலி நிகழ்ச்சி செய்து கொண்டிருக்கும் என் தனிமையை விரட்டிப் பல தடவை சொந்தம் கொண்டாடிய பாடல் அது.
வானொலியின் பிறந்த நாள் வாழ்த்துப்பாடல்களில் எழுதப்படாத ஒப்பந்தமாக அமைந்து போன பாடல்களில் ஒன்று “நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க”, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது திரைப்படத்துக்காக வி.தட்சணாமூர்த்தி இசையில் வந்த அந்தப் பாடலோடு அதே படத்தில் வந்த “ஆண்டவன் இல்லா உலகமிது” பாடலும் அப்போதைய இலங்கை வானொலி ஒலிபரப்பால் பிரபலமான பாடல்களில் ஒன்று.
மீண்டும் தொலைக்காட்சி வாயிலாகவே இன்னொரு நல்ல அறிமுகத்தைக் கொடுத்திருந்தது V.தட்சணாமூர்த்தி அவர்களின் கேரள சினிமாவுக்கான பணி. கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் ஐம்பது ஆண்டுகள் திரையுலகில் நிறைவாக்கியதை ஏஷியா நெட் தொலைக்காட்சி கொண்டாடியபோது, வி.தட்சணாமூர்த்திக்கான சிறப்பு கெளரவத்தையும் அவர் முன்னிலையிலேயே வழங்கியிருந்தார்கள். அப்போது கேட்ட “சந்த்ரிகையில் அலியுன்னு சந்த்ரகாந்தம்” என்ற பாடலை யூடியூபின் வழியாகக் கேட்டுப் பரவசம் கொண்டேன்.
இசைஞானி இளையராஜாவின் குருநாதர்களில் ஒருவர் இந்த தட்சணாமூர்த்தி. எம்.எஸ்.வியோடு இணைந்தது போலவே V.தட்சணாமூர்த்தியோடு இணைந்து இளையராஜா மலையாளத்தில் இசையமைத்த படம் “காவேரி”
இப்பேர்ப்பட்ட இசையமைப்பாளர் V.தட்சணாமூர்த்தி இசையில் நந்தா என் நிலா திரைப்படம் உருவான போது “ஒரு காதல் சாம்ராஜ்ஜியம் கண்ணில் வரைந்தாள்” என்ற ஜோடிப் பாடலை ஜெயச்சந்திரனும், T.K.கலாவும் பாடியிருக்கிறார்கள்.
“போய் வா நதியலையே”, “தாயிற் சிறந்த கோயிலுமில்லை” ஆகிய புகழ் பூத்த பாடல்களோடு “குளிச்சா குத்தாலம்”, “செங்காத்தே” ஆகியவற்றை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியவர் T.K.கலா. அவர் இசை நிகழ்ச்சி படைக்க சிட்னி வந்திருந்த போது பேட்டி ஒன்றும் கண்டிருந்தேன்.
ஜெயச்சந்திரனைப் பொறுத்தவரை அவரின் ஆரம்ப காலத்தில் அரவணைத்து வளர்த்த மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் போன்றே அப்போது மலையாளத்தின் உச்ச இசையமைப்பாளராக விளங்கிய V.தட்சணாமூர்த்தி அவர்களின் பார்வை பட்டு மலையாளத்தில் மட்டுமன்றித் தமிழிலும் “நந்தா என் நிலா” வழியாகப் பாடும் பேறு கிட்டியிருக்கிறது.
“ஒரு காதல் சாம்ராஜ்ஜியம் கண்ணில் வரைந்தாள்” பாடலின் வரிகளை விடுத்து அந்தப் பாடல் கொண்டிருக்கும் சந்தத்தை மட்டும் ஒரு முறை மனதில் மீட்டில் பாருங்கள். ஒரு வீச்சுக்குள் (range) நின்று மேலும் கீழுமாக ஜாலம் புரியும் அற்புதமான சாகித்தியம் அது. ஆண், பெண் பாடகருக்கான சங்கதியும் ஒரே மாதிரி இருக்கும். அது போலவே தேர்ந்தெடுத்த இந்தப் பாடகர்களும் கொஞ்சமும் தடம் மாறாமல் அதே போலக் கொடுத்திருப்பார்கள். ஆனால் T.K.கலா தன் முத்திரை உச்ச ஸ்தாயி வரை போய் வர, ஜெயச்சந்திரனோ அதிக கஷ்டப்படாமல் தன் எல்லையில் நின்று அடித்து ஆடுவார்.
பகலான இரவோடு
அழகான மலரோடு
மனதோடு இசை பாடி
விதியோடு ஆடு……
ஒரு காதல் சாம்ராஜ்யம்
கண்ணில் வரைந்தாள்
கனவென்னும் முடி சூடி
கன்னம் சிவந்தாள்
உறங்காத உள்ளம்
நான் அறியாத பருவம்
நிலவின் மயக்கத்தில்
நீந்தும் முகம் – நீ
அருகிலிருந்தாலே தெய்வ சுகம்
பாடலைக் கேட்க
#Jeyachandran_songs

0 comments: